படிப்பு 31
உங்கள் கேட்போரை நம்பச்செய்யுங்கள், அவர்களிடம் நியாயங்காட்டி பேசுங்கள்
1 நீங்கள் பேசும்போது உங்கள் கேட்போர் செவிகொடுத்துக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள், ஆனால் அது மட்டுமல்ல. அளிக்கப்படும் விவாதங்களை ஏற்று அவற்றின்மீது அவர்கள் செயல்பட வேண்டும் என்றுங்கூட நீங்கள் விரும்புவீர்கள். நீங்கள் சொல்வதிலிருக்கும் உண்மையைக் குறித்து அவர்கள் உறுதியாக நம்புவார்களேயானால் மற்றும் அவர்களுடைய இருதயங்கள் நேர்மையானவையாக இருக்குமேயானால் இதை அவர்கள் செய்வார்கள். நம்பச் செய்தல் என்பது நிரூபணங்களின் மூலமாக திருப்திசெய்வதை அர்த்தப்படுத்துகிறது. ஆனால் நிரூபணங்கள் மாத்திரமே எப்பொழுதும் போதுமானதாக இருப்பதில்லை. அவற்றை நிலைநிறுத்தும் விவாதங்கள் பொதுவாக தேவையாய் இருக்கின்றன. ஆகவே, விவாதத்தின் மூலமாக நம்பச்செய்வது மூன்று அடிப்படைக் காரியங்களை உட்படுத்துகிறது: முதலாவது, நிரூபணங்கள்; இரண்டாவது, நிரூபணங்கள் அளிக்கப்படும் வரிசை அல்லது ஒழுங்குமுறை; மூன்றாவது, அவை அளிக்கப்படும் விதம் மற்றும் முறைகள். பேச்சு ஆலோசனைத் தாளில் “நம்பவைக்கச் செய்யும் விவாதம்” என்பதோடு ஒத்திருக்கும் இந்தக் கலந்தாலோசிப்பில், நீங்கள் எவ்வாறு அளிக்கிறீர்கள் என்பதற்கு பதிலாக என்ன சொல்லப்படுகிறது, என்ன நிரூபணம் கொடுக்கப்படுகிறது என்பதை நாம் சிந்திக்கப்போகிறோம்.
2 நம்பவைக்கச் செய்யும் விவாதம் நியாயமான அடிப்படைக் காரணங்களைச் சார்ந்திருக்கிறது, இப்படித்தான் உங்கள் ஆலோசகர் அதை கருதுவார். உணர்ச்சியற்ற அச்சிலிருந்து அவற்றை ஒருவர் வாசிப்பதாக இருந்தாலும்கூட உங்கள் நிரூபணங்கள் நம்பவைப்பதாய் இருக்க வேண்டும். உங்கள் பேச்சின் நம்பவைக்கச் செய்யும் பண்பு உங்கள் குறிப்பை நிலைநாட்ட பயன்படுத்தியிருக்கும் உண்மைகளை சார்ந்தில்லாமல் இதை அளிக்கும் விதத்தின் மேல் சார்ந்திருந்தால், உங்கள் விவாதத்தை உண்மையில் உறுதியானதாயும் உண்மையானதாயும் செய்வதற்கு இந்தப் பண்பை நீங்கள் இன்னும் வளர்ப்பது அவசியமாயிருக்கலாம்.
3 அஸ்திவாரம் போடப்படுதல். உங்கள் விவாதங்களை அளிப்பதற்கு முன்பாக, ஒரு சரியான அஸ்திவாரத்தைப் போடுதல் அவசியமாகும். கலந்தாலோசிக்கப்படும் குறிப்பு என்ன என்பதை நீங்கள் தெளிவுபடுத்திட வேண்டும். நீங்கள் ஒப்புக்கொள்ளும் பொருத்தமான விஷயங்களை வலியுறுத்துவதன் மூலம் பொதுவான ஆதாரத்தை நிலைநாட்டுவது நன்மையாக இருக்கிறது.
