கடவுளின் கைப்பிடித்து தைரியமாக நடங்கள் புத்தகத்துக்கான கூடுதல் தகவல்கள்—பகுதி 2
அதிகாரம் 22
உண்மையாக நடந்து தைரியத்தைக் காட்டினார்
w95 2/1 பக். 31
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெலிஸ்தர்கள் யார்?
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கடவுளின் பண்டையகால ஜனங்கள் சுதந்தரித்துக்கொண்ட போது, கானான் தேசத்தில் பெலிஸ்தர்கள் என்றழைக்கப்பட்ட ஜனங்கள் வாழ்ந்ததைப் பற்றி பைபிள் அடிக்கடி குறிப்பிடுகிறது. நீண்டகாலமாக இந்தப் பண்டையகால பெலிஸ்தர்கள் கடவுளின் ஜனங்களை எதிர்த்தனர். கோலியாத் என்றழைக்கப்பட்ட இராட்சத பெலிஸ்த வீரனை தாவீது எதிர்ப்பட்ட சம்பவத்தில் இது விளக்கமாகத் தெரிகிறது.—1 சாமுவேல் 17:1-3, 23-53.
பண்டைய பெலிஸ்தர்கள் கப்தோரிலிருந்து கானானின் தென்மேற்கு கரையோரத்துக்கு இடம் மாறிச் சென்றனர் என்று பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறது. (எரேமியா 47:4) கப்தோர் எங்கேயிருந்தது? தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா (1979) குறிப்பிடுகிறது: “அதிகாரப்பூர்வமான பதிலைக் கொடுப்பதற்கு போதுமான அத்தாட்சி இல்லாதபோதிலும், அவர்கள் அநேகமாய் குடிபெயர்ந்து சென்ற இடம் கிரேத்தா தீவு (அல்லது கிரேத்தா மற்றும் ஏஜியன் தீவுகள், அவை கலாச்சாரத்தில் இணைந்திருக்கின்றன) என்று நவீன-நாளைய புலமை காண்பிக்கிறது.”—புத்தகம் 1, பக்கம் 610.
இதற்கிசைவாக, பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) ஆமோஸ் 9:7-ல் இவ்வாறு வாசிக்கிறது: “நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப் போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டு வரவில்லையோ?”
இந்தப் பண்டைய கடற்கரை ஜனங்கள் எப்போது கிரேத்தாவிலிருந்து யோப்பாவுக்கும் காசாவுக்கும் இடையே இருந்த தென்மேற்கு கடற்கரைப்பகுதியான பெலிஸ்தியா என்றழைக்கப்பட்ட கானானின் பகுதிக்கு வந்தனர் என்பது தெரியாது. ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் நாட்களில் இந்தத் தாழ்வான கடற்கரையோரப் பகுதிகளில் இவர்கள் ஏற்கெனவே இருந்திருப்பதாகத் தோன்றுகிறது.—ஆதியாகமம் 20:1, 2; 21:32-34; 26:1-18.
கடவுள் வாக்குப்பண்ணிக் கொடுத்திருந்த தேசத்துக்குள் இஸ்ரவேலர் பிரவேசித்து நீண்ட காலத்துக்குப் பிறகும் பெலிஸ்தர்கள் தொடர்ந்து வல்லமை வாய்ந்த செல்வாக்கு செலுத்தினர். (யாத்திராகமம் 13:17; யோசுவா 13:2; நியாயாதிபதிகள் 1:18, 19; 3:3, 4; 15:9, 10; 1 சாமுவேல் 4:1-11; 7:7-14; 13:19-23; 1 இராஜாக்கள் 16:15) யூதேயா ராஜாவாகிய உசியாவின் ஆட்சி வரை பெலிஸ்தர்கள் தங்கள் பட்டணங்களாகிய காத், யப்னே, அஸ்தோத் ஆகியவற்றில் குடியிருந்தனர். (2 நாளாகமம் 26:6) பைபிள் பதிவுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருந்த அவர்களுடைய மற்ற பட்டணங்கள் எக்ரோன், அஷ்க்கலோன், காசா போன்றவை.
மகா அலெக்சாந்தர் பெலிஸ்த பட்டணமாகிய காசாவைக் கைப்பற்றினார், ஆனால் காலப்போக்கில் பெலிஸ்தர்கள் தனி வேறான ஜனங்களாக இருந்தது முடிவுக்கு வந்தது. பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரிவ்யு (மே/ஜூன் 1991) என்ற புத்தகத்தில் பேராசிரியர் லாரன்ஸ் இ. ஸ்டாஜர் இவ்வாறு எழுதினார்: “பெலிஸ்தர்களும்கூட பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர். . . . இருப்பினும் நாடு கடத்தப்பட்ட பெலிஸ்தர்களுக்கு என்ன நேரிட்டது என்பதைப் பற்றி எந்தப் பதிவும் இல்லை. நேபுகாத்நேச்சாரின் வெற்றிக்குப் பின் அஷ்க்கலோனில் தங்கியிருந்தவர்கள் தனிப்பட்ட இனப்பிரிவாக தங்கள் அடையாளத்தை இழந்து போயினர். பெலிஸ்தியர்களைப் பற்றிய சரித்திரப் பதிவு வேறு எதுவும் இல்லை.”
பலஸ்தீனா என்ற நவீன-நாளைய பெயர் லத்தீன் மற்றும் கிரேக்க சொற்களிலிருந்து வருகிறது, இது மேலும் பழமையான எபிரெய வார்த்தையாகிய “பெலிஸ்த”வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அரபு மொழியில் உள்ள சில பைபிள் மொழிபெயர்ப்புகள் “பெலிஸ்தர்” என்ற வார்த்தைக்கு ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றன, அது நவீன-நாளைய பலஸ்தீனியர்களைக் குறிப்பிடும் சொல்லோடு குழப்பப்பட்டிருக்கிறது. இருப்பினும், டுடேஸ் அரபிக் வர்ஷன் ஒரு வித்தியாசமான அரபு வார்த்தையை உபயோகிக்கிறது, இவ்வாறு பண்டையகால பெலிஸ்தர்களுக்கும் நவீன-நாளைய பலஸ்தீனியர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காண்பிக்கிறது.
“பீம்” பைபிள் சரித்திரத்தின் மெய்மையை நிரூபிக்கிறது
“பீம்” என்ற வார்த்தை பைபிளில் ஒரே ஓர் இடத்தில் மட்டுமே காணப்படுகிறது. சவுல் ராஜாவின் காலத்தில் இஸ்ரவேலர் தங்களுடைய உலோக ஆயுதங்களைத் தீட்டுவதற்கு பெலிஸ்த கொல்லர்களிடம் போக வேண்டியிருந்தது. “தீட்டுவதற்கான கூலி, கலப்பைக் கொழு, மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடரி, தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றுக்கும் எட்டு கிராம் அளவுள்ள நாணயம் [பீம்] ஆகும்” என்பதாகப் பைபிள் குறிப்பிடுகிறது.—1 சாமுவேல் 13:21, பொது மொழிபெயர்ப்பு அடிக்குறிப்பு.
பீம் என்றால் என்ன? அது என்னவென்பது பொ.ச. 1907 வரை ஒரு புதிராக இருந்தது; அவ்வருடத்தில்தான் முதன்முதலாக பீம் எடைக்கல் பூர்வ பட்டணமாகிய கேசேரிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. “பீம்” என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பது ஆரம்ப கால பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கடினமாக இருந்தது. உதாரணமாக, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு 1 சாமுவேல் 13:21-ஐ இவ்விதமாக மொழிபெயர்க்கிறது: “கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.”
பீம் என்பது சராசரியாக 7.82 கிராமுக்குச் சமமான எடை அல்லது எபிரெயர்களின் அடிப்படை அலகான ஒரு சேக்கலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்குச் சமமான எடை என இன்றைய அறிஞர்கள் அறிந்திருக்கின்றனர். இஸ்ரவேலரின் ஆயுதங்களை கூர்மையாக்குவதற்கு பீம் அளவு வெள்ளித் துண்டுகளையே பெலிஸ்தர் கூலியாக வசூலித்தனர். யூத ராஜ்யமும் அதன் தலைநகரான எருசலேமும் பொ.ச.மு. 607-ல் வீழ்ச்சியடைந்த பிறகு சேக்கல் எடை புழக்கத்திலிருந்து மறைந்தது. எபிரெய வேதாகமத்தின் சரித்திர மெய்மைக்கு பீம் எவ்வாறு சான்றளிக்கிறது?
ஒன்று சாமுவேல் புத்தகம் உட்பட எபிரெய வேதாகம புத்தகங்கள் எல்லாம் கிரேக்க-ரோம காலப்பகுதியில்தான், அதாவது பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து முதல் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில்தான் எழுதப்பட்டதாக சில அறிஞர்கள் வாதிடுகிறார்கள். ஆகையால், “இந்தப் புத்தகங்கள் எல்லாம் . . . ‘சரித்திர ஆதாரமற்றவை,’ இவற்றிலிருந்து ‘பைபிள் குறிப்பிடும் இஸ்ரவேலைப்’ பற்றியோ, ‘பூர்வ இஸ்ரவேலை’ பற்றியோ உண்மையான சரித்திரப்பூர்வ தகவல்களைப் பெற முடியாது. ஏனெனில் இவை எல்லாம் யூத, கிறிஸ்தவ இலக்கிய கண்டுபிடிப்புகள் மட்டுமே” என்கிறார்கள்.
ஆனால், 1 சாமுவேல் 13:21-ல் சொல்லப்பட்டுள்ள பீம் அளவை பற்றி, மத்திய கிழக்கு தொல்பொருள் மற்றும் மானிடவியல் பேராசிரியரான வில்லியம் ஜி. டேவர் இவ்வாறு கூறுகிறார்: “இந்த எடை அளவுகள் கிரேக்க-ரோம காலப்பகுதியில் வாழ்ந்த எழுத்தாளர்களின் ‘கற்பனையில் உருவாகியிருக்க’ முடியாது. ஏனெனில் அந்தக் காலப்பகுதிக்குள் இந்த எடைகள் எல்லாம் மறக்கப்பட்டு போய் பல நூற்றாண்டுகள் ஆகியிருந்தன. உண்மையில், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பீம் என்ற எபிரெய வார்த்தை பொறிக்கப்பட்ட எடைகள் அகழ்வாராய்ச்சியில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்படும் வரை . . . பைபிள் வசனத்தின் இச்சிறு பகுதி . . . புரியாப் புதிராகவே இருந்தது. பைபிள் கதைகள் எல்லாம் கிரேக்க-ரோம காலப்பகுதியின் ‘இலக்கிய கண்டுபிடிப்புகளாக’ இருந்தால், இந்தக் குறிப்பிட்ட கதை எபிரெய பைபிளில் எவ்வாறு இடம்பெற்றது? பீம் பற்றிய வசனம் ‘ஒரு சிறு நுட்பவிவரம் மட்டுமே’ என ஒருவர் வாதிடலாம். அது உண்மைதான். ஆனால் சிறு நுட்பவிவரங்களின் தொகுப்புதான் ‘சரித்திரம் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே.’”
it “மிக்மாஸ்(ஷ்)” பாரா 4
மிக்மாஸ்(ஷ்)
பெலிஸ்தியர்களை வீழ்த்த யோனத்தான் எடுத்த முயற்சி. மிக்மாசில் முகாம்போட்டிருந்த பெலிஸ்தியர்கள், இஸ்ரவேலர்களைச் சூறையாடுவதற்காக மூன்று பிரிவுகளாகப் போனார்கள். அவர்களுடைய ஒரு புறக்காவல் படை “மிக்மாசிலுள்ள கணவாய்க்கு” போனது. அதனால் அந்த எதிரிகளை ஒழித்துக்கட்ட யோனத்தான் முடிவு செய்தார். (1சா 13:16-23) அதற்காக, அவர் அந்தக் கணவாயைக் கடந்தார். அது ஒருவேளை, சுவீனிட் காட்டாற்று பள்ளத்தாக்காக இருந்திருக்கலாம். அப்படியென்றால், அது ரொம்ப ஆழமாக இருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலும் செங்குத்தான கற்பாறைகள் இருந்தன. அவை கெபாவுக்கு கிழக்கே இருந்தன. இன்று, சுவீனிட் காட்டாற்று பள்ளத்தாக்கு கூர்மையாக வளையும் இடத்தில், கற்பாறைகள் நிறைந்த இரண்டு செங்குத்தான மலைகள் இருக்கின்றன. இவை ஒருவேளை, பைபிள் சொல்லும் போசேஸ் மற்றும் சேனே என்ற ‘செங்குத்தான கற்பாறைகளாக’ இருக்கலாம். ‘பல்போன்ற வடிவத்திலிருந்த’ அவற்றின் கூர்மையான முனைகள் கிட்டத்தட்ட 30 நூற்றாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து மழுங்கிப்போயிருக்கலாம். (1சா 14:1-7) அந்த இடத்துக்குப் புதிதாக போகும் ஒருவர், அங்கிருக்கும் மலைகள், குன்றுகள், காட்டாற்று பள்ளத்தாக்கின் கூர்மையான பாறைகள் போன்றவற்றையெல்லாம் கடப்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். ஆனால், யோனத்தான் பென்யமீனியர்களின் பகுதியில் வளர்க்கப்பட்டதால், அவை அநேகமாக அவருக்குப் பழக்கமான இடங்களாக இருந்திருக்கலாம். அவருடைய அப்பாவின் முகாம் மிக்மாசிலும், அவருடைய முகாம் கெபாவிலும் இருந்தபோது, அவர் அந்த இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போயிருப்பார். அதனால், அவை அவருக்கு ரொம்ப பழக்கப்பட்ட இடங்களாக ஆகியிருக்கும்.
it “மேவிபோசேத்” எண் 2 பாரா 1
மேவிபோசேத்
2. யோனத்தானின் மகன்; சவுல் ராஜாவின் பேரன். சவுலும் யோனத்தானும் இறந்துவிட்டதாக யெஸ்ரயேலிலிருந்து செய்தி வந்தபோது, ஐந்து வயதாக இருந்த மேவிபோசேத்தைத் தூக்கிக்கொண்டு அவருடைய தாதி பதறியடித்து ஓடினாள். அப்போது, மேவிபோசேத் ‘கீழே விழுந்து முடமானார்.’ (2சா 4:4) அதன் பிறகு, சில வருஷங்களுக்கு லோ-தேபாரில் இருந்த அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் மேவிபோசேத் வாழ்ந்துவந்தார். முன்பு சவுலின் வீட்டில் வேலைக்காரனாக இருந்த சீபாவின் மூலம் அந்த விஷயத்தை தாவீது தெரிந்துகொண்டார். யோனத்தானோடு செய்த ஒப்பந்தத்தை தாவீது கண்டிப்பாக நினைத்துப் பார்த்திருப்பார். (1சா 20:12-17, 42) அதனால், “சவுலின் குடும்பத்தில் இன்னும் யாராவது உயிரோடு” இருக்கிறார்களா என்று தெரிந்துகொண்டு அவர்களுக்கு மாறாத அன்பைக் காட்ட தாவீது ஆசைப்பட்டார். அப்போது, மேவிபோசேத்தை தாவீதிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள். தாவீது மேவிபோசேத்துக்கு மாறாத அன்பைக் காட்ட விரும்புவதாகச் சொன்னார். அவர் மேவிபோசேத்திடம், “சவுலுக்குச் சொந்தமான எல்லா நிலங்களையும் திருப்பித் தருவேன். இனி எப்போதும் நீ என் மேஜையில் சாப்பிட வேண்டும்” என்று சொன்னார். அதற்கு மேவிபோசேத் மனத்தாழ்மையாக, “இந்தச் செத்த நாய்க்குப் போய்க் கருணை காட்டுகிறீர்களே, எனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேட்டார். ஆனால், தாவீது தீர்மானமாக இருந்ததால், சீபாவும் அவனுடைய வீட்டில் இருந்த எல்லாரும் (அவனுடைய 15 மகன்களும் 20 வேலைக்காரர்களும் உட்பட) மேவிபோசேத்தின் வேலைக்காரர்களாக ஆனார்கள். மேவிபோசேத்துக்கு சவுலின் நிலங்கள் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு, மேவிபோசேத் எருசலேமிலேயே குடியிருந்து, ராஜாவின் மேஜையில் தினமும் சாப்பிட்டார்.—2சா 9.
படிப்புக் கட்டுரை 4
பாசத்தைக் காட்டுங்கள்
“ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்.”—ரோ. 12:10.
இந்தக் கட்டுரையில்...
நாம் ஒருவர்மேல் ஒருவர் காட்டுகிற அன்பைப் பார்த்து நாம் கிறிஸ்தவர்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று இயேசு சொன்னார். அவர் சொன்னதன்படி நடப்பதற்கு நாம் எல்லாருமே முயற்சி செய்கிறோம். நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்கள்மேல் எப்படிப் பாசம் காட்டுகிறோமோ, அதேபோல் நமது சகோதர சகோதரிகள்மேலும் காட்ட வேண்டும். அப்படிப்பட்ட பாசத்தை எப்படி வளர்த்துக்கொள்வது என்றும், எப்படித் தொடர்ந்து காட்டுவது என்றும் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
கடைசி நாட்களில் மக்கள் “பந்தபாசம்” இல்லாதவர்களாக இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 3:1, 3) இதை நாம் கண்ணாரப் பார்க்கிறோம்! உதாரணத்துக்கு, இன்று லட்சக்கணக்கான தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். அதனால், அவர்களுடைய பிள்ளைகள் அன்புக்காக ஏங்குகிறார்கள். இன்னொரு பக்கம், குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் ஒரே வீட்டில் இருந்தாலும் அன்னியர்களாகத்தான் இருக்கிறார்கள். இதைப் பற்றி குடும்ப நல ஆலோசகர் ஒருவர் இப்படிச் சொல்கிறார்: “அம்மா அப்பா பிள்ளைகள் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து ஒருத்தருக்கொருத்தர் பேசிக்குறதுக்கு பதிலா, கம்ப்யூட்டர்கிட்டயும் ஃபோன்கிட்டயும் வீடியோகேம்ஸ்கிட்டயும்தான் பேசிக்கிறாங்க. இவங்க எல்லாரும் ஒரே வீட்டுல இருந்தாலும் முன்பின் தெரியாதவங்க மாதிரிதான் இருக்குறாங்க.”
2 இந்த உலகத்தில் இருக்கிற நிறைய பேரை போல நாம் அன்பு இல்லாமல் நடந்துகொள்ளக் கூடாது. (ரோ. 12:2) அதற்குப் பதிலாக, குடும்பத்தில் இருப்பவர்கள்மேல் மட்டுமல்ல சகோதர சகோதரிகள்மேலும் பாசமாக இருக்க வேண்டும். (ரோமர் 12:10-ஐ வாசியுங்கள்.) பாசம் என்றால் என்ன? ரத்த சொந்தங்களுக்குள் இயல்பாகவே ஏற்படுகிற பிணைப்புதான் பாசம்! இப்படிப்பட்ட ஒரு பிணைப்பு, சகோதர சகோதரிகளுக்கும் நமக்கும் இடையில் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, நாம் எல்லாரும் ஒற்றுமையாக யெகோவாவை வணங்க முடியும்.—மீ. 2:12.
3 பாசத்தை எப்படி வளர்த்துக்கொள்வது என்றும், எப்படித் தொடர்ந்து காட்டுவது என்றும் யெகோவாவிடமிருந்தும் அவருடைய ஊழியர்களிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
யெகோவா—‘கனிவான பாசம் நிறைந்தவர்’
4 யெகோவாவின் பொன்னான குணங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று அது சொல்கிறது. (1 யோ. 4:8) இந்த அன்புதான் அவரிடம் நம்மை ஈர்த்தது. அதோடு, யெகோவா ‘கனிவான பாசம் நிறைந்தவர்’ என்றும் பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 5:11-ஐ வாசியுங்கள்.) யெகோவா நம்மேல் வைத்திருக்கிற ஆழமான அன்பைப் புரிந்துகொள்ள இந்த வசனம் உதவுகிறது.
5 யெகோவா கனிவான பாசம் நிறைந்தவர் என்று சொல்வதோடு, இரக்கம் நிறைந்தவர் என்றும் யாக்கோபு 5:11 சொல்கிறது. (யாத். 34:6) இந்தக் குணமும் அவரிடம் நம்மை ஈர்த்திருக்கிறது. அப்படியென்றால், யெகோவா எப்படி இரக்கம் காட்டுகிறார்? ஒரு வழி, நம்முடைய தவறுகளை மன்னிப்பதன் மூலம்! (சங். 51:1) பைபிளைப் பொறுத்தவரை, இரக்கம் என்பது மன்னிப்பது மட்டும் கிடையாது. யாராவது ஒருவர் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது நம்முடைய இதயத்தில் ஊற்றெடுக்கிற உணர்வுதான் இரக்கம்! இந்த உணர்வுதான், எப்படியாவது அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற தூண்டுதலைத் தருகிறது. இதே தூண்டுதல் யெகோவாவுக்கும் இருப்பதால்தான் நமக்கு உதவ அவர் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார். ஒரு தாய் தன்னுடைய பிள்ளையைக் கவனித்துக்கொள்வதைவிட யெகோவா நம்மை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார். (ஏசா. 49:15) பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும்போது நம்மைத் தூக்கிவிடுகிறார். (சங். 37:39; 1 கொ. 10:13) அப்படியென்றால், சகோதர சகோதரிகள்மேல் நாம் எப்படி இரக்கம் காட்டலாம்? அவர்கள் நம்மைப் புண்படுத்தும்போது அதை மனதிலேயே வைத்துக்கொண்டிருக்காமல் அவர்களை மன்னிக்கலாம். (எபே. 4:32) இன்னொரு முக்கியமான வழியும் இருக்கிறது. அதாவது, அவர்கள் கஷ்டத்தில் திணறிக்கொண்டிருக்கும்போது அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டலாம். இப்படிச் செய்யும்போது, கனிவான பாசம் காட்டுவதில் தலைசிறந்தவரான நம் அப்பா யெகோவாவைப் போலவே நாம் நடந்துகொள்கிறோம் என்று அர்த்தம்.—எபே. 5:1.
யோனத்தானும் தாவீதும்—‘நெருங்கிய நண்பர்கள்’
6 பாவ இயல்புள்ளவர்களாக இருந்தபோதும் பாசத்தைக் காட்டிய நிறைய பேரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அதில் ஓர் உதாரணம்தான் யோனத்தானும் தாவீதும்! “யோனத்தான் தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்தார். தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 சா. 18:1) சவுலுக்கு அடுத்ததாக தாவீது ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். அது தெரிந்தவுடனே தாவீதை சவுல் வெறுக்க ஆரம்பித்தார். அவரைக் கொல்லத் துடித்தார். ஆனால், யோனத்தான் தன்னுடைய அப்பாவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. யோனத்தானும் தாவீதும் இணைபிரியாத நண்பர்களாக இருந்து, கடைசிவரை ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக சத்தியம் செய்துகொண்டார்கள்.—1 சா. 20:42.
7 யோனத்தானுக்கும் தாவீதுக்கும் இடையில் இருந்த நெருக்கமான நட்பு சாதாரண ஒரு விஷயம் கிடையாது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? உதாரணத்துக்கு, தாவீதைவிட யோனத்தான் கிட்டத்தட்ட 30 வயது பெரியவர். இருந்தாலும், ‘தாவீது ரொம்ப சின்னப் பையன், அவனுக்கு அவ்வளவா அனுபவம் கிடையாது’ என்று யோனத்தான் நினைத்தாரா? இல்லை! அவர் தாவீதை தாழ்வாகப் பார்க்கவில்லை.
8 இப்போது இன்னொரு விஷயத்துக்கு வரலாம். யோனத்தான் சவுலுடைய வாரிசாக இருந்ததால் அடுத்ததாக அரியணை ஏறும் உரிமை தனக்குத்தான் இருப்பதாக அவர் நினைத்திருக்கலாம். தாவீதைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்கலாம். (1 சா. 20:31) ஆனால், யோனத்தான் மனத்தாழ்மை உள்ளவராகவும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராகவும் இருந்தார். அதனால், அடுத்த ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீதுக்கு முழு ஆதரவு கொடுத்தார். தன்னுடைய அப்பா தன்மேல் கோபப்பட்டபோதும் அவர் தாவீதுக்கு உண்மையோடு இருந்தார்.—1 சா. 20:32-34.
9 தாவீதுமேல் யோனத்தானுக்கு அளவுகடந்த அன்பு இருந்ததால் தாவீதை எதிரியாகப் பார்க்கவில்லை. யோனத்தான் திறமையான வில் வீரராகவும் தைரியமான போர் வீரராகவும் இருந்தார். அவரும் அவருடைய அப்பா சவுலும் “கழுகைவிட வேகமானவர்கள், சிங்கத்தைவிட வலிமையானவர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (2 சா. 1:22, 23) அதனால், யோனத்தான் நினைத்திருந்தால் தன்னுடைய வீரதீர செயல்களைப் பற்றிப் பெருமை பேசியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. தாவீதோடு அவர் போட்டி போடவில்லை. பொறாமைப்படவும் இல்லை. தாவீதுடைய தைரியத்தையும், யெகோவாமேல் அவருக்கு இருந்த நம்பிக்கையையும் பார்த்து யோனத்தான் அசந்துபோனார். சொல்லப்போனால், கோலியாத்தை தாவீது கொன்றதற்குப் பிறகு, யோனத்தான் தாவீதை உயிருக்குயிராய் நேசித்தார். யோனத்தானைப் போலவே நாமும் நம்முடைய சகோதர சகோதரிகள்மேல் எப்படிப் பாசத்தைப் பொழியலாம்?
நாம் எப்படிப் பாசத்தைப் பொழியலாம்?
10 “இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 1:22) இந்த விஷயத்தில் யெகோவா நமக்கு அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார். நாம் அவருக்கு உண்மையாக இருந்தால் நம்மேல் அவர் ஊக்கமாக அன்பு காட்டுவார். இந்த அன்பை வேறெந்த விஷயத்தாலும் முறிக்க முடியாது. (ரோ. 8:38, 39) ‘ஊக்கம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, “கடினமாக முயற்சி செய்வதையும்,” “சிரமமாக இருந்தாலும் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு விஷயத்தை செய்வதையும்” குறிக்கிறது. சகோதர சகோதரிகள்மேல் பாசத்தைப் பொழிவதற்கு சிலசமயங்களில் நாம் கடின முயற்சி எடுக்க வேண்டியிருக்கலாம். அதில் சிரமங்களும் இருக்கலாம். அவர்கள் நம்மைப் புண்படுத்தும்போது நாம் தொடர்ந்து ‘அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ள வேண்டும். கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானமாக வாழ்வதற்கும் ஊக்கமாக முயற்சி செய்ய வேண்டும்.’ (எபே. 4:1-3) தொடர்ந்து “சமாதானமாக வாழ்வதற்கு” நாம் முயற்சி செய்தால், சகோதர சகோதரிகளுடைய குறைகளையே பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். யெகோவா பார்ப்பதைப் போலவே அவர்களைப் பார்ப்போம்.—1 சா. 16:7; சங். 130:3.
11 சகோதர சகோதரிகள்மேல் பாசம் காட்டுவது எல்லாச் சமயத்திலும் சுலபமாக இருக்காது. முக்கியமாக, அவர்களுடைய குறைகள் நமக்குத் தெரியவரும்போது அப்படிப் பாசம் காட்டுவது கஷ்டமாக இருக்கலாம். இந்தப் பிரச்சினை முதல் நூற்றாண்டிலும் இருந்தது. உதாரணத்துக்கு, எயோதியாளையும் சிந்திகேயாளையும் பற்றிப் பார்க்கலாம். பவுலுடன் “தோளோடு தோள் சேர்ந்து நல்ல செய்தியை” அறிவிப்பதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் ஒத்துப்போகவில்லை. அதனால், “எஜமானுடைய சேவையில் ஒரே மனதோடு இருக்க வேண்டும்” என்று அவர்கள் இரண்டு பேருக்கும் பவுல் அறிவுரை கொடுத்தார்.—பிலி. 4:2, 3.
12 சகோதர சகோதரிகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டால் அவர்களைப் புரிந்துகொள்வதும் அவர்கள்மேல் பாசம் காட்டுவதும் கஷ்டமாக இருக்காது. இப்படிச் செய்வதற்கு வயதோ பின்னணியோ தடையாக இருக்க வேண்டியதில்லை. தாவீதைவிட யோனத்தான் கிட்டத்தட்ட 30 வயது பெரியவராக இருந்தபோதும் தாவீதோடு அவரால் நெருக்கமான நட்பை வைத்துக்கொள்ள முடிந்தது. அப்படியென்றால், உங்களைவிட வயதில் பெரியவர்களிடமோ சிறியவர்களிடமோ நட்பு வைத்துக்கொள்ள உங்களால் முயற்சி செய்ய முடியுமா? அப்படிச் செய்தால், “சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்ட” முடியும்.—1 பே. 2:17.
13 சகோதர சகோதரிகளிடம் பாசம் காட்ட வேண்டுமென்று சொல்லும்போது, எல்லாரிடமும் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்ள முடியுமென்று அர்த்தமா? இல்லை! நம்மைப் போன்றே விருப்பு வெறுப்புகள் இருப்பவர்களிடம் நாம் ஈர்க்கப்படுவது யதார்த்தம். அதனால், மற்ற சகோதர சகோதரிகளைவிட இவர்களிடம் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்வது இயல்பான ஒரு விஷயம். இந்த விஷயத்தில் இயேசுவைப் பற்றி கவனியுங்கள். அப்போஸ்தலர்கள் எல்லாரையும் “நண்பர்கள்” என்றுதான் அவர் சொன்னார். ஆனாலும், யோவானிடம் நெருக்கமான நட்பு வைத்திருந்தார். (யோவா. 13:23; 15:15; 20:2) அதற்காக மற்றவர்களைவிட யோவானை அவர் விசேஷமாக நடத்தவில்லை. உதாரணத்துக்கு, யோவானும் அவருடைய சகோதரர் யாக்கோபும் கடவுளுடைய அரசாங்கத்தில் தங்களுக்கு முக்கிய இடத்தைக் கேட்டபோது, “என்னுடைய வலது பக்கத்திலோ இடது பக்கத்திலோ உங்களை உட்கார வைக்க எனக்கு அதிகாரம் இல்லை” என்று சொன்னார். (மாற். 10:35-40) இயேசுவைப் போலவே நாமும் நம்முடைய நெருங்கிய நண்பர்களை விசேஷமாக நடத்தக் கூடாது. (யாக். 2:3, 4) அப்படி நடத்தினால், சபையில் பிரிவினைகள் ஏற்படுவதற்கு காரணமாகிவிடுவோம். சபைகளில் இப்படி ஒருபோதும் நடக்கக் கூடாது!—யூ. 17-19.
14 நாம் ஒருவர்மேல் ஒருவர் பாசத்தைப் பொழியும்போது சபையில் போட்டி பொறாமை இருக்காது. இப்போது, யோனத்தானைப் பற்றி மறுபடியும் பார்க்கலாம். தாவீதோடு அவர் போட்டி போடவில்லை. தன்னுடைய இடத்தைத் தட்டிப் பறித்துவிட்டதாக நினைத்து அவர்மேல் பொறாமைப்படவும் இல்லை. நாம் யோனத்தானைப் போல நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய சகோதர சகோதரிகளிடம் இருக்கிற திறமைகளைப் பார்த்து அவர்கள்மேல் பொறாமைப்படக் கூடாது. அதற்குப் பதிலாக, ‘மனத்தாழ்மையோடு அவர்களை நம்மைவிட உயர்ந்தவர்களாக கருத’ வேண்டும். (பிலிப்பியர் 2:3-ஐ வாசியுங்கள்.) எல்லாருமே சபைக்குப் பிரயோஜனமானவர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் மனத்தாழ்மையோடு இருந்தால் சகோதர சகோதரிகளிடம் இருக்கும் நல்ல விஷயங்களைப் பார்ப்போம், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம்.—1 கொ. 12:21-25.
15 நமக்கு ஏதாவது எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும்போது, சகோதர சகோதரிகள் நம்மேல் பாசத்தைப் பொழிகிறார்கள். நமக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள். இவர்கள் மூலம் யெகோவா நம்மை ஆறுதல்படுத்துகிறார். டானியா என்ற சகோதரிக்கும் அவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம். 2019-ல், அமெரிக்காவில் நடந்த “அன்பு ஒருபோதும் ஒழியாது” சர்வதேச மாநாட்டுக்கு அவர்கள் போயிருந்தார்கள். சனிக்கிழமை நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அப்போது என்ன நடந்தது என்று டானியா சொல்கிறார்: “நாங்க கார்ல ஹோட்டலுக்கு திரும்பிவந்துட்டு இருந்தப்போ ஒரு கார் திடீர்னு எங்க கார் மேல மோதிடுச்சு. எங்க யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லனாலும் நாங்க அதிர்ச்சியில காரவிட்டு வெளியே வந்து நின்னுட்டோம். அப்போ, ஒருத்தரு அவரோட கார் பக்கத்துல வர சொல்லி கை ஆட்டுனாரு. அவரும் மாநாட்டுக்கு வந்த ஒரு சகோதரர்தான். ஆனா, அவரு மட்டும் காரை நிறுத்தல. ஸ்வீடன்ல இருந்து மாநாட்டுக்கு வந்திருந்த 5 பேரு அவங்களோட கார நிறுத்துனாங்க. அந்த கார்ல இருந்த சகோதரிகள், என்னையும் என் பொண்ணையும் கட்டித் தழுவிகிட்டாங்க. அது எங்களுக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. ‘எங்களுக்கு ஒண்ணும் இல்ல, நாங்க நல்லாதான் இருக்கோம்’னு சொன்னதுக்கு அப்புறமும் அவங்க எங்கள அப்படியே விட்டுட்டு போயிடல. எங்களுக்கு முதலுதவி கிடைச்சதுக்கு அப்புறமும், எங்க கூடவே இருந்து எங்களுக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சு கொடுத்தாங்க. அந்த கஷ்டமான சமயத்துல யெகோவாவோட அன்ப நாங்க அனுபவிச்சோம். அந்த சம்பவத்துக்கு அப்புறம், சகோதர சகோதரிகளயும் யெகோவாவயும் இன்னும் அதிகமா நேசிக்க ஆரம்பிச்சோம். யெகோவாவுக்கு இன்னும் நன்றியோட இருந்தோம்.” நீங்கள் கஷ்டத்திலிருந்தபோது ஒரு சகோதரரோ சகோதரியோ உங்கள்மேல் பாசத்தைக் காட்டிய சம்பவம் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?
16 நாம் ஒருவர்மேல் ஒருவர் பாசத்தைப் பொழிவதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, நம்முடைய சகோதர சகோதரிகள் கஷ்டத்தில் இருக்கும்போது அவர்களை நம்மால் ஆறுதல்படுத்த முடிகிறது. நமக்குள் இருக்கிற ஒற்றுமையைப் பலப்படுத்த முடிகிறது. நாம் இயேசுவின் சீஷர்கள் என்பதை நிரூபிக்க முடிகிறது. அதன் மூலம் நல்ல ஜனங்கள் சத்தியத்துக்கு வருவதற்கு உதவ முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘கனிவும் இரக்கமும் உள்ள தகப்பனும் எல்லா விதமான ஆறுதலின் கடவுளுமான’ யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க முடிகிறது. (2 கொ. 1:3) அதனால், நாம் எல்லாரும் ஒருவர்மேல் ஒருவர் பாசத்தை வளர்த்துக்கொண்டு, தொடர்ந்து அதைக் காட்டலாம்.
ஆன்லைன் பைபிள் கார்டுகள்
யோனத்தான்
பைபிள் கார்டு 23
சேர்த்திடு... படித்திடு...
யோனத்தான்
இவரைப் பற்றி: யோனத்தான் ராஜாவின் வாரிசாக இருந்தார். தாவீதைவிட 30 வயது பெரியவராக இருந்தார். ஆனாலும், யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவான தாவீதுக்கு முழு ஆதரவு காட்டினார். (1 சாமுவேல் 23:15-18) பொறாமைபிடித்த தன்னுடைய அப்பா சவுலிடமிருந்து தாவீதைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரையே யோனத்தான் பணயம் வைத்தார். (1 சாமுவேல் 20:1-42) மற்றவர்களுக்கு கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்கும்போது நாம் சந்தோஷப்பட வேண்டும் என்ற பாடத்தை யோனத்தான் காட்டிய மனத்தாழ்மையிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.
கேள்விகள்
1. யோனத்தான் ․․․․․ என்பவரின் முதல் மகன்.
2. சரியா தவறா? யோனத்தானுடைய அப்பா யோனத்தான்மேல் ஈட்டியை எறிந்தார்.
3. யோனத்தானுக்கு யாரை ரொம்பவே பிடித்திருந்தது, ஏன்?
பதில்கள்
1. சவுல் ராஜா.—1 சாமுவேல் 14:47, 49.
2. சரி.—1 சாமுவேல் 20:33.
3. தாவீது. கோலியாத்தோடு சண்டை போடும்போது தாவீது காட்டிய தைரியத்தையும் யெகோவாமேல் தாவீதுக்கு இருந்த அன்பையும் யோனத்தான் பார்த்தார்.—1 சாமுவேல் 17:1–18:4.
[காலவரிசை]
கி.மு. 4026 ஆதாம் படைக்கப்பட்டான்
கிட்டத்தட்ட கி.மு. 1138-ல் பிறந்தார்
கி.பி. 1
கி.பி. 98 பைபிளின் கடைசி புத்தகம் எழுதப்பட்டது
[வரைபடம்]
கெபாவிலும் மிக்மாஷிலும் பெலிஸ்தியர்களைத் தோற்கடித்தார்
எருசலேம்
கெபா
மிக்மாஷ்
அதிகாரம் 23
ஒரு ராட்சதனை எதிர்த்து நின்றார்
‘குணசாலியான பெண்’
ரூத்தை போவாஸ் கரம்பிடிக்கிறார். அதன்பின், ‘ஒரு ஆண்பிள்ளையைப் பெற யெகோவா அநுக்கிரகம் பண்ணுகிறார்.’ பெத்லகேம் பெண்கள் நகோமியை வாழ்த்துகிறார்கள், ஏழு மகன்களைவிட நகோமிக்கு ரூத் அருமையானவள் என்று சொல்லி பாராட்டுகிறார்கள். ரூத்துக்குப் பிறந்த மகன் பிற்காலத்தில் மகாராஜா தாவீதுக்கு மூதாதையாக ஆகிறார். (ரூத் 4:11-22) தாவீதோ இயேசு கிறிஸ்துவின் மூதாதையாக ஆகிறார்.—மத். 1:1.
[அடிக்குறிப்பு]
இயேசுவின் முன்னோருடைய பட்டியலில் பைபிள் குறிப்பிடுகிற ஐந்து பெண்களில் ரூத்தும் ஒருத்தி. மற்றொரு பெண் ராகாப், இவள் போவாஸின் தாய். (மத். 1:3, 5, 6, 16) ரூத்தைப் போல், இவளும் ஒரு புறதேசத்து பெண்.
wp16.4 பக். 13
தாவீதுக்கும் கோலியாத்துக்கும் உண்மையிலேயே சண்டை நடந்ததா?
தாவீதைப் பற்றியும் கோலியாத்தைப் பற்றியும் பைபிள் சொல்கிற விஷயங்கள் நிஜமா கட்டுக்கதையா என்று சிலர் யோசிக்கிறார்கள். முந்தின கட்டுரையை வாசித்தபோது உங்கள் மனதில் இந்த சந்தேகம் வந்ததா? ஒருவேளை நீங்கள் அப்படி நினைத்திருந்தால் கீழே சொல்லப்பட்டிருக்கும் மூன்று விஷயங்களை கவனியுங்கள்.
