இடது: சகோதரர் ரதர்ஃபர்ட் கொடுத்த ஒரு பேச்சை, 1930-களின் பிற்பகுதியில் அமெரிக்காவிலுள்ள அலபாமாவில் ஒரு சகோதரி போட்டுக் காட்டுகிறார்; வலது: சுவிட்சர்லாந்து
பகுதி 1
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியம்—ஆன்மீக உணவைக் கொடுப்பது
நீங்கள் ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்தும்போது, அவரோடு சேர்ந்து ஒரு வசனத்தை வாசிக்கிறீர்கள். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டதும் மாணாக்கரின் கண்கள் பிரகாசிக்கின்றன. பின்பு மெதுவாக, “அப்படியென்றால் நாம் இங்கேயே, இந்தப் பூமியிலேயே பூஞ்சோலை வாழ்க்கையை என்றென்றும் அனுபவிப்போமா?” என்று உங்களிடம் அவர் கேட்கிறார். அப்போது, பைபிள் படிப்புக்கு உங்களோடு வந்திருக்கும் பிரஸ்தாபி புன்முறுவலோடு, “பைபிளில் நீங்கள் படித்ததை வைத்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கிறார். அந்த மாணாக்கர் ஆச்சரியத்தோடு, “இவ்வளவு காலமாக யாரும் எனக்கு இதைச் சொல்லித் தரவே இல்லை!” என்கிறார். சில வாரங்களுக்கு முன்பு, கடவுளுடைய பெயர் யெகோவா என்று முதன்முதலாக தெரிந்துகொண்டபோதும் இதேபோல் அவர் சொன்னதை நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்கள்.
இதுபோன்ற அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கிறதா? கடவுளுடைய மக்களில் நிறைய பேருக்கு இருந்திருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கிற ஒரு அருமையான பரிசை இந்த அனுபவம் ஞாபகப்படுத்துகிறது. அதுதான், சத்தியத்தைப் பற்றிய அறிவு! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: அந்தப் பரிசு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? இதற்கான பதிலை இந்தப் பகுதியில் பார்ப்போம். கடவுளுடைய மக்கள் பைபிள் சத்தியங்களைப் படிப்படியாகப் புரிந்துகொண்ட விதம், கடவுளுடைய அரசாங்கம் நிஜமானது என்பதற்குத் தெளிவான அத்தாட்சியாக இருக்கிறது. அதன் ராஜாவான இயேசு கிறிஸ்து, கடவுளுடைய மக்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதற்கு கடந்த 100 வருஷங்களாக ஏற்பாடு செய்துவந்திருக்கிறார்.