4 ஒருசில சந்தர்ப்பங்களில் பதங்கள் தெளிவாக விளக்கப்பட வேண்டும். பொருத்தமற்ற எல்லா காரியங்களும் நீக்கப்பட வேண்டும். உங்கள் அஸ்திவாரத்தை அவசரமாகப் போடாதீர்கள். அதை உறுதியாகச் செய்யுங்கள், ஆனால் அஸ்திவாரத்தையே முழு கட்டடமாக்கிவிடாதீர்கள். ஒரு விவாதத்தை மறுப்பதாக இருந்தால், பலவீனமான குறிப்புகளைக் கண்டுபிடிக்கவும், உங்களுடைய விவாதத்தின் போக்கைத் தீர்மானிக்க உங்களுக்கு உதவவும், விஷயத்தின் மூலக்காரணத்துக்கு எவ்வாறு செல்வது என்பதற்கும் அதை நிலைநிறுத்த பயன்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு குறிப்புகளையும் அலசிப்பாருங்கள்.
5 பேச்சைத் தயாரிக்கையில், உங்கள் தலைப்புப் பொருளைப் பற்றி கேட்போருக்கு ஏற்கெனவே எவ்வளவு தெரியும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முயற்சிசெய்ய வேண்டும். இது உங்கள் விவாதங்களை உண்மையில் அளிப்பதற்கு முன் எந்தளவுக்கு ஓர் அஸ்திவாரத்தைப் போடுவது அவசியமாயிருக்கும் என்பதைப் பேரளவில் தீர்மானிக்கும்.
6 சாதுரியமும் கிறிஸ்தவ நடத்தையும் தயவான, கரிசனையுள்ள அணுகுமுறையைத் தேவைப்படுத்துகின்றன, ஆனால் இங்கே நாம் வேலைசெய்து கொண்டிருக்கும் குறிப்பு அதுவல்ல. எப்பொழுதும் கிறிஸ்தவ நியமங்களைப் பற்றிய உங்கள் அறிவை முழு அளவில் பயன்படுத்தி உங்கள் கேட்போரின் இருதயங்களையும் மனங்களையும் திறந்திடுங்கள்.
7 நியாயமான சான்று கொடுக்கப்படுதல். ஒரு விஷயம் ஒரு பேச்சாளராக வெறுமனே நீங்கள் அதை நம்புவதால் அல்லது சொல்வதால் “நிரூபிக்கப்பட்ட”தாகிவிடுவதில்லை. “ஏன் அது உண்மையாக இருக்கிறது?” அல்லது “ஏன் அவ்விதமாக நீங்கள் சொல்லுகிறீர்கள்?” என்று உங்கள் கேட்போர் கேட்பது முற்றிலும் நியாயமானதே என்பதை நீங்கள் எப்பொழுதும் மனதில் வைக்க வேண்டும். பேச்சாளராக “ஏன்?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பொறுப்பு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கிறது.
8 “எப்படி?” “யார்?” “எங்கே?” “எப்பொழுது?” “என்ன?” என்ற கேள்விகள் பதிலளிக்கப்படுகையில் உண்மைகளையும் தகவல்களையும் மாத்திரமே கொடுக்கின்றன, ஆனால் “ஏன்?” என்ற கேள்வி காரணங்களைக் கொடுக்கிறது. இந்த விஷயத்தில் இது தனித்து நின்று, வெறுமனே உண்மைகளைக் காட்டிலும் அதிகத்தை உங்களிடம் கேட்கிறது. இது உங்கள் சிந்தனா திறமைக்கு வேலைப்பளுவைக் கூட்டுகிறது. இதன் காரணமாக, உங்கள் பேச்சை தயாரிக்கையில், “ஏன்?” என்ற அதே கேள்வியை திரும்பத் திரும்ப உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பின்னர் பதில்கள் அளிக்க முடிவதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
9 நீங்கள் சொல்லும் கூற்றுகளுக்குக் காரணங்களாக, அதிகாரமுள்ளவராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் எவரோ ஒருவரை நீங்கள் அடிக்கடி மேற்கோள்காட்டலாம். அவர் அதைச் சொல்லியிருப்பாரேயானால் அது உண்மையாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவர் அறிந்தவர் என்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறார் என்பதையே அது வெறுமனே அர்த்தப்படுத்துகிறது. அதை நம்புவதற்கு அது போதுமான காரணமாக இருக்கிறது. இந்தத் துறையில் நிச்சயமாகவே உன்னதமான அதிகாரமுள்ளவர் யெகோவா தேவனே. ஆகவே, ஆதாரமாக பைபிளிலிருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுவது ஒரு குறிப்பை நிரூபிக்க போதுமான சான்றாக இருக்கிறது. இது “நற்சாட்சி” சான்று என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாட்சியிடமிருந்து வரும் “நற்சாட்சியை” உடையதாக இருக்கிறது.