1 | ஒரு மனிதன் கிட்டத்தட்ட ஒன்பதரை அடி (2.9 மீ) உயரம் இருக்க முடியுமா?
கோலியாத்தின் உயரம், ‘ஆறு முழம் ஒரு ஜாண்’ என்று பைபிள் சொல்கிறது. (1 சாமுவேல் 17:4) அந்தக் கால கணக்கின்படி, ஒரு முழம் என்பது 17.5 அங்குலம் (44.5 செ.மீ); ஒரு ஜாண் என்பது 8.75 அங்குலம் (22.2 செ.மீ). அப்படியானால், ‘ஆறு முழம் ஒரு ஜாண்’ என்பது சுமார் ஒன்பது அடி ஆறு அங்குலம் (2.9 மீ). இவ்வளவு உயரமாக கோலியாத் இருந்திருக்க முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்: நம் காலத்திலேயே 8 அடி 11 அங்குலம் (2.7 மீ) உயரமான ஒருவர் இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, கோலியாத் ஏன் அதைவிட ஆறு அங்குலம் (15 செ.மீ) உயரமாக இருந்திருக்க முடியாது? அதோடு, அவன் ரெப்பாயீம் என்ற வம்சத்தை சேர்ந்தவன், இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் உயரமாக இருந்தார்கள். கானான் பகுதியை சுற்றிலும் வாழ்ந்த சில பயங்கரமான போர் வீரர்களின் உயரம் எட்டு அடிக்கும் (2.4 மீ) அதிகமாக இருந்தது என்று கி.மு 13-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட எகிப்திய பதிவு ஒன்று சொல்கிறது. அதனால், கோலியாத்தின் அசாதாரண உயரத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
2 | தாவீது நிஜமான ஒரு நபரா?
தாவீது ராஜா கட்டுக்கதையில் வரும் ஒரு நபர் என்றுதான் சில அறிஞர்கள் ஒரு காலத்தில் நினைத்தார்கள். ஆனால், அதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. பழமையான ஒரு கல்வெட்டில், “தாவீதின் வீடு” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருப்பதை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதோடு, இயேசு கிறிஸ்துவும் தாவீதைப் பற்றி பேசியிருக்கிறார்... அவரை நிஜமான நபராகக் காட்டியிருக்கிறார். (மத்தேயு 12:3; 22:43-45) இயேசுதான் மேசியா என்பதற்கும் அவர் தாவீது ராஜாவின் வம்சத்தில்தான் வந்தார் என்பதற்கும் இரண்டு விவரமான வம்சாவளி பட்டியல்கள் பைபிளில் இருக்கின்றன. (மத்தேயு 1:6-16; லூக்கா 3:23-31) அதனால், தாவீது உண்மையிலேயே வாழ்ந்த நபர் என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.
3 | இந்தச் சம்பவம் நடந்த இடம் கற்பனையா நிஜமா?
இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்களும் போர் செய்வதற்காக ஏலா பள்ளத்தாக்கில் கூடி வந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இன்னும் குறிப்பாக, சோக்கோ மற்றும் அசெக்கா என்ற இரண்டு ஊர்களுக்கு நடுவில் இருந்த ஒரு மலைச்சரிவில் பெலிஸ்தர்கள் கூடினதாகவும், இஸ்ரவேலர்களோ எதிரில் இருந்த மலையில் கூடினதாகவும் பைபிள் சொல்கிறது. இந்த இடம் கற்பனையா நிஜமா?
சமீபத்தில் அந்த இடத்தை சுற்றிப் பார்க்க போயிருந்த ஒருவர் சொல்கிறார்: “கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருத்தர்தான் அந்த இடங்கள சுத்திக்காட்டினார். ஏலா பள்ளத்தாக்குக்கு போனோம், அப்புறம் அங்கிருந்த ஒரு பாதை வழியா ஒரு மலை உச்சிக்கு போனோம். அந்த மலைல இருந்து பள்ளத்தாக்கை நாங்க பாத்துக்கிட்டு இருந்தப்போ, அவர் எங்கள 1 சாமுவேல் 17:1-3-ஐ வாசிக்க சொன்னார். அப்புறம், அந்தப் பள்ளத்தாக்குக்கு இடது பக்கம் கைகாட்டி, ‘அங்கதான் சோக்கோ ஊரோட இடிபாடுகள் இருக்கு.’ வலது பக்கம் திரும்பி, ‘அங்க அசெக்கா ஊரோட இடிபாடுகள் இருக்கு. இந்த ரெண்டு ஊருக்கும் நடுவுல நீங்க பாத்துக்கிட்டு இருக்கிற இந்த மலையிலதான் எங்கேயோ பெலிஸ்தர்கள் முகாம் போட்டிருக்கலாம். நாம நிக்கிற இந்த இடத்துலதான் இஸ்ரவேலர்கள் முகாம் போட்டிருக்கலாம்.’ நான் இருந்த அதே இடத்துல சவுலும் தாவீதும் நிக்ற மாதிரி கற்பன செஞ்சு பாத்தேன். அப்புறம், அந்த மலையில இருந்து கீழ இறங்கி பள்ளத்தாக்குக்கு வந்தோம். பெரும்பாலும் காஞ்சு போயிருந்த ஒரு ஆற்றை தாண்டி போனப்போ, அங்க நிறையா கல்லுங்க இருந்திச்சு. உடனே தாவீது கீழே குனிஞ்சு 5 கூழாங்கல் எடுக்ற மாதிரி கற்பன செஞ்சேன். அங்க இருந்து எடுத்த ஒரு கல்லாலதான் அவர் கோலியாத்தை சாக அடிச்சார்.” மற்றவர்களை போலவே இவரும் பைபிளில் இருக்கும் இந்தத் தெளிவான விஷயங்களை பார்த்து ஆச்சரியப்பட்டார்.
இந்தச் சரித்திர பதிவு உண்மையா என்று சந்தேகப்பட எந்த நியாயமான காரணமும் இல்லை. ஏனென்றால், இந்த பதிவில் வரும் ஆட்களும் இடங்களும் கற்பனை அல்ல, நிஜமானதே. எல்லாவற்றையும்விட, இது கடவுளுடைய சக்தியால் எழுதப்பட்ட பதிவு. “பொய் சொல்ல முடியாத,” உண்மையுள்ள கடவுள்தான் இதற்கு ஊற்றமூலர்.—தீத்து 1:3; 2 தீமோத்தேயு 3:16.
w11 9/1 பக். 27 பாரா 1–பக். 28 பாரா 1
யெகோவாவின் இதயத்துக்குப் பிடித்தவர்
ஆடு மேய்க்கிற ஒரு சின்னப் பையனாகத்தான் பைபிள் தாவீதை அறிமுகப்படுத்துகிறது. தன்னுடைய அப்பாவின் ஆடுகளை தாவீது மேய்த்துக்கொண்டிருந்தார். அப்படியென்றால், அவர் அநேகமாக ராத்திரியும் பகலும் நிறைய நேரம் காட்டுவெளியில் தனியாக இருந்திருக்க வேண்டும். அவருடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.
தாவீதின் குடும்பத்தில் இருந்தவர்கள் பெத்லகேமில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அது யூதாவின் குன்றுகள்மேல் இருந்த ஒரு சின்ன ஊர். பெத்லகேமைச் சுற்றியிருந்த வயல்களில் தானியங்கள் நன்றாக விளைந்தன. மலைச்சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், பழத் தோட்டங்களும் ஒலிவமரத் தோப்புகளும் திராட்சைத் தோட்டங்களும் இருந்தன. தாவீதின் காலத்தில், பயிரிடப்படாத மற்ற நிலங்கள் மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்தப்பட்டன. கொஞ்ச தூரத்தில், யூதா வனாந்தரம் இருந்தது.
ஆடு மேய்க்கிற வேலை ரொம்ப ஆபத்தாக இருந்தது. தாவீது இந்தக் குன்றுகளில் இருந்தபோதுதான், அவருடைய ஆடுகளைப் பிடிக்க ஒரு சிங்கமும் ஒரு கரடியும் வந்தன. அப்போது, அவர் தைரியமாக அந்தக் காட்டு மிருகங்களைத் துரத்திப் பிடித்து, அவற்றைக் கொன்றுபோட்டு, தன் ஆடுகளைக் காப்பாற்றினார். (1 சாமுவேல் 17:34-36) ஒருவேளை, இந்தச் சமயத்தில்தான் கவணை நன்றாகப் பயன்படுத்த தாவீது பழகியிருப்பார். அவருடைய சொந்த ஊரிலிருந்து கொஞ்ச தூரத்தில்தான் பென்யமீனியர்களின் பகுதி இருந்தது. பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த ஆண்கள் “குறி தப்பாமல் கவண்கல் எறிவதில் கெட்டிக்காரர்கள்.” தாவீதுக்கும் அதே திறமை இருந்தது.—நியாயாதிபதிகள் 20:14-16; 1 சாமுவேல் 17:49.
நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்
நிறைய நேரம் தனிமையில் இருப்பதால் மேய்ப்பர்களுடைய வாழ்க்கை பொதுவாக சலிப்புத்தட்டுவதாக இருக்கும். ஆனால், தாவீது அந்தச் சந்தர்ப்பங்களை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். அந்த அமைதியான நேரங்களில், யெகோவாவைப் பற்றியும் அவருடைய படைப்புகளைப் பற்றியும் ஆழமாக யோசித்துப் பார்த்தார். சங்கீதங்களில் அவர் எழுதிய சில விஷயங்கள், அநேகமாக சின்ன வயதில் அவர் யோசித்துப் பார்த்த விஷயங்களாகத்தான் இருந்திருக்கும். யெகோவா ஏன் மனிதர்களையும் சூரிய சந்திர நட்சத்திரங்களையும் மற்ற படைப்புகளையும் படைத்தார் என்று ஒருவேளை இந்தத் தனிமையான நேரங்களில் தாவீது யோசித்திருப்பாரா? பெத்லகேமைச் சுற்றியிருந்த வயல்வெளிகளில் இருந்தபோது, செழிப்பான நிலத்தையும், ஆடு, மாடு, எருது, பறவைகள், ‘காட்டு மிருகங்கள்’ போன்றவற்றைப் பற்றியும் தாவீது யோசித்திருப்பாரா?—சங்கீதம் 8:3-9; 19:1-6.
தாவீது ஒரு மேய்ப்பராக இருந்ததால், யெகோவா தனக்கு உண்மையாக இருக்கிறவர்களை எவ்வளவு அன்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக்கொள்கிறார் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார். அதனால், இப்படிப் பாடினார்: “யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார். எனக்கு ஒரு குறையும் வராது. பசுமையான புல்வெளிகளில் அவர் என்னைப் படுத்துக்கொள்ள வைக்கிறார். நிறைய தண்ணீர் உள்ள இடங்களுக்குக் கொண்டுபோய் என்னை ஓய்வெடுக்க வைக்கிறார். பயங்கர இருட்டான பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும், எந்த ஆபத்தையும் நினைத்துப் பயப்பட மாட்டேன். ஏனென்றால், நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள். உங்களுடைய கோலும் தடியும் எனக்கு நம்பிக்கை தருகின்றன.”—சங்கீதம் 23:1, 2, 4.
இளம் ஆண்களே, மற்றவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் எப்படிச் சம்பாதிக்கலாம்?
6 தாவீது ஒரு பொடிப் பையன் என்றும் பொறுப்பு இல்லாதவன் என்றும் மற்றவர்கள் சொன்னார்கள். உதாரணத்துக்கு, ‘நான் கோலியாத்த கொல்றேன்’ என்று தாவீது சொன்னபோது, “நீ இளைஞன்” என்று சொல்லி அவருடைய உற்சாகத்தை சவுல் குறைத்தார். (1 சா. 17:31-33) தாவீதின் அண்ணனும், அவரை பொறுப்பு இல்லாதவன் என்று ஒருதடவை சொன்னார். (1 சா. 17:26-30) ஆனால், யெகோவா தாவீதைப் பொடிப் பையனாகவும் பார்க்கவில்லை; பொறுப்பு இல்லாதவன் என்றும் நினைக்கவில்லை. அவரைப் பற்றி யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். தாவீதும் பலத்துக்காக தன்னுடைய நண்பரான யெகோவாவை நம்பியிருந்தார். அதனால், கோலியாத்தை அவரால் வெட்டி வீழ்த்த முடிந்தது.—1 சா. 17:45, 48-51.
it “எலியாப்” எண் 4 பாரா 1
எலியாப்
4. தாவீதின் அப்பாவான ஈசாயின் மூத்த மகன். (1சா 17:13; 1நா 2:13) எலியாபின் தோற்றத்தையும் உயரத்தையும் சாமுவேல் பார்த்தபோது, அவனைத்தான் ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்திருப்பார் என்று நினைத்தார். ஆனால், எலியாபை அல்ல, தாவீதைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்திருந்தார்.—1சா 16:6-12.
இளம் ஆண்களே, மற்றவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் எப்படிச் சம்பாதிக்கலாம்?
இளம் சகோதரர்களே, உங்களுடைய சேவை எங்களுக்குத் தேவை! உங்களிடம் பலமும் இளமைத் துடிப்பும் நிறைய இருக்கிறது. (நீதி. 20:29) நீங்கள் சபைக்கு ஒரு பெரிய சொத்து! ஒரு உதவி ஊழியராக ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கலாம். ஆனால், ‘நான் சின்ன பையன்னும் அவ்வளவா அனுபவம் இல்லாதவன்னும் மத்தவங்க நினைப்பாங்களோ’ என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கலாம். நீங்கள் சின்னப் பையனாக இருக்கலாம். ஆனால், மற்றவர்களுடைய நம்பிக்கையையும் மதிப்பு மரியாதையையும் நிச்சயம் உங்களால் சம்பாதிக்க முடியும்.
2 முக்கியமாக, தாவீது ராஜாவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, யூதாவின் ராஜாக்களாக இருந்த ஆசாவைப் பற்றியும் யோசபாத்தைப் பற்றியும் பார்ப்போம். இவர்கள் மூன்று பேருடைய வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் வந்தன, அப்போது அவர்கள் என்ன செய்தார்கள், அவர்களிடமிருந்து இளம் சகோதரர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
தாவீதிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
3 யெகோவாவிடம் தாவீதுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. மற்றவர்களுக்குப் பிரயோஜனமான நிறைய திறமைகளை சின்ன வயதிலேயே அவர் வளர்த்துக்கொண்டார். இசைக் கருவிகளை நன்றாக வாசிப்பதற்குப் பழகிக்கொண்டார். அந்தத் திறமையை வைத்து கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவான சவுலுக்கு அவரால் உதவவும் முடிந்தது. (1 சா. 16:16, 23) உங்களிடமும் திறமைகள் இருக்கின்றனவா? அதை வைத்து சபையில் இருக்கிறவர்களுக்கு உதவ முடியுமா? உங்களில் நிறைய பேர் இப்படி உதவுகிறீர்கள். ஒருவேளை, உங்கள் சபையில் இருக்கிற வயதானவர்களுக்கு டேப்லெட் அல்லது மற்ற எலக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு உதவி தேவைப்படலாம். இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் திறமை உங்களுக்கு இருப்பதால் நீங்கள் அவர்களுக்கு உதவலாம்.
4 தாவீது பொறுப்பான பையனாக இருந்தார். அவரை நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க முடிந்தது. உதாரணத்துக்கு, அவர் சின்னப் பையனாக இருந்தபோது அவருடைய அப்பாவின் ஆடுகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார். அது ஆபத்தான ஒரு வேலையாக இருந்தது. “உங்கள் அடியேனாகிய நான் என்னுடைய அப்பாவின் ஆடுகளை மேய்த்துவருகிறேன். ஒருநாள் ஒரு சிங்கமும், இன்னொரு நாள் ஒரு கரடியும் வந்து மந்தையிலுள்ள ஆட்டைக் கவ்விக்கொண்டு போனது. நான் அதைத் துரத்திக் கொண்டுபோய், அதன் வாயிலிருந்து ஆட்டைக் காப்பாற்றினேன்” என்று சவுல் ராஜாவிடம் தாவீது சொன்னார். (1 சா. 17:34, 35) ஆடுகளைப் பொறுப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததால் அவற்றைக் காப்பாற்றுவதற்காகத் தைரியமாக சண்டை போட்டார். இளம் சகோதரர்களே, நீங்களும் தாவீது மாதிரி இருங்கள். எந்த வேலை கொடுத்தாலும் பொறுப்பாக செய்து முடியுங்கள்.
5 சின்ன வயதிலேயே யெகோவாவிடம் நெருக்கமான நட்பை தாவீது வளர்த்துக்கொண்டார். அவரிடம் இருந்த தைரியம்... யாழ் இசைக்கும் திறமை... ஆகியவற்றைவிட யெகோவாவிடமிருந்த நட்பைத்தான் அவர் முக்கியமாக நினைத்தார். யெகோவா அவருக்கு வெறுமனே கடவுளாக மட்டுமல்ல, நெருங்கிய நண்பராகவும் இருந்தார். (சங்கீதம் 25:14-ஐ வாசியுங்கள்.) இளம் சகோதரர்களே, தாவீது மாதிரியே நீங்களும் யெகோவாவிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
6 தாவீது ஒரு பொடிப் பையன் என்றும் பொறுப்பு இல்லாதவன் என்றும் மற்றவர்கள் சொன்னார்கள். உதாரணத்துக்கு, ‘நான் கோலியாத்த கொல்றேன்’ என்று தாவீது சொன்னபோது, “நீ இளைஞன்” என்று சொல்லி அவருடைய உற்சாகத்தை சவுல் குறைத்தார். (1 சா. 17:31-33) தாவீதின் அண்ணனும், அவரை பொறுப்பு இல்லாதவன் என்று ஒருதடவை சொன்னார். (1 சா. 17:26-30) ஆனால், யெகோவா தாவீதைப் பொடிப் பையனாகவும் பார்க்கவில்லை; பொறுப்பு இல்லாதவன் என்றும் நினைக்கவில்லை. அவரைப் பற்றி யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். தாவீதும் பலத்துக்காக தன்னுடைய நண்பரான யெகோவாவை நம்பியிருந்தார். அதனால், கோலியாத்தை அவரால் வெட்டி வீழ்த்த முடிந்தது.—1 சா. 17:45, 48-51.
7 தாவீதின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்திலிருந்து, பொறுமையாக இருப்பது ஏன் முக்கியம் என்பதைக் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள சிலருக்குக் கொஞ்சக் காலம் எடுக்கும். நீங்கள் குழந்தையாக இருந்ததிலிருந்தே உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதால் அவர்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், உங்களைக் குழந்தையாகவோ சின்னப் பையனாகவோ யெகோவா நினைப்பதில்லை. நீங்கள் யார்... உங்களுக்கு என்னென்ன திறமைகள் இருக்கின்றன... என்பதெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். (1 சா. 16:7) தாவீதிடமிருந்து இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளலாம். படைப்புகளை அவர் உன்னிப்பாகக் கவனித்தார். அதிலிருந்து யெகோவாவுடைய அருமை பெருமைகளைப் பற்றித் தெரிந்துகொண்டார். அவரிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொண்டார். நீங்களும் யெகோவாவிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். (சங். 8:3, 4; 139:14; ரோ. 1:20) பலத்துக்காக எப்போதுமே யெகோவாவையே நம்பியிருக்க வேண்டும் என்ற பாடத்தையும் தாவீதிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். இப்படி யோசித்துப் பாருங்கள்: நீங்கள் யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் உங்களோடு படிக்கிற பிள்ளைகள் உங்களைக் கிண்டல் செய்கிறார்கள். நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்யலாம். அப்போது, தாவீது மாதிரியே இந்தச் சூழ்நிலையை உங்களால் ஜெயிக்க முடியும். அதோடு, பைபிளிலும் பிரசுரங்களிலும் வீடியோக்களிலும் இருக்கிற அறிவுரைகளின்படி நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள். யெகோவா உங்களுக்கு உதவுவதைப் பார்க்க பார்க்க அவர்மேல் இருக்கிற நம்பிக்கை அதிகமாகும்.
8 தாவீதின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவம்: யூதாவின் ராஜாவாக அவர் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தாலும், அரியணை ஏறுவதற்கு ரொம்ப வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. (1 சா. 16:13; 2 சா. 2:3, 4) அவரால் எப்படிப் பொறுமையாக இருக்க முடிந்தது? அரியணை ஏற முடியவில்லையே என்று நினைத்து சோர்ந்து போவதற்குப் பதிலாக, தன்னால் முடிந்ததை எல்லாம் அவர் செய்தார். உதாரணத்துக்கு, பெலிஸ்தியர்களின் தேசத்துக்குத் தப்பித்துப் போனபோது இஸ்ரவேலின் எதிரிகளை எதிர்த்து சண்டை போட்டார். இப்படி, யூதாவின் எல்லைகளைப் பாதுகாத்தார்.—1 சா. 27:1-12.
9 இதிலிருந்து இளம் சகோதரர்களுக்கு என்ன பாடம்? காத்திருக்கிற காலத்தை மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்குப் பயன்படுத்துங்கள். ரிகார்டோ என்ற சகோதரர் அதைத்தான் செய்தார். சின்ன வயதிலிருந்தே ஒழுங்கான பயனியராக சேவை செய்ய வேண்டும் என்பது அவருடைய கனவு. ஆனால், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று மூப்பர்கள் சொல்லிவிட்டார்கள். இதை நினைத்து அவர் சோர்ந்துபோகவில்லை, மூப்பர்கள்மேல் கோபப்படவில்லை. ஊழியத்தை அதிகமாகச் செய்தார். “இப்போ நினைச்சு பார்த்தா நான் சில முன்னேற்றங்கள செய்ய வேண்டி இருந்துச்சுங்குறது புரியுது. யாராவது துளி ஆர்வம் காட்டுனாகூட அவங்கள போய் மறுபடியும் பார்த்தேன். இப்படி, நிறைய மறுசந்திப்புகள செஞ்சேன். ஒரு பைபிள் படிப்பையும் ஆரம்பிச்சேன். அனுபவம் கிடைக்க கிடைக்க பயமெல்லாம் போயிடுச்சு” என்று ரிகார்டோ சொல்கிறார். இன்று ஒழுங்கான பயனியர் சேவையை நன்றாக செய்துகொண்டிருக்கிறார். உதவி ஊழியராகவும் இருக்கிறார்.
10 தாவீதின் வாழ்க்கையில் இன்னொரு சம்பவம் நடந்தது. சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்தியர்களின் தேசத்தில் அவர் வாழ்ந்துகொண்டு இருந்தபோது, அவரும் அவரோடு இருந்த ஆண்களும் தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு ஒருதடவை போருக்குப் போயிருந்தார்கள். அந்தச் சமயத்தில் எதிரிகள் வந்து அவர்களுடைய வீடுகளில் இருந்த எல்லாவற்றையும் கொள்ளையடித்துவிட்டு, மனைவி மக்களையும் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். தாவீது ஒரு மாவீரன்! போர் செய்வதில் அனுபவசாலி! ஆனால், அந்த அனுபவத்தை வைத்து குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடலாம் என்று அவர் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, என்ன செய்வது என்று தெரிந்துகொள்ள அபியத்தார் என்கிற குரு மூலம் யெகோவாவிடம் கேட்டார். “நான் இந்தக் கொள்ளைக்கூட்டத்தைத் துரத்திக்கொண்டு போகட்டுமா?” என்று கேட்டபோது, துரத்திக்கொண்டு போகச் சொல்லியும் அவருக்குக் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்றும் யெகோவா சொன்னார். (1 சா. 30:7-10) இந்தச் சம்பவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
11 முடிவுகள் எடுப்பதற்கு முன் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். உங்களுடைய அப்பா அம்மாவிடம் பேசலாம். அனுபவமுள்ள மூப்பர்களிடமும் கேட்கலாம். மூப்பர்களை யெகோவா நம்புகிறார். அதனால், நீங்களும் தாராளமாக நம்பலாம். அதோடு, மூப்பர்களை யெகோவா “பரிசுகளாக” பார்க்கிறார். (எபே. 4:8) அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து கற்றுக்கொள்ளும்போதும், அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு நடக்கும்போதும் உங்களால் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். இப்போது, ஆசா ராஜாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
அதிகாரம் 24
பெரிய ஆபத்தைத் தடுத்து நிறுத்தினாள்
புத்திசாலியாக நடந்துகொண்டாள்
6 இப்படியொரு புத்திசாலி பெண் ஏன் அப்படியொரு உதவாக்கரையைக் கல்யாணம் செய்தாள் என இன்று சிலர் யோசிக்கலாம். பைபிள் காலங்களில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டன என்பதை நினைவில் வையுங்கள். அப்படி அவர்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றாலும், அவர்களுடைய சம்மதம் ரொம்பவே முக்கியம். நாபாலின் செல்வத்தையும் செல்வாக்கையும் பார்த்துதான் அபிகாயிலின் பெற்றோர் அந்தத் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்களா, ஏன் ஏற்பாடுகூட செய்தார்களா? வறுமை வாட்டியதால் அப்படிச் செய்தார்களா? எதுவாக இருந்தாலும் சரி, நாபாலிடம் பணம் இருந்ததே தவிர, கணவனுக்குரிய குணம் இருக்கவில்லை.
w97 7/1 பக். 14 பாரா 4
விவேகமுள்ள ஒரு பெண் பேரழிவைத் தடுக்கிறாள்
இதற்கிடையில், செம்மறியாடுகளுக்கு மயிர்கத்தரிப்பது கர்மேலில் ஆரம்பமாயிருந்தது. இது ஒரு விழாக் காலமாய் இருந்தது, அறுவடைக் காலம் விவசாயிக்கு ஒரு விழாக் காலமாய் இருப்பதுபோல. இது, தாராளமாய் வாரிவழங்கும் ஒரு சமயமாகவும் இருந்தது, இந்தச் சமயத்தில் ஆடுகளின் சொந்தக்காரர்கள் தங்களுடைய வேலையாட்களுக்கு பரிசளிப்பார்கள். எனவே, நாபாலுடைய மந்தைகளுக்காக தாவீதின் பத்து மனிதர்கள் செய்திருந்த சேவைக்கு கைமாறாக அவனிடமிருந்து உணவை வாங்கிக்கொண்டு வரும்படி கர்மேல் நகரத்திற்கு தாவீது அவர்களை அனுப்பினார்; இப்படி செய்வதன்மூலம் அவர் கர்வமுள்ளவரைப் போல் நடந்துகொள்ளவில்லை.—1 சாமுவேல் 25:4-9.
புத்திசாலியாக நடந்துகொண்டாள்
9 நாபால் மாகோனில் வசிக்கிறான், அருகிலுள்ள கர்மேல் பகுதியில் தொழில் செய்துவருகிறான்; அங்கு அவனுக்கு நிலபுலன்கள் இருந்திருக்கலாம். இந்த இரு ஊர்களிலும் பசும் புல்வெளிகள் நிறைந்த மேட்டுநிலங்கள் இருக்கின்றன; ஆடுகளை மேய்ப்பதற்கு வசதியாக இருப்பதால், நாபாலுக்குச் சொந்தமான 3,000 ஆடுகளும் இங்குதான் மேய்ந்துகொண்டிருக்கும். சுற்றியுள்ள நிலங்கள் பண்படுத்தப்படாமல் தரிசாகக் கிடக்கின்றன. தெற்கே பாரான் வனாந்தரம் பரந்துவிரிந்திருக்கிறது. கிழக்கே, உப்புக்கடலுக்குச் செல்லும் வழியில், ஆழமான பள்ளத்தாக்குகளும் குகைகளும் நிறைந்த வறண்ட நிலப்பகுதிகள் தென்படுகின்றன. இந்தப் பகுதிகளில்தான் தாவீதும் அவருடைய ஆட்களும் பிழைப்புக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள்; உணவுக்காகத் தேடி அலைந்தார்கள், இன்னும் பல கஷ்டங்களையும் அனுபவித்தார்கள். இங்குதான் செல்வச்சீமான் நாபாலின் இளம் மேய்ப்பர்களை அடிக்கடி சந்தித்தார்கள்.
10 கடினமாய் உழைக்கிற தாவீதின் படைவீரர்கள் அந்த மேய்ப்பர்களை எப்படி நடத்தினார்கள்? அவர்கள் நினைத்திருந்தால், அவ்வப்போது நாபாலின் ஆடுகளை அபகரித்திருக்கலாம்; ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. நாபாலின் ஆடுகளையும் வேலைக்காரர்களையும் மதில்போல் காத்துவந்தார்கள். (1 சாமுவேல் 25:15, 16-ஐ வாசியுங்கள்.) ஆடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் நிறைய ஆபத்துகள் வந்தன. கொடிய விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. ஆடுமேய்க்கும் இடங்கள் இஸ்ரவேலின் தெற்கு எல்லையருகே அமைந்திருந்ததால் பிற நாட்டு கொள்ளையரின் அட்டகாசம் வேறு இருந்தது.
it “உயிர்” பாரா 45
உயிர்
“பொக்கிஷப் பை.” நாபாலைப் பழிவாங்கி இரத்தப்பழிக்கு ஆளாக வேண்டாம் என்று தாவீதிடம் அபிகாயில் கெஞ்சிக் கேட்டபோது, “எஜமானே, உங்களைப் பிடித்துக் கொன்றுபோட யாராவது வந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய உயிரைத் தன்னுடைய பொக்கிஷப் பையில் வைத்துப் பாதுகாப்பார். ஆனால் எதிரிகளின் உயிரை, கவணில் வைத்து எறியும் கல்போல் எறிந்துவிடுவார்” என்று சொன்னாள். (1சா 25:29-33) விலைமதிப்புள்ள பொருள்கள் பையில் வைத்துப் பத்திரமாகப் பாதுகாக்கப்படுவதுபோல், தாவீதின் உயிர் கடவுளுடைய கையில் பத்திரமாக இருந்தது. தாவீது தன்னுடைய பிரச்சினையைத் தானே சரிசெய்ய வேண்டும் என்று நினைக்காமல் யெகோவாவுக்காகக் காத்திருந்தால் எதிரிகளின் கையிலிருந்து யெகோவா அவருடைய உயிரைப் பாதுகாப்பார். ஆனால், எதிரிகளின் உயிரைக் கவண்கல் போல் எறிந்துவிடுவார்.
கோவத்தை அடக்க...
ஒரு காலேஜ்ல, அளவுக்குமீறி கோவப்பட்ட கூடைப்பந்து பயிற்சியாளரை வேலையவிட்டு அனுப்பிட்டாங்க.
கேட்டது கிடைக்கலைனு ஒரு குழந்தை ஓயாம அடம் பிடிச்சிது.
ரூமை சுத்தமா வைக்காத மகன அம்மா கண்டபடி கத்தினாங்க.
இந்த மாதிரி விஷயங்கள நாம எல்லாருமே கேட்டிருப்போம். நமக்கும் அடிக்கடி கோவம் வரும். கோவத்த குறைக்கனும்னு நாம எல்லாருமே ஆசைப்படுறோம். ஆனா, ‘நான் கோவப்பட்டதுல தப்பே இல்ல’னு சில நேரம் நினைப்போம். அதுவும் நாம எதிர்பார்க்கிற மாதிரி மத்தவங்க நடந்துக்கலனா நமக்கு கோவம் வரும். அமெரிக்க மனோதத்துவ அமைப்பு (American Psychological Association) வெளியிட்ட ஒரு கட்டுரையில, “மனுஷனா பிறந்தா கண்டிப்பா கோவம் வரும். சில விஷயத்துக்கு கோவப்படுறது நல்லதுதான்”-னு சொல்லியிருக்காங்க.
நம்ம எல்லாருக்குமே கோவம் வரும்னு பைபிள் எழுத்தாளரான பவுலும் சொன்னார். ஆனா, “நீங்கள் கடுங்கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு உங்கள் எரிச்சல் தணியட்டும்”னு சொன்னார். (எபேசியர் 4:26) அப்படினா, நாம கோவப்படுறது சரியா, தப்பா?
கோவப்படுறது சரியா?
“நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்”னு பைபிள்ல தாவீதும் எழுதினார். இந்த வார்த்தைகள மனசுல வச்சுதான் பவுல் அப்படி சொல்லியிருப்பார். (சங்கீதம் 4:4) பவுல் சொன்ன வார்த்தைகளோட அர்த்தம் என்ன? எபேசியர் 4:31-ல பவுலே சொல்றார்: “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான துர்குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்.” நாம அளவுக்கு அதிகமா கோவப்படுறது தப்புனு பவுல் சொல்றார். அமெரிக்க மனோதத்துவ அமைப்பும் இப்படித்தான் சொல்லுது: “கோவத்த கொட்டி தீர்க்கிறதுனால எந்தப் பிரயோஜனமும் இல்ல. பிரச்சினை இன்னும் அதிகமாதான் ஆகும்.”
அப்படினா, கோவத்த அடக்க நாம என்ன செய்யனும்? “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை”னு சாலொமோன் ராஜா சொல்றார். (நீதிமொழிகள் 19:11) கோவத்த அடக்க “விவேகம்” எப்படி உதவும்?
என்ன செய்யலாம்?
விவேகமா நடந்துக்கிறவங்க சூழ்நிலைய நல்லா யோசிச்சு பார்ப்பாங்க. அவங்க பக்கம் இருக்கிற நியாயத்த மட்டும் யோசிக்காம, எல்லா விஷயத்த பத்தியும் யோசிச்சு பார்ப்பாங்க. இது ஏன் நல்லது?
ஒரு அநியாயம் நடந்ததுனா, உடனே நமக்கு பயங்கரமா கோவம் வரும். ஆனா, நம்ம கோவத்த எல்லாம் கொட்டி தீர்க்க ஆரம்பிச்சா நமக்கும் நல்லது இல்ல, மத்தவங்களுக்கும் நல்லது இல்ல. இந்த உதாரணத்த யோசிச்சு பாருங்க. ஒரு வீட்டில தீ பிடிச்சா, அதை உடனே அணைக்கனும். இல்லனா அது எரிஞ்சு வீட்டையே நாசமாக்கிடும். அதே மாதிரி, கோவத்த கட்டுப்படுத்தலனா நமக்குதான் பிரச்சினை. நமக்கு கெட்ட பெயர் வந்திடும்; குடும்பத்திலயும் மத்தவங்களோடும் சந்தோஷமாவே இருக்க முடியாது; கடவுளுக்கு பிடிக்காதவங்களா ஆகிடுவோம். அப்படினா, கோவம் தலைக்கேறும்போது முதல்ல சூழ்நிலைய நல்லா யோசிச்சு பார்க்கனும். அப்பதான், கோவத்த அடக்க முடியும்.
தாவீதோட வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவத்த கவனிங்க. தாவீதும் அவரோட நண்பர்களும், நாபால் என்பவரோட ஆடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்தாங்க. ஒருநாள், தாவீதுக்கும் அவரோட நண்பர்களுக்கும் சாப்பாடு தேவைப்பட்டுச்சு. அப்போ, நாபால்கிட்ட உதவி கேட்டாங்க. அதுக்கு நாபால், ‘நான் ஆட்டைக் கொன்று சமையல் செய்திருக்கிறேன். முன்பின் தெரியாதவர்களுக்கு நான் ஏன் அதைக் கொடுக்க வேண்டும்?’னு சொல்லிட்டார். இதைக் கேட்ட தாவீதுக்கு எவ்ளோ அவமானமா இருந்திருக்கும்! உடனே, நாபாலை குடும்பத்தோட தீர்த்துக்கட்ட 400 பேரோட கிளம்பினார்.—1 சாமுவேல் 25:4-13, ஈஸி டு ரீட் வர்ஷன்.
நாபாலுடைய மனைவி அபிகாயில், நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டாங்க. உடனே, தாவீதைப் பார்க்க போனாங்க. தாவீதைப் பார்த்ததும் அவர் கால்ல விழுந்து, கெஞ்சினாங்க. “ஐயா, உங்களோடு பேச தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். நான் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள்”னு சொன்னாங்க. நாபால் இப்படித்தான் முட்டாள்தனமா நடந்துக்குவார்னு தாவீதுக்கு அபிகாயில் எடுத்து சொன்னாங்க. அதோட, கொலைகாரன் என்ற கெட்ட பெயர் தாவீதுக்கு வந்துடும்னு புரிய வச்சாங்க.—1 சாமுவேல் 25:24-31, ஈஸி டு ரீட் வர்ஷன்.
அபிகாயில் சொன்னத தாவீது நல்லா யோசிச்சு பார்த்தார். அவர் ரெண்டு விஷயத்த புரிஞ்சிக்கிட்டார். அவர்கிட்ட மட்டும் இல்ல, எல்லார்கிட்டயும் நாபால் இப்படித்தான் முட்டாள்தனமா நடந்துக்குவார்னு புரிஞ்சிக்கிட்டார். கொலைகாரன் என்ற பெயர் வந்தா என்ன ஆகும்னு யோசிச்சு பார்த்தார். தாவீது மாதிரி நமக்கும் சில நேரத்துல கோவம் வரும். அப்போ நாம என்ன செய்யனும்? பிரச்சினைக்கு என்ன காரணம்னு யோசிச்சு பாருங்க. கோவத்தில கண்மூடித்தனமா நடந்துக்கிட்டா என்ன ஆகும்னு யோசிச்சு பாருங்க. இப்படி யோசிச்சு பார்த்தா, கோவம் இருந்த இடம் தெரியாம போயிடும். (1 சாமுவேல் 25:32-35) கோவம் வரும்போது என்ன செய்யனும்னு அமெரிக்கால இருக்கிற மாயோ க்ளினிக் வெளியிட்ட கட்டுரையில சொல்லியிருக்காங்க. “நல்லா மூச்சை இழுத்து விட்டு, 10 வரைக்கும் எண்ணுங்க”-னு அவங்க சொல்றாங்க.
நிறைய பேர் கோவத்த அடக்க கத்துக்கிட்டாங்க. உதாரணத்துக்கு, போலந்து நாட்டுல இருக்கிற செபாஸ்டியன் என்பவர பத்தி பார்க்கலாம். அவருக்கு 23 வயசு. அவர் ஜெயில்ல இருந்தார். பைபிள் படிச்சதுனால கோவத்த எப்படி அடக்கனும்னு அவர் கத்துக்கிட்டார். அவர் இப்படி சொல்றார்: “முதல்ல பிரச்சினைக்கு காரணம் என்னனு யோசிப்பேன். அப்புறம், பைபிள் சொல்ற மாதிரி எப்படி நடந்துக்கலாம்னு யோசிப்பேன். அப்படி செஞ்சதுனால கோவத்த அடக்க முடிஞ்சிது. பிரச்சினைகள சரிசெய்றதுக்கு பைபிள்லதான் நல்ல நல்ல ஆலோசனைகள் இருக்கு.”
செட்சியோ என்ற ஒருத்தரும் பைபிள படிச்சு கோவத்த அடக்க கத்துக்கிட்டார். “வேலை செய்ற இடத்துல, யாராவது எனக்கு பிடிக்காததை செஞ்சா, கோவத்துல கத்த ஆரம்பிச்சிடுவேன். ஆனா, பைபிள படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அப்படி செய்றதில்ல. ‘யார்மேல தப்பு? நான்கூட பிரச்சினைக்கு காரணமா இருக்கலாமே?’னு யோசிச்சு பார்க்கிறேன்.” இப்படி செஞ்சா, கோவம் தன்னால அடங்கிடும்.
