பாடம் 18
பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எப்படி உதவி செய்கிறோம்?
டொமினிகன் குடியரசு
ஜப்பான்
ஹெய்டி
புயல், வெள்ளம், பூமியதிர்ச்சி போன்ற பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட எங்கள் சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் உடனடியாக உதவி செய்கிறோம். ஏனென்றால், நாங்கள் ஒருவர்மீது ஒருவர் ரொம்ப அன்பு வைத்திருக்கிறோம். (யோவான் 13:34, 35; 1 யோவான் 3:17, 18) நாங்கள் எப்படியெல்லாம் உதவி செய்கிறோம்?
பண உதவி செய்கிறோம். யூதேயாவில் பயங்கரமான பஞ்சம் வந்தபோது, அங்கிருந்த கிறிஸ்தவர்களுக்கு அந்தியோகியா சபையில் இருந்தவர்கள் பண உதவி செய்தார்கள். (அப்போஸ்தலர் 11:27-30) அதேபோல், எங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு கஷ்டம் வரும்போது உடனடியாக சபை மூலமாக பணத்தை அனுப்புகிறோம். இதனால், உலகத்தில் அவர்கள் எங்கிருந்தாலும் சரி, அவர்களுக்கு தேவையானதை கொடுக்க முடிகிறது.—2 கொரிந்தியர் 8:13-15.
தேவைப்படுகிற மற்ற உதவிகளை செய்கிறோம். பேரழிவினால் பாதிக்கப்பட்ட இடத்துக்கு உடனடியாக போய், சபையில் இருக்கிற எல்லாரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று மூப்பர்கள் பார்க்கிறார்கள். சாப்பாடு, சுத்தமான தண்ணீர், துணிமணி, தங்குவதற்கு இடம், மருந்து மாத்திரை... இதையெல்லாம் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு நிவாரண குழு மூலமாக கொடுக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளில் நிறையப் பேர் சொந்த செலவில் போய் உதவி செய்கிறார்கள். இடிந்துபோன வீடுகளையும், ராஜ்ய மன்றங்களையும் கட்டித் தருகிறார்கள். எங்களால் எப்படி உடனே உதவி செய்ய முடிகிறது? நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறோம், ஒன்றுசேர்ந்து வேலை செய்த அனுபவமும் எங்களுக்கு இருக்கிறது. அதனால், எப்போது உதவி தேவைப்படுகிறதோ அப்போது உடனடியாக உதவி செய்கிறோம். எங்களுடைய “விசுவாசக் குடும்பத்தாருக்கு” மட்டுமல்ல, முடிந்தவரை மற்றவர்களுக்கும் உதவி செய்கிறோம்.—கலாத்தியர் 6:10.
பைபிளிலிருந்து ஆறுதல் சொல்கிறோம். பேரழிவில் பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் ஆறுதல் தேவைப்படுகிறது. அதுபோன்ற சமயங்களில், ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளாக’ இருக்கிற யெகோவாதான் அதை தாங்கிக்கொள்ள நமக்கு சக்தி தருகிறார். (2 கொரிந்தியர் 1:3, 4) சீக்கிரத்தில் எல்லா கஷ்டத்துக்கும் கடவுளுடைய ஆட்சி முடிவுகட்டப் போகிறது, அதற்குப் பிறகு வலியோ வேதனையோ இருக்காது. பைபிளில் இருக்கிற இந்த சந்தோஷமான செய்தியை வேதனையில் தவிக்கிற மற்றவர்களுக்கும் நாங்கள் சொல்கிறோம்.—வெளிப்படுத்துதல் 21:4.
பேரழிவுகள் வரும்போது யெகோவாவின் சாட்சிகளால் எப்படி உடனே உதவி செய்ய முடிகிறது?
பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பைபிளிலிருந்து எப்படி ஆறுதல் சொல்லலாம்?