10 நற்சாட்சி சான்றை அளிக்கையில் உங்கள் சாட்சி உங்கள் கேட்போரால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவராக இருப்பதை நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். மனித வல்லுநர்களை நீங்கள் பயன்படுத்தினால், அவர்களுடைய பின்னணி பற்றியும் அவர்கள் எவ்வாறு கருதப்படுவார்கள் என்பதைப் பற்றியும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அநேக ஆட்கள் பைபிளை தெய்வீக அதிகாரமுடைய ஒன்றாக ஏற்றுக்கொள்வர், ஆனால் சிலர் அதை மனிதனின் படைப்பாக கருதுவதால் அது முழுமையான அதிகாரம்பெற்றது அல்ல என்று கருதுகின்றனர். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நீங்கள் மற்ற சான்றுகளை நாடிப்போக வேண்டும் அல்லது முதலில் பைபிள் நம்பகமானது என்பதை ஒருவேளை நிலைநாட்ட வேண்டியிருக்கலாம்.
11 எச்சரிக்கையான ஒரு வார்த்தை. எல்லா சான்றுகளும் நேர்மையாக பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு மேற்கோளை சூழமைவுக்கு வெளியே எடுக்காதீர்கள். நீங்கள் மேற்கோள் காட்டும் வல்லுநர் சொல்வதற்கு தன் மனதில் கொண்டிருந்ததையே சரியாகச் சொல்வதை உறுதிசெய்துகொள்ளுங்கள். உங்கள் மேற்கோள்களில் தெளிவாயிருங்கள். புள்ளி விவரங்களைப் பற்றியும்கூட கவனமாயிருங்கள். தவறாக அளிக்கப்பட்டால், இவை கேடுண்டாக்கும் விளைவுகளோடு உங்களிடமே திரும்பிவரக்கூடும். நீச்சலடிக்க முடியாமல், சராசரியாக மூன்றே அடி ஆழமுள்ள ஒரு நீரோட்டத்தில் மூழ்கிப்போன ஒரு மனிதனை நினைவில் கொள்ளுங்கள். நடுவிலிருந்த பத்து அடி குழியைப்பற்றி அவன் மறந்துவிட்டான்.
12 சூழ்நிலைச் சான்று என்பது மனித அத்தாட்சி அல்லது தெய்வீக அதிகாரத்தைத் தவிர மற்றவையாகும். சாட்சிகளின் மேற்கோள்களிலிருந்து இல்லாமல் உண்மைகளிலிருந்து பெறப்பட்ட முடிவுகளின்மேல் சார்ந்த சான்றாகும். உங்கள் முடிவுகளை நிலைநாட்டி சூழ்நிலைச் சான்றை நம்பவைக்கச் செய்வதற்கு, உங்கள் முடிவுகளை நிலைநிறுத்த போதுமான உண்மைகளையும் விவாதங்களையும் நீங்கள் வரிசையாக கொண்டிருக்க வேண்டும்.
13 நீங்கள் சமர்ப்பிக்கும் (கட்டாயமாகவே வரிசையில் இல்லாத) அனைத்தையும் உள்ளிட்ட சான்றுகள் பேசிக்கொண்டிருக்கிற கேட்போரை திருப்திசெய்ய போதுமானதாக இருந்தால், உங்கள் ஆலோசகர் அதை திருப்திகரமானதாக கருதுவார். கேட்போரின் மனதிலிருந்து பார்க்கையில், “நான் நம்பும்படி செய்யப்பட்டேனா?” என்று ஆலோசகர் தன்னைக் கேட்டுக்கொள்வார். அப்படி செய்யப்பட்டிருந்தால், அவர் உங்கள் அளிப்புக்கு பாராட்டுவார்.