கோவப்படாம இருக்கிறது கஷ்டம்தான். ஆனா, அப்படி இருக்கிறதுக்கு கடவுள் நமக்கு உதவி செய்வார். நாம பைபிள் சொல்ற மாதிரி நடந்துக்கனும். ‘கோவப்படாம இருக்க உதவி செய்யுங்க’னு கடவுள்கிட்ட வேண்டிக்கனும். பிரச்சினைக்கு என்ன காரணம்னு நல்லா யோசிச்சு பார்க்கனும். அப்படி செஞ்சா, நம்மால் கோவத்த அடக்க முடியும்.
அதிகாரம் 25
தைரியமாக மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடந்தார்
உண்மையாக இருந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
3 தாவீதை யெகோவா ராஜாவாக தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை அபிசாய் புரிந்துகொண்டதால் அவருக்கு மரியாதை காட்டினார். ஆனால், தாவீது ராஜாவான பிறகு பெரிய தவறுகளைச் செய்தார். உரியாவின் மனைவியோடு தவறான உறவு வைத்துக்கொண்டார். அதோடு போரில் உரியாவை கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்யும்படி யோவாபுக்கு கடிதம் எழுதினார். (2 சா. 11:2-4, 14, 15; 1 நா. 2:16) யோவாப் அபிசாயின் சகோதரன் என்பதால் தாவீது செய்த தவறு அபிசாயிக்கு தெரிந்திருக்கலாம். அப்படியிருந்தும் அவர் தாவீதுக்கு தொடர்ந்து மரியாதை காட்டினார். அதோடு, அபிசாய் படைத்தளபதியாக இருந்ததால் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜாவாக முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்வதற்குப் பதிலாக தாவீதுக்கு உண்மையாக இருந்தார், எதிரிகளிடமிருந்து அவரைக் காப்பாற்றினார்.—2 சா. 10:10; 20:6; 21:15-17.
it “கவுதாரி” பாரா 4
கவுதாரி
பழங்காலத்திலிருந்தே இந்தப் பறவையை உணவுக்காக வேட்டையாடுகிறார்கள். கவுதாரியின் இறைச்சி ரொம்ப மிருதுவாக இருக்கும். கவுதாரி மறைந்திருக்கும்போது, அதை வெளியே வரவைத்துப் பிடிப்பதற்காக வேட்டையாடுகிறவர்கள் குச்சிகளை எறிவார்கள். தப்பிப்பதற்காக பாறைகளின் பின்பக்கத்திலும், மற்ற பொருள்களின் பின்பக்கத்திலும் கவுதாரி ஓடி ஒளியும். பாறை இடுக்குகளிலும் அதுபோன்ற மற்ற இடங்களிலும் பதுங்கிக்கொள்ளும். சவுல் ராஜா தாவீதை விடாமல் துரத்திக்கொண்டே இருந்ததால், தாவீது ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிந்துகொண்டே இருந்தார். அதனால்தான், தன்னை ‘மலைகளில் இருக்கும் கவுதாரிக்கு’ ஒப்பிட்டுப் பேசினார்.—1சா 26:20; புல 3:52-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
நீங்கள் பொறுமையோடு காத்திருப்பீர்களா?
14 தாவீது ராஜாவுக்கும் நிறைய அநியாயங்கள் நடந்தன. இளம் வயதிலேயே அவரை இஸ்ரவேல் தேசத்துக்கு ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்தார். ஆனால், அவருடைய கோத்திரத்துக்கு ராஜாவாக ஆவதற்கே அவர் 15 வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. (2 சா. 2:3, 4) அதுவும், சவுல் ராஜா அவரைக் கொன்றுபோட முயற்சி செய்துகொண்டிருந்ததால் கொஞ்சக் காலத்துக்கு அவரிடமிருந்து ஓடி ஒளிய வேண்டியிருந்தது. அப்போது அவர் நாடோடியாக அலைய வேண்டியிருந்தது; வேறு தேசத்திலோ வனாந்தரத்தில் இருந்த குகைகளிலோ தங்க வேண்டியிருந்தது. ஒரு போரில் சவுல் கொல்லப்பட்ட பிறகும்கூட, இஸ்ரவேல் தேசம் முழுவதுக்கும் ராஜாவாக ஆக தாவீது கிட்டத்தட்ட ஏழு வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.—2 சா. 5:4, 5.
15 தாவீது ஏன் பொறுமையோடு காத்திருந்தார்? “எத்தனை நாளைக்குத்தான்” என்று ஐந்து முறை அவர் கேட்ட அதே சங்கீதத்தில்தான் அதற்கான பதில் இருக்கிறது. “நீங்கள் மாறாத அன்பு காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் தருகிற மீட்பினால் என் இதயம் சந்தோஷப்படும். யெகோவா என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்திருப்பதால் அவரைப் புகழ்ந்து பாடுவேன்” என்று அவர் சொன்னார். (சங். 13:5, 6) யெகோவா தன்னை நேசித்தார் என்றும், எப்போதுமே தனக்கு உண்மையாக இருப்பார் என்றும் தாவீதுக்குத் தெரிந்திருந்தது. அவ்வளவு காலமாக யெகோவா எப்படியெல்லாம் தனக்கு உதவி செய்திருந்தார் என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். அதோடு, பிரச்சினைகளை யெகோவா சரிசெய்யப்போகும் காலத்துக்காக அவர் ஆவலோடு காத்திருந்தார். யெகோவாவின் ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருப்பது வீண்போகாது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.
இளைஞர்களைப் பார்த்து பெருமைப்படுங்கள்
8 தாவீது ராஜாவும் அடக்கமாக நடந்துகொண்டார். யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று அவர் ரொம்ப ஆசைப்பட்டார். ஆனால், ஆலயம் கட்டுகிற பாக்கியத்தை, சாலொமோனுக்குக் கொடுக்கப்போவதாக யெகோவா சொன்னார். யெகோவாவின் முடிவை தாவீது ஏற்றுக்கொண்டார். ஆலயம் கட்டும் வேலைக்கு மனப்பூர்வமாக ஆதரவு கொடுத்தார். (1 நா. 17:4; 22:5) சாலொமோன் ‘சின்னப் பையனாக’ இருந்ததாலும் அவருக்கு ‘அவ்வளவாக அனுபவம் இல்லாததாலும்’ தன்னால்தான் இந்த வேலையை நன்றாகச் செய்ய முடியும் என்று தாவீது நினைக்கவில்லை. (1 நா. 29:1) ஆலயத்தை நல்லபடியாக கட்டிமுடிக்க வயதோ அனுபவமோ தேவையில்லை, யெகோவாவின் ஆசீர்வாதம்தான் முக்கியம் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். இன்றுள்ள வயதான சகோதரர்களும் தாவீதைப் போல்தான் இருக்கிறார்கள். அவர்கள் ஒருகாலத்தில் செய்துகொண்டிருந்த பொறுப்புகளை இளம் சகோதரர்கள் எடுத்துச் செய்யும்போது சந்தோஷப்படுகிறார்கள். இளைஞர்கள் செய்கிற வேலையை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆன்லைன் பைபிள் கார்டுகள்
சவுல் ராஜா
பைபிள் கார்டு 41
சேர்த்திடு... படித்திடு... | பைபிள் கார்டு
சவுல் ராஜா
இவரைப் பற்றி: இஸ்ரவேலின் முதல் ராஜாதான் சவுல். ஆரம்பத்தில், மனத்தாழ்மையானவராக, அடக்கமானவராக இருந்தார். ஆனால், பிற்பாடு திமிர்பிடித்தவராக ஆனார். அதனால், ராஜாவாக இல்லாதபடி யெகோவா அவரை ஒதுக்கித்தள்ளிவிட்டார். மாவீரராய் ஆகியிருந்த தாவீதைப் பிடிக்க அலைந்து திரிந்தார், அவரைக் கொல்ல முயன்றார். ஆனால், தாவீதை யெகோவா காப்பாற்றினார். பிற்பாடு, பெலிஸ்தியர்களோடு நடந்த ஒரு போரில் சவுல் உயிரிழந்தார்.—1 சாமுவேல் 31:1-4.
கேள்விகள்
1. சவுலின் எந்த மகன் தாவீதுடைய நெருங்கிய நண்பரானார்?—1 சாமுவேல் 18:1.
2. தீர்க்கதரிசியான சாமுவேல் சவுலிடம் இப்படிச் சொன்னார்: “பலி செலுத்துவதைவிட ________ முக்கியம்.”—1 சாமுவேல் 15:22.
3. சரியா, தவறா? சவுல் ஒரு சோம்பேறியாக, பலவீனமானவராக இருந்தார்.—2 சாமுவேல் 1:23.
பதில்கள்
1. யோனத்தான்.
2. கீழ்ப்படிவதுதான்.
3. தவறு. வேகமான கழுகோடும் வலிமையான சிங்கத்தோடும் சவுல் ஒப்பிடப்பட்டார்.
[காலவரிசை]
கி.மு. 4026 ஆதாம் படைக்கப்பட்டது
வாழ்ந்தது சுமார் கி.மு. 1100
கி.பி. 1
சுமார் கி.பி. 98 பைபிளின் கடைசி புத்தகம் எழுதப்பட்டது
[வரைபடம்]
ராமா, கேகிலா, சீப் வனாந்தரம், மாகோன் வனாந்தரம், மற்றும் என்-கேதியில் தாவீதைப் பிடிக்க அலைந்து திரிந்தார்
ராமா
எருசலேம்
கேகிலா
சீப்
மாகோன்
என்-கேதி
அதிகாரம் 26
ராஜாவையே கண்டித்துத் திருத்தினார்
நாத்தான் உண்மை வணக்கத்திற்குத் தோள்கொடுத்தவர்
நாத்தானும் காத்தும் 1 சாமுவேல் 25-31 அதிகாரங்களையும் 2 சாமுவேல் புத்தகம் முழுவதையும் எழுதியதாக நம்பப்படுகிறது. கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் இப்புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள சரித்திர விவரங்களைப் பற்றி இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “தாவீது ராஜாவின் செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை, ஞானதிருஷ்டிக்காரரான சாமுவேலின் குறிப்பேட்டிலும், தீர்க்கதரிசியான நாத்தானின் குறிப்பேட்டிலும் தரிசனம் பெற்றவரான காத்தின் குறிப்பேட்டிலும் எழுதப்பட்டுள்ளன.” (1 நா. 29:29, NW) ‘சாலொமோனுடைய செயல்களை’ பற்றியும் நாத்தான் பதிவு செய்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (2 நா. 9:29) அப்படியென்றால், தாவீதின் மரணத்திற்குப் பின்பும் அரச விவகாரங்களில் நாத்தான் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்க வேண்டும்.
நாத்தானைப் பற்றிய விவரங்கள் பெரும்பாலும் அவராலேயே எழுதப்பட்டிருக்கலாம். இருந்தாலும், தன்னைப் பற்றிய பல விஷயங்களை அவர் குறிப்பிடாதது அவரது பண்பைப் பறைசாற்றுகிறது. ஆம், தனக்குப் பேரும் புகழும் சம்பாதிக்க விரும்பாமல் மனத்தாழ்மையுடன் சரித்திர விவரங்களைப் பதிவு செய்திருப்பதைக் காட்டுகிறது. பைபிளில் அவருக்கு “எந்தவொரு அறிமுகமும் வம்சாவளியும் இல்லை” என ஓர் அகராதி சொல்கிறது. நாத்தானின் பரம்பரையைப் பற்றியோ சொந்த வாழ்க்கையைப் பற்றியோ நமக்கு எதுவுமே தெரியாது.
உங்களுக்குத் தெரியுமா?
தாவீது ராஜா தன்னுடைய படையில் ஏன் இஸ்ரவேலர்களாக இல்லாதவர்களை சேர்த்துக்கொண்டார்?
தாவீதின் படையில் வேறு தேசத்தை சேர்ந்த நிறைய வீரர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலர்: அம்மோனியனான சேலேக், ஏத்தியனான உரியா, மோவாபியனான இத்மா. (1 நா. 11:39, 41, 46) அதுமட்டுமல்ல, “கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும் காத்” நகரத்தை சேர்ந்தவர்களும் அதில் இருந்தார்கள். (2 சா. 15:18) கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும், பெலிஸ்தியர்களுக்கு நெருங்கிய சொந்தக்காரர்களாக இருந்திருக்கலாம். (எசே. 25:16) காத் நகரமும் பெலிஸ்தியர்களின் ஒரு நகரம்தான்.—யோசு. 13:2, 3; 1 சா. 6:17, 18.
இஸ்ரவேலர்களாக இல்லாத இவர்களை தாவீது ஏன் தன்னுடைய படையில் சேர்த்திருந்தார்? ஏனென்றால், இவர்கள் எல்லாருமே தாவீதுக்கு விசுவாசமாக இருந்தார்கள்; முக்கியமாக, யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். உதாரணத்துக்கு, கிரேத்தியர்களைப் பற்றியும் பிலேத்தியர்களைப் பற்றியும் தி நியூ இன்டர்பிரெட்டர்ஸ் டிக்ஷனரி ஆஃப் தி பைபிள் இப்படி சொல்கிறது: “இவர்கள், தாவீது ராஜாவாக ஆன பிறகு அவருடைய வாழ்க்கையில் வந்த ரொம்ப கஷ்டமான காலக்கட்டத்திலும் அவருக்கு உண்மையாக இருந்தார்கள்.” எப்படி சொல்லலாம்? சேபா என்ற “ஒரு கலகக்காரன்” தாவீது ராஜாவுக்கு எதிராக கலகம் செய்தபோது, “இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும்” அவனோடு சேர்ந்துகொண்டு தாவீதை அம்போவென்று விட்டுவிட்டு போய்விட்டார்கள். ஆனாலும், கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும் தாவீதுக்கு உண்மையாக இருந்து அவனுடைய கலகத்துக்கு முடிவுகட்ட உதவி செய்தார்கள். (2 சா. 20:1, 2, 7) இன்னொரு சந்தர்ப்பத்தில், தாவீது ராஜாவுடைய மகன் அதோனியா ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தான். அந்த சமயத்திலும், கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும் தாவீதுக்கு உண்மையாக இருந்தார்கள்; யெகோவா தேர்ந்தெடுத்த சாலொமோனை அடுத்த ராஜாவாக ஆக்க உதவினார்கள்.—1 ரா. 1:24-27, 38, 39.
காத் நகரத்தை சேர்ந்த ஈத்தாய் என்பவரும் தாவீதுக்கு உண்மையாக இருந்தார். தாவீது ராஜாவுக்கு எதிராக இஸ்ரவேலர்களை அப்சலோம் தூண்டிவிட்ட சமயத்தில் ஈத்தாயும் அவருடைய 600 வீரர்களும் தாவீதுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஈத்தாய் வேறு தேசத்தை சேர்ந்தவராக இருந்ததால் இதில் தலையிட வேண்டாம் என்று தாவீது அவரிடம் ஆரம்பத்தில் சொன்னார். அதற்கு ஈத்தாய்: “ராஜாவே, எஜமானே, உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன். உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன். வாழ்வோ சாவோ, நீங்கள் எங்கே இருந்தாலும் அடியேன் உங்களோடுதான் இருப்பேன்!” என்று சொன்னார்.—2 சா. 15:6, 18-21.
கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும் காத் நகரத்தை சேர்ந்தவர்களும் இஸ்ரவேலர்களாக இல்லாவிட்டாலும், அவர்கள் எல்லாருமே யெகோவாவை உண்மைக் கடவுளாக ஏற்றுக்கொண்டார்கள். தாவீதை யெகோவாதான் ராஜாவாக ஆக்கியிருக்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். இப்படிப்பட்ட ஆட்கள் தன்னோடு இருந்ததை நினைத்து தாவீது எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்!
[அடிக்குறிப்பு]
அம்மோனியர்களும் மோவாபியர்களும் யெகோவாவின் சபையில் ஒருவராக இருக்கக் கூடாது, அதாவது இஸ்ரவேலர்களில் ஒருவராக இருக்கக் கூடாது, என்று சட்டம் சொன்னது. உபாகமம் 23:3-6-ல் அந்த சட்டம் இருக்கிறது. ஆனால், அந்த சட்டம் இஸ்ரவேல் தேசத்தில் சட்டப்பூர்வ அங்கத்தினராக ஆவதைப் பற்றித்தான் சொன்னது. கடவுளுடைய மக்களோடு வேறு தேசத்து மக்கள் பழகுவதையோ குடியிருப்பதையோ அது தடை செய்யவில்லை. வேதாகமங்களின் பேரில் உட்பார்வை, (ஆங்கிலம்) தொகுதி 1-ல் பக்கம் 95-ஐப் பாருங்கள்.
it “தாவீது” பாரா 29
தாவீது
நாத்தான் சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது. தாவீது பத்சேபாளோடு தவறான உறவு வைத்துக்கொண்டதால் பிறந்த குழந்தை நோய்வாய்ப்பட்டது. அந்தக் குழந்தைக்காக தாவீது ஏழு நாட்களுக்கு துக்கப்பட்டுக்கொண்டும் விரதமிருந்துகொண்டும் இருந்தார். ஆனாலும், அது இறந்துவிட்டது. (2சா 12:15-23) அதன் பிறகு, தாவீதின் மூத்த மகன் அம்னோன் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி தாமாரைக் கற்பழித்தான். அதனால், தாமாரின் அண்ணன் அவனைக் கொலை செய்துவிட்டான். அதெல்லாம் தாவீதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. (2சா 13:1-33) அதன் பிறகு, தாவீதுக்கு ரொம்பப் பிடித்த அவருடைய மூன்றாவது மகன் அப்சலோம், தாவீதின் பதவியைப் பறிக்க முயற்சி செய்தான். அதுமட்டுமல்ல, இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் முன்னால் தாவீதின் மறுமனைவிகளோடு உறவுகொண்டான். இப்படி, தாவீதை எல்லாருக்கும் முன்பாக ரொம்பவே அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தினான். (2சா 15:1–16:22) கடைசியில், உச்சக்கட்ட அவமானமாக அப்பாவுக்கும் மகனுக்குமே போர் நடந்தது. அப்சலோமுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தாவீது நினைத்திருந்தும் அந்த உள்நாட்டு போரில் அப்சலோம் செத்துப்போனான். அதனால், தாவீது பயங்கர துக்கத்தில் கதறினார். (2சா 17:1–18:33) அப்சலோமிடமிருந்து தப்பித்து ஓடியபோது தாவீது மூன்றாவது சங்கீதத்தை எழுதியிருந்தார். அதில், “யெகோவாவே, நீங்கள்தான் மீட்பு தருகிறீர்கள்” என்று சொல்லியிருந்தார்.—சங் 3:8.
நாத்தான் உண்மை வணக்கத்திற்குத் தோள்கொடுத்தவர்
தாவீதுக்குப் பிறகு சாலொமோனே ராஜாவாய் ஆக வேண்டுமென நாத்தான் அறிந்திருந்தார். ஆகவே, அரியணையை அபகரிக்க அதோனியா முயன்றபோது நாத்தான் உறுதியுடன் செயல்பட்டார். இச்சந்தர்ப்பத்திலும் அவர் சாதுரியத்தையும் பற்றுறுதியையும் காட்டினார். முதலில் பத்சேபாளிடம் சென்று, சாலொமோனை ராஜாவாக்கப்போவதாக தாவீது கொடுத்திருந்த வாக்கை அவருக்கு நினைப்பூட்டச் சொன்னார். அதன்பின், நாத்தானே தாவீதிடம் சென்று, அதோனியாவை அவர் ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருப்பது உண்மையா எனக் கேட்டார். அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த தாவீது, சாலொமோனை ராஜாவாக அபிஷேகம் செய்யும்படியும் அதை எல்லாருக்கும் அறிவிக்கும்படியும் நாத்தானிடமும் மற்ற உண்மை ஊழியர்களிடமும் கட்டளையிட்டார். இவ்வாறு, ஆட்சியைப் பிடிக்க முயன்ற அதோனியாவின் திட்டம் முறியடிக்கப்பட்டது.—1 இரா. 1:5-53.
“பைபிளைப் படியுங்கள் யோசித்துப் பாருங்கள்” என்ற ஆன்லைன் தொடர்
கண்டித்துத் திருத்தப்படும்போது மனத்தாழ்மையாக ஏற்றுக்கொள்ளுங்கள்
இளைஞர்களுக்கு
கண்டித்துத் திருத்தப்படும்போது மனத்தாழ்மையாக ஏற்றுக்கொள்ளுங்கள்: தாவீது மற்றும் பத்சேபாள்—பகுதி 2
செய்ய வேண்டியது: இந்தப் பயிற்சியை அமைதியான இடத்தில் செய்யுங்கள். வசனங்களை வாசிக்கும்போது, சம்பவம் நடக்கும் இடத்தில் நீங்களே இருப்பதுபோல் கற்பனை செய்துபாருங்கள். ஆட்களுடைய குரல்களைக் கேளுங்கள். அவர்கள் உணருவதைப் போலவே உணருங்கள். அந்தப் பதிவுக்கு உயிர் கொடுங்கள்.
முக்கியக் கதாபாத்திரங்கள்: தாவீது மற்றும் நாத்தான்
சுருக்கம்: தாவீது செய்த மோசமான பாவம் மன்னிக்கப்படுகிறது. ஆனால், அதற்கான பயங்கரமான விளைவுகளை அவர் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
1 கற்பனை செய்யுங்கள். —2 சாமுவேல் 12:1-24-ஐ வாசியுங்கள்.
நீங்கள் நாத்தானை எப்படிப்பட்டவராக கற்பனை செய்தீர்கள்?
ஏழையையும் ஆட்டுக்குட்டியையும் பற்றிய கதையை நாத்தான் சொன்னபோது, அவருடைய குரல் எப்படி இருந்தது?
உங்களுடைய கற்பனையில், வசனங்கள் 7-9-ல் இருக்கும் வார்த்தைகளை நாத்தான் பேசியபோது அவருடைய குரலில் என்ன மாற்றத்தைக் கவனித்தீர்கள்?
2 ஆழமாக யோசியுங்கள்.
ரொம்ப கவனமாக யோசித்துத்தான் நாத்தான் தாவீதிடம் பேசியிருப்பார் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
தாவீதிடம் பேசுவதற்கு நாத்தான் ஏன் இந்த உதாரணத்தைப் பயன்படுத்தினார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
‘நீ செய்தது தவறு, அதை ஒத்துக்கொள்’ என்று நேரடியாக சொல்வதற்குப் பதிலாக, உதாரணத்தைப் பயன்படுத்தி தாவீதை நாத்தான் யோசிக்க வைத்தது சிறந்தது என்று ஏன் நினைக்கிறீர்கள்?
தாவீதை யெகோவா சட்டென்று மன்னித்ததுபோல் நமக்குத் தெரியலாம். (வசனம் 13-ஐ மறுபடியும் வாசியுங்கள்.) ஆனால், நம்மால் பார்க்க முடியாத எந்த விஷயத்தை யெகோவாவால் பார்க்க முடியும்?
தான் செய்த பாவத்துக்கு ஏற்ற விளைவுகளைத்தான் தாவீது அனுபவித்தார் என்று ஏன் சொல்லலாம்? (வசனங்கள் 10-12, 14-ஐ மறுபடியும் வாசியுங்கள்.)
3 கற்றதைக் கடைப்பிடியுங்கள்.
என்ன கற்றுக்கொண்டீர்கள் . . .
மனத்தாழ்மையின் அவசியத்தைப் பற்றி.
பாவத்தின் விளைவுகளைப் பற்றி.
யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி.
4 உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
நான் செய்த என்ன தவறுக்காக எனக்குக் கண்டிப்பு கிடைத்திருக்கிறது?
கண்டிப்பை இன்னும் நல்ல விதத்தில் ஏற்றுக்கொள்ள நான் என்ன செய்யலாம்?
யெகோவா என்மேல் அன்பு வைத்திருப்பதால்தான் எனக்குக் கண்டிப்பு கிடைக்கிறது என்று ஏன் சொல்லலாம்? (க்ளூ: எபிரெயர் 12:5, 6-ஐ வாசியுங்கள்.)
இந்தப் பதிவிலிருந்து நான் என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்? அது ஏன் ஒரு முக்கியமான பாடம்?
செய்துபாருங்கள்: இந்தப் பதிவை வேறு மாதிரி கற்பனை செய்துபாருங்கள்: தான் செய்த தவறை தாவீது ஒத்துக்கொள்ளாமல் நாத்தானைத் தண்டித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எழுதுங்கள். தாவீது அப்படிச் செய்திருந்தால் யெகோவா அவரை மன்னித்திருப்பாரா?
அதிகாரம் 27
அவர் வெறுப்பை வளர்த்துக்கொள்ளவில்லை
it “மாகீர்” எண் 2
மாகீர்
2. அம்மியேலின் மகன் (லோ-தேபாரில் குடியிருந்தவர்). யோனத்தானின் மகன் மேவிபோசேத் மாகீரின் வீட்டில்தான் குடியிருந்தார். அதன் பிறகுதான், மேவிபோசேத்தை தாவீது வரவழைத்து அவரை எப்போதும் கவனித்துக்கொள்வதாகச் சொன்னார். (2சா 9:4-7, 13) அப்சலோம் கலகம் செய்த சமயத்தில், தாவீதுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் உணவையும் மற்ற பொருள்களையும் கொடுத்தவர்களில் மாகீரும் ஒருவர்.—2சா 17:27-29.
it “நாய்” பாரா 5
நாய்
கண்டதையும் சாப்பிட்டுத் திரியும் காட்டு நாய்களை மக்கள் எவ்வளவு கேவலமாகப் பார்த்தார்கள் என்பதற்கு இவையெல்லாம் கூடுதலான சில உதாரணங்கள்: தாவீது ஒரு தடியை எடுத்துக்கொண்டு வந்ததால், “நான் என்ன நாயா?” என்று கோலியாத் கோபத்தில் கத்தினான். (1சா 17:43) சவுல் ராஜாவிடம் தாவீது, ‘இஸ்ரவேலின் ராஜா யாரைத் துரத்திக்கொண்டு வருகிறார்? இந்தச் செத்த நாயையா?’ என்று கேட்டார். இப்படி, தான் ரொம்ப அற்பமானவன்... செத்த நாயால் எதுவும் செய்ய முடியாததுபோல் தன்னாலும் சவுல் ராஜாவுக்கு எந்தக் கெடுதலும் செய்ய முடியாது... என்று தாவீது சொன்னார். (1சா 24:14) அதேமாதிரி, யோனத்தானின் மகன் மேவிபோசேத்தும் தன்னை ஒரு “செத்த நாய்க்கு” ஒப்பிட்டுப் பேசினார். ரொம்ப ரொம்பத் தாழ்வான நிலையில் இருப்பதைக் குறிப்பதற்காக அப்படிச் சொன்னார். (2சா 9:8; 3:8; 16:9; 2ரா 8:13) கடவுளுடைய மக்களை அடையாள அர்த்தத்தில் காவல் காப்பதாகச் சொல்லிக்கொண்ட ஆட்கள் தூங்கிக்கொண்டே இருக்கிற ஊமை நாய்கள் மாதிரி இருப்பதாகவும், திருப்தியே அடையாமல் பேராசைபிடித்து அலைவதாகவும் ஏசாயா தீர்க்கதரிசி சொன்னார். இப்படி, ஆபத்திலிருந்து காப்பாற்ற அவர்கள் லாயகில்லாதவர்கள் என்று சொன்னார். (ஏசா 56:10, 11) யெகோவாவின் மக்களுடைய எதிரிகளும் மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களும்கூட நாய்களுக்கு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறார்கள். (சங் 22:16, 20; 59:6, 14; மத் 15:26, 27) இயேசு கிறிஸ்து, “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்” என்று சொன்னார். இப்படி, ஆன்மீக விஷயங்களை மதிக்காத ஆட்களை நாய்களுக்கு ஒப்பிட்டுப் பேசினார்.—மத் 7:6.
w02 2/15 பக். 14 பாரா 11, அடிக்குறிப்பு
மாம்சத்திலிருந்த முட்களை பொறுத்துக்கொண்டார்கள்
11 அதற்குப் பிறகு, தன் மாம்சத்தில் ‘தைத்த’ மற்றொரு முள்ளோடு மேவிபோசேத் போராட வேண்டியிருந்தது. அவனுடைய வேலைக்காரனாகிய சீபா, தாவீது ராஜாவிடம் அவனைப் பற்றி பொய் சொல்லி பழிதூற்றினான். அப்போது தாவீது தன் குமாரனாகிய அப்சலோமின் கலகத்தினிமித்தம் எருசலேமிலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தார். மேவிபோசேத் அரச பதவியைப் பெறும் நம்பிக்கையுடன் உண்மையற்றவனாய் எருசலேமிலேயே தங்கிவிட்டானென்று சீபா சொன்னான். சீபா சுமத்தின வீண்பழியை நம்பிய தாவீதும் மேவிபோசேத்தின் சொத்து முழுவதையும் அந்தப் பொய்யனுக்கு உடைமையாக கொடுத்துவிட்டார்!—2 சாமுவேல் 16:1-4.
[அடிக்குறிப்பு]
நன்றியுணர்வும் மனத்தாழ்மையுமே உருவான மேவிபோசேத் அப்படிப்பட்ட ஒரு பேராசைமிக்க சதித் திட்டத்தை தீட்டியிருக்கவே முடியாது. தன் தகப்பனாகிய யோனத்தான் எவ்வாறு உண்மையுள்ளவராக வாழ்ந்தார் என்பதை அவன் நன்றாகவே அறிந்திருப்பான். அரசனாகிய சவுலின் குமாரனாக யோனத்தான் இருந்தபோதிலும், இஸ்ரவேலின்மீது அரசனாக இருக்கும்படி யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாவீதே என மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார். (1 சாமுவேல் 20:12-17) மேவிபோசேத்தின் தேவபயமுள்ள தகப்பனாகவும் தாவீதின் உண்மைப் பற்றுறுதியுள்ள நண்பனாகவும் இருந்த யோனத்தான், அரசதிகாரத்தை ஆர்வத்துடன் நாடும்படி தன் இளம் குமாரனுக்குக் கற்பித்திருக்க மாட்டார்.
வாசகர் கேட்கும் கேள்விகள்
சவுல் ராஜாவின் காலத்திலும் அந்த ஒப்பந்தம் மாறவில்லை. ஆனால், அவர் அந்த ஒப்பந்தத்தை மீறி கிபியோனியர்களை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தார். அதனால், சவுல்மேலும் அவருடைய குடும்பத்தார்மேலும் “கொலைப்பழி” விழுந்தது. (2 சா. 21:1) சவுல் இறந்த பிறகு, தாவீது ராஜாவாக ஆனார். மீதியிருந்த கிபியோனியர்கள் தாவீதிடம் வந்து சவுல் செய்த பெரிய தவறைப் பற்றிச் சொன்னார்கள். நடந்த தவறுக்குப் பரிகாரம் செய்வதற்கும், தேசத்தை யெகோவா ஆசீர்வதிப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் தாவீது கேட்டார். அதற்குப் பரிகாரமாக அவர்கள் பணமோ பொருளோ கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, தங்களை ‘துடைத்தழிக்கத் திட்டம் போட்டவருடைய’ ஏழு மகன்களையும் கொன்றுபோடுவதற்கு தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டார்கள். (எண். 35:30, 31) அவர்கள் கேட்டதை தாவீது செய்தார்.—2 சா. 21:2-6.
கிபியோனியர்கள் இதைக் கேட்பதற்கு முன்பாகவே சவுலும் யோனத்தானும் போரில் இறந்துபோயிருந்தார்கள். ஆனால், யோனத்தானின் மகன் மேவிபோசேத் உயிரோடுதான் இருந்தார். அவர் குழந்தையாக இருந்தபோது ஒரு விபத்தில் அவருடைய கால்கள் ஊனமாகிவிட்டன. அதனால், தன்னுடைய தாத்தாவோடு சேர்ந்து கிபியோனியர்களை அவர் தாக்கவில்லை. தாவீது தன்னுடைய உயிர் நண்பனாக இருந்த யோனத்தானோடு ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார். அந்த ஒப்பந்தத்தின்படி யோனத்தானையும் அவருடைய சந்ததியையும் பாதுகாப்பதாக தாவீது சொன்னார். (1 சா. 18:1; 20:42) அதனால்தான், பைபிள் இப்படிச் சொல்கிறது: “மேவிபோசேத்துக்கு ராஜா [தாவீது] கருணை காட்டினார். ஏனென்றால், தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும் யெகோவாவுக்கு முன்னால் ஒருவருக்கொருவர் உறுதிமொழி கொடுத்திருந்தார்கள்.”—2 சா. 21:7.
உன் பிரெண்ட்ஸ் உன்னை சேர்த்துக்கொள்ளவில்லையா?
பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
சில பிள்ளைகளிடம் அவர்களுடைய பிரெண்ட்ஸ், ‘உன்னை எங்களோட சேர்த்துக்க மாட்டோம்’ என்று சொல்லலாம். ஏன்? ஒருவேளை அந்தப் பிள்ளைகளுடைய நிறம் வித்தியாசமாக இருக்கலாம்; அவர்கள் பேசும் விதமோ நடந்துகொள்கிற விதமோ வித்தியாசமாக இருக்கலாம். அல்லது வேறு ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அதனால் பிள்ளைகள் அவர்களை ஒதுக்கித் தள்ளலாம். உன்னை யாராவது ஒதுக்கித் தள்ளுவதுபோல் நினைத்திருக்கிறாயா?—
அதே மாதிரி நினைத்த ஒரு நபரைப் பற்றி நாம் பார்க்கலாம். அவருடைய பெயர் மேவிபோசேத். அவர் யார், அவர் ஏன் அப்படி நினைத்தார் என்று பார்ப்போம். உன் பிரெண்ட்ஸ் உன்னை ஒதுக்கித் தள்ளுகிறார்கள் என்று நீ நினைத்தால் உடனே மேவிபோசேத்தை யோசித்துப் பார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நீ கற்றுக்கொள்ளலாம்.
மேவிபோசேத்தின் அப்பா பெயர் யோனத்தான். இவர் தாவீதின் ‘பெஸ்ட் பிரெண்ட்.’ ஒருசமயம், யோனத்தான் ஒரு போரில் இறந்துவிடுகிறார். ஆனால், அவர் சாவதற்குமுன் தாவீதிடம், ‘என் பிள்ளைகளை நீ பார்த்துக்கொள்’ என்று சொல்கிறார். பின்பு தாவீது, ராஜாவாகிறார். சில வருடம் கழித்து யோனத்தான் சொன்னது தாவீதின் ஞாபகத்திற்கு வருகிறது. அப்போது யோனத்தானின் மகன் மேவிபோசேத் உயிரோடு இருக்கிறார் என்று தாவீதுக்குத் தெரியவருகிறது. ஆனால், மேவிபோசேத் சிறு பிள்ளையாக இருந்தபோது அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதனால் அவர் வாழ்நாள் முழுக்க நொண்டி நொண்டியே நடக்க வேண்டியிருந்தது. அவரை மற்றவர்கள் சேர்த்துக்கொள்ளாமல் இருந்ததற்கான காரணம் இப்போது உனக்குப் புரிகிறதா?—
மேவிபோசேத்தை நல்லபடியாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று தாவீது ராஜா நினைக்கிறார். அதனால், எருசலேமில் தன்னுடைய வீட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டில் அவரைத் தங்க வைக்கிறார். அதோடு, தன்னுடைய சாப்பாட்டு மேஜையில் தன்னுடன் உட்கார்ந்து சாப்பிடவும் அனுமதி கொடுக்கிறார். சீபா என்பவரை மேவிபோசேத்துக்கு வேலைக்காரராக வைக்கிறார். அதோடு, மேவிபோசேத்துக்கு ஒத்தாசையாக இருக்கும்படி சீபாவின் பிள்ளைகளிடமும் வேலைக்காரர்களிடமும் சொல்கிறார். யோனத்தானின் மகனை தாவீது ராஜா மதிப்பு மரியாதையோடு நடத்துகிறார். அதன்பின் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா?—
தாவீதின் குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் வந்தன. தாவீதுக்கு அப்சலோம் என்று ஒரு மகன் இருந்தான்; அவன் ரொம்ப கெட்டவனாக மாறிவிடுகிறான். அவனுடைய அப்பாவுக்குப் பதிலாக அவன் ராஜாவாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதனால் அவரைக் கொலை செய்ய பார்க்கிறான். எனவே, தாவீது அவனிடமிருந்து தப்பியோடுகிறார். தாவீதுதான் ராஜாவாக இருக்க வேண்டும் என்று நினைத்த அவருடைய நண்பர்கள் அவரோடுகூட ஓடிப்போகிறார்கள். மேவிபோசேத்துக்கும் அவரோடு போகவேண்டும் என்று ஆசைதான். ஆனால், அவரால் நடக்க முடியாததால் தாவீது ராஜாவோடு போக முடியவில்லை.
ஆனால் தாவீதிடம் மேவிபோசேத்தைப் பற்றி சீபா இல்லாததும் பொல்லாததும் சொல்கிறான். ‘மேவிபோசேத்துக்கு ராஜாவாக வேண்டும் என்ற ஆசை, அதனால்தான் உங்களோடு அவன் வரவில்லை’ என்று சொல்கிறான். அந்தப் பொய்யை தாவீது நம்பிவிடுகிறார். அதனால் மேவிபோசேத்தின் சொத்துக்கள் எல்லாவற்றையும் சீபாவுக்குக் கொடுத்துவிடுகிறார். அதன்பிறகு தாவீதுக்கும், அப்சலோமுக்கு நடந்த போரில் தாவீது ஜெயித்து திரும்பவும் எருசலேமுக்கு வருகிறார். மேவிபோசேத்தின் மேல் எந்தத் தவறும் இல்லை எனத் தெரிந்துகொள்கிறார். பின்பு, சொத்தை மேவிபோசேத்தும் சீபாவும் சரிபாதியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என தாவீது சொல்கிறார். அப்போது மேவிபோசேத் என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறாய்?—
தாவீது செய்தது அநியாயம் என்று மேவிபோசேத் குறை சொல்லவில்லை. ராஜா நிம்மதியாக இருந்தால்தான் அவரால் நன்றாக ஆட்சி செய்ய முடியும் என்று மேவிபோசேத் நினைக்கிறார். எனவே, எல்லா சொத்தையும் சீபாவே எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறார். ஆக, மேவிபோசேத்துக்கு சொத்து ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை, ஆனால் யெகோவாவுடைய ஊழியரான தாவீது ராஜா பத்திரமாக திரும்பி வந்ததே போதுமானதாக இருந்தது.
மேவிபோசேத் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல! நிறைய சமயங்களில் தன்னை மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளியதாக அவர் நினைத்தார். ஆனால், யெகோவா அவரை உயிராக நேசித்தார்; அவரை நன்கு கவனித்துக்கொண்டார். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?— நாம் சரியானதைச் செய்தாலும் சிலசமயம் மற்றவர்கள் நம்மைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லலாம். ஒருமுறை இயேசு இப்படிச் சொன்னார்: “உலகம் உங்களை வெறுத்தால், அது உங்களை வெறுப்பதற்கு முன்னரே என்னை வெறுத்ததென்று தெரிந்துகொள்ளுங்கள்.” இயேசுவை மக்கள் கொலையே செய்தார்கள்! அதனால் நம்மையும் அவர்கள் வெறுப்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நாம் சரியானதைச் செய்தால் உண்மைக் கடவுளான யெகோவாவுக்கும் அவருடைய மகன் இயேசுவுக்கும் நம்மை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
உன்னுடைய பைபிளில் இந்த வசனங்களை வாசித்துப்பார்
2 சாமுவேல் 4:4; 9:1-10; 19:24-30
அதிகாரம் 28
“வாழ்நாளெல்லாம்” யெகோவாவுக்கு உண்மையோடு நடந்துகொண்டார்
w08 6/1 பக். 10 பாரா. 1-5
கடவுளை எப்படி வணங்குகிறோம் என்பது முக்கியமா?