14 பலன்தரத்தக்க சுருக்கம். நம்பவைக்கச் செய்யும் விவாதத்துக்குப் பொதுவாக ஏதோவொரு வகையான சுருக்கம் அத்தியாவசியமாக இருக்கிறது. இது நியாயமான சிந்தனைக்கு கடைசி வேண்டுகோளாக இருந்து பயன்படுத்தப்பட்ட விவாதங்களுக்குப் போற்றுதலை அதிகரிக்கிறது. அடிப்படையில் “இது இவ்விதமாக இருப்பதால், மேலும் அது அவ்விதமாக இருப்பதால், ஆகவே நாம் முடிவுக்கு வருகிறோம் ...” என்ற ஒரு விஷயமாக இது வெறுமனே இருந்தாலும் சுருக்கம் வெறுமனே உண்மைகளை மறுபடியும் எடுத்துரைப்பதாக இருக்கக்கூடாது. எல்லா குறிப்புகளையும் சேர்த்து ஒரு முடிவினிடமாக அவற்றை திருப்புவதற்காகவே இந்த அம்சம் வடிவமைக்கப்படுகிறது. அநேக சமயங்களில் பலன்தரத்தக்க சுருக்கமே உண்மையில் அவை நம்பவைக்கச் செய்யும்படி விவாதங்களை மனதில் பதியவைக்கிறது.
****************
15 நீங்கள் ஒரு பேச்சில் பயன்படுத்தும் விவாதங்கள் நியாயமாக இருந்தாலும்கூட, உண்மைகளை வெறுமனே எடுத்துரைப்பது போதுமானதல்ல. நியாயமாகச் சிந்திக்க கேட்போருக்கு உதவவும், உங்கள் விவாதங்களைப் புரிந்துகொள்ளவும், நீங்கள் வந்திருக்கும் அதே முடிவுகளுக்கு அவர்களும் வரும் விதத்தில் அவற்றை அளிக்க வேண்டும். இதைத்தான் பேச்சு ஆலோசனைத் தாள் “நியாயமாக சிந்திக்க கேட்போருக்கு உதவுதல்” என்று குறிப்பிடுகிறது.
16 நீங்கள் இந்தப் பண்பை விரும்ப வேண்டும், ஏனென்றால் கடவுள் நம்மோடு நியாயங்காட்டி பேசுகிறார். மேலும், இயேசு தம்முடைய உவமைகளைத் தம்முடைய சீஷர்களுக்கு விளக்கி இதே உண்மைகளை மற்றவர்களுக்குக் கற்பிக்க அவர்களை ஆயத்தம் செய்தார். அப்படியென்றால் நியாயமாக சிந்திக்க உங்கள் கேட்போருக்கு உதவிசெய்தல் என்பது, கேட்போர் உங்கள் விவாதத்தைப் புரிந்துகொள்ளவும், உங்கள் முடிவுகளுக்கு வரவும், வேறு ஒருவருக்கு கற்பிக்கையில் உங்கள் விவாதங்களைப் பயன்படுத்தவும் ஆயத்தமாயிருக்க உதவிசெய்யும் உத்திகளைப் பயன்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது.
17 பொதுவான ஆதாரம் காத்துக்கொள்ளப்படுதல். உங்கள் பேச்சின் ஆரம்பத்தில் பொதுவான ஆதாரத்தை நிலைநிறுத்துவதில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதும் அதை எப்படிச் சொல்கிறீர்கள் என்பதும் அத்தியாவசியமாகும். ஆனால் பேச்சு முன்னேறுகையில் இந்தப் பொதுவான ஆதாரம் இழக்கப்பட்டுவிடக் கூடாது அல்லது உங்கள் கேட்போரையும் இழந்துவிடுவீர்கள். உங்கள் கேட்போர் கூட்டத்திலுள்ளவர்களின் மனதை கவரும் வகையில் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும். இது கலந்தாலோசிக்கப்படும் தலைப்புப் பொருளின்பேரில் அவர்களுடைய நோக்குநிலையை மனதில் வைத்து, உங்கள் விவாதங்களின் நியாயமானத்தன்மையைக் காண்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்ய இந்த அறிவைப் பயன்படுத்துவதைத் தேவைப்படுத்துகிறது.