கலப்பு வணக்கத்துக்காக இஸ்ரவேலர்கள் “ஆராதனை மேடுகளை” பயன்படுத்தினார்கள். இந்த ஆராதனை மேடுகளில், பலிபீடங்கள், தூபபீடங்கள், பூஜைத் தூண்கள் மற்றும் பூஜைக் கம்பங்கள் இருந்தன. பூஜைக் கம்பங்கள் மரத்தால் செய்யப்பட்டிருக்கலாம். அநேகமாக, கானானியர்களின் கருவள தேவியான அஷேராவின் அடையாளமாக இவை இருந்திருக்கலாம். யூதாவில் நிறைய ஆராதனை மேடுகள் இருந்தன. ‘யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் சுற்றுவட்டாரங்களிலும் இருந்த ஆராதனை மேடுகளில், . . . கெபாமுதல் [வடக்கு எல்லை] பெயர்-செபாவரை [தெற்கு எல்லை] இருந்த ஆராதனை மேடுகளை’ பற்றி 2 ராஜாக்கள் 23:5, 8 சொல்கிறது.
இந்த ஆராதனை மேடுகளில், இஸ்ரவேலர்கள் ‘பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ராசி மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களுக்கும் வானத்துப் படைகளுக்கும் பலியிட்டு புகை எழும்பிவரச் செய்தார்கள்.’ “யெகோவாவின் ஆலயத்தில் ஆண் விபச்சாரக்காரர்கள்” தங்குவதற்கு இடங்களை ஒதுக்கியிருந்தார்கள். அதோடு, தங்கள் பிள்ளைகளை “மோளேகு தெய்வத்துக்கு நெருப்பில்” பலி கொடுத்தார்கள்.—2 ராஜாக்கள் 23:4-10.
எருசலேமிலும் யூதாவிலும் நூற்றுக்கணக்கான சுடுமண் (டெரகோட்டா) சிலைகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அவை முக்கியமாக அங்கிருந்த வீடுகளின் இடிபாடுகளில் இருந்தன. அந்தச் சிலைகளில் பெரும்பாலானவை, பெரிய மார்பகங்களை உடைய நிர்வாணமான பெண் சிலைகளாக இருந்தன. அவையெல்லாம் கருவள தேவிகளான அஸ்தரோத் மற்றும் அஷேராவின் சிலைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தச் சிலைகள் “அதிர்ஷ்டத்தையும் குழந்தை பாக்கியத்தையும் தரும்” என்று மக்கள் நம்பினார்கள்.
இந்த ஆராதனை மேடுகளில் வேறு யாரையும் வணங்குவதாக இஸ்ரவேலர்கள் நினைத்தார்கள்? நிறைய ஆராதனை மேடுகள் அநேகமாக, “யாவே-க்கு [யெகோவாவுக்கு] அர்ப்பணிக்கப்பட்டன” என்று எபிரெய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஃப்ராயிம் ஸ்டர்ன் சொல்கிறார். தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரு கல்வெட்டில், “சமாரியாவின் யாவே பெயரிலும் அவருடைய அஷேராவின் பெயரிலும் உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்று செதுக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு கல்வெட்டில், “தேமானின் யாவே பெயரிலும் அவருடைய அஷேராவின் பெயரிலும் உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்று செதுக்கப்பட்டிருக்கிறது.
யெகோவாவின் தூய வணக்கத்தையும் மற்ற தேசங்களின் அருவருப்பான பொய் வணக்கத்தையும் இஸ்ரவேலர்கள் எப்படிக் கலப்படம் செய்தார்கள் என்பதற்கு இவையெல்லாம் சில உதாரணங்கள். இப்படிப்பட்ட கலப்பு வணக்கத்தால், அவர்கள் ரொம்பவே ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்ந்தார்கள், யெகோவாவின் வழிகளைவிட்டு ரொம்பத் தூரமாகவும் போய்விட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு வணக்கத்தைக் கடவுள் ஏற்றுக்கொண்டாரா?
it “அனானி” எண் 2
அனானி
2. அனானி இறைவாக்கு சொல்பவராகவும் தரிசனக்காரராகவும் இருந்தார். யெகோவாமேல் நம்பிக்கை வைக்காமல் சீரியா ராஜாவோடு கூட்டுச் சேர்ந்துகொண்டதற்காக யூதாவின் ராஜாவான ஆசாவை அனானி கண்டித்தார். அதனால் ஆத்திரமடைந்த ஆசா அனானியைச் சிறையில் தள்ளினார். (2நா 16:1-3, 7-10) அனானி அநேகமாக, இஸ்ரவேல் ராஜாவான பாஷாவையும் யூதா ராஜாவான யோசபாத்தையும் கண்டித்த யெகூ தீர்க்கதரிசியின் அப்பாவாக இருந்திருக்கலாம்.—1ரா 16:1-4, 7; 2நா 19:2, 3; 20:34.
முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
5 இஸ்ரவேல் தேசம், இஸ்ரவேல் ராஜ்யமாகவும் யூதா ராஜ்யமாகவும் பிரிக்கப்பட்ட பிறகு, ஆசா, யூதா ராஜ்யத்தின் 3-ஆம் ராஜாவாக ஆனார். அவர் ராஜாவாக ஆன பிறகு, தன்னுடைய ராஜ்யத்தில் இருந்த பொய் வழிபாட்டையும் அருவருப்பான பாலியல் முறைகேட்டையும் ஒழிப்பதற்குத் தீர்மானமாக இருந்தார். மக்கள் கும்பிட்டுக்கொண்டிருந்த சிலைகளை அழித்தார். கோயில்களில் இருந்த ஆண் விபச்சாரக்காரர்களைத் துரத்தினார். தன்னுடைய பாட்டி “அசிங்கமான சிலையைச் செய்து வைத்திருந்ததால்” அவரை ‘ராஜமாதா அந்தஸ்திலிருந்து’ இறக்கினார். (1 ரா. 15:11-13) “யெகோவாவை வழிபட வேண்டும்” என்றும், ‘திருச்சட்டத்துக்கும் கட்டளைகளுக்கும்’ கீழ்ப்படிய வேண்டும் என்றும் மக்களை உற்சாகப்படுத்தினார். மற்றவர்கள் யெகோவாவை வணங்குவதற்காக, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் ஆசா செய்தார்.—2 நா. 14:4.
6 ஆசா ராஜா ஆட்சி செய்த முதல் 10 வருஷங்கள்வரை, யூதா ராஜ்யத்தில் எந்தப் போரும் நடக்கவில்லை. பிறகு, 10 லட்சம் வீரர்களோடும் 300 ரதங்களோடும் எத்தியோப்பியர்கள் யூதாவுக்கு எதிராகப் படையெடுத்து வந்தார்கள். (2 நா. 14:1, 6, 9, 10) யெகோவா தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவார் என்பதில் ஆசாவுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அதனால், போரில் வெற்றியடைய உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். (2 நாளாகமம் 14:11-ஐ வாசியுங்கள்.) அவருடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்தார். எத்தியோப்பியப் படையை அடியோடு அழிப்பதன் மூலம் ஆசாவுக்கு முழு வெற்றி கொடுத்தார். (2 நா. 14:12, 13) ராஜாக்கள் தனக்கு உண்மையாக நடந்துகொள்ளாத போதும், தான் உண்மைக் கடவுள் என்பதைக் காட்டுவதற்காக, யெகோவா தன்னுடைய மக்களுக்கு வெற்றி கொடுத்திருக்கிறார். (1 ரா. 20:13, 26-30) ஆனால், ஆசா யெகோவாவை நம்பியிருந்தார். அதனால், யெகோவா அவருடைய ஜெபத்துக்குப் பதில் கொடுத்தார். பிறகு நிறைய சந்தர்ப்பங்களில், ஆசா ஞானமில்லாமல் நடந்துகொண்டார். உதாரணத்துக்கு, ஒரு சமயம் அவர் யெகோவாவிடம் உதவி கேட்பதற்குப் பதிலாக, சீரியா ராஜாவிடம் உதவி கேட்டார். (1 ரா. 15:16-22) இருந்தாலும், ஆசா தன்னை நேசிப்பதை யெகோவாவால் பார்க்க முடிந்தது. ஆசா, “தன்னுடைய வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொண்டார்.” ஆசாவுடைய நல்ல முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?—1 ரா. 15:14.
இரண்டு நாளாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
14:2-5; 15:17—ஆசா ராஜா எல்லா “மேடைகளையும்” அகற்றினாரா? இல்லை என்றே தெரிகிறது. ஒருவேளை பொய்க் கடவுட்களுக்கான மேடைகளை மட்டுமே அகற்றிவிட்டு, யெகோவாவின் வணக்கத்திற்கான மேடைகளை அவர் அகற்றாமல் இருந்திருக்கலாம். ஆசாவுடைய ஆட்சிகால முடிவில் மேடைகள் திரும்பவும் கட்டப்பட்டிருக்கலாம். இப்படி அகற்றப்படாத மேடைகளை அவரது மகன் யோசபாத் அகற்றினார். உண்மையில், யோசபாத்தின் ஆட்சியின்போதுகூட மேடைகள் முற்றிலுமாக அகற்றப்படவில்லை.—2 நாளாகமம் 17:5, 6; 20:31-33.
படிப்புக் கட்டுரை 38
அமைதியான காலத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்
“தேசத்தில் அமைதி நிலவ யெகோவா உதவி செய்ததால் அந்தக் காலப்பகுதியில் போரோ எதிரிகளின் தொல்லையோ இருக்கவில்லை.”—2 நா. 14:6.
இந்தக் கட்டுரையில்...
உங்கள் நாட்டில் யெகோவாவைச் சுதந்திரமாக வணங்க முடிகிறதா? அப்படியென்றால், இந்த அமைதியான காலத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள்? யூதாவின் ராஜா ஆசாவும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் எதிரிகளின் தொல்லை இல்லாத காலத்தை ஞானமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். நீங்கள் எப்படி அவர்களைப் பின்பற்றலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரை சொல்லும்.
யெகோவாவை வணங்குவது எப்போது சவாலாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பிரச்சினைகளோடு போராடும்போதா அல்லது வாழ்க்கை ஓரளவு அமைதியாகப் போகும்போதா? பிரச்சினைகள் வரும்போது ஒருவேளை நாம் யெகோவாவை நம்பியிருக்கலாம். ஆனால், நம் வாழ்க்கை அமைதியாகப் போகும்போது என்ன செய்வோம்? யெகோவாவுக்குச் செய்யும் சேவையைக் கொஞ்சம் ஓரங்கட்டிவிடுவோமா? இதைப் பற்றித்தான் இஸ்ரவேலர்களை யெகோவா எச்சரித்தார்.—உபா. 6:10-12.
2 ஆசா ராஜா நமக்கு அருமையான முன்மாதிரி. யெகோவாவை முழுமையாக நம்பியிருந்ததன் மூலம் அவர் ஞானமாக நடந்துகொண்டார். பிரச்சினைகள் வந்தபோது மட்டுமல்ல, அமைதியான காலங்களிலும் அவர் யெகோவாவுக்குச் சேவை செய்தார். வாழ்நாளெல்லாம் அவர் முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்தார். (1 ரா. 15:14) யூதாவிலிருந்த பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்டுவதன் மூலம் அவர் இதை நிரூபித்தார். அவர் “பொய் தெய்வங்களின் பலிபீடங்களையும் ஆராதனை மேடுகளையும் அழித்துப்போட்டார், பூஜைத் தூண்களை நொறுக்கிப்போட்டார், பூஜைக் கம்பங்களை வெட்டிப்போட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 14:3, 5) அதுமட்டுமல்ல, அவருடைய பாட்டி மாக்காளை ராஜமாதா அந்தஸ்திலிருந்து நீக்கினார். ஏனென்றால், மக்கள் வழிபடுவதற்காக ஒரு அருவருப்பான சிலையை அவள் செய்துவைத்திருந்தாள்.—1 ரா. 15:11-13.
3 ஆசா, பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்டியது மட்டுமல்லாமல், உண்மை வணக்கம் செழித்தோங்குவதற்கு உறுதுணையாக இருந்தார். யூதா ராஜ்யத்தின் மக்கள் யெகோவாவிடம் திரும்பிவர உதவினார். அமைதியான காலத்தைக் கொடுத்து ஆசாவையும் அந்த மக்களையும் யெகோவா ஆசீர்வதித்தார். ஆசாவுடைய ஆட்சிக்காலத்தில் பத்து வருஷங்களுக்கு ‘தேசத்தில் . . . எதிரிகளின் தொல்லை இருக்கவில்லை.’ (2 நா. 14:1, 4, 6) அந்த அமைதியான காலத்தை ஆசா எப்படிப் பயன்படுத்தினார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஆசாவைப் போலவே நடந்துகொண்ட முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பற்றியும் பார்ப்போம். உங்கள் நாட்டில் யெகோவாவைச் சுதந்திரமாக வணங்க முடிந்தால், இந்த அமைதியான காலத்தை நீங்கள் எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம் என்றும் பார்ப்போம்.
அமைதியான காலத்தை ஆசா எப்படிப் பயன்படுத்தினார்?
4 இரண்டு நாளாகமம் 14:2, 6, 7-ஐ வாசியுங்கள். “எந்தப் பக்கத்திலிருந்தும் எதிரிகளின் தொல்லை இல்லாமல் [யெகோவா] நம்மை நிம்மதியாக வாழ வைத்திருக்கிறார்” என்று மக்களிடம் ஆசா சொன்னார். ஆனால், அந்த அமைதியான காலத்தில் சந்தோஷமாகப் பொழுதுபோக்கினால் போதும் என்று அவர் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, நகரங்களையும் மதில்களையும் கோபுரங்களையும் கட்டி கதவுகளை வைத்தார். “தேசம் முழுவதும் நம்முடைய கையில்தான் இருக்கிறது” என்று யூதா மக்களிடம் சொன்னார். அதாவது, கடவுள் கொடுத்த அந்தத் தேசத்தில் எதிரிகளின் தொல்லை இல்லாமல் மக்கள் சுதந்திரமாக எல்லா இடத்துக்கும் போய் வரலாம் என்றும், கட்டிடங்களைக் கட்டலாம் என்றும் சொன்னார். அந்த அமைதியான காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி அவர் மக்களிடம் சொன்னார்.
5 தன்னுடைய படையைப் பலப்படுத்துவதற்கும் அந்த அமைதியான காலத்தை ஆசா பயன்படுத்திக்கொண்டார். (2 நா. 14:8) அப்படியென்றால், யெகோவாமேல் அவருக்கு நம்பிக்கை இல்லையென்று அர்த்தமா? அப்படி இல்லை! ஒரு ராஜாவாக, ஆபத்துகளைச் சந்திக்கத் தன் மக்களைத் தயார்படுத்துவது தன்னுடைய கடமை என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அந்த அமைதியான நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதுகூட அவருக்குத் தெரிந்திருந்தது, அதேபோல் அது மாறியது.
அமைதியான காலத்தை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள்?
6 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டாலும் அமைதியான காலத்தையும் அனுபவித்தார்கள். அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள்? உண்மையுள்ள அந்த ஆண்களும் பெண்களும் நல்ல செய்தியை இடைவிடாமல் பிரசங்கித்தார்கள், தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்தார்கள். அதனால் “சபை வளர்ந்துகொண்டே போனது.” அந்த அமைதியான காலத்தில் அவர்கள் மும்முரமாகச் செய்த ஊழியத்தை யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதித்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது.—அப். 9:26-31.
7 நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். உதாரணத்துக்கு, எபேசுவில் ‘வாய்ப்பு என்ற பெரிய கதவு திறக்கப்பட்டிருந்ததை’ அப்போஸ்தலன் பவுல் புரிந்துகொண்டார். அதனால், பிரசங்கிப்பதற்கும் சீஷராக்குவதற்கும் அங்கே கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். —1 கொ. 16:8, 9.
8 கி.பி. 49-ல் நிறைய பேருக்கு நல்ல செய்தியைச் சொல்ல பவுலுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் அருமையான வாய்ப்புக் கிடைத்தது. ஏனென்றால், அந்த வருஷத்தில்தான் விருத்தசேதனம் சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. (அப். 15:23-29) அந்த முடிவு சபைகளுக்குத் தெரிவிக்கப்பட்ட பிறகு, “யெகோவாவின் வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியை” பிரசங்கிக்க கிறிஸ்தவர்கள் கடினமாக முயற்சி செய்தார்கள். (அப். 15:30-35) அதற்கு என்ன பலன் கிடைத்தது? “சபையில் இருந்தவர்கள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தார்கள், அவர்களுடைய எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது.”—அப். 16:4, 5.
அமைதியான காலத்தை இன்று நாம் எப்படிப் பயன்படுத்தலாம்?
9 இன்று நிறைய நாடுகளில், பிரசங்கிப்பதற்கு அவ்வளவாக எதிர்ப்புகள் இல்லை. அதுபோன்ற ஒரு நாட்டில் நீங்கள் வாழ்கிறீர்களா? அப்படியென்றால், ‘இந்த வாய்ப்ப நான் எப்படி பயன்படுத்திக்கிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். விறுவிறுப்பான இந்தக் கடைசி நாட்களில், பிரசங்கிக்கிற வேலையையும் கற்பிக்கிற வேலையையும் யெகோவாவின் மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மும்முரமாகச் செய்துவருகிறார்கள். (மாற். 13:10) இந்த ஊழியத்தை நிறைய விதங்களில் நம்மால் ஆதரிக்க முடியும்.
10 அமைதியான காலத்தை நீங்கள் எப்படி நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்? (2 தீமோத்தேயு 4:2-ஐ வாசியுங்கள்.) அதிகமாக ஊழியம் செய்வதற்காக நீங்களோ உங்கள் குடும்பத்தில் இருக்கிற ஒருவரோ வாழ்க்கையில் ஏதாவது மாற்றங்கள் செய்ய முடியுமா என்று யோசித்துப்பார்க்கலாம், இல்லையா? ஒருவேளை, பயனியர் ஊழியம் செய்ய முடியுமா என்றுகூட யோசித்துப்பார்க்கலாம், இல்லையா? பணம் பொருள் சேர்ப்பதற்கான காலம் இது கிடையாது! ஏனென்றால், மிகுந்த உபத்திரவத்தில் இதெல்லாம் நமக்குக் கைகொடுக்காது!—நீதி. 11:4; மத். 6:31-33; 1 யோ. 2:15-17.
11 ஊழியத்தை அதிகமாகச் செய்வதற்காக நிறைய சகோதர சகோதரிகள் புதிய மொழியைக் கற்றிருக்கிறார்கள். ஏராளமான மொழிகளில் பைபிள் பிரசுரங்களை வெளியிடுவதன் மூலம் யெகோவாவின் அமைப்பு இவர்களுக்கு உதவி செய்துவருகிறது. உதாரணத்துக்கு, 2010-ல் நம்முடைய பிரசுரங்கள் கிட்டத்தட்ட 500 மொழிகளில் கிடைத்தன. ஆனால் இன்று, 1,000-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன.
12 பைபிள் சொல்லும் செய்தியைத் தங்களுடைய தாய்மொழியிலேயே கேட்பது எந்தளவுக்கு மக்களின் மனதைத் தொடுகிறது? அமெரிக்காவில் நடந்த ஒரு மண்டல மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். கின்யர்வாண்டா மொழியில் அந்த மாநாடு நடந்தது; அந்த மொழி ருவாண்டாவிலும் காங்கோவிலும் (கின்ஷாசா) உகாண்டாவிலும் பேசப்பட்டுவருகிறது. மாநாடு முடிந்த பிறகு, கின்யர்வாண்டா மொழி பேசும் ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “நான் அமெரிக்காவுக்கு வந்து 17 வருஷம் ஆச்சு, இப்பதான் முதல் தடவையா மாநாட்டு நிகழ்ச்சிகள என்னால முழுசா புரிஞ்சுக்க முடிஞ்சுது.” தன்னுடைய தாய்மொழியில் மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கேட்டது இந்தச் சகோதரியின் மனதை ஆழமாகத் தொட்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் ஊழியப் பகுதியில் வேறு மொழி பேசுகிற மக்கள் இருக்கலாம். உங்கள் மொழி அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களுடைய தாய்மொழியில் நல்ல செய்தியைக் கேட்பது அவர்களுடைய மனதைத் தொடலாம். அதனால், அவர்களுடைய மொழியை உங்களால் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
13 எல்லா சகோதர சகோதரிகளாலும் சுதந்திரமாகப் பிரசங்கிக்க முடிவதில்லை. சில நாடுகளில், அரசாங்கங்கள் நம்முடைய வேலைக்குக் கடுமையான கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, ரஷ்யாவில் என்ன நடந்ததென்று பார்க்கலாம். பல வருஷங்களாக அங்கே நம்முடைய சகோதரர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். கடைசியில், மார்ச் 1991-ல் நம்முடைய வேலைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட 16,000 யெகோவாவின் சாட்சிகள்தான் அங்கே இருந்தார்கள். 20 வருஷங்களுக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை 1,60,000-ஐத் தாண்டியது! அமைதியான அந்தக் காலத்தை நம் சகோதர சகோதரிகள் ஞானமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், அந்த அமைதியான காலம் நீடிக்கவில்லை. இருந்தாலும், உண்மை வணக்கத்துக்காக ஓயாமல் உழைப்பதை அந்தச் சகோதர சகோதரிகள் நிறுத்திவிடவில்லை. யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்குத் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள்.
அமைதியான காலம் நிலையானது அல்ல
14 ஆசாவின் நாட்களில் அமைதியான காலம் நிலைக்கவில்லை. பத்து லட்சத்துக்கும் அதிகமான வீரர்களைக் கொண்ட ஒரு பெரிய படை எத்தியோப்பியாவிலிருந்து வந்தது. தன்னுடைய படையால் யூதாவைச் சுலபமாகத் தோற்கடித்துவிட முடியுமென்று தளபதி சேராகு தப்புக்கணக்கு போட்டான். ஆனால், ஆசா ராஜா தன்னுடைய படைபலத்தை அல்ல, தன்னுடைய கடவுளான யெகோவாவை நம்பினார். “யெகோவா தேவனே, எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம், இந்தக் கூட்டத்தை எதிர்த்துப் போர் செய்ய உங்கள் பெயரில் வந்திருக்கிறோம்” என்று அவர் ஜெபம் செய்தார்.—2 நா. 14:11.
15 தன்னுடைய படையைவிட எத்தியோப்பிய படை இரண்டு மடங்கு பெரியதாக இருந்தாலும், யெகோவாவால் தன் மக்களைக் காப்பாற்ற முடியுமென்று ஆசா முழுமையாக நம்பினார். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை, யெகோவா அவர்களைக் காப்பாற்றினார். எத்தியோப்பியப் படை படுதோல்வி அடைந்தது.—2 நா. 14:8-13.
16 எதிர்காலத்தில் நம் ஒவ்வொருவருக்கும் என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது. ஆனால், நாம் அனுபவிக்கிற அமைதியான காலம் நிலைக்காது என்று மட்டும் நமக்கு உறுதியாகத் தெரியும். சொல்லப்போனால், கடைசி நாட்களில் தன் சீஷர்களை “எல்லா தேசத்து மக்களும் . . . வெறுப்பார்கள்” என்று இயேசு முன்கூட்டியே சொன்னார். (மத். 24:9) “கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகக் கடவுள்பக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்” என்று அப்போஸ்தலன் பவுலும் சொன்னார். (2 தீ. 3:12) சாத்தான் “பயங்கர கோபத்தோடு” இருக்கிறான். அவனுடைய கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் நம்மைநாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று அர்த்தம்.—வெளி. 12:12.
17 ரொம்ப சீக்கிரத்தில், “மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதற்குப் பிறகும் வரப்போவதில்லை” என்று பைபிள் சொல்கிறது. (மத். 24:21) அப்போது, நம் ஒவ்வொருவருடைய விசுவாசமும் சோதிக்கப்படும். நம் குடும்பத்தில் இருப்பவர்களே நமக்கு எதிராகத் திரும்பலாம், நம் வேலையும் தடை செய்யப்படலாம். (மத். 10:35, 36) அந்தச் சமயத்தில், யெகோவா நம்மைக் காப்பாற்றுவார் என்று ஆசாவைப் போலவே நாமும் முழுமையாக நம்புவோமா?
18 எதிர்காலத்தில் வரப்போகிற சோதனைகளைச் சந்திப்பதற்கு யெகோவா இப்போதே நம்மைத் தயார்படுத்துகிறார். நாம் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியோடு இருப்பதற்கு யெகோவா உதவுகிறார். ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பயன்படுத்தி நமக்கு “ஏற்ற வேளையில் . . . உணவு” தருகிறார். (மத். 24:45) ஆனால், யெகோவாமேல் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள நம் பங்கில் செய்ய வேண்டியதை நாம் செய்ய வேண்டும்.—எபிரெயர் 10:38, 39-ஐ வாசியுங்கள்.
19 ஆசா ராஜாவைப் போலவே நாமும் ‘[யெகோவாவை] தேட’ வேண்டும். (2 நா. 15:1, 2) ஒருவர் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு ஞானஸ்நானம் எடுக்கும்போது யெகோவாவைத் தேட ஆரம்பிக்கிறார். யெகோவாமேல் இருக்கும் அன்பைப் பலப்படுத்திக்கொள்வதற்குக் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யெகோவாவின் அமைப்பு ஏற்பாடு செய்கிற கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது ஒருவருக்கு உண்மையான புத்துணர்ச்சி கிடைக்கிறது, சகோதர சகோதரிகளிடமிருந்து உற்சாகமும் கிடைக்கிறது. (மத். 11:28) நாம் யெகோவாவை எந்தளவுக்குத் தேடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, ‘நான் சபை கூட்டங்களுக்கு தவறாம போறேனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். அதோடு, ‘நான் தவறாம பைபிள் படிக்கிறேனா?’ என்றும் கேட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள் குடும்பத்தோடு இருந்தால், ஒவ்வொரு வாரமும் குடும்ப வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குகிறீர்களா? தனியாக வாழ்கிறீர்கள் என்றால், பைபிளை நன்றாக ஆராய்ச்சி செய்து படிப்பதற்குத் தவறாமல் நேரம் ஒதுக்குகிறீர்களா? அதோடு, பிரசங்கிப்பதற்கும் மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்கும் முழுமுயற்சி எடுக்கிறீர்களா?
20 நாம் ஏன் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்? நம் இதயத்தையும் நம் மனதில் இருக்கிற யோசனைகளையும் யெகோவா ஆராய்ந்து பார்ப்பதாக பைபிள் சொல்கிறது; அதனால், நாமும் அதையே செய்ய வேண்டும். (1 நாளாகமம் 28:9-ஐ வாசியுங்கள்.) நம்முடைய குறிக்கோள்களில் அல்லது யோசனைகளில் ஏதாவது மாற்றம் தேவைப்பட்டால் அதைச் செய்வதற்கு யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும். இனிமேல் வரப்போகும் சோதனைகளைச் சந்திக்கத் தயாராவதற்கு இதுதான் சமயம்! அதனால், அமைதியான காலத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள். அதற்கு இடைஞ்சலாக இருக்க எதற்குமே இடம்கொடுக்காதீர்கள்!
‘உங்கள் செயல்களுக்கேற்ற கைமாறு கிடைக்கும்’
யூதேயாவின் மேட்டுநிலப் பகுதியிலிருந்து ஆழமான பள்ளத்தாக்கின் வழியாகக் கரையோர சமவெளியை நோக்கி ஆசா ராஜா தன் படைகளை மிக வேகமாக நடத்திச் செல்கிறார். பள்ளத்தாக்கு கொஞ்சம் அகலமாக இருக்கும் இடத்தில் நிற்கிறார். கீழே எதிரியின் மாபெரும் படை கூடாரமிட்டுத் தங்கியிருப்பதைப் பார்க்கிறார்! அச்சத்தில் உறைந்து போகிறார்! அந்த எத்தியோப்பிய படையில் பத்து லட்சம் வீரர்கள் இருக்க வேண்டும். ஆனால், அதில் கிட்டத்தட்ட பாதிப் பேர்தான் ஆசாவின் படையில் இருக்கிறார்கள்.
போரை எதிர்கொள்ள வேண்டியிருந்த இந்த வேளையில் ஆசாவின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது? படைத் தளபதிகளுக்கு என்ன கட்டளை கொடுப்பது... படையினரை எப்படி உற்சாகப்படுத்துவது... குடும்பத்தாருக்கு என்ன எழுதுவது... என்ற விஷயங்களா? இவை எதுவுமே இல்லை! அந்தச் சமயத்தில் அவருடைய மனதெல்லாம் யெகோவாவையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அதனால்தான் யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார்.
அந்த ஜெபத்தையும் அந்தச் சமயத்தில் நடந்தவற்றையும் பற்றிச் சிந்திப்பதற்கு முன்பு ஆசா எப்படிப்பட்டவர் என்று பார்க்கலாம். அந்த நெருக்கடியான சமயத்தில் ஜெபம் செய்ய அவரை எது தூண்டியது? கடவுளுடைய உதவியை அவர் நாடியது சரியா? யெகோவா தம்முடைய ஊழியர்களின் செயல்களுக்குத் தக்க பலனை அளிக்கிறார் என்பதை ஆசாவைப் பற்றிய பதிவு எவ்வாறு காண்பிக்கிறது?
ஆசாவைப் பற்றிய பதிவு
இஸ்ரவேல் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டதற்குப் பின்வந்த 20 வருடங்களில் யூதா பொய் மதப் பழக்கவழக்கங்களில் ஊறிப்போயிருந்தது. கி.மு. 977-ல் ஆசா அரச பீடத்தில் அமர்ந்தபோது, அரசவையில் இருந்தவர்களும்கூட கானானியர்களின் கருவளக் கடவுட்களை வணங்குவதில் மூழ்கிப்போயிருந்தார்கள். ஆனால், நாளாகமப் புத்தகத்தில் உள்ள பதிவு, ‘ஆசா தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தார்’ என்று சொல்கிறது. ஆசா, ‘வேற்றுப் பலிபீடங்களையும், தொழுகை மேடுகளையும் அகற்றினார்; சிலைத்தூண்களை உடைத்தெறிந்தார்; அசேராக் கம்பங்களை வெட்டி வீழ்த்தினார்.’ (2 நா. 14:2, 3; பொது மொழிபெயர்ப்பு) அதுமட்டுமல்ல, மதத்தின் போர்வையில் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டுவந்த விலை ஆடவர்களை யூத ராஜ்யத்திலிருந்து ஒழித்துக்கட்டினார். அதோடு ஆசா நிறுத்திக்கொள்ளவில்லை. ‘தங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவைத் தேடவும், [கடவுளுடைய] நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும்’ மக்களை உற்சாகப்படுத்தினார்.—1 இரா. 15:12, 13; பொ.மொ.; 2 நா. 14:4.
ஆசா உண்மை வணக்கத்திற்குக் காட்டிய பக்திவைராக்கியத்தைப் பார்த்து யெகோவா உச்சிகுளிர்ந்து போனார். அதனால், அநேக வருடங்கள் அவரது ஆட்சியில் சமாதானம் தழைக்கச் செய்தார். எனவேதான் ஆசா, ‘நம்முடைய தேவனாகிய யெகோவாவைத் தேடினோம், தேடினபோது சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார்’ என்று சொன்னார். மக்கள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு யூத ராஜ்யத்தின் நகரங்களைச் சுற்றி கோட்டை, கொத்தளங்களை அமைத்து நகரங்களை வலுப்படுத்தினார்கள். ‘அவர்களுடைய காரியம் வாய்த்தது’ என்று பைபிள் சொல்கிறது.—2 நா. 14:1, 6, 7.
போர்க்களத்தில்...
ஆசாவின் சரித்திரத்தைப் படிக்கும்போது... விசுவாசத்தைச் செயலில் காட்டுபவர்களுக்கு யெகோவா கைமாறு செய்கிறவர் என்பதை ஆசா அறிந்திருந்தார் எனத் தெரிகிறது. எனவே, பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள படைகளிலேயே மிகப் பெரிய படையை எதிர்ப்பட்ட சமயத்தில் யெகோவாவிடம் உதவி கேட்டு ஆசா மன்றாடியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. யெகோவா மேல் சார்ந்திருந்தால்... அவருடைய ஆதரவு இருந்தால்... எதிரி படை எவ்வளவு பெரிதாக இருந்தாலும்சரி எவ்வளவு பலம்படைத்ததாக இருந்தாலும்சரி, கவலைப்படத் தேவையில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். இந்தப் போரில், யெகோவாவின் பெயர் உட்பட்டிருந்ததால், அதற்கு எந்தக் களங்கமும் வராமல் பார்த்துக்கொள்ளும்படி அவரிடம் ஆசா மன்றாடினார். ‘எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; யெகோவாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்’ என்று அவர் ஜெபம் செய்தார். (2 நா. 14:11) ‘யெகோவாவே, இந்த எத்தியோப்பியர் உங்களைத்தான் தாக்குகிறார்கள். உம்முடைய பெயரை ஏற்றிருக்கும் மக்களை இந்தச் சாதாரண மனிதர்கள் தோற்கடிக்க விடாதீர்கள்; அப்படித் தோற்கடிக்க விட்டீர்கள் என்றால்... உம்முடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும்’ என்று சொல்வதுபோல் இந்த ஜெபம் இருந்தது. ஆசாவின் ஜெபத்தைக் கேட்டு, ‘யெகோவா அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.’—2 நா. 14:12.
இன்றைக்கு, யெகோவாவின் மக்களைச் சுற்றிலும் பயங்கரமான எதிரிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இஸ்ரவேலரைப் போல் ஆயுதம் ஏந்தி போர்க்களத்தில் நின்று அவர்களோடு நாம் போரிடுவதில்லை. இருந்தாலும், அவருடைய பெயரில் ஆன்மீகப் போரில் ஈடுபடும் உண்மையுள்ள ஒவ்வொருவருக்கும் யெகோவா வெற்றியைப் பரிசளிப்பார் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம். அந்த ஆன்மீகப் போரில் இதெல்லாம் உட்படலாம்: இந்தச் சீர்கெட்ட உலகின் மனப்போக்கை எதிர்த்து நிற்பது, நம்முடைய பலவீனங்களை எதிர்த்துப் போராடுவது, நெறிகெட்ட சமுதாயத்தின் பிடியிலிருந்து நம் குடும்பத்தைக் காப்பாற்றுவது. எப்படிப்பட்ட கஷ்டங்களை நாம் எதிர்ப்பட்டாலும், ஆசாவின் ஜெபத்திலிருந்து ஆறுதலைப் பெறலாம். அவருக்குக் கிடைத்த வெற்றி, யெகோவா கொடுத்த வெற்றி. எந்த மனித சக்தியும் யெகோவாவை எதிர்த்து நிற்க முடியாது. கடவுளை நம்பியிருக்கிற எல்லாரும் அதில் உறுதியாய் இருக்கலாம் என்பதை ஆசாவின் பதிவு காட்டுகிறது.
உற்சாகமும் எச்சரிக்கையும்
போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த ஆசாவை அசரியா தீர்க்கதரிசி சந்தித்தார். அந்தச் சமயத்தில் அவரை உற்சாகப்படுத்தியதோடு ஓர் எச்சரிக்கையும் கொடுத்தார்: ‘ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் யெகோவாவோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். . . . உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு.’—2 நா. 15:1, 2, 7.
இந்த வார்த்தைகள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன. நாம் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்யும்வரை அவர் நம்மோடு இருப்பார் என்று உறுதியளிக்கின்றன. உதவி கேட்டு அவரிடம் மன்றாடினால் நிச்சயம் அவர் நமக்குச் செவிகொடுப்பார். “திடன்கொள்ளுங்கள்” என்று அசரியா சொன்னார். எனவே, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்ய நமக்குப் பெரும்பாலும் அதிக தைரியம் தேவைப்படுகிறது. என்றாலும், யெகோவாவின் உதவியோடு நாம் சரியானதைச் செய்ய முடியும்.
ஆசாவின் பாட்டியான மாக்கா, “அசேராவுக்கு அருவருப்பான உருவமொன்றை” செய்ததால் அரச அன்னைப் பதவியிலிருந்து ஆசா அவளை நீக்கிவிட்டார். அது அவருக்குக் கஷ்டமாக இருந்தபோதிலும் செய்தார். அதோடு, அவள் செய்து வைத்த உருவத்தையும் சுட்டெரித்தார். (1 இரா. 15:13, பொ.மொ.) ஆசா காட்டிய உறுதியையும் தைரியத்தையும் பார்த்து யெகோவா அவரை ஆசீர்வதித்தார். நம் உறவினர்கள் யெகோவாவுக்கு உண்மையாய் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, நாம் யெகோவாவையும் அவருடைய நீதிநெறிகளையும் ஆசாவைப் போல் இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும். நாம் அப்படிச் செய்தால், நம்முடைய உண்மைத்தன்மைக்கு யெகோவா நிச்சயம் பலன் அளிப்பார்.
விசுவாசதுரோகத்தில் மூழ்கிக் கிடந்த வடக்கு ராஜ்யத்திலிருந்த இஸ்ரவேலரில் அநேகர் யூதாவிற்குத் திரண்டு வருவதைப் பார்க்கும் பாக்கியத்தை ஆசா பெற்றார். இது அவர் பெற்ற பலன்களில் ஒன்று. ஆசாவோடு யெகோவா இருப்பதை அந்த மக்கள் உணர்ந்துகொண்டார்கள். உண்மை வணக்கத்தை அவர்கள் அந்தளவு மதித்ததால் யெகோவாவின் மக்களோடு சேர்ந்து வாழ தங்கள் சொந்த வீடுவாசல்களை விட்டுவிட்டு வந்தார்கள். ஆசாவும் யூதாவிலிருந்த அனைவரும், ‘தேவனாகிய யெகோவாவைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவதற்கு’ சந்தோஷமாய் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அதன் பலன்? ‘யெகோவா அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப் பண்ணினார்.’ (2 நா. 15:9-15) இன்றும்கூட... நல்மனம் படைத்தவர்கள் உண்மை வணக்கத்தார் ஆவதைப் பார்க்கும்போது நாம் ஆனந்தப் பரவசமடைகிறோம், அல்லவா?
அசரியா தீர்க்கதரிசி ஆசாவுக்கு உற்சாகம் அளித்ததோடு, ‘யெகோவாவை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்’ என்ற எச்சரிப்பும் கொடுத்தார். நாம் ஒருபோதும் யெகோவாவை விட்டு விலகாதிருப்போமாக. விலகினால், விளைவு விபரீதமாக இருக்கும்! (2 பே. 2:20-22) யெகோவா ஏன் ஆசாவுக்கு இந்த எச்சரிக்கையைக் கொடுத்தார் என்று வேதவசனங்கள் சொல்வதில்லை. ஆனால், ஆசா அதற்குக் கீழ்ப்படியாமல் போனார்.
“மதியீனமாய் நடந்துகொண்டாய்”
ஆசா அரசாண்ட 36-வது வருடத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான். யெகோவாவுக்கும் ஆசாவுக்கும் சேவை செய்ய தன்னுடைய மக்கள் யூதாவுக்குப் போவதைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தேசத்தின் எல்லையில் இருந்த ராமா நகரத்தை பாஷா கட்ட ஆரம்பித்தான். இந்த நகரம் எருசலேமுக்கு வடக்கே 8 கிலோமீட்டர் (ஐந்து மைல்) தொலைவில் இருந்தது. எத்தியோப்பிய படையை எதிர்கொண்டபோது கடவுளுடைய உதவியை நாடிய ஆசா இந்தச் சமயத்தில் மனிதர்களின் உதவியை நாடினார். சிரியா ராஜாவுக்குப் பரிசுகளை அனுப்பி இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தைத் தாக்கச் சொன்னார். சிரியர் தாக்க ஆரம்பித்தபோது ராமாவைக் கட்டுவதை பாஷா விட்டுவிட்டான்.—2 நா. 16:1-5.
ஆசா இப்படிச் செய்தது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. அனானி தீர்க்கதரிசியை அனுப்பி ஆசாவுக்கு அதைத் தெரிவித்தார். எத்தியோப்பியரைக் கடவுள் பூண்டோடு அழித்ததைக் கண்கூடாகப் பார்த்திருந்த ஆசா, ‘தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, யெகோவாவுடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது’ என்பதை உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர் உணரவில்லை. ஒருவேளை யாராவது அவருக்குத் தவறான அறிவுரையைக் கொடுத்திருக்கலாம். அல்லது, பாஷாவையும் அவனுடைய படையையும் தானே எளிதில் வீழ்த்திவிடலாம் என்றும், ‘அது ஒன்றும் பெரிய படையில்லை’ என்றும் அவர் தப்புக்கணக்குப் போட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் ஆசா, யெகோவாவைச் சார்ந்திருக்காமல் மனிதர்களைச் சார்ந்திருந்தார். அதனால்தான், ‘நீ மதியீனமாய் நடந்துகொண்டாய்; எனவே இன்றுமுதல் நீ போர்களைச் சந்திக்க வேண்டும்’ என்று அனானி சொன்னார்.—2 நா. 16:7-9; பொ.மொ.
அதைக் கேட்டு ஆசா பொங்கியெழுந்தார். அனானி தீர்க்கதரிசியைக் காவலறையில் போட்டார், அதாவது, தொழுமரத்தில் பூட்டினார். (2 நா. 16:10) ‘இத்தனை வருஷமா உண்மையா சேவை செய்து வந்திருக்கிற என்னை தண்டிக்கப்போவதாக யெகோவா சொல்றது நியாயமா?’ என்று ஆசா நினைத்திருக்கலாம். வயதான காலத்தில் சரியாக யோசிக்கும் திறனை ஆசா ஒருவேளை இழந்து போயிருந்திருப்பாரோ? இதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை.
ஆசாவின் 39-வது வருட ஆட்சியின்போது, அவருடைய பாதங்களை ஒரு கொடிய நோய் தாக்கியதால் அவருடைய உடல்நிலை பயங்கரமாகப் பாதிக்கப்பட்டது. ‘அவர் தன் வியாதியிலும் யெகோவாவை அல்ல, பரிகாரிகளையே தேடினார்’ என்று பைபிள் சொல்கிறது. அந்தச் சமயத்தில் யெகோவாவிடம் முன்புபோல் அவர் நெருக்கமாய் இருக்கவில்லை என்று தெரிகிறது. அப்படிப்பட்ட நிலைமையில்... அவருடைய 41-வது வருட ஆட்சியின்போது இறந்துபோனார்.—2 நா. 16:12-14.
என்றபோதிலும், ஆசாவின் நல்ல குணங்களும் உண்மை வணக்கத்திற்காக அவர் காண்பித்த வைராக்கியமும் அவருடைய தவறுகளையும் விஞ்சி நின்றன. தன்னுடைய கடைசி மூச்சுவரை அவர் யெகோவாவைத்தான் வணங்கினார். (1 இரா. 15:14) அப்படியானால், அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கடந்த காலங்களில் யெகோவா நமக்கு எப்படி உதவினார் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், ஏதாவது பிரச்சினைகள் தலைதூக்கும்போது உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்ய தூண்டப்படுவோம். என்றாலும், நாம் அநேக வருடங்களாகக் கடவுளுக்கு உண்மையுடன் சேவை செய்து வந்திருப்பதால் பைபிள் தரும் எந்த ஆலோசனையும் நமக்கு அவசியமில்லை என்று நினைத்துவிடக் கூடாது. நாம் ரொம்ப காலமாக யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்து வந்திருந்தாலும்கூட, தவறு செய்தால் அவர் நம்மை நிச்சயம் கண்டிப்பார். அப்படி அவர் நம்மைக் கண்டிக்கும்போது அதை நாம் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால், நாம்தான் பயனடைவோம். முக்கியமாக, யெகோவாவுக்கு நாம் உண்மையோடு இருக்கும்வரை, அவர் நமக்குப் பக்கபலமாக இருப்பார். தமக்கு உண்மையாய் இருப்பவர்களை யெகோவாவுடைய கண்கள் பூமியெங்கும் தேடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் சார்பாகத் தம் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்குக் கைமாறு செய்கிறார், ஆம் பலன் அளிக்கிறார். ஆசாவின் நற்செயல்களுக்கு யெகோவா பலன் அளித்தார் என்றால், நமக்கும் பலன் அளிப்பார்.
அதிகாரம் 29
“யெகோவா என் கடவுள்”
it “அண்டங்காக்கை” பாரா 5
அண்டங்காக்கை
அண்டங்காக்கைகள், சாதாரண காக்கைகளைப் போல் இல்லாமல், பொதுவாக வனாந்தரத்தில்தான் வாழும். பெரும்பாலும், மலைப்பிரதேசங்களிலும் பாலைவனங்களிலும்கூடக் காணப்படும். அழிந்துபோய்ப் பாழாய்க் கிடந்த ஏதோமில் தங்கிய உயிரினங்களில் அண்டங்காக்கைகளும் இருந்ததாக ஏசாயா ஒரு தரிசனத்தில் பார்த்தார். (ஏசா 34:11) எஞ்சியிருக்கும் உணவுப் பொருள்களைப் பாறை இடுக்குகளில் ஒளித்து வைக்கும் அல்லது இலைகளுக்கு அடியில் புதைத்து வைக்கும் பழக்கம் அண்டங்காக்கைகளுக்கு இருக்கிறது. அதனால், கேரீத் பள்ளத்தாக்குக்குப் பக்கத்தில் ஒளிந்துகொண்டிருந்த எலியாவுக்குத் தினமும் இரண்டு தடவை ரொட்டியையும் இறைச்சியையும் அற்புதமாகக் கொடுப்பதற்குக் கடவுள் அண்டங்காக்கைகளைப் பயன்படுத்தியது ரொம்பப் பொருத்தமாக இருந்தது.—1ரா 17:2-6.
it “எலியா” எண் 1 பாரா 11
எலியா
அற்புதங்கள். எலியா இந்த எட்டு அற்புதங்களைச் செய்ததாக பைபிள் சொல்கிறது: (1) மழை பெய்வதைத் தடுத்து நிறுத்தினார், (2) சாறிபாத் விதவை வைத்திருந்த மாவும் எண்ணெயும் தீர்ந்துபோகாதபடி செய்தார், (3) அந்த விதவையின் மகனை உயிரோடு எழுப்பினார், (4) ஜெபம் செய்து வானத்திலிருந்து நெருப்பை வர வைத்தார், (5) ஜெபம் செய்து மறுபடியும் மழை பெய்ய வைத்தார், அதனால் வறட்சி முடிவுக்கு வந்தது, (6) அகசியா ராஜாவின் 50 வீரர்கள்மேலும் அவர்களுடைய தலைவர்மேலும் நெருப்பை வர வைத்தார், (7) இன்னொரு 50 வீரர்கள்மேலும் அவர்களுடைய தலைவர்மேலும் நெருப்பை வர வைத்தார், மற்றும் (8) தன்னுடைய அங்கியை யோர்தான் ஆற்றில் அடித்து, ஆற்றை இரண்டாகப் பிரிய வைத்தார். எலியா வானத்துக்குக் கொண்டுபோகப்பட்டதும் ஒரு அற்புதம்தான். ஆனால், எலியா ஜெபம் செய்ததாலோ அல்லது அறிவித்ததாலோ அது நடக்கவில்லை, கடவுளே அந்த அற்புதத்தை நேரடியாகச் செய்தார்.
ba பக். 17 பாரா 3
இந்தப் புத்தகத்தை நம்பலாமா?
சில சமயங்களில், சில விவரங்கள் விடுபட்டுப்போனால், அது பைபிள் எழுத்தாளரின் நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது. உதாரணத்திற்கு, 1 இராஜாக்களின் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர், இஸ்ரவேலில் கடுமையான வறட்சி இருந்தது என்று சொல்கிறார். அது அவ்வளவு கடுமையாக இருந்ததால், ராஜாவுக்கு தன்னுடைய குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் உயிரோடு காப்பாற்ற போதுமான தண்ணீரும் புல்லும் கிடைக்கவில்லை. (1 இராஜாக்கள் 17:7; 18:5) ஆனால், கர்மேல் பர்வதத்தில் (பலியில் உபயோகிப்பதற்காக) சுமார் 1,000 சதுர மீட்டர் நீளத்திற்கு சுற்றிப்போகும் வாய்க்கால் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் கொண்டுவந்து ஊற்றும்படி எலியா தீர்க்கதரிசி கட்டளையிட்டார் என்று அதே பதிவு சொல்கிறது. (1 இராஜாக்கள் 18:33-35) வறட்சி இருந்த சமயத்தில் அவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்திருக்கும்? 1 இராஜாக்களின் பதிவை எழுதிய எழுத்தாளர் அதற்கான காரணத்தை விவரிக்க சிரமம் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், மத்தியதரைக் கடல் கரையில் கர்மேல் அமைந்திருந்தது என்பது இஸ்ரவேலில் இருந்த எவருக்கும் தெரியும். பிறகு, அதே பதிவில் இதைப்பற்றி எதிர்பாராமலே குறிப்பிடப்பட்டுள்ளது. (1 இராஜாக்கள் 18:43) இவ்வாறாக, கடல் நீர் உடனடியாக கிடைத்திருக்கலாம். மற்ற விஷயங்களை விவரமாக விளக்கும் இப்புத்தகம், ஒரு கட்டுக்கதையை உண்மை என்று காட்ட நினைத்திருந்தால், இதனை எழுதிய எழுத்தாளரால் நன்றாகவே கதைகட்டியிருக்க முடியுமே. அப்படி இருந்தும் ஒத்திசைவு இல்லாதது போல் தோன்றும் இந்த விவரத்தை தெரிந்தே ஏன் விட்டுவிட்டார்?
w14 2/1 பக். 12 பாரா 3
அநியாயத்தைச் சகித்துக்கொண்டார்
தன்னுடைய பொறுப்புகளில் சிலவற்றை எலிசாவுக்குக் கொடுக்க எலியா கொஞ்சம் தயங்கியிருப்பாரா? தனக்குப் பதிலாக எலிசா தீர்க்கதரிசியாக ஆகிவிடுவாரோ என்று பயந்திருப்பாரா? நமக்குத் தெரியாது. ஆனால், அந்த மாதிரி யோசனைகள் எலியாவின் மனதில் வந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால், “எலியா நம்மைப் போன்ற மனிதர்தான், நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான் அவருக்கும் இருந்தன.” (யாக்கோபு 5:17) ஆனாலும், “எலியா அவரிடம் [எலிசாவிடம்] போய்த் தன்னுடைய அங்கியை அவர்மேல் போட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (1 ராஜாக்கள் 19:19) எலியாவின் அங்கி அநேகமாக செம்மறியாட்டுத் தோலில் அல்லது வெள்ளாட்டுத் தோலில் செய்யப்பட்டிருக்கலாம். ஒரு விசேஷ வேலை செய்வதற்கு யெகோவா அவரைத் தேர்ந்தெடுத்ததற்கு அந்த அங்கி அடையாளமாக இருந்தது. அதனால், அதை அவர் எலிசாவின் தோள்மேல் போட்டதற்கு ஒரு முக்கியமான அர்த்தம் இருந்தது. எலிசாவைத் தனக்கு அடுத்த தீர்க்கதரிசியாக நியமிக்கும்படி யெகோவா கொடுத்த கட்டளைக்கு எலியா மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்ததை அது காட்டியது. எலியா தன்னுடைய கடவுளை முழுமையாக நம்பி அவருக்குக் கீழ்ப்படிந்தார்.
“பைபிளைப் படியுங்கள் யோசித்துப் பாருங்கள்” என்ற ஆன்லைன் தொடர்
உண்மை வணக்கம் பக்கம் உறுதியாக நில்லுங்கள்!
இளைஞர்களுக்கு
செய்ய வேண்டியது: இந்தப் பயிற்சியை அமைதியான ஒரு இடத்தில் செய்யுங்கள். வசனங்களை வாசிக்கும்போது, சம்பவம் நடக்கும் இடத்தில் நீங்களே இருப்பதுபோல் கற்பனை செய்துபாருங்கள். ஆட்களுடைய குரல்களைக் கேளுங்கள். அவர்கள் உணருவதைப் போலவே உணருங்கள். அந்தப் பதிவுக்கு உயிர் கொடுங்கள்.
முக்கியக் கதாபாத்திரங்கள்: எலியா, ஆகாப், மற்றும் கிட்டத்தட்ட 450 பாகால் தீர்க்கதரிசிகள்
சுருக்கம்: பாகாலைவிட யெகோவாதான் உயர்ந்தவர் என்பதை எலியா நிரூபிக்கிறார்.
1 கற்பனை செய்யுங்கள். —1 ராஜாக்கள் 18:17-40-ஐ வாசியுங்கள்.
இந்த சம்பவத்தில் வரும் எலியாவையும் பாகால் தீர்க்கதரிசிகளையும் பலிபீடங்களையும் கற்பனை செய்து ஒரு பேப்பரில் வரையுங்கள்.
வசனங்கள் 26 முதல் 29-ல் சொல்லப்பட்டிருக்கும் சம்பவத்தைக் கற்பனை செய்தபோது என்னென்ன சத்தங்களை “கேட்டீர்கள்”?
. . . . .
பாகால் தீர்க்கதரிசிகளிடம் எலியா பேசியபோது அவருடைய குரலில் உங்களுக்கு என்னென்ன உணர்ச்சிகள் தெரிந்தன?
. . . . .
2 ஆழமாக யோசியுங்கள்.
ஆகாபிடம் பேசவும் நூற்றுக்கணக்கான பாகால் தீர்க்கதரிசிகளைத் தலைகுனிய வைக்கும் ஒரு விஷயத்தைச் செய்யவும் எலியாவுக்கு ஏன் தைரியம் தேவைப்பட்டது? (க்ளூ: 1 ராஜாக்கள் 18:4, 13, 14-ஐ வாசியுங்கள்.)
. . . . .
ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்தி பாகால் வணக்கத்தைப் பற்றி சில விஷயங்களைக் கண்டுபிடியுங்கள். உதாரணத்துக்கு, பாகால் வணக்கத்தில் மக்கள் என்னென்ன விஷயங்களைச் செய்தார்கள்? இஸ்ரவேலர்கள் பாகாலை வணங்கியதால் என்ன மோசமான விளைவுகள் ஏற்பட்டன?
. . . . .
எலியா ஏன் யெகோவாவின் பலிபீடத்தைச் சுற்றி ஒரு வாய்க்காலை வெட்டி அதில் தண்ணீரை நிரப்பச் சொன்னார்?
. . . . .
3 கற்றதைக் கடைப்பிடியுங்கள். என்ன கற்றுக்கொண்டீர்கள் . . .
உண்மை வணக்கத்தை ஆதரிக்க தேவைப்படும் தைரியத்தைப் பற்றி.
. . . . .
அப்படிப்பட்ட தைரியத்தைக் காட்டுகிறவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி.
. . . . .
கூடுதலான பாடங்கள்.
என்னென்ன சமயங்களில் நான் என்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி இன்னும் தைரியமாகப் பேசலாம்?
. . . . .
4 இந்தப் பதிவிலிருந்து கற்றுக்கொண்ட எந்தப் பாடம் உங்களுக்கு ரொம்ப பொருந்துவதாக நினைக்கிறீர்கள், ஏன்?
. . . . .
அதிகாரம் 30
சாவின் வாசலில் நின்றபோதும் தைரியத்தைக் காட்டினாள்
it “சீதோன்” பாரா 6
சீதோன்
சீதோனியர்களின் மதமும், அது ஏற்படுத்திய பாதிப்புகளும். சீதோனியர்களின் மதம் ரொம்பக் கீழ்த்தரமாக இருந்தது. கட்டுப்பாடில்லாத குடிவெறியோடும் காமவெறியோடும் அஸ்தரோத் தேவியை வணங்குவது அவர்களுடைய மதத்தின் முக்கியப் பாகமாக இருந்தது. இஸ்ரவேலர்கள் சீதோனியர்களைத் தங்களோடு இருப்பதற்கு அனுமதித்ததால், கடைசியில் அவர்களுடைய பொய் தெய்வங்களை வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். (நியா 10:6, 7, 11-13) சாலொமோன் கல்யாணம் செய்த வேறு தேசத்துப் பெண்களில் சீதோனியப் பெண்களும் இருந்தார்கள். அவர்களுடைய பேச்சைக் கேட்டு, அருவருப்பான கருவள தேவியான அஸ்தரோத்தை சாலொமோன் வணங்க ஆரம்பித்துவிட்டார். (1ரா 11:1, 4-6; 2ரா 23:13) ஆகாப் ராஜாவும் யேசபேலைக் கல்யாணம் செய்வதன் மூலம் யெகோவாவின் கட்டளையை மீறினார்; யேசபேல், சீதோனியர்களின் ராஜாவின் மகள். அவள், இஸ்ரவேலில் பொய் வணக்கத்தை ரொம்பத் தீவிரமாகப் பரப்பினாள்.—1ரா 16:29-33; 18:18, 19.
it “ஏத்பாகால்”
ஏத்பாகால்
[அர்த்தம், பாகாலோடு].
சீதோனியர்களின் ராஜா. இவருடைய மகளான யேசபேலைத்தான் ஆகாப் ராஜா கல்யாணம் செய்திருந்தார். (1ரா 16:31) தன்னுடைய மகளை ஆகாபுக்குக் கல்யாணம் செய்து வைப்பதன் மூலமாக, அவருடைய அரசியல் கூட்டாளியாக ஆனார். அஸ்டார்ட் (அஸ்தரோத்) தேவியின் பூசாரியாக இருந்த இத்தோபாலைப் பற்றி சரித்திராசிரியரான மெனன்டர் சொன்னதை ஜோசிஃபஸ் மேற்கோள் காட்டினார். அவர் சொன்ன இத்தோபால் அநேகமாக இந்த ஏத்பாகால்தான் என்று தெரிகிறது. இந்தப் பூசாரி, தீருவின் ராஜா ஃபெல்லசைக் கொலை செய்துவிட்டு ராஜாவானார். ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவையானவற்றை சாலொமோனுக்குக் கொடுத்து உதவிய தீருவின் ராஜா ஈராமின் வம்சத்தைச் சேர்ந்தவர்தான் அந்த ஃபெல்லஸ். ஏத்பாகால் 32 வருஷங்கள் ஆட்சி செய்தார், 48 வயதில் இறந்தார். (Against Apion, I, 123 [18]) லிபியாவில் ஆஸா (Auza) என்ற நகரத்தை ஏத்பாகால் கட்டியதாக மெனன்டர் சொல்லியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, ஏத்பாகாலின் ஆட்சியில் பொருளாதாரம் அதிக வளர்ச்சி அடைந்திருந்ததாகத் தெரிகிறது. ஏத்பாகாலின் ஆட்சியில் ஒரு வருஷத்துக்கு வறட்சி இருந்ததாகவும் மெனன்டர் சொல்லியிருக்கிறார்.—ஜூயிஷ் ஆண்ட்டிக்விட்டீஸ், VIII, 324 (xiii, 2).
g93 11/22 பக். 13 பாரா. 1-4
கிறிஸ்மஸ், ஈஸ்டர் மற்றும் ஹாலோவின் பற்றிய உண்மைகள்
ஒரு குடும்பத்தில் இருக்கிறவர்கள் விடியற்காலையில் ஒரு பண்டிகையைக் கொண்டாட ஆரம்பிக்கிறார்கள். பிள்ளைகள் புது துணியையும் புது தொப்பியையும் போட்டிருக்கிறார்கள். முயல் பொம்மைகள், கலர்கலரான முட்டைகள், விசேஷமான இனிப்பு பன்கள் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். இது ஈஸ்டர் பண்டிகைபோல் தெரிகிறது. ஆனால், இது எங்கிருந்து ஆரம்பமானது?
பெனிக்கேயில் இருந்த பாலின வணக்கத்தாருக்கு வசந்த காலம் புனிதமான காலமாக இருந்தது. அஸ்டார்ட் அல்லது இஷ்டார் (கிரேக்கர்களின் அஃப்ரொடைட்) என்ற அவர்களுடைய கருவள தேவிக்கு முட்டையும் முயலும் அடையாளச் சின்னங்களாக இருந்தன. அவள் இரத்தவெறியும் காமவெறியும் பிடித்த தேவி. ரொம்பப் பெரிய பாலியல் உறுப்புகளைக் கொண்ட பெண் சிலைகளை வைத்து அவளை வழிபட்டார்கள். அல்லது, கையில் ஒரு முட்டையுடனும் பக்கத்தில் ஒரு முயலுடனும் இருக்கும் பெண் சிலைகளை வைத்து அவளை வணங்கினார்கள். அவளுடைய கோயிலில் விபச்சாரத்தை ஒரு புனிதமான தொழிலாகச் செய்தார்கள். கானானில் வாழ்ந்தவர்கள், இந்தப் பாலியல் தேவியை பாகாலின் மனைவியாக நினைத்தார்கள். அவளை வணங்கியவர்கள் அவளைக் கவுரவப்படுத்துவதற்காக, குடித்து வெறித்து ஒருவரோடு ஒருவர் உடலுறவு வைத்துக்கொண்டார்கள். அப்போதுதான், அந்தத் தேவியும் பாகாலும் சந்தோஷமாக உடலுறவு வைத்துக்கொள்வார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். பைபிள் தேசங்களின் சமீப கால கண்டுபிடிப்புகள் என்ற ஆங்கில புத்தகம் இப்படிச் சொல்கிறது: “கருவள தேவியின் நிர்வாணமான சிலைகள் இந்த நாட்டில்தான் இவ்வளவு அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில சிலைகள் ரொம்பவே ஆபாசமாக இருக்கின்றன.”
கார்த்தேஜில் இருக்கும் அவளுடைய நினைவிடங்களில், கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் இருக்கும் ஜாடிகளைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சின்னப் பிள்ளைகளின் கருகிப்போன எலும்புகள் அந்த ஜாடிகளுக்குள் இருந்தன. அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் பொதுவாக செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்களாக இருந்தார்கள். அதெல்லாம் தங்களைவிட்டு போகாமல் இருப்பதற்காக, தங்கள் பிள்ளைகளைத் தங்கள் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தார்கள். சில ஜாடிகளில் வேறு வேறு வயதைச் சேர்ந்த நிறைய பிள்ளைகளுடைய எலும்புகள் இருந்தன. ஒருவேளை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளாக அவர்கள் இருந்திருக்கலாம்.
அன்று செய்யப்பட்ட இந்த எல்லா மத சடங்குகளும் இன்று ஈஸ்டர் பண்டிகைக்காக செய்யப்படும் சடங்குகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஈஸ்டர் என்ற பெயர்கூட அன்று இருந்த பொய் தெய்வத்தின் பெயரைப் போலவே இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பண்டிகை கடவுளுடைய பரிசுத்தமான மகனை எந்த விதத்திலாவது கவுரவப்படுத்துமா?
விதவையின் விசுவாசத்திற்கு கிடைத்த வெகுமதி
விதவை மற்றொரு விசுவாசப் பரீட்சையை எதிர்ப்படவிருந்தாள். “இவைகள் நடந்த பின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது” என்று பைபிள் சொல்கிறது. தனக்கு நேர்ந்த துயரத்திற்கான காரணத்தை யோசித்த அந்தத் தாய், எலியாவிடம்: “தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.” (1 இரா. 17:17, 18) அவள் மனங்கசந்து ஏன் அப்படிச் சொன்னாள்?
முன்பு செய்த ஏதோவொரு பாவத்தை நினைத்துப் பார்த்ததாலா? தன் மகனின் சாவுக்குத் தெய்வ தண்டனைதான் காரணம் என்றும் அந்தத் தண்டனையைக் கொடுப்பதற்காகவே எலியாவைக் கடவுள் அனுப்பினார் என்றும் நினைத்ததாலா? அதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், தனக்கு நேர்ந்த அநியாயத்துக்கு கடவுளை அவள் குற்றப்படுத்தவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
கடவுளுடைய அங்கீகாரமே முடிவில்லா வாழ்வைத் தரும்
‘யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, [அங்கீகாரம்] என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்.’—சங். 5:12.
அந்த விதவையும் அவளுடைய மகனும் பசியில் வாடிக்கொண்டிருக்கிறார்கள், கடவுளுடைய தீர்க்கதரிசியும்தான். சாறிபாத் ஊரைச் சேர்ந்த அந்தப் பெண் சமைப்பதற்குத் தீ மூட்ட தயாராகிறாள்; அப்போது, எலியா தீர்க்கதரிசி தனக்குக் குடிக்கத் தண்ணீரும் சாப்பிட அப்பமும் வேண்டுமென அவளிடம் கேட்கிறார். அவளும் அவருக்குத் தண்ணீர் கொடுக்க முன்வருகிறாள், ஆனால் சாப்பிட அவளிடம் இருப்பதெல்லாம் “பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே.” அதனால், தீர்க்கதரிசிக்கு சாப்பிட கொடுக்கும் அளவுக்கு தன்னிடம் உணவு இல்லையே என்று யோசிக்கிறாள், இதை அவரிடம் சொல்கிறாள்.—1 இரா. 17:8-12.
2 ஆனாலும், ‘நீ போய் . . . முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா’ என்று எலியா கூறுகிறார். “பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். . . . பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்’ என்கிறார்.
3 கொஞ்சநஞ்சம் இருந்த அந்த உணவை அவருக்குக் கொடுப்பதா வேண்டாமா என்பதைவிட சிக்கலான ஒரு தீர்மானத்தை அவள் எடுக்க வேண்டியிருந்தது. இப்போது, தன்னையும் தன் மகனையும் கடவுள் காப்பாற்றுவார் என்பதில் நம்பிக்கை வைப்பாளா, அல்லது கடவுளுடைய அங்கீகாரத்தையும் நட்பையும்விட தன்னுடைய வயிற்றுப்பாட்டுக்கே முதலிடம் கொடுப்பாளா? இதுபோன்ற கேள்விதான் நம் எல்லாருக்கும் முன்னால் இருக்கிறது. கடவுளுடைய அங்கீகாரத்தைவிட அன்றாட தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்போமா? கடவுள்மீது நம்பிக்கை வைப்பதற்கும் அவரைச் சேவிப்பதற்கும் நமக்கு நல்ல காரணம் இருக்கிறது. அவரைத் தேடுவதற்கும் அவரது அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் நாம் எடுக்க வேண்டிய சில படிகள் இருக்கின்றன.
‘வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்’
4 யெகோவாவுக்குப் பிரியமான முறையில் அவரை வணங்க வேண்டுமென மனிதரிடம் அவர் எதிர்பார்ப்பதற்கு உரிமை இருக்கிறது. “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையையும் மாண்பையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்; ஏனென்றால், நீங்களே எல்லாவற்றையும் படைத்தீர்கள், உங்களுடைய சித்தத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று அவரது பரலோக ஊழியர்கள் ஒருமிக்கச் சொன்னார்கள். (வெளி. 4:11) யெகோவாவே நம் படைப்பாளர் என்பதால் அவரே நம் வணக்கத்திற்குத் தகுதியானவர்.
5 நாம் யெகோவாவைச் சேவிப்பதற்கு மற்றொரு காரணம் அவர் நம்மீது வைத்திருக்கும் ஈடற்ற அன்பு. “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 1:27) சுயமாய் சிந்தித்துத் தீர்மானம் எடுக்கிற உரிமையையும் திறமையையும் மனிதனுக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். யெகோவா நமக்கு உயிர் கொடுத்ததால் மனிதகுலத்தின் தகப்பன் ஆனார். (லூக். 3:38) ஒரு நல்ல தகப்பன் தனது பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பது போல, வாழ்க்கையை அனுபவித்து மகிழ தேவையான எல்லாவற்றையும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் “சூரியனை உதிக்கப்பண்ணி,” “மழையைப் பெய்யப்பண்ணுகிறார்”; அதனால் இந்தப் பூமி அமோக விளைச்சல் தருகிறது, அழகாகவும் காட்சி அளிக்கிறது.—மத் 5:45.
6 பாவத்தின் படுமோசமான பாதிப்புகளிலிருந்தும் யெகோவா நம்மை காப்பாற்றியிருக்கிறார். ஆதாம் பாவம் செய்து ஒரு சூதாட்டக்காரனாக மாறினான், சூதாடுவதற்காகத் தன் வீட்டிலிருந்து திருடி குடும்பத்தைத் தவிக்க விடும் ஒருவனைப் போல் மாறினான். யெகோவாவுக்கு விரோதமாய் கலகம் செய்து தன்னுடைய பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை, அதாவது நித்திய சந்தோஷத்தை, பறித்துவிட்டான். அவனுடைய சுயநலத்தினால் அபூரணம் எனும் கொடிய எஜமானுக்கு மனிதகுலம் அடிமையானது. இதனால், மனிதர் எல்லாரும் வியாதியில் கஷ்டப்படுகிறார்கள், வேதனையில் வாடுகிறார்கள், கடைசியில் செத்துப்போகிறார்கள். ஓர் அடிமையை விடுதலை செய்ய அவனுக்குரிய விலையைக் கொடுக்க வேண்டும். அதுபோல், பாவத்தின் பயங்கரமான விளைவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்ற யெகோவா அதற்குரிய விலையைக் கொடுத்தார். (ரோமர் 5:21-ஐ வாசியுங்கள்.) தம் தகப்பனுடைய சித்தத்திற்கு இசைவாக, இயேசு கிறிஸ்துவும் ‘அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுத்தார்.’ (மத். 20:28) அந்த மீட்புவிலையினால் வரும் எல்லா நன்மைகளும் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுகிறவர்களுக்கு வெகு சீக்கிரத்தில் கிடைக்கும்.
7 மகிழ்ச்சியுள்ள வாழ்க்கையை... நோக்கமுள்ள வாழ்க்கையை... நமக்குத் தருவதற்காக வேறு எவரையும்விட நிறைய செய்திருப்பவர் நமது படைப்பாளர் யெகோவா மட்டுமே. அவருடைய அங்கீகாரம் நமக்கு இருப்பதால், மனிதகுலத்திற்கு இழைக்கப்பட்டுள்ள நாசகரமான எல்லா விளைவுகளையும் அடியோடு மாற்றிப்போட அவர் எப்படிச் செயல்படுகிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ‘தம்மை ஊக்கமாக நாடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்’ என்பதை நாம் தனிப்பட்ட விதத்தில் ருசித்துப் பார்க்க யெகோவா நமக்குத் தொடர்ந்து உதவி செய்வார்.—எபி. 11:6.
‘உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை அளிப்பார்கள்’
8 கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவது சுயமாய்த் தீர்மானம் எடுக்கும் உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. ஏனென்றால், தம்மை வணங்கச் சொல்லி யெகோவா யாரையும் வற்புறுத்துவதில்லை. ஏசாயாவின் காலத்தில் கடவுள் இப்படிக் கேட்டார்: “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்.” சுயமாய் தீர்மானிக்கும் உரிமை ஏசாயாவுக்கு இருந்ததை யெகோவா மதித்தார். “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று பதிலளித்தபோது ஏசாயா அடைந்த திருப்தியைக் கற்பனை செய்துபாருங்கள்.—ஏசா. 6:8.
9 கடவுளை வழிபடவோ வழிபடாதிருக்கவோ மனிதருக்கு உரிமை இருக்கிறது. நாம் யெகோவாவை மனதார வழிபட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (யோசுவா 24:15-ஐ வாசியுங்கள்.) அரைமனதோடு கடவுளை வழிபடுகிறவர்கள் அவரைப் பிரியப்படுத்த முடியாது. மனிதரைப் பிரியப்படுத்துவதற்காகவே அவரை வழிபடுவோருடைய பக்தியையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். (கொலோ. 3:22) நாம் முழு இருதயத்தோடு பரிசுத்த சேவை செய்யாமல் உலக ஆசைகளுக்கு இடமளித்தால், கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது. (சங். 119:2) யெகோவாவை முழுமூச்சுடன் சேவிப்பது நம்முடைய நன்மைக்கே என்பதை அவர் அறிந்திருக்கிறார். அதனால்தான், ஜீவனைத் தேர்ந்தெடுப்பதற்கு ‘யெகோவாவில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்ளுங்கள்’ என்று இஸ்ரவேலருக்கு மோசே அறிவுறுத்தினார்.—உபா. 30:19, 20.
10 பண்டைய இஸ்ரவேலின் ராஜா தாவீது இவ்வாறு பாடினார்: ‘உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமாய்த் தங்களை அளிப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.’ (சங். 110:3) இன்று அநேகர் பணத்துக்கும் பொழுதுபோக்குக்கும் முதலிடம் கொடுக்கிறார்கள். ஆனால், யெகோவாவை நேசிக்கிறவர்கள் எல்லாவற்றையும்விட பரிசுத்த சேவைக்கே முதலிடம் தருகிறார்கள். அவர்கள் பக்திவைராக்கியத்தோடு நற்செய்தியை அறிவிப்பதிலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். தங்களுடைய அன்றாட தேவைகளை யெகோவா பூர்த்தி செய்வார் என்பதில் அவர்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.—மத். 6:33, 34.
கடவுள் அங்கீகரிக்கும் பலிகள்
11 இஸ்ரவேலர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து வந்த காலத்தில், கடவுளுடைய தயவைச் சம்பாதிக்க அவர் அங்கீகரிக்கும் பலிகளைச் செலுத்தி வந்தார்கள். லேவியராகமம் 22:29-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “கர்த்தருக்கு ஸ்தோத்திர பலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் [அதாவது அவருடைய அங்கீகாரத்தைப் பெற] அதைச் செலுத்துவீர்களாக.” இஸ்ரவேலர் பலிபீடத்தில் தகுந்த மிருக பலிகளைச் செலுத்தியபோது மேலெழுந்த புகை உண்மைக் கடவுளான யெகோவாவுக்குச் ‘சுகந்த வாசனையைப்’ போல் இருந்தது. (லேவி. 1:9, 13) தமது மக்கள் காட்டிய அத்தகைய அன்பினால் அவர் புத்துணர்ச்சி அடைந்தார். (ஆதி. 8:21, NW அடிக்குறிப்பு.) பலி செலுத்தும் விஷயத்தில் திருச்சட்டத்திலிருந்து இன்றைக்கு நமக்கும் பொருந்துகிற ஒரு நியமத்தை நாம் தெரிந்துகொள்ளலாம். யெகோவாவுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துகிறவர்கள் அவருடைய அங்கீகாரத்தைப் பெறுவார்கள். எப்படிப்பட்ட பலிகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்? வாழ்க்கையின் இரண்டு அம்சங்களை, அதாவது நம்முடைய நடத்தையையும் பேச்சையும், பற்றிச் சிந்தித்துப் பார்க்கலாம்.
12 ரோமருக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களுடைய உடலை உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள்; சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி அவருக்குப் பரிசுத்த சேவை செய்யுங்கள்.” (ரோ. 12:1) கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற ஒருவர் தன் உடலை அவருக்குப் பிரியமானதாக வைத்துக்கொள்ள வேண்டும். புகையிலை, பாக்கு, போதைப்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அல்லது மதுபான துஷ்பிரயோகம் செய்து தன்னைக் கறைபடுத்திக் கொண்டால் அந்தப் பலி பரிசுத்தமானதாக இருக்காது. (2 கொ. 7:1) அதோடு, ‘பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்’; ஆகவே, எந்தவொரு ஒழுக்கங்கெட்ட நடத்தையிலும் ஈடுபடுகிறவனுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பாய் இருக்கும். (1 கொ. 6:18) கடவுளைப் பிரியப்படுத்த ஒருவர் தன்னுடைய ‘நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க’ வேண்டும்.—1 பே. 1:14-16.
13 யெகோவாவுக்குப் பிரியமுள்ள மற்றொரு பலி நம்முடைய பேச்சு. யெகோவாவை நேசிப்பவர்கள் எப்போதும் அவரைப் பற்றி வீட்டிலும் வெளியிலும் புகழ்ந்து பேசுகிறார்கள். (சங்கீதம் 34:1-3-ஐ வாசியுங்கள்.) சங்கீதம் 148-150-ஐ வாசித்து, யெகோவாவைத் துதிக்க அவை திரும்பத் திரும்ப நம்மை உற்சாகப்படுத்துவதைக் கவனியுங்கள். ஆம், “துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.” (சங். 33:1) நமக்கு முன்னுதாரணமாக விளங்கும் இயேசு கிறிஸ்துவும் நற்செய்தியை அறிவித்து கடவுளைத் துதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டினார்.—லூக். 4:18, 43, 44.
14 பக்திவைராக்கியத்தோடு பிரசங்கிக்கும்போது யெகோவாமீது அன்பு வைத்திருப்பதைக் காட்டுகிறோம், அவருடைய அங்கீகாரத்தைப் பெற ஆசைப்படுவதையும் காட்டுகிறோம். உதாரணமாக, பொய் வணக்கத்தில் ஈடுபட்டு கடவுளுடைய தயவை இழந்த இஸ்ரவேலருக்கு ஓசியா தீர்க்கதரிசி புத்திமதி கொடுத்த விதத்தைச் சிந்தித்துப் பாருங்கள். (ஓசி. 13:1-3) “[யெகோவாவே,] எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்” என்று மன்றாடும்படி ஓசியா அவர்களுக்குச் சொன்னார்.—ஓசி. 14:1, 2.
15 ஓர் இஸ்ரவேலன் யெகோவாவுக்குச் செலுத்திய பலிகளிலேயே விலை உயர்ந்தது காளைதான். ஆகவே, “உதடுகளின் காளை” என்பது உண்மைக் கடவுளுக்குப் புகழ்ச்சியாகச் சொல்லப்படும் உள்ளப்பூர்வமான வார்த்தைகளை... நன்கு சிந்தித்துச் சொல்லப்படும் வார்த்தைகளை... அர்த்தப்படுத்தியது. இத்தகைய பலிகளைச் செலுத்தியவர்களுக்கு யெகோவா எப்படிப் பலனளித்தார்? “அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்” என்று சொன்னார். (ஓசி. 14:4) இப்படிப்பட்ட துதியின் பலிகளைச் செலுத்தியவர்களுக்கு யெகோவா மன்னிப்பு வழங்கினார், அங்கீகாரம் அளித்தார், அவர்களுடன் நட்பு வைத்தார்.
16 யெகோவாவை வெளிப்படையாகத் துதிப்பது எப்போதும் உண்மை வழிபாட்டின் முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. யெகோவாவைத் துதிப்பதை சங்கீதக்காரன் மிக முக்கியமாய்க் கருதினார்; அதனால்தான், “நான் மனமுவந்து வாயார உம்மைப் புகழ்வதை ஆண்டவரே! தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடினார். (சங். 119:108, பொது மொழிபெயர்ப்பு) நம்முடைய நாளைப் பற்றியென்ன? நம்முடைய நாளில் கூடிவரும் திரளான மக்களைப் பற்றி ஏசாயா இவ்வாறு முன்னுரைத்தார்: ‘கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள். . . . [அவர்களுடைய காணிக்கைகள்] அங்கீகரிக்கப்பட்டதாய் [கர்த்தரின்] பலிபீடத்தின்மேல் ஏறும்.’ (ஏசா. 60:6, 7) இதன் நிறைவேற்றமாய், லட்சோபலட்சம் மக்கள் ‘கடவுளுக்கு எப்போதும் உதடுகளின் கனியைப் பலி செலுத்துகிறார்கள்; அதாவது, கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் அறிவிப்பதன் மூலம் அவருக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துகிறார்கள்.’—எபி. 13:15.