18 பொதுவான ஆதாரத்தை நிலைநாட்டி அதை கடைசிவரையாக காத்துக்கொள்வதில், அதாவது நியாயமாக சிந்திப்பதற்குக் கேட்போருக்கு உதவுவதில், தலைசிறந்த முன்மாதிரி அப்போஸ்தலர் 17:22-31-ல் பதிவுசெய்யப்பட்டிருப்பது போல அப்போஸ்தலன் பவுலின் விவாதமாகும். அவர் எவ்விதமாக ஆரம்பத்தில் பொதுவான ஓர் ஆதாரத்தை நிலைநாட்டி தன்னுடைய பேச்சு முழுவதிலுமாக அதை சாதுரியமாக காத்துக்கொண்டார் என்பதைக் கவனியுங்கள். அவர் முடித்தபோது அங்கு ஆஜராயிருந்த ஒரு நியாயாதிபதி உட்பட தன்னுடைய கேட்போரில் சிலரை சத்தியத்தை நம்பும்படியாகச் செய்திருந்தார்.—அப். 17:33,34.
19 குறிப்புகளைப் போதிய அளவு விரிவாக்குதல். ஒரு தலைப்புப் பொருளின்மீது கேட்போர் நியாயமாக சிந்திப்பதற்கு, போதுமான அளவு தகவல் அளிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். வெறுமனே தங்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத காரணத்தால் விவாதங்களை அவர்கள் தள்ளிவிடாதபடிக்கு அவை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு உதவுவது உங்களைப் பொருத்திருக்கிறது.
20 அதை பலன்தரத்தக்க வகையில் செய்வதற்கு, அளவுக்கு அதிகமாக குறிப்புகளை எடுத்துரைக்காதபடிக்கு கவனமாயிருங்கள். அவசரமாக அளிக்கப்படுகையில் உங்கள் பொருளின் பயன் இழக்கப்பட்டுவிடும். உங்கள் கேட்போர் வெறுமனே கேட்பது மாத்திரமல்லாமல் அவற்றை புரிந்துகொள்ளும்படிக்கு குறிப்புகளை முழுமையாக விளக்க நேரமெடுத்துக்கொள்ளுங்கள். முக்கியமான ஒரு குறிப்பை நீங்கள் சொல்லும்போது அதை விரிவாக்குவதற்கு நேரமெடுத்துக்கொள்ளுங்கள். ஏன்? யார்? எப்படி? என்ன? எப்போது? எங்கே? போன்ற கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். இவ்விதமாக கருத்தை அதிக முழுமையாக கிரகித்துக்கொள்ள உங்கள் கேட்போருக்கு உதவிசெய்யுங்கள். சில சமயங்களில் உங்கள் நிலையின் நியாயமானத்தன்மையை வலியுறுத்துவதற்காக ஒரு குறிப்புக்குச் சாதகமாகவும் எதிராகவும் விவாதங்களை அளிக்கலாம். அதேவிதமாகவே, ஒரு நியமத்தைக் குறிப்பிட்ட பிறகு, கேட்போர் அதனுடைய நடைமுறை பொருத்தத்தைக் காணும்பொருட்டு அதை விளக்குவது பிரயோஜனமாயிருப்பதை நீங்கள் காணலாம். நிச்சயமாகவே, விவேகம் பயன்படுத்தப்பட வேண்டும். எந்த ஒரு குறிப்பும் விரிவாக்கப்படும் அளவு, கிடைக்கக்கூடிய நேரத்தையும் கலந்தாலோசிப்பின்கீழ் இருக்கும் தலைப்புப் பொருளுக்குக் குறிப்பினுடைய சம்பந்தப்பட்ட முக்கியத்துவத்தையும் பொருத்தே இருக்கும்.