17 உங்களைப் பற்றியென்ன? நீங்கள் கடவுளுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துகிறீர்களா? இல்லையென்றால், தேவையான மாற்றங்கள் செய்து யெகோவாவை வெளிப்படையாகத் துதிக்க ஆரம்பிப்பீர்களா? நற்செய்தியை விசுவாசத்தோடு அறிவிக்கும்போது, உங்கள் பலி ‘காளையெருதைப் பார்க்கிலும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.’ (சங்கீதம் 69:30, 31-ஐ வாசியுங்கள்.) உங்களுடைய துதியின் பலியாகிய “சுகந்த வாசனை” யெகோவாவைச் சென்றெட்டும் என்றும் உங்களுக்கு தமது அங்கீகாரத்தை அவர் வழங்குவார் என்றும் உறுதியோடிருங்கள். (எசே. 20:41) அப்போது நீங்கள் அனுபவிக்கும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.
‘யெகோவா நீதிமானை ஆசீர்வதிப்பார்’
18 மல்கியாவின் காலத்தில் வாழ்ந்த சிலரைப் போல, ‘தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினால் . . . என்ன பிரயோஜனம்?’ என்று இன்றும் பலர் நினைக்கிறார்கள். (மல். 3:14) அவர்களுக்குப் பண ஆசை இருப்பதால், கடவுளுடைய நோக்கமெல்லாம் நிறைவேறாது, அவருடைய சட்டங்கள் நம் காலத்துக்கு ஒத்துவராது என்று நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, நற்செய்தியைப் பிரசங்கிப்பதெல்லாம் ஒரு வீணான வேலை, தொல்லை பிடித்த வேலை.
19 இதுபோன்ற கருத்துகள் ஏதேன் தோட்டத்திலேயே ஆரம்பித்துவிட்டன. யெகோவா கொடுத்த அற்புதமான வாழ்வை உதறித்தள்ள... அவருடைய அங்கீகாரத்தை நிராகரிக்க... ஏவாளைத் தூண்டியது சாத்தானே. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்ற எண்ணத்தைத்தான் இன்றும் மக்களுடைய மனதில் சாத்தான் விதைத்து வருகிறான். ஆனால், கடவுளுடைய தயவை இழப்பதால் வாழ்க்கையே பாழாகிவிடும் என்பதை ஆதாமும் ஏவாளும் அனுபவத்தில் கண்டார்கள். அவர்களுடைய கெட்ட முன்மாதிரியைப் பின்பற்றும் அனைவரும் அதே கசப்பான உண்மையை விரைவில் உணர்ந்துகொள்வார்கள்.—ஆதி. 3:1-7, 17-19.
20 ஆதாம் ஏவாளுக்கு ஏற்பட்ட சோக முடிவையும், எலியாவுக்கும் சாறிபாத் விதவைக்கும் கிடைத்த நல்ல பலன்களையும் சிந்தித்துப் பாருங்கள். எலியா சொன்ன உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அந்த விதவை முதலில் தீர்க்கதரிசிக்கு அப்பம் சுட்டுப் பரிமாறினாள். பின்பு எலியா மூலம் சொன்ன வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார். ஆம், ‘அவளும், இவரும், அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள். யெகோவா எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை’ என்று வாசிக்கிறோம்.—1 இரா. 17:15, 16.
21 இன்று கோடிக்கணக்கான மக்களில் வெகு சிலரே அந்த சாறிபாத் விதவையைப் போல செய்கிறார்கள். அவள் இரட்சிப்பின் தேவன்மீது முழு நம்பிக்கை வைத்தாள், அவரும் அவளைக் கைவிடவில்லை. பைபிளிலுள்ள இதுபோன்ற உதாரணங்கள் யெகோவா நம் நம்பிக்கைக்குத் தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. (யோசுவா 21:43-45; 23:14-ஐ வாசியுங்கள்.) அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றவர்களை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை நவீனகால சாட்சிகளின் அனுபவங்களும் காட்டுகின்றன.—சங். 34:6, 7, 17-19.
22 “பூமியெங்கும் குடியிருக்கிற அனைவர்மீதும்” கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள் சீக்கிரத்தில் வரப்போகிறது. (லூக். 21:34, 35) அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. கடவுளால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதி நமக்குக் கொடுக்கிற அழைப்பைக் கவனியுங்கள்: “என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.” இதற்கு முன்னால் பணமோ பொருளோ எதுவுமே ஈடாகாது. (மத். 25:34) ஆம், ‘யெகோவாவே, நீதிமானை ஆசீர்வதித்து, [அங்கீகாரம்] என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வார்.’ (சங். 5:12) ஆகவே, நாம் கடவுளுடைய அங்கீகாரத்தைத் தேட வேண்டாமா?
யெகோவா உங்கள் செயல்களைக் கவனிக்கிறாரா?
இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? ‘மோசே, கிதியோன், தாவீது போன்றவர்கள் செய்ததையெல்லாம் கடவுள் கவனித்தார் என்று தெரியும், ஆனால் நான் செய்வதை அவர் கவனிக்கிறாரா என தெரியாது. நான் செய்வதை அவர் கவனிக்கிறதற்கு நான் ஒன்றும் மோசேயோ, கிதியோனோ, தாவீதோ இல்லையே’ என அநேகர் சொல்லலாம்.
பைபிள் காலங்களில், விசுவாசமுள்ள நபர்கள் சிலர் விசுவாசத்தை வெளிக்காட்டும் அசாத்தியமான அருஞ்செயல்களை செய்தார்கள் என்பது உண்மைதான். அவர்கள் ‘ராஜ்யங்களை ஜெயித்தார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள்.’ (எபிரெயர் 11:33, 34) ஆனால் மற்றவர்கள் இந்தளவுக்கு விசுவாசத்தை வெளிக்காட்டாவிட்டாலும் அவர்களுடைய விசுவாச செயல்களைக் கடவுள் கவனித்தார் என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. உதாரணமாக, ஒரு மேய்ப்பன், ஒரு தீர்க்கதரிசி, ஒரு விதவை ஆகியோரின் முன்மாதிரிகளை பைபிளிலிருந்து பார்க்கலாம்.
ஒரு மேய்ப்பன் செலுத்தும் பலி
ஆதாம் ஏவாளின் இரண்டாவது மகனாகிய ஆபேலைப் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்? அவர் உயிர்த்தியாகியாக மரித்தது உங்கள் நினைவுக்கு வரலாம், ஒருவேளை நம்மில் சிலருக்கே அப்படிப்பட்ட மரணம் நேரிடலாம். ஆனால் முதலில் கடவுள் வேறொரு காரணத்திற்காக ஆபேலை கவனித்தார்.
ஒருநாள் தன் மந்தையில் கொழுகொழுவென இருந்த சில ஆடுகளைத் தேர்ந்தெடுத்து கடவுளுக்கு பலி செலுத்தினார் ஆபேல். அவர் செலுத்திய பலி இன்றைக்கு நமது கண்ணோட்டத்தில் சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால் யெகோவா அதைக் கவனித்தார், அதை அங்கீகரித்தார். என்றாலும், கவனித்ததோடு விட்டுவிடவில்லை. சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, எபிரெயர் என்ற புத்தகத்தில் அதை எழுதும்படி அப்போஸ்தலன் பவுலை யெகோவா வழிநடத்தினார். அத்தனை வருடங்கள் உருண்டோடியும் அந்த சாதாரண பலியை கடவுள் மறக்கவே இல்லை!—எபிரெயர் 6:10; 11:4.
எப்படிப்பட்ட பலியை செலுத்த வேண்டுமென ஆபேல் எப்படித் தீர்மானித்தார்? அதைப் பற்றி பைபிள் ஏதும் சொல்லாவிட்டாலும், அவர் தீர்க்கமாக யோசித்தே தீர்மானித்திருப்பார். அவர் ஒரு மேய்ப்பர், எனவே தன் மந்தையிலிருந்து சிலவற்றை பலி செலுத்தியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் ‘கொழுமையானவற்றை,’ அதாவது மிகச் சிறந்தவற்றை பலி செலுத்தினார் என்பதைக் கவனியுங்கள். (ஆதியாகமம் 4:4) “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்திடம் யெகோவா சொன்ன வார்த்தையைக் குறித்து அவர் தியானித்திருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. (ஆதியாகமம் 3:15; வெளிப்படுத்துதல் 12:9) அந்த “ஸ்திரீ” யார், அவள் “வித்து” யார் என்பது புரியாதிருந்தாலும் அந்த ஸ்திரீயினுடைய வித்துவின் ‘குதிங்கால் நசுக்கப்படுவதற்கு’ இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்பதை ஆபேல் புரிந்துகொண்டிருக்கலாம். சுவாசிக்கிற, உயிருள்ள ஒன்றை பலி செலுத்துவதைவிட வேறெதுவும் சிறந்ததாக இருக்க முடியாது என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருந்தார். எப்படியிருந்தாலும், அவர் செலுத்திய பலி உண்மையில் வெகு பொருத்தமானதே.
ஆபேலைப் போலவே கிறிஸ்தவர்களும் இன்று கடவுளுக்குப் பலி செலுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மந்தையிலுள்ள தலையீற்றுகளை செலுத்துவதில்லை; ஆனால், “[கடவுளுடைய] நாமத்தைத் துதிக்கும் [“வெளிப்படையாக அறிவிக்கும்,” NW] உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை” செலுத்துகிறார்கள். (எபிரெயர் 13:15) நம் விசுவாசத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுகையில் நம் உதடுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றன.
உங்கள் துதியின் பலி இன்னும் தரமானதாக இருக்க வேண்டுமென நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால், உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பற்றி கவனமாக யோசித்துப் பாருங்கள். அவர்கள் எதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிறார்கள்? அவர்களுக்கு எதிலெல்லாம் ஈடுபாடு இருக்கிறது? பைபிள் செய்தியின் எந்தெந்த அம்சங்கள் அவர்கள் மனதைக் கவரும்? ஊழியம் செய்யும்போது ஒவ்வொரு வீட்டிலும் நீங்கள் பேசிய விதத்தை பகுத்தாராய்ந்து இன்னும் எப்படி சிறப்பாக முன்னேற்றம் செய்யலாம் என யோசித்துப் பாருங்கள். யெகோவாவைப் பற்றி பேசுகையில் அதிக நம்பிக்கையுடனும் இருதயத்திலிருந்தும் பேசுங்கள். உங்கள் பலி உண்மையிலேயே ‘ஸ்தோத்திர பலியாக’ இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
செவிகொடுக்காதவர்களிடம் பிரசங்கிக்கும் ஒரு தீர்க்கதரிசி
இப்போது தீர்க்கதரிசியாகிய ஏனோக்கை குறித்து சிந்திப்போம். அந்த சமயத்தில் அவர் மட்டுமே யெகோவா தேவனுக்கு சாட்சியாக இருந்திருக்கலாம். ஏனோக்கைப் போல, உங்கள் குடும்பத்தில் நீங்கள் மட்டுமே தன்னந்தனியாக யெகோவாவை உண்மையுடன் சேவித்து வருகிறீர்களா? பள்ளியில் அல்லது வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மட்டுமே பைபிள் நியமங்களைப் பின்பற்றுகிறவரா? அப்படியானால், நீங்கள் தொல்லைகளை எதிர்ப்படலாம். கடவுளுடைய சட்டங்களை மீறி நடக்கும்படி நண்பர்கள், சொந்தபந்தங்கள், சக மாணவர்கள் அல்லது சக ஊழியர்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். “நீ என்ன செய்கிறாய் என யாருக்கும் தெரியவே தெரியாது. நாங்களும் யார் கிட்டேயும் மூச்சுவிட மாட்டோம்” என அவர்கள் சொல்லலாம். நீங்கள் என்ன செய்தாலும் அதைப் பற்றி கடவுளுக்குக் கவலை கிடையாது என்றும், எனவே பைபிளின் ஒழுக்க தராதரங்களைக் குறித்து நீங்கள் கவலைப்படுவது முட்டாள்தனம் என்றும் அவர்கள் அழுத்தம் திருத்தமாக வாதாடலாம். அவர்களைப் போல் நீங்கள் சிந்திப்பதில்லை, அவர்களைப் போல் நீங்கள் நடந்துகொள்வதில்லை என்பதைப் பார்க்கையில் அவர்களுக்கு கோபம் கோபமாக வரலாம்; உங்கள் உறுதியைக் குலைக்க தங்களால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வதென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கலாம்.
அப்படிப்பட்ட தொல்லைகளை சமாளிப்பது லேசுப்பட்ட விஷயமல்ல என்பது உண்மைதான்; ஆனாலும் அது முடியாத காரியமல்ல. ஆதாமிலிருந்து ஏழாவது தலைமுறையில் வந்த ஏனோக்கை எடுத்துக்கொள்ளுங்கள். (யூதா 14) ஏனோக்கு பிறந்த காலத்தில் பெரும்பாலான மக்களிடம் ஒழுக்கநெறியின் உணர்வுகள் எல்லாம் மரத்துப்போயிருந்தன. அவர்கள் பேச்சை காதுகொடுத்து கேட்க முடியவில்லை. அவர்கள் நடத்தை ‘அதிர்ச்சி அளித்தது.’ (யூதா 15, NW) இன்றுள்ள பெரும்பாலோரைப் போலவே அவர்கள் நடந்துகொண்டார்கள்.
ஆனால் இந்நிலையை ஏனோக்கு எப்படி சமாளித்தார்? அதற்கான பதில் இன்று நமக்கும் ஆர்வத்துக்குரியதாக உள்ளது. அன்று வாழ்ந்தவர்களில் ஏனோக்கு மட்டுமே யெகோவாவை வணங்குபவராக இருந்தார், ஆனாலும் அவர் தன்னந்தனியாக இல்லை. ஏனோக்கு கடவுளுடன் நடந்தார்.—ஆதியாகமம் 5:22, NW.
கடவுளுக்குப் பிரியமானதை செய்ய வேண்டும் என்பதிலேயே ஏனோக்கு குறியாக இருந்தார். கடவுளுடன் நடப்பதற்கு, சுத்தமாக, நெறி பிறழாமல் வாழ்ந்தால் மட்டும் போதாது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் பிரசங்கிக்கும்படி யெகோவா எதிர்பார்த்தார். (யூதா 14, 15) ஜனங்களுடைய தேவ பக்தியற்ற செயல்களைக் கடவுள் கண்டும் காணாதவர்போல் இல்லை என்பதைக் குறித்து அவர்களிடம் எச்சரிக்க வேண்டிருந்தது. 300-க்கும் அதிக ஆண்டுகள் ஏனோக்கு கடவுளுடன் நடந்தார்; நம்மில் எவரும் சகித்திருக்கும் காலத்துடன் ஒப்பிட அது வெகு அதிக காலம். அவர் இறக்கும் வரை தொடர்ந்து கடவுளுடன் நடந்தார்.—ஆதியாகமம் 5:23, 24, NW.
ஏனோக்கைப் போலவே பிரசங்கிக்கும்படி நம்மிடமும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 24:14) வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதோடு, உற்றார் உறவினர்கள், தொழில் ரீதியாக அறிமுகமானவர்கள், சக மாணவர்கள் என எல்லாரிடமும் நற்செய்தியை அறிவிக்க முயலுகிறோம். ஆனால் சில சமயங்களில் தைரியமாக சாட்சி கொடுக்க தயங்கலாம். நீங்களும் அப்படித்தானா? கவலைப்படாதீர்கள். ஆரம்ப கால கிறிஸ்தவர்களைப் பின்பற்றுங்கள், தைரியத்தைத் தரும்படி கடவுளிடம் ஜெபியுங்கள். (அப்போஸ்தலர் 4:29, 30) நீங்கள் கடவுளுடன் நடக்கும்வரை உண்மையில் நீங்கள் தன்னந்தனியாகவே இல்லை என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.
உணவளிக்கும் ஒரு விதவை
பைபிளில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு விதவை எளிய உணவைத் தயாரித்து கொடுத்ததற்காக இரண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! அவள் ஓர் இஸ்ரவேல பெண் அல்ல, ஆனால் அவள் பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டில் சாறிபாத் என்ற நகரத்தில் வாழ்ந்த புறதேசத்தாள். நீண்ட காலம் வாட்டி வதைத்த வறட்சியும் பஞ்சமும் முடிவடையவிருந்த அந்த சமயத்தில் இந்த விதவையிடமிருந்த உணவுப் பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்தே போய்விட்டன. அவளுக்கும் அவளுடைய மகனுக்கும் கடைசியாக ஒருவேளை சாப்பாட்டுக்கு ஒருபிடி மாவும், துளி எண்ணெய்யுமே மிச்சம் இருந்தன.
இந்த சூழ்நிலையில் அந்த உணவையும் பங்கு போட்டுக்கொள்ள ஒரு விருந்தாளி வந்து சேர்ந்தார். அவர்தான் கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எலியா. அவள் கைவசம் இருந்த உணவு கைப்பிடி மட்டுமே; அது அவளுக்கும் அவளுடைய மகனுக்குமே போதாது, அப்படியிருக்க விருந்தாளிக்குக் கொடுக்க அவள் எங்கு போவாள்! ஆனால் அவள் அந்த உணவை தன்னுடன் பகிர்ந்துகொண்டால் இனி அவளும் அவளுடைய மகனும் பட்டினியில் வாட வேண்டியிருக்காது என்று கடவுளுடைய வார்த்தையின் பேரில் எலியா உறுதியளித்தார். புறதேசத்தாளாக இருந்த தன்னை இஸ்ரவேலின் தேவன் கவனிப்பார் என்பதை நம்புவதற்கு அந்த விதவைக்கு விசுவாசம் தேவைப்பட்டது. ஆனால் அவள் எலியாவின் வார்த்தைகளை நம்பினாள், யெகோவா அவளை ஆசீர்வதித்தார். “கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை.” பஞ்ச காலம் முடியும் வரை அந்தப் பெண்ணும் அவளுடைய மகனும் சாப்பிட உணவிருந்தது.—1 இராஜாக்கள் 17:8-16.
மேலும் இன்னொரு ஆசீர்வாதத்தையும் அந்த விதவை பெறவிருந்தாள். அந்த அற்புதம் நிகழ்ந்து கொஞ்ச காலத்திற்குப் பின் அவளுடைய உயிருக்குயிரான மகன் வியாதிப்பட்டு, இறந்துபோனான். அவள்மீது எலியா இரக்கப்பட்டார், அவளுடைய மகனை உயிரோடு எழுப்பும்படி யெகோவாவிடம் கெஞ்சி மன்றாடினார். (1 இராஜாக்கள் 17:17-24) அவர் வேண்டிக்கொண்டது நிறைவேற நிகரற்ற ஓர் அற்புதச் செயல் நிகழ வேண்டியிருந்தது. அதற்கு முன்பு யாரும் உயிர்த்தெழுப்பப்பட்டதாக சரித்திரமில்லை! அந்த புறதேசத்தாளான விதவைக்கு யெகோவா மீண்டும் இரக்கம் காட்டினாரா? காட்டினார். எலியா அந்தப் பையனை உயிரோடு எழுப்ப யெகோவா அவருக்கு சக்தி அளித்தார். ஆசீர்வாதத்தைப் பெற்ற இந்தப் பெண்ணைப் பற்றி இயேசு பின்னொரு முறை குறிப்பிட்டார்: “இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டா[ர்].”—லூக்கா 4:25, 26.
தொழில் ரீதியாக முன்னேற்றம் கண்ட நாடுகளிலும் இன்று பொருளாதார நிலை ஸ்திரமானதாக இல்லாமல் ஆட்டம் காண்கிறது. சில பெரிய நிறுவனங்கள் காலம்காலமாக உண்மையுடன் வேலை செய்த ஊழியர்களை வேலையிலிருந்து விலக்கியிருக்கின்றன. வேலையில்லாமல் போய்விடுமோ என்ற பயத்தில் ஒரு கிறிஸ்தவர் அதிக நேரம் வேலை செய்ய தூண்டப்படலாம்; அப்படி செய்தால் அந்த நிறுவனம் தொடர்ந்து தன்னை வேலையில் வைத்துக்கொள்ளும் என நினைக்கலாம். இப்படி பாடுபடுகையில் கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போவதற்கு, வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு, அல்லது உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் தன் குடும்பத்தாருக்குத் தேவையானதைக் கவனிப்பதற்கு நேரம் கிடைப்பது கஷ்டமாக இருக்கலாம். எனினும், எக்காரணத்தைக் கொண்டும் அந்த வேலையை இழந்துவிடக் கூடாது என்பதில் அவர் விடாப்பிடியாக இருக்கலாம்.
இந்தளவுக்குப் பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் கிறிஸ்தவர் கவலைப்படுவது நியாயம்தான். ஏனெனில் இப்போதெல்லாம் வேலை கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாக உள்ளது. நம்மில் பெரும்பாலோர் கோடீஸ்வரராக ஆசைப்படுவதில்லை, ஆனால் சாறிபாத்திலிருந்த விதவையைப் போல வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பெற்றிருக்க ஆசைப்படுகிறோம். எனினும், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என கடவுள் சொன்னதை அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். ‘[யெகோவா] எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்’ என நாம் நம்பிக்கையுடன் சொல்லலாம். (எபிரெயர் 13:5, 6) அந்த வாக்குறுதியில் பவுல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார், யெகோவா எப்போதும் அவரைக் காத்து வந்தார். நாமும் அவரைவிட்டு விலகாதிருந்தால் அவர் நம்மையும் அதே போல் காத்தருள்வார்.
மோசே, கிதியோன், தாவீது போன்ற ஆவிக்குரிய நபர்களைப் போல நம்மால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என ஆதங்கப்படலாம். ஆனால் அவர்களைப் போல நம்மால் விசுவாசமுள்ளவர்களாக இருக்க முடியும். ஆபேல், ஏனோக்கு, சாறிபாத் ஊர் விதவை ஆகியோர் தங்கள் விசுவாசத்தை எளிய செயல்களில் வெளிக்காட்டியதை நினைவில் வைக்கலாம். சின்னஞ்சிறிய செயலாக இருந்தாலும் விசுவாசத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு செயலையும் யெகோவா கவனிக்கிறார். தோழர்கள் தரும் போதைப் பொருட்களை கடவுள் பயமுள்ள மாணவன் வாங்க மறுக்கிறான், வேலை செய்யும் இடத்தில் ஒழுக்கக்கேடாக நடந்துகொள்ள கிடைக்கும் “அழைப்பை” ஒரு கிறிஸ்தவர் புறக்கணிக்கிறார், சோர்வும் உடல்நல குறைவும் வாட்டி வதைக்கையில் வயதான கிறிஸ்தவர் உண்மையுடன் சபைக் கூட்டங்களுக்கு வருகிறார்; இதையெல்லாம் யெகோவா பார்க்கிறார். பார்த்து சந்தோஷப்படுகிறார்!—நீதிமொழிகள் 27:11.
மற்றவர்களுடைய செயல்களைக் கவனிக்கிறீர்களா?
நாம் என்ன செய்கிறோம் என்பதை யெகோவா கவனிக்கிறார். ஆகவே கடவுளைப் போலவே மற்றவர்களின் முயற்சிகளை கவனிப்பதற்கு நாமும் கவனமாக இருக்க வேண்டும். (எபேசியர் 5:1) சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள, வெளி ஊழியத்தில் ஈடுபட, தங்கள் அன்றாட காரியங்களைச் செய்வதற்கும்கூட எப்படியெல்லாம் சக கிறிஸ்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை ஏன் நன்கு தெரிந்துகொள்ளக்கூடாது?
பிறகு, அவர்கள் படும் பிரயாசங்களையெல்லாம் நீங்கள் மனதார போற்றுகிறீர்கள் என்பதை யெகோவாவை வணங்கும் உங்கள் சக வணக்கத்தாருக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் அவற்றைக் கவனித்திருப்பது தெரிய வருகையில் அவர்கள் உள்ளூர குதூகலிப்பார்கள், யெகோவாவும் தங்களை கவனிக்கிறார் என்பதை நீங்கள் காட்டும் கரிசனை அவர்களுக்கு மேலும் உறுதிப்படுத்தும்.
அதிகாரம் 31
அந்நிய நாட்டில் அஞ்சாமல் பேசினாள்
w96 5/15 பக். 8 பாரா 3
தைரியத்துடன் பேசின ஒரு சிறுமி
ஒரு திடீர் தாக்குதலின்போது, “ஒரு சிறு பெண்” அவளுடைய பெற்றோரிடமிருந்து இரக்கமின்றி பிரித்து கொண்டுபோகப்பட்டாள். (2 இராஜாக்கள் 5:2) சீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டதும், ஒருவேளை அவள் அச்சமாக உணர்ந்த, முன்பின் தெரியாதவர்களுடன்—சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், மரங்களையும், செடிகளையும், கற்களையும்கூட வணங்கிய மக்களுடன்—வாழ கட்டாயப்படுத்தப்பட்டாள். ஒரே உண்மைக் கடவுளாகிய யெகோவாவை வணங்கிய அவளுடைய குடும்பத்தாரிலிருந்தும் நண்பர்களிலிருந்தும் எவ்வளவு வித்தியாசமானவர்களாக இருந்தனர் அவர்கள்! இருந்தபோதிலும், யெகோவாவின் வணக்கத்தைப் பொருத்தமட்டில், இந்த அந்நிய சூழலில்கூட இந்தப் பெண் குறிப்பிடத்தக்க தைரியத்தை வெளிக்காட்டினாள். அதன் விளைவாக, சீரியாவின் ராஜாவுக்குக்கீழ் சேவை செய்துகொண்டிருந்த ஒரு முக்கிய அதிகாரியின் வாழ்க்கையையே மாற்றினாள். எப்படி என்று நாம் பார்ப்போம்.
it “தொழுநோய்” பாரா. 3-5
தொழுநோய்
வகைகள் மற்றும் அதன் விளைவுகள். இன்று இருக்கும் தொழுநோய் அல்லது ஹான்சென் நோய் அவ்வளவாகப் பரவுவதில்லை. இந்த நோய் மூன்று வித்தியாசமான வகைகளில் அறிகுறிகளைக் காட்டுகின்றன. முதல் வகை, கணுக்கள் தொழுநோய். இந்த வகை தொழுநோய் வந்தவருடைய தோல் தடித்துவிடும், கட்டிகள் உருவாகும். முதலில் முகத்தில் இருக்கும் தோலிலும் பிறகு உடலின் மற்ற பகுதிகளிலும் கட்டிகள் உருவாகும். இந்த வகை தொழுநோய் இருப்பவர்களுக்கு, மூக்கிலும் தொண்டையிலும் உள்ள சளி உற்பத்தி செய்யும் திசுக்கள் படிப்படியாகச் செயலிழந்துவிடும். இதை கருப்பு (ப்ளாக்) தொழுநோய் என்றும் சொல்வார்கள். இன்னொரு வகை, மரத்துப்போக செய்யும் தொழுநோய். சிலசமயம் இதை வெண்குஷ்டம் அல்லது வெள்ளை தொழுநோய் என்றும் சொல்வார்கள். இது கருப்பு தொழுநோய் அளவுக்குப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. பெரும்பாலும், உடல் உறுப்புகளில் இருக்கும் நரம்புகளை இது பாதிக்கும். இந்தத் தொழுநோய்க்கான அறிகுறி தோலில் தெரியலாம். பாதிக்கப்பட்ட தோலில் வலி ஏற்படும். அதோடு, அந்தத் தோல் மரத்தும் போய்விடலாம். மூன்றாவது வகை தொழுநோயில் கருப்பு மற்றும் வெள்ளை தொழுநோய்களின் அறிகுறிகள் கலந்து வரும்.
தொழுநோயின் பாதிப்புகள் அதிகமாகி, அதன் கடைசி கட்டத்துக்கு போகும்போது, முதலில் உருவான வீக்கங்களிலிருந்து சீழ் வடியும். தலையிலும் புருவங்களிலும் உள்ள முடி கொட்டிவிடலாம். நகங்கள் அழுகி, கடைசியில் விழுந்துவிடலாம். பிறகு, விரல்கள், கைகால்கள், மூக்கு அல்லது கண்கள் போன்றவற்றை இந்த நோய் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடலாம். கடைசியில், நோய் ரொம்ப தீவிரமாக ஆகும்போது, பாதிக்கப்பட்டவர் இறந்தே போய்விடுவார். இந்த மாதிரி ஒரு “தொழுநோயை” பற்றித்தான் பைபிளும் சொல்கிறது என்பதை ஆரோனின் வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். அந்த நோய் அவ்வளவு மோசமாக இருந்ததால்தான் மிரியாமின் உடல் ‘பாதி அழுகிப்போய்’ இருந்தது என்று அவர் சொன்னார்.—எண் 12:12.
பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கொடிய நோய் எவ்வளவு மோசமானது என்பதை இந்த விவரிப்புகளிலிருந்து ஒருவரால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். யெகோவாவின் ஆலயத்தில் உசியா அகம்பாவத்தோடு தூபம் காட்டியதால் வந்த விளைவு எவ்வளவு மோசமானது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.—2ரா 15:5; 2நா 26:16-23.
இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
5:15, 16—நாகமான் கொடுத்த காணிக்கையை எலிசா ஏன் வாங்கவில்லை? நாகமானை யெகோவாவின் வல்லமையினால் அற்புதமாகச் சுகப்படுத்தினாரே தவிர, தன்னுடைய வல்லமையினால் அல்ல என்பதை எலிசா அறிந்திருந்தார். அதனால்தான் அந்தக் காணிக்கையை அவர் வாங்க மறுத்தார். கடவுள் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பது அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயமாக இருந்திருக்கும். உண்மை கிறிஸ்தவர்கள், யெகோவாவின் சேவையிலிருந்து தங்களுக்கு ஆதாயம் தேடிக்கொள்ள முயலுவதில்லை. அவர்கள் இயேசு கொடுத்த இந்த அறிவுரைக்குக் கவனம் செலுத்துகிறார்கள்: “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.”—மத்தேயு 10:8.
இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
5:18, 19—மத சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபட வேண்டியிருந்ததால் தன்னை மன்னிக்கும்படியாகவா நாகமான் கேட்டார்? சீரிய ராஜா வயதானவராயும் பலவீனராயும் இருந்ததால் அவருக்கு நாகமான் கைலாகு கொடுக்க வேண்டியிருந்தது. ரிம்மோன் எனும் தெய்வத்தை ராஜா பணிந்து வணங்குகையில் நாகமானும் தலைக் குனிந்தார். அத்தெய்வத்தை வணங்குவதற்காக நாகமான் குனியவில்லை, மாறாக, ராஜாவின் உடலைத் தாங்கிப் பிடிப்பதற்காகவே அவ்வாறு குனிந்தார். ராஜாவுக்கு இந்தப் பணியைச் செய்ததற்காக தன்னை மன்னிக்கும்படியே யெகோவாவிடம் அவர் கேட்டார். நாகமான் சொன்னதை நம்பியதால்தான் “சமாதானத்தோடே போ” என்று அவரிடம் எலிசா சொன்னார்.
w13 8/1 பக். 10
பைபிளில் ஏன் சிலருடைய பெயர்கள் சொல்லப்படவில்லை?
பைபிளில் ரூத் புத்தகத்தில், திருச்சட்டத்தின்படி செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் போன ஒருவனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவனை வெறுமனே ‘அந்த ஆள்’ என்றுதான் குறிப்பிடுகிறது. (ரூத் 4:1-12) அப்படியென்றால், பைபிளில் பெயர் குறிப்பிடப்படப்படாத எல்லாரும் மோசமானவர்கள் என்றோ அந்தளவுக்கு முக்கியம் இல்லாதவர்கள் என்றோ நாம் முடிவு செய்துவிடலாமா?
முடியாது. இன்னொரு உதாரணத்தைப் பார்க்கலாம். இயேசு தன்னுடைய கடைசி பஸ்கா உணவை சாப்பிட ஏற்பாடு செய்யும்படி தன் சீஷர்களிடம் சொன்னபோது, ‘நீங்கள் நகரத்துக்குள் போய், இன்னாரைப் [“எனக்கு அறிமுகமான ஒருவரிடம்,” ஈஸி டு ரீட் வர்ஷன்] பார்த்து’ அவருடைய வீட்டில் அதற்கு ஏற்பாடு செய்யும்படி சொன்னார். (மத்தேயு 26:18) அப்படியென்றால், இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘இன்னார்’ கெட்டவர் என்றோ அவ்வளவு முக்கியமானவர் இல்லை என்றோ சொல்லிவிட முடியுமா? கண்டிப்பாக இல்லை. அந்த நபர் நிச்சயம் இயேசுவின் சீஷராக இருந்திருக்க வேண்டும். இந்தப் பதிவுக்கு அவருடைய பெயர் தேவைப்படவில்லை என்பதால் அது குறிப்பிடப்படவில்லை.
அதோடு, கெட்டவர்களாக இருந்த நிறைய பேருடைய பெயர்கள் பைபிளில் இருக்கின்றன. அதே நேரம், யெகோவாவுக்கு உண்மையாக இருந்த நிறைய பேருடைய பெயர்கள் பைபிளில் இல்லை. உதாரணத்துக்கு, முதல் பெண்ணான ஏவாளை எடுத்துக்கொள்ளுங்கள். அவளுடைய பெயர் எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஆதாம் பாவம் செய்ததற்கு இவளுடைய சுயநலமும், யெகோவாவுக்கு கீழ்ப்படியாத குணமும் ஒரு காரணமாக இருந்தது. அந்தப் பாவத்தினால் நாம் எல்லாரும் மோசமான பாதிப்புகளை அனுபவிக்கிறோம். (ரோமர் 5:12) இன்னொரு பக்கம், நோவாவின் மனைவியை எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய பெயர் பைபிளில் இல்லைதான். ஆனாலும், அவர் சுயநலமில்லாமல் நடந்துகொண்டார். அவருடயை கணவர் செய்த முக்கியமான வேலைக்கு முழு ஆதரவு கொடுத்து கீழ்ப்படிந்து நடந்தார். பைபிளில் அவருடைய பெயர் இல்லையென்றாலும், அவர் யெகோவாவுக்குப் பிடித்தவர், ரொம்ப முக்கியமானவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
பைபிளில் சில முக்கியமான நபர்களுடைய பெயர்களும் இல்லை. தைரியசாலிகளாக இருந்த அவர்களை யெகோவா பெரிய விதத்தில் பயன்படுத்தினார். சீரியப் படைத்தளபதியான நாகமானின் வீட்டில் அடிமையாக இருந்த இஸ்ரவேல் சிறுமியை எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்ரவேலில் இருந்த கடவுளுடைய தீர்க்கதரிசியைப் பற்றி தன்னுடைய எஜமானியான நாகமானின் மனைவியிடம் அவள் தைரியமாகப் பேசினாள். அவள் அப்படிப் பேசியதால்தான் அதன் பிறகு ஒரு பெரிய அற்புதம் நடந்தது. (2 ராஜாக்கள் 5:1-14) இஸ்ரவேலின் நியாயாதிபதியான யெப்தாவின் மகளும் விசுவாசத்துக்கு ஒரு அருமையான முன்மாதிரியாக இருக்கிறாள். தன்னுடைய அப்பா நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவதற்காக, கல்யாணம் செய்துகொள்வதையும் குழந்தை பெற்றுக்கொள்வதையும் அவள் மனப்பூர்வமாக தியாகம் செய்தாள். (நியாயாதிபதிகள் 11:30-40) அதோடு, 40-க்கும் அதிகமான சங்கீதங்களை எழுதியவர்களுடைய பெயர்களும் குறிப்பிடப்படவில்லை. முக்கியமான பொறுப்புகளை செய்ய யெகோவா பயன்படுத்திய நிறைய தீர்க்கதரிசிகளின் பெயர்களும் பைபிளில் குறிப்பிடப்படவில்லை.—1 ராஜாக்கள் 20:37-43.
உண்மையுள்ள தேவதூதர்கள் இந்த விஷயத்தில் மிகச் சிறந்த உதாரணங்களாக இருக்கிறார்கள். கோடானகோடி தேவதூதர்கள் இருந்தாலும், அவர்களில் இரண்டு பேருடைய பெயர்கள்தான் பைபிளில் இருக்கின்றன. ஒருவருடைய பெயர் காபிரியேல், இன்னொருவருடைய பெயர் மிகாவேல். (தானியேல் 7:10; லூக்கா 1:19; யூதா 9) மற்ற எந்த தேவதூதருடைய பெயரும் பைபிளில் இல்லை. உதாரணத்துக்கு, சிம்சோனின் அப்பாவான மனோவா, ஒரு தேவதூதரிடம், “நீங்கள் சொன்னதெல்லாம் நிறைவேறும்போது நாங்கள் உங்களைக் கௌரவிக்க வேண்டும். அதனால் தயவுசெய்து உங்கள் பெயரைச் சொல்லுங்கள்” என்று கேட்டார். அதற்கு அந்த தேவதூதர் என்ன சொன்னார்? “என் பெயரை ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார். யெகோவாவுக்கு மட்டுமே சேர வேண்டிய மகிமை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த தேவதூதர் தன் பெயரை சொல்லாமல் மனத்தாழ்மையாக இருந்தார்.—நியாயாதிபதிகள் 13:17, 18.
ஏன் சிலருடைய பெயர்கள் பைபிளில் இருக்கின்றன, ஏன் சிலருடைய பெயர்கள் இல்லை என்பதற்கான காரணத்தை பைபிள் எல்லா சமயத்திலும் சொல்வதில்லை. ஆனால், அவர்களுடைய முன்மாதிரியிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தங்களுக்காக பேர்புகழை சம்பாதிக்க வேண்டும் என்று துளிகூட ஆசைப்படாமல் அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்தார்கள்.
அதிகாரம் 32
‘யெகோவாவே, இவனுடைய கண்களைத் திறங்கள்’
it “எலிசா” பாரா 2
எலிசா
சாப்பாத்தின் மகன். கி.மு. பத்தாவது மற்றும் ஒன்பதாவது நூற்றாண்டுகளில் யெகோவாவின் தீர்க்கதரிசியாக சேவை செய்தார். எலியா தீர்க்கதரிசிக்கு அடுத்து இவர் தீர்க்கதரிசியாக ஆனார். ஆபேல்-மெகொல்லாவைச் சேர்ந்த எலிசாவை அபிஷேகம் செய்யும்படி யெகோவா எலியாவிடம் சொன்னார். எலியா எலிசாவைப் பார்த்தபோது அவர் ஏர் உழுதுகொண்டிருந்தார். அப்போது அவரைத் தீர்க்கதரிசியாக நியமிப்பதற்காக அவர்மேல் எலியா தன் அங்கியைப் போட்டார். (1ரா 19:16) அங்கே 12 ஜோடி காளைகள் ஏர் உழுதுகொண்டிருந்தன. எலிசா பன்னிரண்டாவது ஜோடி காளைகளை வைத்து உழுதுகொண்டிருந்தார். 19-ம் நூற்றாண்டில், வில்லியம் தாம்சன் எழுதிய தேசமும் புத்தகமும் (1887, பக். 144) என்ற ஆங்கில புத்தகத்தில் ஒரு சுவாரஸ்யமான குறிப்பு இருக்கிறது. சின்ன ஏர்களை வைத்து தொகுதியாக ஒன்றுசேர்ந்து உழுவது அரேபியர்களின் வழக்கமாக இருந்தது. இப்படி செய்வதால், ஒரு நாள் முழுக்க ஒருவர் ஏர் உழுத இடத்தில், அவராலேயே விதைகளை சுலபமாக விதைத்துவிட முடியும் என்று அவர் அதில் எழுதினார். அந்தத் தொகுதியில் எலிசா கடைசியாக ஏர் உழுதுகொண்டிருந்ததால், மற்றவர்களுடைய வேலையைப் பாதிக்காமல் அவரால் தன்னுடைய வேலையைவிட்டு வர முடிந்தது. அதோடு, ஒரு ஜோடி காளைகளை அவர் பலி கொடுத்தார், உழுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளை பலி கொடுக்க விறகாகப் பயன்படுத்தினார். இதிலிருந்து அவர் உடனடியாக செயல்படுபவர், சிறந்த தீர்மானங்களை எடுப்பவர், யெகோவாவின் அழைப்புக்கு நன்றியுள்ளவர் என்பது தெரிகிறது. உணவைத் தயார்செய்து கொடுத்தபிறகு, அவர் உடனே எலியாவைப் பின்பற்றிப் போனார்.—1ரா 19:19-21.
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
எலியாவின் ஆவியை எலிசா ஏன் ‘இரு மடங்காக’ கேட்டார்?
எலியா இஸ்ரவேலில் தீர்க்கதரிசியாக தன் பணியை முடிப்பதற்கு சற்று முன்பு, இளைய தீர்க்கதரிசியாகிய எலிசா அவரிடம் இவ்வாறு கேட்டுக்கொண்டார்: “உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக!” (2 இராஜாக்கள் [2 அரசர்கள்] 2:9, பொது மொழிபெயர்ப்பு) ஆவிக்குரிய கருத்தில், மூத்த மகனுக்கு இரு மடங்கு பங்கை கொடுப்பது போல் தனக்கும் கொடுக்க வேண்டுமென எலிசா கேட்டிருப்பதாக தெரிகிறது. (உபாகமம் 21:17) அந்தப் பதிவை சுருக்கமாக சிந்திப்பது இதைத் தெளிவுபடுத்துவதுடன், நடந்தவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் நமக்கு உதவும்.
எலியா தீர்க்கதரிசி யெகோவாவின் வழிநடத்துதலுக்கு இசைவாக எலிசாவை தன் வாரிசாக அபிஷேகம் பண்ணினார். (1 இராஜாக்கள் 19:19-21) எலிசா சுமார் ஆறு வருடங்களுக்கு எலியாவின் ஊழியக்காரனாக உண்மையோடு சேவித்தார்; முடிவு வரை அவ்வாறே சேவிக்க தீர்மானமாயிருந்தார். எலியா இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாக சேவித்த கடைசி நாளில்கூட, எலிசா தன் போதகராகிய அவரோடு நெருங்கி பணியாற்றினார். தன் பின்னே வர வேண்டாமென எலிசாவிடம் எலியா சொல்லியும், “நான் உம்மை விடுகிறதில்லை” என மூன்று முறை எலிசா குறிப்பிட்டார். (2 இராஜாக்கள் 2:2, 4, 6; 3:11) சொல்லப்போனால் எலியாவை தன் ஆவிக்குரிய தந்தையாக எலிசா கருதினார்.—2 இராஜாக்கள் 2:12.
இருந்தாலும், எலிசா மட்டுமே எலியாவின் ஆவிக்குரிய மகன் அல்ல. “தீர்க்கதரிசிகளின் புத்திரர்” என அழைக்கப்பட்ட ஒரு தொகுதியினரும் எலிசாவுடனும் எலியாவுடனும் கூட்டுறவு வைத்திருந்தார்கள். (2 இராஜாக்கள் 2:3) அந்தப் ‘புத்திரரும்’ தங்கள் ஆவிக்குரிய தந்தையாகிய எலியாவிடம் நெருங்கிய பந்தத்தை வைத்திருந்ததாக இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலுள்ள பதிவு சுட்டிக்காட்டுகிறது. (2 இராஜாக்கள் 2:3, 5, 7, 15-17) என்றபோதிலும் எலிசாதான் அபிஷேகம் செய்யப்பட்ட வாரிசாக, எலியாவின் ஆவிக்குரிய மகன்களில் முதன்மையானவராக இருந்தார்; அவர் மூத்த மகன் போன்று இருந்தார். பூர்வ இஸ்ரவேலில் மூத்த மகன் தனது தந்தையின் சொத்தில் இரண்டு பங்கைப் பெற்றான்; மற்ற மகன்களோ ஆளுக்கு ஒரு பங்கை பெற்றார்கள். ஆகவேதான் எலியாவின் ஆவிக்குரிய சொத்தில் இரு மடங்கை தனக்குக் கொடுக்கும்படி எலிசா கேட்டார்.
ஏன் அந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எலிசா அவ்வாறு வேண்டினார்? ஏனென்றால் பெரும் பொறுப்பை அவர் நிறைவேற்றவிருந்தார்; அதாவது எலியாவுக்கு அடுத்ததாக இஸ்ரவேலில் தீர்க்கதரிசியாக சேவிக்கவிருந்தார். அந்த மாபெரும் நியமிப்போடு சம்பந்தப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற தன் சொந்த திறமைக்கு அப்பாற்பட்ட ஆவிக்குரிய சக்தி தேவை என்பதை எலிசா உணர்ந்திருந்தார். யெகோவாவால் மட்டுமே அப்படிப்பட்ட சக்தியை தர முடிந்தது. எலியாவைப் போலவே எலிசா தைரியம் காட்ட வேண்டியிருந்தது. (2 இராஜாக்கள் 1:3, 4, 15, 16) ஆகவேதான் அவர் எலியாவின் ஆவியில்—தைரியத்தையும் ‘யெகோவாவுக்காக வெகு பக்திவைராக்கியத்தையும்’ காட்டும் ஆவியில்—இரு மடங்கைக் கேட்டார்; கடவுளுடைய ஆவி அபிவிருத்தி செய்யும் விரும்பத்தக்க குணங்களே அவை. (1 இராஜாக்கள் 19:10, 14) எலியா என்ன சொன்னார்?
எலிசா கேட்டதைக் கொடுப்பதற்கு கடவுளுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது, தனக்கு அந்த உரிமை இல்லை என்பதை எலியா அறிந்திருந்தார். ஆகவே, “அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்” என பணிவுடன் சொன்னார். (2 இராஜாக்கள் 2:10) உண்மையில், எலியா சுழல்காற்றிலே ஏறிப்போகிறதை காண எலிசாவை யெகோவா அனுமதித்தார். (2 இராஜாக்கள் 2:11, 12) எலிசாவின் வேண்டுகோள் அருளப்பட்டது. புதிய பொறுப்பை நிறைவேற்றவும் வரவிருந்த சோதனைகளை சந்திக்கவும் தேவையான ஆவியை யெகோவா அவருக்கு வழங்கினார்.
இந்த பைபிள் பதிவிலிருந்து, (எலிசா வகுப்பினர் என சிலசமயம் அழைக்கப்படும்) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் கடவுளுடைய ஊழியர்களான மற்றவர்களும் இன்று அதிக உற்சாகத்தைப் பெறலாம். சிலசமயங்களில் ஒரு புதிய நியமிப்பைப் பெறும்போது நம்மால் அதை நிறைவேற்ற முடியுமா என்று நினைத்து திணறிப்போகலாம் அல்லது நம் பிராந்தியத்தில் அதிகமதிகமானோர் நாம் சொல்லும் ராஜ்ய செய்தியை அசட்டை செய்யும்போதோ எதிர்க்கும்போதோ தொடர்ந்து பிரசங்கிக்க அந்தளவு தைரியம் இல்லாமல் போகலாம். ஆனால் யெகோவாவின் உதவிக்காக நாம் கெஞ்சிக் கேட்கும்போது அவர் தமது பரிசுத்த ஆவியை நமக்கு அருளுவார்; சவால்களையும் மாறுகிற சூழ்நிலைகளையும் சமாளிக்க நமக்கு அது தேவை. (லூக்கா 11:13; 2 கொரிந்தியர் 4:7; பிலிப்பியர் 4:13, NW) ஆம், கனத்த பொறுப்புகளை நிறைவேற்ற எலிசாவை பலப்படுத்தியதைப் போலவே, இன்று ஊழியத்தை நிறைவேற்ற இளையோர் முதியோர் ஆகிய நம் அனைவருக்குமே யெகோவா உதவி செய்வார்.—2 தீமோத்தேயு 4:5.
it “குருட்டுத்தன்மை” பாரா 6
குருட்டுத்தன்மை
சீரியப் படைவீரர்கள் எல்லாரும் நிஜமாகவே குருடாகியிருந்தால், அவர்களுடைய கைகளைப் பிடித்துத்தான் அவர்களைக் கூட்டிக்கொண்டு போக வேண்டியிருந்திருக்கும். ஆனால், எலிசா வெறுமனே “நீங்கள் போக வேண்டிய நகரத்துக்கு இது வழி அல்ல. என் பின்னால் வாருங்கள்” என்று சொன்னார். அதனால், அவர்களுடைய கண்கள் குருடாகவில்லை, அவர்களுடைய மனம்தான் குருடானது என்று சொல்லலாம். இந்த விதத்தில் குருடாவதைப் பற்றி மனோதத்துவம் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் இப்படிச் சொல்கிறது: ‘ஒருவரின் கண்களைப் பாதிக்காமல் புரிந்துகொள்ளும் திறனை மட்டும் பாதிக்கும் ஒருவகையான குருட்டுத்தன்மை இருக்கிறது. இப்படிப்பட்ட குருட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறவர்களுக்குத் தாங்கள் பார்க்கும் விஷயங்கள் புரியாது. அவர்களுடைய பார்வைக்கும் யோசனைக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிட்டதுபோல் இருக்கும்.’ சீரியப் படை சமாரியாவுக்குப் போனதும் அவர்களுடைய மனக்கண்களைத்தான் யெகோவா திறந்த மாதிரி தெரிகிறது. (2ரா 6:18-20) சோதோம் நகரத்தில் இருந்த ஆண்களும் இதேமாதிரிதான் குருடாகியிருக்கலாம். அதாவது, யெகோவா அவர்களுடைய மனக்கண்களைக் குருடாக்கியிருக்கலாம். ஏனென்றால், அந்த ஆண்கள் பார்வை இழந்ததை நினைத்து வருத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, லோத்துவின் வீட்டுவாசல் கதவை விடாமல் தேடிக்கொண்டேதான் இருந்தார்கள் என்று அந்தப் பதிவு சொல்கிறது.—ஆதி 19:11.
it “எலிசா” பாரா. 27-28
எலிசா
வேலையை முடித்தார். யெகோவாவின் சக்தி எலிசாவுக்குக் கிடைத்ததால், அவர் இறப்பதற்கு முன்புவரை 15 அற்புதங்களை செய்திருந்தார். அவர் இறந்த பிறகு, யெகோவா அவரைப் பயன்படுத்தி 16-வது அற்புதத்தைச் செய்தார். சாகும்வரை எலிசா உண்மையோடு இருந்ததால், யெகோவாவுக்கு அவரை ரொம்ப பிடித்திருந்தது. எலிசா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குப் பக்கத்தில், இறந்துபோன ஒருவனின் உடலை அடக்கம் செய்வதற்காக வந்த சிலர், மோவாபிய கொள்ளைக்கூட்டத்தைப் பார்த்து பயந்து அந்த உடலை எலிசாவின் கல்லறையில் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அந்த உடல் எலிசாவின் எலும்புகள்மேல் பட்டவுடனே உயிர் பெற்றது, அவன் எழுந்து நின்றான்.—2ரா 13:20, 21.
லூக்கா 4:27-ல் இயேசு எலிசாவைத் தீர்க்கதரிசி என்று சொன்னார். எபிரெயர் 11:35-ல் சொல்லியிருக்கிற வார்த்தைகள், எலியாவுக்கு மட்டுமல்ல எலிசாவுக்கும் பொருந்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஏனென்றால், இவர்கள் இருவருமே உயிர்தெழுதலை செய்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் பாகால் வணக்கத்தில் ஊறிப்போயிருந்த சமயத்தில்தான் எலியா தீர்க்கதரிசியாக சேவை செய்ய ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் இப்படிச் சேவை செய்வதற்கு, உண்மை வணக்கத்தின்மேல் தீவிரமான வைராக்கியம் எலியாவுக்குக் கண்டிப்பாகத் தேவைப்பட்டிருக்கும். நிறைய பேர் யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு அவர் பெரியளவில் உதவி செய்திருந்தார். எலியா விட்டுவிட்டு போன இடத்திலிருந்து எலிசா தன் சேவையை ஆரம்பித்தார். ஓரளவுக்கு சமாதானமான காலத்தில்தான் அவர் தன் சேவையைச் செய்தார். எலியா ஆரம்பித்த வேலையை எலிசா முழுவதுமாக செய்து முடித்தார். அந்த வேலை முடியும்வரை அவர் வாழ்ந்தார். எலியா எட்டு அற்புதங்களை செய்தார், எலிசா 16 அற்புதங்களை செய்தார். எலியாவைப் போலவே, எலிசாவுக்கும் யெகோவாவின் பெயர் மற்றும் உண்மை வணக்கத்தின்மீது ரொம்ப பக்திவைராக்கியம் இருந்தது. பொறுமை, அன்பு, கருணை போன்ற குணங்களை எலிசா காட்டினார். அதேநேரம், யெகோவாவின் பெயருக்காக தைரியமாகச் செயல்பட்டார். கெட்டவர்களிடம் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்தியைச் சொல்ல அவர் கொஞ்சம்கூட தயங்கவில்லை. எபிரெயர் 12:1-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘திரண்ட மேகம் போன்ற சாட்சிகளில்’ இவரும் ஒருவர்.
எலிசா அக்கினி ரதங்களைக் கண்டார்—நீங்களும் காண்கிறீர்களா?
கடவுளுடைய தீர்க்கதரிசியான எலிசாவை எப்படியாவது கண்டுபிடிக்க சீரியா ராஜா முயன்றுகொண்டிருந்தான். மலைசூழ்ந்த நகரமான தோத்தானில் எலிசா இருப்பதை அறிந்தான். அந்திசாய்ந்த வேளையில் குதிரைகளும் போர் ரதங்களும் ராணுவமும் தோத்தானுக்கு வந்து சேர்ந்தன. பொழுது விடிவதற்குள் அவனுடைய ராணுவம் நகரத்தைச் சூழ்ந்துகொண்டது.—2 இரா. 6:13, 14.
எலிசாவின் வேலைக்காரன் எழுந்து வெளியே புறப்பட்டபோது, எதிரிகள் சூழ்ந்து நிற்பதைப் பார்த்தான். அதைக் கண்டு, “ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்” என்று பயந்தான். அதற்கு எலிசா, “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்றார். பிறகு எலிசா, “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” என்று வேண்டினார். “உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” என்று பதிவு சொல்கிறது. (2 இரா. 6:15-17) இந்தச் சம்பவத்திலிருந்தும் எலிசாவின் வாழ்வில் நடந்த பிற சம்பவங்களிலிருந்தும் நமக்கு என்ன பாடம்?
சீரியர் படையெடுத்து வந்தபோது எலிசா கலக்கமடையவில்லை. காரணம், யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்தார், அவருடைய வல்லமையான செயல்களைப் பார்த்திருந்தார். இன்று, அற்புதங்கள் நடக்கும் என நாம் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் யெகோவா தம்முடைய ஜனங்களை ஒரு தொகுதியாகக் காப்பாற்றுவார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஒரு கருத்தில், இன்று நம்மைச் சுற்றியும்கூட அக்கினி குதிரைகளும் ரதங்களும் இருக்கின்றன. அவற்றை நம் விசுவாசக் கண்களால் பார்த்தால்... எப்போதும் யெகோவாவைச் சார்ந்திருந்தால்... ‘பாதுகாப்புடன் வாழ்வோம்,’ யெகோவாவின் ஆசி பெறுவோம். (சங். 4:8 பொது மொழிபெயர்ப்பு) எலிசாவின் வாழ்வில் நடந்த பிற சம்பவங்களிலிருந்தும் எப்படிப் பயனடையலாம் எனப் பார்க்கலாம்.
எலியாவுக்கு எலிசா சேவை செய்கிறார்
ஒரு சமயம் எலிசா வயலை உழுது கொண்டிருந்தபோது, எலியா தன் தீர்க்கதரிசிக்குரிய சால்வையை அவர்மேல் தூக்கி எறிந்தார். இதன் மூலம், வேலைக்காரனாக இருக்கும்படி எலியா தன்னை அழைக்கிறார் என்பதை எலிசா புரிந்துகொண்டார். எலிசா ஒரு விருந்துபண்ணி, தன் அப்பா அம்மாவிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு எலியாவிற்குப் பணிவிடை செய்வதற்காக தன் ஊரைவிட்டு புறப்பட்டார். (1 இரா. 19:16, 19-21) யெகோவா எதிர்பார்க்கிற எதையும் செய்ய எலிசா மனமுள்ளவராக இருந்ததால், யெகோவா அவரைப் பல வழிகளில் பயன்படுத்தினார். பிற்பாடு எலியாவுக்குப் பதில் எலிசா தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டார்.
எலியாவிடம் எலிசா கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் பணிவிடை செய்தார். ‘எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்தவன்’ என்று எலிசாவைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (2 இரா. 3:11) அன்று பொதுவாக, மக்கள் தங்கள் கைகளினால் சாப்பிட்டார்கள். உணவு சாப்பிட்டபின், எஜமான் தன்னுடைய கைகளைக் கழுவுவதற்கு வேலைக்காரன் தண்ணீர் ஊற்றுவான். ஆகவே, எலிசாவின் வேலைகளில் சில சிறியதாகவோ அற்பமாகவோ இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும், எலியாவுக்கு பணிவிடை செய்வதைப் பெரிய பாக்கியமாக நினைத்தார்.
இன்றும், அநேக கிறிஸ்தவர்கள் வித்தியாசப்பட்ட முழு நேர சேவையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். யெகோவாமீதுள்ள விசுவாசமும் அவருக்குத் தங்களாலான மிகச் சிறந்ததைத் தர வேண்டும் என்ற எண்ணமுமே இப்படிச் செய்ய அவர்களைத் தூண்டுகிறது. அநேகரால் அற்பமாகக் கருதப்படுகிற சில வேலைகளைச் செய்ய சிலர் தங்களுடைய வீடுகளைவிட்டு பெத்தேலுக்கும் கட்டுமானப் பணி செய்யப்படும் இடங்களுக்கும் சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வேலைகளை நாம் அற்பமாக நினைக்கக்கூடாது. ஏனென்றால், யெகோவா அவற்றை உயர்வாக மதிக்கிறார்.—எபி. 6:10.
எலிசா அவருடைய வேலையில் நிலைத்திருந்தார்
‘எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு’ முன், கடவுள் அவரை கில்காலிலிருந்து பெத்தேலுக்கு அனுப்பினார். எலிசாவைத் தன்னோடு வர வேண்டாமென்று எலியா சொன்னார், ஆனால், எலிசா “நான் உம்மை விடுகிறதில்லை” என்றார். பயணத்தின்போது, எலிசாவை அங்கேயே தங்கிவிடும்படி இன்னும் இரண்டு முறை எலியா சொன்னபோதிலும், எலிசா மறுத்துவிட்டார். (2 இரா. 2:1-6) நகோமியை ரூத் விட்டுவிலகாமல் இருந்ததுபோல், எலிசாவும் எலியாவை விட்டுவிலகாமல் இருந்தார். (ரூத் 1:8, 16, 17) ஏன்? எலியாவுக்கு பணிவிடை செய்யும்படி கடவுள் கொடுத்த பொறுப்பை எலிசா பெரிதும் மதித்தார்.
எலிசா நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. நாம் யெகோவாவுக்கே சேவை செய்கிறோம் என்பதை மனதில் வைத்தால், கடவுளுடைய அமைப்பில் நமக்குக் கிடைக்கும் எந்தவொரு பொறுப்பையும் உயர்வாகக் கருதுவோம். இதைவிடச் சிறந்தது வேறு எதுவுமில்லை.—சங். 65:4; 84:10.
“நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள்”
இருவரும் போய்க்கொண்டிருக்கையில், எலிசாவிடம், எலியா: “உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள்” என்றார். பல வருடங்களுக்கு முன் சாலொமோன் கேட்டதைப் போன்ற ஒரு விஷயத்தையே எலிசா கேட்டார். ஆம், கடவுளின் வேலையை இன்னும் நன்கு செய்வதற்காக ‘எலியாவிடமிருந்த கடவுளுடைய சக்தியின் வரம் தனக்கு இரு மடங்காகக் கிடைக்க வேண்டும்’ என்று கேட்டார். (1 இரா. 3:5, 9; 2 இரா. 2:9) இஸ்ரவேலில், ஒருவருடைய முதல் மகனுக்கு இரண்டு பங்கு ஆஸ்தி கொடுக்கப்பட வேண்டும். (உபா. 21:15-17) ஆகவே, எலியாவின் வாரிசாக, அதாவது எலியாவுக்குப் பின் அடுத்த தீர்க்கதரிசியாக தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார். மேலும், யெகோவாவுக்கு ‘வெகு பக்திவைராக்கியமாயிருந்த’ எலியாவைப்போல் தானும் தைரியமாயிருக்க விரும்பினார்.—1 இரா. 19:13, 14.
எலிசாவின் வேண்டுகோளுக்கு எலியா எப்படிப் பதிலளித்தார்? “அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது” என்றார். (2 இரா. 2:10) எலியாவின் பதிலில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருந்தன. ஒன்று, எலிசா கேட்டது கிடைக்குமா என்பதை கடவுள் மட்டுமே தீர்மானிக்க முடியும். இரண்டு, எந்தச் சூழ்நிலையிலும் எலியாவைவிட்டுப் பிரியாமல் இருந்தால்தான் அதைப் பெற முடியும்.
எலிசா எதைப் பார்த்தார்?
எலியாவிடமிருந்த கடவுளுடைய சக்தியின் வரம் தனக்கு இரு மடங்காகக் கிடைக்க வேண்டும் என்று எலிசா கேட்டதை கடவுள் எப்படிக் கருதினார்? ‘அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனார்.’ அதை எலிசா பார்த்துக்கொண்டே நின்றார். அது எலிசாவின் வேண்டுகோளுக்கு யெகோவா அளித்த பதிலாக இருந்தது. எலியா தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்பட்டதை எலிசா பார்த்தார், எலியாவிடமிருந்த கடவுளுடைய சக்தியின் வரத்தை இரு மடங்காகப் பெற்றார், எலியாவுக்குப் பின் அடுத்த தீர்க்கதரிசியாகவும் ஆனார்.—2 இரா. 2:11-14.
எலியாவிடமிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்து எலிசா போட்டுக்கொண்டார். அதை அவர் அணிந்திருந்ததைப் பார்த்த மக்கள் இனி எலிசாதான் தீர்க்கதரிசி என்பதை அறிந்துகொண்டார்கள். பிற்பாடு, யோர்தான் நதியின் தண்ணீரை இரண்டாகப் பிரியும்படி செய்த அற்புதமும்கூட அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு அத்தாட்சி அளித்தது.
எலியா சுழற்காற்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டது எலிசாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம். ஆம், அக்கினிமயமான போர் ரதத்தையும் குதிரைகளையும் பார்த்து வியக்காதோர் யாருமில்லை. எலிசாவைப் பொறுத்தவரை, தான் கேட்டதை யெகோவா கொடுத்தார் என்பதற்கு இவை அத்தாட்சியாக இருந்தன. நம்முடைய ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்கையில் அக்கினி ரதத்தையும் குதிரைகளையும் அவர் தரிசனமாகக் காட்டுவதில்லை. ஆனால், அவர் தம்முடைய வல்லமையைப் பயன்படுத்தி தம் சித்தத்தை நிறைவேற்றுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதோடு, யெகோவா தம்முடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தை ஆசீர்வதித்து வருவதைப் பார்க்கும்போது, ஒரு கருத்தில் அவருடைய பரம ரதம் முன்னேறிச் செல்வதைப் “பார்க்கிறோம்.”—எசே. 10:9-13.
யெகோவாவின் அபார வல்லமைக்கு அநேக அத்தாட்சிகளை எலிசா பார்த்திருக்கிறார். சொல்லப்போனால், கடவுளுடைய சக்தியினால் அவர் 16 அற்புதங்களைச் செய்திருக்கிறார். ஆம், எலியாவைவிட இரு மடங்காகச் செய்திருக்கிறார். தோத்தானில் இக்கட்டான சூழ்நிலையில் எலிசா இருந்தபோது இரண்டாவது முறையாக அக்கினிமயமான குதிரைகளையும் போர் ரதங்களையும் கண்டார். இதைத்தான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம்.
எலிசா யெகோவாமீது நம்பிக்கை வைத்தார்
தோத்தானில் எதிரிகள் தன்னைச் சூழ்ந்துகொண்டபோதிலும் எலிசா கலக்கமடையவில்லை. ஏன்? ஏனென்றால் யெகோவாமீது அவர் உறுதியான விசுவாசம் வைத்திருந்தார். நமக்கும் அப்படிப்பட்ட விசுவாசம் தேவை. ஆகவே, விசுவாசத்தையும் கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படுகிற பிற பண்புகளையும் வெளிக்காட்ட உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்வோமாக.—லூக். 11:13; கலா. 5:22, 23.
யெகோவாமீதும் காண முடியாத அவரது சேனைகள்மீதும் நம்பிக்கை வைப்பதற்கு தோத்தானில் நடந்த சம்பவமும் எலிசாவுக்குக் கைகொடுத்தது. நகரத்தையும் எதிரிகளையும் சூழ்ந்து நின்ற தேவதூதர்களை அனுப்பியது கடவுள்தான் என்பதை எலிசா தீர்க்கதரிசி புரிந்துகொண்டார். எதிரிகளின் கண்களைக் குருடாக்கி எலிசாவையும் அவருடைய வேலைக்காரனையும் கடவுள் அற்புதமாகக் காப்பாற்றினார். (2 இரா. 6:17-23) அந்த இக்கட்டான சமயத்திலும் அதுபோன்ற பிற சூழ்நிலைகளிலும், யெகோவாமீது எலிசா விசுவாசம் வைத்தார், அவரை முழுமையாக நம்பினார்.
எலிசாவைப் போல நாமும் யெகோவா தேவன்மீது நம்பிக்கை வைப்போமாக. (நீதி. 3:5, 6) அப்போது, அவர் ‘நமக்கு இரங்கி, நம்மை ஆசீர்வதிப்பார்.’ (சங். 67:2) நம்மைச் சுற்றி அக்கினிமயமான ரதங்களும் குதிரைகளும் இல்லை என்பது உண்மைதான். ஆனால், வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ யெகோவா உலகெங்கும் இருக்கிற தமது மக்களைக் காப்பாற்றுவார். (மத். 24:21; வெளி. 7:9, 14) அதுவரையில், “தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்” என்பதை எப்போதும் நினைவில் வைப்போமாக.—சங். 62:8.
[பக்கம் 30-ன் பெட்டி]
வழக்குகளில் கிடைத்த சில சமீபகால வெற்றிகள்
243 — உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு சமீபத்தில் உயர் நீதிமன்றங்களில் கிடைத்த வெற்றிகள்
பிரான்சு — 82 லட்சம் டாலர் திருப்பிக்கொடுத்தது
15 வருட போராட்டத்திற்குப் பிறகு, டிசம்பர் 11, 2012-ல் பிரான்சு நாட்டு அரசாங்கம் யெகோவாவின் சாட்சிகளுக்கு திருப்பிக்கொடுத்த மொத்தப் பணம் (அமெரிக்க டாலரில்)
கிரீஸ் — அரசுப் பேரவை
யெகோவாவின் சாட்சிகள் என அறியப்பட்ட கிறிஸ்தவப் பிரிவினர் தங்களுக்கென வழிபாட்டு மன்றங்களை வைத்திருக்க உரிமை இருக்கிறது என நவம்பர் 2, 2012-ல் அரசுப் பேரவை அங்கீகாரம் அளித்தது
20 — மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஏப்ரல் 2000-லிருந்து கிடைத்த வெற்றிகள்
தென் கொரியா — மனித உரிமைகளுக்கான ஐ.நா. குழு வழங்கிய தீர்ப்பு
அக்டோபர் 25, 2012 - மனசாட்சியின் நிமித்தம் போரில் ஈடுபட மறுத்த 388 யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமைகளை மீறியதால் தக்க நஷ்ட ஈடு வழங்க தென் கொரியாவுக்கு உத்தரவிட்டது
அதிகாரம் 33
ராஜாவைக் காப்பாற்றினார்
it “சிறப்பு மெய்க்காவல்படை வீரர்கள்”
சிறப்பு மெய்க்காவல்படை வீரர்கள்
(காரியன்).
அத்தாலியாளை ஒழித்துகட்டுவதற்கும் யோவாசை யூதாவின் ராஜாவாக நியமிப்பதற்கும் யோய்தாவுக்கு உதவியாக இருந்த ஒரு படைக் குழு.—2ரா 11:4, 13-16, 19.
கிரேத்தியர்களுக்கு இன்னொரு பெயர்தான் காரியன்கள் என்று நிறைய அறிஞர்கள் சொல்கிறார்கள். தாவீது மற்றும் சாலொமோனின் ராணுவப் படைகளில் இந்தக் கிரேத்தியர்கள் சேவை செய்தார்கள். சில அறிஞர்களுடைய கருத்துப்படி, கிரேத்தியர்கள் இந்த ராஜாக்களுக்கு சிறப்பு மெய்க்காவல்படை வீரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். (2சா 8:18; 1ரா 1:38; 1நா 18:17) கிரேத்தியர்களுக்கும் காரியன்களுக்கும் இருக்கும் சம்பந்தத்தைப் புரிந்துகொள்ள மசோரெட்டிக் பதிவு உதவுகிறது. அந்தப் பதிவில், 2 சாமுவேல் 20:23-ல் “காரியன்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பக்கத்தில் (ஓரக்குறிப்பில்) “கிரேத்தியர்கள்” என்று இருக்கிறது. அதோடு, இன்னும் நிறைய எபிரெய கையெழுத்து பிரதிகளிலும் இந்த வசனத்தில் “கிரேத்தியர்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பூர்வ காலத்தில், ஆசியா மைனரின் தென்மேற்கு பகுதியில் காரியா என்ற ஒரு இடம் இருந்தது. எசேக்கியேல் 25:16 மற்றும் செப்பனியா 2:5-ல் கிரேத்தியர்கள் பெலிஸ்தியர்களோடு (பெலிஸ்தியர்கள் கிரேத்தாவிலிருந்து வந்தவர்கள்) சேர்த்து சொல்லப்பட்டிருக்கிறார்கள். அதோடு, கிரேக்க செப்டுவஜன்டில் கிரேத்தியர்கள் என்று சொல்வதற்குப் பதிலாக “கிரேத்தர்கள்” என்று இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்து, காரியன் படைப்பிரிவில் இருந்தவர்கள் முதலில் கிரேத்தாவில் இருந்தவர்கள் என்றும் பின்பு அவர்கள் காரியாவில் குடியேறினார்கள் என்றும் சிலர் நம்புகிறார்கள்.
w91 2/1 பக். 31 பாரா. 5-6
‘கிரீடமும் திருச்சட்ட சுருளும்’
யோவாசின் தலைமேல் “திருச்சட்ட சுருளை” தலைமைக் குரு ஏன் வைத்தார்? ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அறிஞரான ஓடோ தீனியஸ் இப்படிச் சொல்கிறார்: “மோசே மூலம் கொடுக்கப்பட்ட சட்டங்கள் அடங்கிய புத்தகம்தான் திருச்சட்டம். ராஜாவுக்குக் கிரீடம் சூட்டிய பிறகு, அடையாள அர்த்தத்தில் அவருடைய தலைமேல் திருச்சட்டம் வைக்கப்பட்டது.” (Die Bücher der Könige) அதேமாதிரி, பேராசிரியர் எர்ன்ஸ்ட் பெர்த்யூ இப்படிச் சொல்கிறார்: “[ராஜாமேல்] திருச்சட்டத்தை வைத்ததற்கு ஒரு அர்த்தம் இருந்தது. திருச்சட்டத்திலிருந்த கட்டளைகளுக்கு ஏற்றமாதிரி ஆட்சி செய்யும் கடமை ராஜாவுக்கு இருந்ததை அது அடையாளப்படுத்தியது.”—Die Bücher der Chronik.
ஒரு ராஜா ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்போது, திருச்சட்டத்தைத் தன் கையாலேயே நகல் எடுக்க வேண்டுமென்றும், அதைப் படித்து அதன்படி நடக்க வேண்டுமென்றும் யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். (உபாகமம் 17:18-20) ஒருவர் ராஜாவாக இருந்தாலும், யெகோவாவின் சட்டத்துக்கு அடங்கிதான் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக அடையாள அர்த்தத்தில் அவருடைய தலைமேல் ‘திருச்சட்ட சுருள்’ வைக்கப்பட்டிருக்கலாம். வருத்தமான விஷயம் என்னவென்றால், தலைமைக் குரு யோய்தா இறந்த பிறகு யோவாஸ் இந்த முக்கியமான பாடத்தை மறந்துவிட்டார். அவர் யெகோவாவின் வணக்கத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போனார். கடைசியில், தன்னுடைய ஊழியர்களால் கொல்லப்பட்டார்.—2 நாளாகமம் 24:17-25.
it “யோவாஸ்” எண் 1 பாரா 5
யோவாஸ்
யெகோவாவின் ஆலயம் கட்டப்பட்டுக் கிட்டத்தட்ட 150 வருஷங்கள் ஆகியிருந்தது. அதுமட்டுமல்ல, அத்தாலியாளின் ஆட்சியில் அது சரியாகக் கவனிக்கப்படவில்லை, அங்கிருந்த பொருள்களும் சூறையாடப்பட்டன. இந்தக் காரணங்களால், ஆலயத்தைப் பழுதுபார்ப்பது ரொம்பவே அவசியமாக இருந்தது. அதனால், யூதாவிலிருந்த எல்லா நகரங்களுக்கும் போய் ஆலயத்தைப் புதுப்பிக்கத் தேவையான பணத்தை வசூலிக்கச் சொல்லி யோவாஸ் லேவியர்களிடம் சொன்னார். ஆனால், லேவியர்கள் அதை உடனடியாகச் செய்யவில்லை. அதனால், புதுப்பிக்கும் வேலை நடக்கவில்லை. (2ரா 12:4-8; 2நா 24:4-7) அதன் பிறகு, பணத்தை வசூலித்து அதை நிர்வகிக்கும் ஏற்பாடு மாற்றப்பட்டது. மக்களும் அதற்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். ஆலயத்தைப் பழுதுபார்க்கும் வேலை நல்லபடியாக நடந்து முடிந்தது.—2ரா 12:9-16; 2நா 24:8-14.
“பரகியாவின் மகனும்” என்ற மத். 23:35-க்கான ஆராய்ச்சிக் குறிப்பு, nwtsty
பரகியாவின் மகனும்: 2நா 24:20-ன்படி, இந்த சகரியா “குருவாகிய யோய்தாவின் மகன்.” பைபிளில் வரும் மற்ற நபர்களைப் போலவே யோய்தாவுக்கும் இரண்டு பெயர்கள் இருந்திருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். (மத் 9:9-ஐ மாற் 2:14 வசனத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.) அல்லது, பரகியா என்பவர் சகரியாவின் தாத்தாவாகவோ மூதாதையாகவோ இருந்திருக்கலாம் என்றுகூட சொல்கிறார்கள்.
w09 10/1 பக். 22-23
கெட்ட நண்பர்களால் யெகோவாவைவிட்டு விலகிய யோவாஸ்
பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
கடவுளுடைய ஆலயம் இருந்த எருசலேம் நகரத்துக்கு அது கொடிய காலமாக இருந்தது. அப்போதுதான் அகசியா ராஜா கொல்லப்பட்டிருந்தார். அதன் பிறகு அவருடைய அம்மா என்ன செய்தாள் என்பதை நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. அவள் அகசியாவின் மகன்களை, அதாவது தன் சொந்தப் பேரன்களை, கொலை செய்தாள்! ஏன் என்று உனக்குத் தெரியுமா?— பேரன்கள் யாரும் ராஜாவாகக் கூடாது, தானே ஆட்சி செய்ய வேண்டுமென அவள் நினைத்தாள்.
ஆனால், அவளுடைய பேரன்களில் ஒருவனான யோவாஸ் கொல்லப்படவில்லை; இது அத்தாலியாளுக்கே தெரியவில்லை. அவன் எப்படிக் காப்பாற்றப்பட்டான் எனத் தெரிந்துகொள்ள நீ ஆசைப்படுகிறாயா?— யோவாசுக்கு யோசேபாள் என்ற அத்தை இருந்தாள்; அவள் அவனைக் கடவுளுடைய ஆலயத்தில் மறைத்து வைத்தாள். அவளுடைய கணவர் யோய்தா ஆலயத்தில் தலைமைக் குருவாக இருந்ததன் காரணமாக அவளால் அப்படிச் செய்ய முடிந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து, யோவாசைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள்.
ஆறு வருடங்கள் யோவாஸ் ஆலயத்தில் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தான். அங்கே யெகோவா தேவனையும் அவருடைய சட்டங்களையும் பற்றிய எல்லா விஷயங்களும் அவனுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன. அவனுக்கு ஏழு வயதானபோது, அவனை ராஜாவாக்க யோய்தா நடவடிக்கை எடுத்தார். யோய்தா உண்மையில் என்ன செய்தார், கெட்ட ராணியான அத்தாலியாளுக்கு என்ன நடந்தது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாயா?—
அந்தச் சமயத்தில் எருசலேமிலிருந்த ராஜாக்களுக்கு விசேஷக் காவலர்கள் இருந்தார்கள்; அவர்கள் எல்லாரையும் யோய்தா ரகசியமாக வரவழைத்தார். தானும் தன் மனைவியும் அகசியா ராஜாவின் மகனை எப்படி உயிரோடு காப்பாற்றினார்கள் என்பதை அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அவர்கள்முன் யோவாசைக் கொண்டு வந்து நிறுத்தினார்; அந்தச் சிறுவனே ராஜாவாவதற்கு உரிமையுள்ளவன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால் அவர்கள் ஒரு திட்டம் போட்டார்கள்.
யோய்தா எல்லா மக்கள் முன்பாகவும் யோவாசை அழைத்து வந்து, அவன் தலையில் கிரீடம் வைத்து ராஜாவாக்கினார். அந்தச் சமயத்தில் மக்கள், “ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.” யோவாசுக்குப் பாதுகாப்பாய் அந்தக் காவலர்கள் சூழ்ந்து நின்றார்கள். அந்தச் சந்தோஷ ஆரவாரத்தையெல்லாம் அத்தாலியாள் கேட்டபோது அங்கு ஓடிவந்து, “துரோகம் துரோகம்” என்று கத்தினாள். அப்போது, யோய்தாவின் கட்டளைப்படி அந்தக் காவலர்கள் அவளைக் கொன்று போட்டார்கள்.—2 இராஜாக்கள் 11:1-16.
யோவாஸ் தொடர்ந்து யோய்தாவின் பேச்சைக் கேட்டு, சரியானதைச் செய்தாரா?— யோய்தா உயிரோடு இருக்கும்வரை அப்படிச் செய்தார். அவருடைய அப்பா அகசியாவும், தாத்தா யோராமும் கடவுளுடைய ஆலயத்தை அசட்டை செய்திருந்தார்கள்; யோவாசோ அதைப் பழுதுபார்க்கும் பணிக்காக மக்கள் நன்கொடை அளிக்க ஏற்பாடு செய்தார். ஆனால், தலைமைக் குரு யோய்தா இறந்த பிறகு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.—2 இராஜாக்கள் 12:1-16.