21 நியாயமாகச் சிந்திக்க கேட்போருக்கு உதவிசெய்வதில் கேள்விகள் எப்பொழுதும் நல்லதாக இருக்கின்றன. அறிவினாக்கள், அதாவது, கேட்போரிடமிருந்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும் கேள்விகள் பொருத்தமான நிறுத்தங்களோடு சேர்ந்து சிந்தனையைத் தூண்டுகின்றன. வெளி ஊழியத்தில் செய்வது போல ஒன்று அல்லது இரண்டு பேர்களிடம் மாத்திரமே நீங்கள் பேசிக்கொண்டிருப்பீர்களானால், அவர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்கள் மனதிலிருப்பதை வெளிக்கொணரலாம். இவ்விதமாக அளிக்கப்படும் கருத்துக்களை அவர்கள் கிரகித்துக்கொள்வதையும் ஏற்றுக்கொள்வதையும் நீங்கள் உறுதிசெய்துகொள்ளுங்கள்.
22 உங்கள் கேட்போர் கூட்டத்திலுள்ளவர்களின் மனதை வழிநடத்திச் செல்ல விரும்புவதால், தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து அல்லது உங்கள் சொந்த கலந்தாலோசிப்பின் முற்பகுதியிலிருந்து அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் காரியங்களின்மீது நீங்கள் கட்ட வேண்டும். ஆகவே, ஒருசில குறிப்புகளை போதுமான அளவு விரிவாக்கி இருக்கிறீர்களா என்பதைத் தீர்மானிப்பதில் தலைப்புப் பொருளைப் பற்றி உங்கள் கேட்போருக்கு ஏற்கெனவே என்ன தெரியும் என்பதை நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
23 உங்கள் கேட்போர் உங்களைப் பின்பற்றுகின்றனரா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள அவர்களுடைய பிரதிபலிப்பைக் கவனிப்பது எப்பொழுதும் முக்கியமாகும். தேவையானால், அடுத்த விவாதத்துக்குச் செல்வதற்கு முன்பாக பின்னால் சென்று குறிப்புகளைத் தெளிவுபடுத்திடுங்கள். நியாயமாகச் சிந்திக்க அவர்களுக்கு உதவிசெய்ய நீங்கள் கவனம் செலுத்தினாலொழிய, அவர்கள் எளிதில் உங்கள் எண்ணத் தொடர் கோர்வையை இழந்துவிடக்கூடும்.
24 கேட்போருக்குப் பொருத்தம் செய்யப்படுதல். எந்த ஒரு விவாதத்தையும் அளிக்கையில், கலந்தாலோசிக்கப்படும் விவாதத்தின்பேரில் அது எவ்விதமாக தொடர்புடையதாய் இருக்கிறது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுவதன் மூலம் கடைசிவரை கொண்டுசெல்ல நிச்சயமாயிருங்கள். மேலும், பேச்சில் உந்துவிப்பையும் சேர்த்துக்கொண்டு, அளிக்கப்பட்டுள்ள உண்மைகளோடு இணக்கமாக நடவடிக்கை எடுக்க உங்கள் கேட்போரைத் துரிதப்படுத்துங்கள். நீங்கள் சொன்னது அவர்களை உண்மையில் நம்பச் செய்திருந்தால், அவர்கள் செயல்பட தயாராயிருப்பார்கள்.
[கேள்விகள்]
1, 2. நம்பவைக்கச் செய்யும் விவாதம் என்பது என்ன?
3-6. அஸ்திவாரம் ஒன்றை ஏன் போட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவும்.
7-13. “நியாயமான சான்று கொடுக்கப்படுதல்” என்பதன் பொருளை விளக்கவும்.
14. பலன்தரத்தக்க சுருக்கம் என்பது என்ன?
15, 16. நாம் ஏன் நியாயமாக சிந்திக்க கேட்போருக்கு உதவ வேண்டும்?
17, 18. பொதுவான ஆதாரம் எப்படிக் காத்துக்கொள்ளப்படுகிறது?
19-23.குறிப்புகள் போதுமான அளவு விரிவாக்கப்படுவதற்குரிய முறைகளைக் குறிப்பிடுங்கள்.
24. உங்கள் கேட்போருக்கு விவாதங்களின் பொருத்தத்தைச் செய்வது என்ன நல்ல நோக்கத்தைச் சேவிக்கிறது?