யோய்தா இறந்தபோது யோவாசுக்குச் சுமார் 40 வயது. அவர் யெகோவாவுக்குச் சேவை செய்தவர்களுடன் தொடர்ந்து சகவாசம் வைத்துக்கொள்ளாமல், பொய்க் கடவுள்களை வணங்கியவர்களோடு நட்பு வைத்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் யோய்தாவின் மகன் சகரியா ஆலயகுருவாகச் சேவை செய்து வந்தார். யோவாஸ் கெட்ட காரியங்கள் செய்து வந்ததைச் சகரியா கேள்விப்பட்டபோது என்ன செய்திருப்பாரென நீ நினைக்கிறாய்?—
சகரியா, யோவாசையும் மக்களையும் பார்த்து, ‘நீங்கள் யெகோவாவை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார்’ என்று சொன்னார். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் யோவாசுக்கு பயங்கரக் கோபம் வந்தது; அதனால் அவர் சகரியாவைக் கல்லெறிந்து கொலை செய்வதற்குக் கட்டளையிட்டார். இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்: யோவாஸ் கொலை செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டார்; இப்போதோ, சகரியா கொலை செய்யப்பட யோவாசே காரணமானார்!—2 நாளாகமம் 24:1-3, 15-22.
இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாமென நீ நினைக்கிறாய்?— மற்றவர்களிடம் வெறுப்போடும் கொடூரமாகவும் நடந்துகொண்ட அத்தாலியாளைப் போல் நாம் இருக்கவே கூடாது. இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்ததுபோல், நாம் யெகோவாவை வழிபடுகிறவர்களையும் எதிரிகளையும்கூட நேசிக்க வேண்டும். (மத்தேயு 5:44; யோவான் 13:34, 35) யோவாசைப் போல் நாமும் நல்லது செய்ய ஆரம்பித்திருந்தால் தொடர்ந்து நல்லதையே செய்ய வேண்டும்; யெகோவாவை நேசிக்கிறவர்களையும் அவருக்குச் சேவை செய்ய நம்மை ஊக்கப்படுத்துகிறவர்களையுமே எப்போதும் நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டும்.
கடவுளுடைய இருதயத்தை மகிழ்விக்கும் நன்கொடைகள்
அத்தாலியாள் என்ற ஓர் அரசி அரியணை ஏறிய கதை ஓர் இனிய கதை அல்ல. ஏனெனில், அவள் தந்திரமாகச் சூழ்ச்சிகள் செய்தும் கொலைகள் செய்தும் யூத ஆட்சியைக் கைப்பற்றினாள். ராஜ வாரிசுகளெல்லாம் கொலை செய்யப்பட்டதாக நினைத்து, தன்னையே ராணியாக்கிக்கொண்டாள். ஆனால், இளவரசியான யோசேபாள் யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் உள்ளப்பூர்வமாக நேசித்தாள். அதனால், ராஜவாரிசாக இருந்த குழந்தை யோவாசை தைரியமாக மறைத்து வைத்தாள். யோசேபாளும் பிரதான ஆசாரியனான அவளுடைய கணவன் யோய்தாவும் ஆலயத்தில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் ஆறு வருடங்களாக யோவாசை மறைத்து வைத்தனர்.—2 இராஜாக்கள் 11:1-3.
யோவாசுக்கு ஏழு வயதானது. தந்திரமாக ஆட்சியை அபகரித்துக்கொண்ட ராணியை ஆட்சியிலிருந்து வீழ்த்தும் திட்டத்தை செயல்படுத்த பிரதான ஆசாரியனான யோய்தா தயாரானார். மறைத்து வைத்திருந்த யோவாசை வெளியே கொண்டு வந்தார். யூதாவை ஆளும் உரிமை பெற்ற வாரிசான யோவாசை ராஜாவாக முடிசூட்டினார். கெட்ட ராணியான அத்தாலியாள் ஆலயத்திலிருந்து வெளியே இழுத்துவரப்பட்டு, அரசு காவலாளிகளால் கொலைசெய்யப்பட்டாள். அவள் ஒழிந்த சந்தோஷத்தில் மக்கள் எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். யோய்தாவும் யோசேபாளும், யூதாவில் மெய் வணக்கத்தை திரும்பவும் நிலைநாட்டுவதில் பெரும் பங்கு வகித்தனர். அதைவிட முக்கியமாக, மேசியா வரவேண்டிய ராஜவம்சத்திற்கு, அதாவது தாவீதின் வம்சத்திற்கு, எந்தவித தடையும் வராதிருப்பதில் மிகப் பெரும் பங்கு வகித்தனர்.—2 இராஜாக்கள் 11:4-21.
புதிதாக முடிசூட்டப்பட்ட ராஜாவும், கடவுளின் இருதயத்தை மகிழ்விக்க தன்னுடைய பங்கில் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருந்தது. யெகோவாவின் ஆலயம் மோசமாக பழுதடைந்திருந்தது. அத்தாலியாள், தான் மட்டுமே யூதாவை ஆட்சி செய்யவேண்டும் என்ற பேராசையால் ஆலயத்தை பராமரிக்காமல் விட்டுவிட்டதோடு, அங்கிருந்த பொருள்களையும் கொள்ளையடித்திருந்தாள். எனவே, யோவாஸ் ஆலயத்தை மீண்டும் கட்டவும் புதுப்பிக்கவும் தீர்மானித்தார். அதற்கு தேவைப்படும் பணத்தை சேகரிக்க உடனடியாக ஒரு கட்டளை பிறப்பித்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும், இலக்கத்திற்குட்படுகிறவர்களின் பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும்படி, அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும், ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுதுகாண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும்.”—2 இராஜாக்கள் 12:4, 5.
மக்கள் நன்கொடைகளை மனமுவந்து தந்தார்கள். ஆனால் ஆசாரியர்களோ ஆலயத்தை பழுதுபார்க்கும் தங்கள் கடமையை ஏனோதானோவென்று செய்தார்கள். எனவே ராஜாவே எல்லா வேலைகளையும் முன்நின்று மேற்பார்வை செய்ய முடிவெடுத்தார். எல்லா நன்கொடைகளையும், அதற்காக வைக்கப்பட்டிருந்த விசேஷ பெட்டிக்குள் போட கட்டளையிட்டார். அந்தப் பொறுப்பை யோய்தாவிடம் ஒப்படைத்தார். அதைப் பற்றிய பதிவு இவ்வாறு சொல்கிறது: “ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள். பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி, எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.”—2 இராஜாக்கள் 12:9-12.
மக்கள் இருதயப்பூர்வமான ஆதரவை அளித்தார்கள். யெகோவாவுடைய வழிபாடு கண்ணியமான முறையில் தொடர வேண்டும் என்பதற்காக அவருடைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இவ்வாறு எல்லா நன்கொடைகளும் உரிய விதத்தில் செலவிடப்பட்டன. அதை யோவாஸ் ராஜாவே பார்த்துக்கொண்டார்!
இன்றும்கூட யெகோவாவின் காணக்கூடிய அமைப்பு, கிடைக்கும் நன்கொடைகளையெல்லாம் யெகோவாவின் வணக்கத்தை முன்னேற்றுவிக்க பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறது. பூர்வ இஸ்ரவேலர்களைப் போலவே இன்றுள்ள உண்மை கிறிஸ்தவர்களும் மெய் வணக்கத்திற்கு இருதயப்பூர்வமான ஆதரவை அளித்திருக்கிறார்கள். கடந்த ஊழிய ஆண்டில் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க அவ்வாறு ஆதரவளித்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். உங்களுடைய நன்கொடைகள் எந்தெந்த வழிகளிலெல்லாம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
அதிகாரம் 34
“யெகோவாவை உறுதியாகப் பிடித்துக்கொண்டார்”
w11 5/1 பக். 15 பாரா. 1-3
உங்களுக்குத் தெரியுமா?
பழங்கால களிமண் முத்திரைகளில் இருக்கும் பெயர்களும் பைபிளில் இருக்கும் பெயர்களும் ஒத்துப்போகின்றனவா?
▪ பழங்காலத்தில், அதிகாரப்பூர்வ ஆவணங்களை எழுதியவர்கள் அதை சுருட்டி, ஒரு நூலால் கட்டி, அந்த முடிச்சுமேல் ஈரமான களிமண்ணை வைத்து, அதன்மேல் முத்திரை குத்தினார்கள். பத்திரங்கள் உண்மையானவை என்று அவற்றை உறுதிப்படுத்தவும், கையெழுத்து போடவும், சாட்சி அளிக்கவும் அச்சுகளை வைத்து முத்திரை குத்தினார்கள்.
முத்திரை குத்துவதற்காக சிலசமயங்களில் மோதிரங்கள் பயன்படுத்தப்பட்டன; அவை ரொம்ப விலைமதிப்புள்ளவையாக இருந்தன. (ஆதியாகமம் 38:18; எஸ்தர் 8:8; எரேமியா 32:44) பொதுவாக, முத்திரைகளில் சொந்தக்காரரின் பெயரும், அவருடைய அதிகாரப்பூர்வ பட்டப்பெயரும், அவருடைய அப்பாவின் பெயரும் இருந்தன.
ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான பழங்கால முத்திரைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சில நபர்களுடைய பெயர்கள் அந்தப் பழங்கால முத்திரைகள் சிலவற்றில் இருக்கின்றன. உதாரணத்துக்கு, யூதாவின் இரண்டு ராஜாக்களுக்குச் சொந்தமான முத்திரைகளைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றில் ஒரு முத்திரையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது: “யெகோதாமின் [யோதாமின்] [மகனான] யூதாவின் ராஜா ஆகாசுக்குச் சொந்தமானது.” இன்னும் சில முத்திரைகளில் இப்படி எழுதப்பட்டிருக்கின்றன: “ஆகாசின் [மகனான] யூதாவின் ராஜா எசேக்கியாவுக்குச் சொந்தமானது.” (2 ராஜாக்கள் 16:1, 20) ஆகாசும் எசேக்கியாவும் கிறிஸ்து வருவதற்கு 700-க்கும் அதிகமான வருஷங்களுக்கு முன்பு ஆட்சி செய்தார்கள்.
தேசங்களுக்கு எதிரான யெகோவாவின் ஆலோசனை
4 முதலாவதாக பெலிஸ்தர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படுகிறது. “ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்திலே உண்டான பாரம் [“தீர்ப்பு,” NW] என்னவென்றால்: முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.”—ஏசாயா 14:28, 29.
5 பெலிஸ்தியாவின் அச்சுறுத்தலை எதிர்க்கும் பலம் உசியா ராஜாவுக்கு இருந்தது. (2 நாளாகமம் 26:6-8) இந்த எதிரிகளுக்கு அவர் ஒரு சர்ப்பமாக தோன்றினார்; அவரது கோல் அவர்களை அடித்து வந்தது. உசியா இறந்தபோது ‘அவரது கோல் முறிந்தது.’ அதன்பின் உத்தமமுள்ள யோதாம் ஆளத் துவங்கினார், ஆனால் “ஜனங்கள் இன்னும் கேடானவைகளையே செய்துவந்தார்கள்.” அடுத்ததாக ஆகாஸ் ராஜாவானார், நிலைமையும் மாறியது. பெலிஸ்தர்கள் யூதாமீது படையெடுத்து வெற்றிகண்டனர். (2 நாளாகமம் 27:2; 28:17, 18) இப்போதோ மறுபடியும் நிலைமை மாறுகிறது. பொ.ச.மு. 746-ல் ஆகாஸ் ராஜா உயிரிழக்கவே, இளம் எசேக்கியா அரியணை ஏறுகிறார். இப்போதும் தங்களை அடக்க ஆளில்லை என பெலிஸ்தர்கள் நினைத்தால், அந்தோ பரிதாபம்! எசேக்கியா பராக்கிரமசாலியாக நிரூபிக்கிறார். உசியாவின் வம்சத்தைச் சேர்ந்தவரான (அவரது ‘வேரின்’ ‘கனியான’) எசேக்கியா, ‘பறக்கிற அக்கினி சர்ப்பம்போல்,’ எதிரிகள்மீது மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து தாக்குகிறார். சர்ப்பம் கொத்தி விஷமேற்றுவதுபோல் செயல்படுகிறார். இந்த விஷம் அக்கினி தகிப்பதைப் போன்ற எரிச்சலை ஏற்படுத்துகிறது.
6 மேற்கண்ட வர்ணனைக்கு பொருத்தமாகவே ‘[எசேக்கியா] பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும் . . . முறியடித்தார்.’ (2 இராஜாக்கள் 18:8) அசீரிய ராஜா சனகெரிபின் சரித்திரப் பதிவுகளின்படி பெலிஸ்தர்கள் எசேக்கியா ராஜாவின் ஆதிக்கத்திற்கு ஆளானார்கள். “எளியவர்கள்,” அதாவது பலவீனமாக்கப்பட்ட யூதா ராஜ்யம் பாதுகாப்பையும் செல்வசெழிப்பையும் அனுபவித்த அதேசமயத்தில் பெலிஸ்தியா பஞ்சத்தால் வாடியது.—ஏசாயா 14:30, 31-ஐ வாசியுங்கள்.
g 12/10 பக். 27 பாரா. 3-5
பைபிளை நம்பலாமா?—பகுதி 2
கி.மு. 740-ல் இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யத்துக்குத் தலைநகரமாக இருந்த சமாரியாவை அசீரியா கைப்பற்றியது. அங்கிருந்த மக்களையும் பிடித்துக்கொண்டு போனது. எட்டு வருஷங்களுக்குப் பிறகு, யூதாவுக்கு எதிராக அசீரியா படையெடுத்து வந்தது. (2 ராஜாக்கள் 18:13) அசீரிய ராஜா சனகெரிப் யூதாவின் ராஜாவான எசேக்கியாவிடம் 30 தாலந்து தங்கத்தையும் 300 தாலந்து வெள்ளியையும் அபராதமாகக் கட்டச் சொன்னான். அந்த அபராதத்தை எசேக்கியா கட்டினார் என்று பைபிள் சொல்கிறது. ஆனாலும், சனகெரிப்புக்கு அது போதவில்லை. யூதாவின் தலைநகரமான எருசலேமை எந்தக் கேள்வியும் கேட்காமல் சரணடையச் சொன்னான்.—2 ராஜாக்கள் 18:9-17, 28-31.
நினிவேயில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ஒரு களிமண் கல்வெட்டு இந்தச் சம்பவம் உண்மை என்பதைக் காட்டுகிறது. ஆறு-பக்கங்கள் இருக்கிற அந்தக் களிமண் கல்வெட்டில் அசீரிய ராஜா இப்படிப் பெருமையடித்திருந்தான்: “யூதனான எசேக்கியா என்னிடம் சரணடையவில்லை. அதனால், அவனுடைய எல்லைக்குள் இருந்த 46 பலம்படைத்த நகரங்களையும், கோட்டைகளையும், ஏராளமான சின்ன சின்ன கிராமங்களையும் கைப்பற்றினேன். . . . அவனை [எசேக்கியாவை] அவனுடைய அரண்மனையிலேயே—எருசலேமிலேயே—அடைந்துகிடக்க செய்தேன். கூண்டுக்குள் சிக்கிய பறவைப்போல் அவன் இருந்தான்.” எசேக்கியா “30 தாலந்து தங்கத்தையும், 800 தாலந்து வெள்ளியையும், விலைமதிப்புள்ள கற்களையும், . . . இன்னும் நிறைய விலைமதிப்புள்ள பொக்கிஷங்களையும்,” தனக்கு அபராதமாகக் கொடுத்ததாக சனகெரிப் அதில் குறிப்பிட்டிருந்தான். ஆனால், உண்மையில் எசேக்கியா அவ்வளவு தாலந்து வெள்ளியைக் கொடுக்கவில்லை; சனகெரிப் வீண்பெருமை அடித்திருக்கிறான்.
கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எருசலேமைக் கைப்பற்றியதாக சனகெரிப் குறிப்பிடவில்லை. சொல்லப்போனால், அவன் எருசலேமைத் தாக்கப்போனபோது, கடவுள் அவனுடைய படையை மொத்தமாக அழித்ததைப் பற்றி அவன் எதுவுமே சொல்லவில்லை. ஆனால், ஒரு தேவதூதர் அங்கிருந்த 1,85,000 அசீரிய வீரர்களை ஒரே ராத்திரியில் கொன்றுபோட்டார் என்று பைபிள் சொல்கிறது. (2 ராஜாக்கள் 19:35, 36) ஜாக் ஃபினகன் என்ற அறிஞர் இப்படிச் சொல்கிறார்: “பொதுவாகவே, அசீரிய ராஜாக்கள் தங்களுடைய பெருமைகளைப் பற்றியும் தாங்கள் சாதித்த விஷயங்களைப் பற்றியும் மட்டும்தான் கல்வெட்டுகளில் பதிவு செய்தார்கள். அதனால், சனகெரிப் இந்தப் படுதோல்வியைப் பற்றிப் பதிவு செய்யாததில் எந்த ஆச்சரியமும் இல்லை.”
w09 5/1 பக். 27 பாரா. 3-5
உங்களுக்குத் தெரியுமா?
எருசலேமில் எசேக்கியா உண்மையில் ஒரு தண்ணீர் சுரங்கத்தைக் கட்டினாரா?
கி.மு. 745-லிருந்து கி.மு. 717-வரை எசேக்கியா, யூதாவை ஆட்சி செய்தார். அந்தச் சமயத்தில் அசீரியா, யூதாவைச் சுற்றியிருந்த நிறைய நகரங்களைக் கைப்பற்றிக்கொண்டிருந்தது. அதனால், எருசலேமைப் பாதுகாப்பதற்கும், போர் காலத்தில் நகரத்தில் இருந்த மக்களுக்குத் தண்ணீர் கிடைப்பதற்கும் எசேக்கியா நிறைய விஷயங்களைச் செய்ததாக பைபிள் சொல்கிறது. அதில் ஒன்று, நகரத்துக்குள் ஊற்றுத்தண்ணீர் வருவதற்காக 1,749 அடி [533 மீட்டர்] நீளமுள்ள ஒரு தண்ணீர் சுரங்கத்தை எசேக்கியா கட்டினார்.—2 ராஜாக்கள் 20:20; 2 நாளாகமம் 32:1-7, 30.
அந்த மாதிரி ஒரு தண்ணீர் சுரங்கம் கி.பி. 1880-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு எசேக்கியாவின் சுரங்கம் என்றும் சீலோவாமின் சுரங்கம் என்றும் பெயர் வைக்கப்பட்டது. அந்தச் சுரங்கத்துக்குள் சில வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்தச் சுரங்கத்தின் வேலைகள் முடியப்போகும் சமயத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி அது சொன்னது. அந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருந்த விதத்தை வைத்து, அது எசேக்கியாவின் காலத்தைச் சேர்ந்ததுதான் என்று நிறைய அறிஞர்கள் சொன்னார்கள். ஆனால், அதன்பிறகு சில அறிஞர்கள், எசேக்கியாவின் காலத்திலிருந்து 500 வருஷங்களுக்குப் பிறகுதான் அந்தச் சுரங்கம் கட்டப்பட்டதாகச் சொன்னார்கள். அந்தச் சுரங்கம் சரியாக எந்தச் சமயத்தில் கட்டப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க, 2003-ல் சில இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியை நடத்தினார்கள். அவர்கள் என்ன முடிவுக்கு வந்தார்கள்?
எருசலேமின் எபிரெய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஆமோஸ் ஃப்ரம்கின் இப்படிச் சொல்கிறார்: “சுரங்கத்தின் சுவர்கள், கூரைகளில் படிந்திருந்த கனிமங்கள் ஆகியவற்றில் செய்யப்பட்ட சோதனைகள், இந்தச் சுரங்கம் எசேக்கியாவின் காலத்தில் கட்டப்பட்டதுதான் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கின்றன.” நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகையில் இருந்த ஒரு கட்டுரை இப்படிச் சொன்னது: “அறிவியல் சோதனைகள், பழங்கால எழுத்துகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் வரலாற்று பதிவுகள் என எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது இந்தச் சுரங்கம் கிட்டத்தட்ட கி.மு. 700-ல் கட்டப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதே காலப்பகுதியைச் சேர்ந்த வேறு எந்தக் கட்டமைப்புகளையும்விட, சீலோவாம் சுரங்கம் இந்தக் காலத்தைச் சேர்ந்ததுதான் என்பதற்கு இவை ரொம்ப துல்லியமான ஆதாரங்களாக இருக்கின்றன.”
w13 11/15 பக். 18-20 பாரா. 9-18
‘ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளும்’—இன்று யார்?
9 ஏசாயா சொன்னபடியே அசீரியர்கள் இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தைக் கைப்பற்றி மக்களை நாடு கடத்தினார்கள். இவ்வாறு தாவீதின் சிங்காசனத்தை அபகரிக்க இஸ்ரவேல் போட்ட திட்டம் தவிடுபொடியானது. ஆனால், அசீரியாவின் திட்டங்கள் என்ன ஆனது? அது யூதாவின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியது. “யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்.” சனகெரிப் மொத்தம் 46 பட்டணங்களைக் கைப்பற்றினான். முன்னேறி வந்த அசீரிய படைகள், யூதாவின் பட்டணங்களை ஒவ்வொன்றாக முறியடித்தன. நீங்கள் அச்சமயத்தில் எருசலேமில் வாழ்ந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பீர்கள்?—2 இரா. 18:13.
10 வரவிருந்த ஆபத்தை எசேக்கியா அறிந்திருந்தாலும் பதற்றமடைந்து தன் அப்பாவைப்போல் புற தேசத்தாரின் உதவியை நாடாமல் யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்தார். (2 நா. 28:20, 21) எசேக்கியாவின் காலத்தில் வாழ்ந்த மீகா தீர்க்கதரிசி, அசீரியாவை குறித்து முன்னறிவித்த வார்த்தைகள் அவர் நினைவுக்கு வந்திருக்கலாம்: “ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு [அசீரியாவுக்கு] விரோதமாக நிறுத்துவேன். . . . இவர்கள் அசீரியா தேசத்தை . . . பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்.” (மீ. 5:5, 6) கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் எசேக்கியாவை நிச்சயம் உற்சாகப்படுத்தியிருக்கும். ஏனென்றால், அசீரியாவைத் தோற்கடிக்க யெகோவா ஒரு வித்தியாசமான சேனையை எழும்பச் செய்வார் என்று அந்த வார்த்தைகள் காட்டின.
11 ஏழு மேய்ப்பர்களையும் எட்டு அதிபதிகளையும் பற்றிய அந்தத் தீர்க்கதரிசனத்தின் முக்கிய நிறைவேற்றம் “இஸ்ரவேலை ஆளப்போகிற” இயேசுவின் பிறப்புக்குப் பல வருடங்களுக்குப் பிறகே நிறைவேறவிருந்தது. (மீகா 5:1, 2-ஐ வாசியுங்கள்.) ஆம், நவீன கால “அசீரியன்”, யெகோவாவின் மக்களை துடைத்தழிக்க நினைக்கும் காலத்தில் அந்த வார்த்தைகள் நிறைவேறும். இந்தத் திகிலூட்டும் எதிரியை எதிர்க்க யெகோவா என்ன செய்வார்? இயேசுவின் தலைமையில் எந்தச் சேனையை யெகோவா ஏற்பாடு செய்வார்? இப்போது பார்க்கலாம். ஆனால், அசீரியர்களுக்கு விரோதமாக எசேக்கியா எடுத்த நடவடிக்கைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று முதலில் பார்க்கலாம்.
எசேக்கியா எடுத்த நடவடிக்கைகள்
12 நம்மால் செய்ய முடியாததை யெகோவா நமக்காக செய்யத் தயாராக இருக்கிறார். ஆனால், முடிந்ததைச் செய்ய நாம் முயற்சிக்கிறோமா என்று அவர் கவனிக்கிறார். எசேக்கியா ‘தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினார்.’ பிறகு, அனைவரும் சேர்ந்து ‘நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட்டார்கள் . . . அவர் [எசேக்கியா] திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி . . . திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும் பண்ணினார்.’ (2 நா. 32:3-5) எசேக்கியா, அவருடைய பிரபுக்கள், விசுவாசமுள்ள தீர்க்கதரிசிகள் போன்ற அநேக பராக்கிரமசாலிகளைப் பயன்படுத்தி யெகோவா தம்முடைய மக்களை அன்று பாதுகாத்தார், வழிநடத்தினார்.
13 ஊற்றுகளை அடைப்பதையும் மதிலைக் கட்டுவதையும்விட எசேக்கியா அடுத்து செய்ததுதான் மிக முக்கியமானது. அக்கறையுள்ள மேய்ப்பனாக இருந்ததால் தன்னுடைய மக்களை ஒன்றுகூட்டி பின்வரும் வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினார்: “அசீரியா ராஜாவுக்கு . . . பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே.” ஆம், யெகோவா தம்முடைய மக்களுக்காகப் போர் செய்வார். விசுவாசத்தைப் பலப்படுத்தும் எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் இவை! “யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.” ‘அந்த வார்த்தைகள்’ மக்களை பலப்படுத்தின. தம்முடைய தீர்க்கதரிசி மூலம் யெகோவா முன்னறிவித்தபடியே எசேக்கியா, அவருடைய பிரபுக்கள், மற்ற பராக்கிரமசாலிகள், தீர்க்கதரிசிகளான மீகா, ஏசாயா போன்றவர்கள் தாங்கள் சிறந்த மேய்ப்பர்கள் என்பதை நிரூபித்தார்கள்.—2 நா. 32:7, 8; மீகா 5:5, 6-ஐ வாசியுங்கள்.
14 எருசலேமுக்குத் தென்மேற்கே லாகீஸ் என்ற இடத்தில் அசீரிய ராஜா முகாமிட்டான். அங்கிருந்து எருசலேமுக்குத் தூதுவர்களை அனுப்பி, சரணடையச் சொல்லி மூன்று முறை கட்டளையிட்டான். ரப்சாக்கே என்ற பட்டப்பெயரைக் கொண்ட அவனுடைய பிரதிநிதி பல சூழ்ச்சிகளைக் கையாண்டான். யூதர்களின் சொந்த மொழியான எபிரெய பாஷையில் பேசி மக்களை ஏமாற்ற நினைத்தான். எசேக்கியாவின் பேச்சைக் கேட்காமல், அசீரியரின் பக்கம் சேர்ந்துகொள்ளும்படி யூதர்களை ஊக்குவித்தான். அவர்களை வேறு இடத்திற்கு மாற்றி வசதியாக வாழ வைப்பதாகப் பொய் சொல்லி, ஆசை காட்டி மோசம்போக்க நினைத்தான். (2 இராஜாக்கள் 18:31, 32-ஐ வாசியுங்கள்.) மற்ற தேசங்களின் தெய்வங்கள் எப்படி அசீரியாவின் பிடியிலிருந்து அவர்களது பக்தர்களைக் காப்பாற்ற முடியாமல் போனதோ அப்படியே யெகோவாவும் யூதர்களைக் காப்பாற்ற முடியாது என்று ரப்சாக்கே சொன்னான். இன்று போலவே அன்றும் யெகோவாவின் மக்கள் ஞானமாகச் செயல்பட்டு இப்படிப்பட்ட பொய் பிரச்சாரத்திற்கு மௌனம் சாதித்தார்கள்.—2 இராஜாக்கள் 18:35, 36-ஐ வாசியுங்கள்.
15 எசேக்கியா கலக்கம் அடைந்திருந்தாலும் வேறொரு நாட்டின் உதவியை நாடுவதற்குப் பதிலாக ஏசாயா தீர்க்கதரிசியை வரவழைத்தார். எசேக்கியாவிடம் ஏசாயா இவ்வாறு சொன்னார்: “அவன் [சனகெரிப்] இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை.” (2 இரா. 19:32) எருசலேமில் இருந்தவர்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தாலே போதும், யெகோவா அவர்களுக்குப் பதிலாக போர் புரிவார், அவ்வாறே போர் புரிந்தார். ‘அன்று இராத்திரியில் . . . கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தி எண்பத்தைந்தாயிரம் பேரைச் சங்கரித்தார்.’ (2 இரா. 19:35) ஆம், யூதாவுக்கு வெற்றி கிடைத்தது. எசேக்கியா ஊற்றுகளை அடைத்ததாலும் மதிலை உயரமாக உயர்த்தியதாலும் அல்ல, யெகோவா தேவனால்தான் வெற்றி கிடைத்தது.
நமக்கு என்ன பாடம்?
16 ஏழு மேய்ப்பர்களையும் எட்டு அதிபதிகளையும் பற்றிய தீர்க்கதரிசனத்தின் முக்கிய நிறைவேற்றம் நம் நாளில் நடைபெறும். பூர்வ எருசலேமின் குடிகள் அசீரியர்களால் தாக்கப்பட்டார்கள். அதேபோல், யெகோவாவின் மக்களை நவீனகால “அசீரியன்”, மிக விரைவில் துடைத்தழிக்கப் பார்ப்பான். அந்த அசீரியனின் தாக்குதலோடு, ‘மாகோகு தேசத்தானான கோகின்’ தாக்குதல்... ‘வடதிசை ராஜாவின்’ தாக்குதல்... ‘பூமியின் ராஜாக்கள்’ நடத்தும் தாக்குதல்... பற்றியும் பைபிள் குறிப்பிடுகிறது. (எசே. 38:2, 10-13; தானி. 11:40, 44, 45; வெளி. 17:14; 19:19) இவை நான்கு வெவ்வேறு தாக்குதல்களைக் குறிக்கிறதா? இதற்கான பதில் இப்போது தெரியாது. ஒரே தாக்குதலை பல பெயர்களால் பைபிள் அழைத்திருக்கலாம். அந்தக் கொடூரமான ‘அசீரியனுக்கு’ விரோதமாக யெகோவா எழுப்பப்போகும் ‘ரகசிய ஆயுதம்’ எது? ‘ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளுமே’ அது. (மீ. 5:5) இவர்கள் சபை மூப்பர்களைக் குறிக்கிறார்கள். (1 பே. 5:2) இன்று, யெகோவா தம்முடைய மக்களை வழிநடத்தவும் “அசீரியன்” தாக்குவதற்கு முன் அவர்களைப் பலப்படுத்தவும் ஏராளமான ஆன்மீக மேய்ப்பர்களை ஏற்படுத்தியிருக்கிறார். மீகா தீர்க்கதரிசனத்தின்படி அவர்கள் ‘அசீரியா தேசத்தை . . . பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்.’ (மீ. 5:6) ஆம், எதிரியைத் தோற்கடிக்க உதவும் ‘போராயுதங்களில்’ ஒன்றான ‘வாளை’, அதாவது ‘கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கிற’ அவரது வார்த்தையை, அவர்கள் பயன்படுத்துவார்கள்.—2 கொ. 10:4; எபே. 6:17.
17 இந்தக் கட்டுரையிலிருந்து மூப்பர்கள் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்: (1) ‘அசீரியனுடைய’ தாக்குதலுக்குத் தயாராக வேண்டுமானால், கடவுள்மீது தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தையும் சபையார் வைத்திருக்கும் விசுவாசத்தையும் பலப்படுத்த வேண்டும். (2) “அசீரியன்” தாக்கும்போது யெகோவா நிச்சயம் விடுவிப்பார் என்று உறுதியாக நம்ப வேண்டும். (3) அந்தச் சமயத்தில், யெகோவாவின் அமைப்பிடமிருந்து கிடைக்கும் வழிநடத்துதல் நடைமுறைக்கு ஒத்துவராததாகத் தோன்றினாலும், அதற்குக் கீழ்ப்படிய மூப்பர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். (4) உலகக் கல்வி, சொத்துபத்து, மனித அமைப்புகள் போன்றவற்றில் நம்பிக்கை வைப்பவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள இதுவே சரியான நேரம். எனவே, விசுவாசத்தில் தள்ளாடுவோருக்கு உதவ மூப்பர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
18 எசேக்கியாவின் நாட்களில் எருசலேமிலிருந்த யூதர்களைப்போல், இன்று கடவுளுடைய மக்களாகிய நாமும் ஆதரவற்றவர்கள் போல இருக்கும் காலம் வரும். அப்போது எசேக்கியாவின் வார்த்தைகளிலிருந்து நாம் ஊக்கம் பெறலாம். நம்முடைய எதிரிகளிடம் இருப்பது ‘மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW]’ என்று நாம் ஒருபோதும் மறந்துவிடாதிருப்போமாக!—2 நா. 32:8.
அதிகாரம் 35
தைரியமாகத் திருந்தி வாழ்ந்தார்
கடவுளுடைய ராஜ்யம் சாதிக்கப் போகிறவை
5 ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன்பு கானானில் நிலவிய நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் வேறுபாடு இல்லை. “கர்த்தர் [“யெகோவா,” NW] வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே” என பைபிள் சொல்லுகிறது. (உபாகமம் 12:31) “அந்த ஜாதிகளுடைய துன்மார்க்கத்தினிமித்தம் உன் கடவுளாகிய யெகோவா அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்” என இஸ்ரவேலரிடம் யெகோவா தெரிவித்தார். (உபாகமம் 9:5, தி.மொ.) பைபிள் சரித்திராசிரியர் ஹென்ரி எச். ஹாலி குறிப்பிட்டதாவது: “பாகால், அஸ்தரோத், இன்னும் அநேக கானானிய தெய்வங்களின் வணக்கத்தில் கட்டுப்பாடற்ற காம வெறியாட்டங்கள் உட்பட்டிருந்தன; அந்த ஆலயங்கள் தீயசெயல்களின் பிறப்பிடமாக விளங்கின.”
6 எல்லை கடந்த அவர்களுடைய துன்மார்க்கத்தை ஹாலி சுட்டிக்காட்டினார். அத்தகைய ஓரிடத்தில், “பாகாலுக்குப் பலிசெலுத்தப்பட்ட பிள்ளைகளுடைய எஞ்சிய உடல் பாகங்கள் அடங்கிய எக்கச்சக்கமான ஜாடிகளை” தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அவர் சொன்னதாவது: “அந்த பகுதி முழுவதுமே பச்சிளங்குழந்தைகளின் ‘கல்லறையாய்’ இருந்தது. . . . கானானியர், மத சடங்காக தங்கள் தெய்வங்களின் முன்னிலையில் பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டனர்; பின்பு, அதே தெய்வங்களுக்கு தங்கள் தலைப்பிள்ளைகளை பலி கொடுப்பதாக சொல்லி கொலையும் செய்தனர்; இதுதான் அவர்கள் வணக்கமுறை. இந்த கானான் தேசம் முழுவதும் ஒருவிதத்தில் சோதோம் கொமோராவை ஒத்திருந்ததாகவே தோன்றுகிறது. . . . படுமோசமான ஒழுக்கக்கேடும் மிருகத்தனமான நடத்தையுமிக்க நாகரிகத்தைத் தொடர்ந்து விட்டுவைப்பது சரிதானா? . . . கானானிய நகரங்களின் இடிபாடுகளைத் தோண்டும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், கடவுள் ஏன் வெகு காலத்துக்கு முன்னரே இதை அழிக்காமல் விட்டு வைத்தார் என எண்ணி ஆச்சரியப்படுகின்றனர்.”
gl பக். 10 பாரா 5, அடிக்குறிப்பு
இஸ்ரவேலும் அதன் சுற்றுப்புறங்களும்
எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலை பெற்று வந்த சமயத்தில் எமோரியரே செல்வாக்குமிக்க இனத்தவராக இருந்திருக்கலாம். (உபா 1:19-21; யோசு 24:15) அவர்கள் தெற்கே அர்னோன் நதிப் பள்ளத்தாக்கு வரையிருந்த மோவாபியரின் தேசத்தை கைப்பற்றியிருந்தனர். என்றாலும் எரிகோவிற்கு மறுபுறம் அமைந்த பகுதி, ‘மோவாபின் சமனான வெளிகள்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. பாசானையும், கீலேயாத்தையும்கூட எமோரிய ராஜாக்கள் ஆண்டனர்.—எண் 21:21-23, 33-35; 22:1; 33:46-51.
[அடிக்குறிப்பு]
“கானானியர்” என்ற பதத்தைப் போலவே “எமோரியர்” என்ற பதமும் அந்த தேசத்தின் மக்களை மொத்தமாக குறிக்கலாம் அல்லது குறிப்பிட்ட இனத்தவரை குறிக்கலாம்.—ஆதி 15:16; 48:22.
it “மனாசே” எண் 4 பாரா 2
மனாசே
யெகோவாவின் அறிவுரையைக் கேட்டு நடக்காததால் மனாசே தண்டிக்கப்பட்டார். அவரை அசீரிய ராஜா கைது செய்து பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போனான். பாபிலோன், அசீரியாவின் அரச நகரங்களில் ஒன்றாக இருந்தது. (2நா 33:10, 11) “ஹட்டியையும் கடற்கரைப் பகுதிகளையும் தீவுகளையும் ஆட்சி செய்த” 22 ராஜாக்கள் தனக்குக் கப்பம் கட்டியதாக அசீரிய ராஜாவான எசரத்தோன் சொல்லியிருக்கிறான். அந்த ராஜாக்களின் பட்டியலில் ‘யூதாவின் மனாசே’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதோடு, அசூர்பானிபால் ராஜாவுக்குக் கப்பம் கட்டிய ராஜாக்களுடைய பட்டியலிலும் மனாசேயின் பெயர் இருக்கிறது.—ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ், ஜே. பிரிட்சார்டு என்பவரால் திருத்தப்பட்டது, 1974, பக். 291, 294.
வழிநடத்துதலுக்கும் பாதுகாப்புக்கும் யெகோவாவையே நம்பியிருத்தல்
4 அசீரியர்களின் போர் முறைகள் மிக மிக குரூரமானவை. அசீரிய மாவீரர்கள், போர் கைதிகளுடைய மூக்கிலோ அல்லது உதட்டிலோ கொக்கி மாட்டி இழுத்துச் செல்வதை அந்தக் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளில் காணலாம். சில கைதிகளுடைய கண்களை ஈட்டியால் நோண்டியெடுத்து குருடாக்கினர். ஒரு போரில் கைதிகளுடைய அங்கங்களை வெட்டி, தலைகளை ஒரு குவியலாகவும், கை கால்களை ஒரு குவியலாகவும் நகரத்திற்கு வெளியே கொட்டி குவித்தனர் என ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. கைதிகளுடைய பிள்ளைகளையோ தீயில் சுட்டெரித்தனர். இப்படிப்பட்ட குரூரச் செயல்கள் அசீரியர்களுடைய எதிரிகளின் மனங்களில் கிலியை உண்டுபண்ணின. இது அவர்களுடைய ராணுவத்திற்கு அனுகூலமாக இருந்தது. ஏனென்றால், அவர்களுடைய படைக்கு எதிராக வருவதற்கு யாருக்குமே அது துணிவைத் தரவில்லை.
it “தூக்குநூல்” பாரா 2
தூக்குநூல்
ஒரு கட்டிடத்தைச் சரியாகக் கட்டுவதற்கு தூக்குநூல் (தூக்குக்குண்டு அல்லது மட்டப்பலகை) பயன்படுத்தப்படலாம். அல்லது, ஒரு கட்டிடம் நல்ல நிலையில் இருக்கிறதா இல்லையா, அதைப் பாதுகாக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு பண்ணுவதற்கு அது பயன்படுத்தப்படலாம். “சமாரியாவை அளந்த அதே அளவுநூலால் எருசலேமையும் அளப்பேன்; ஆகாப் வீட்டாருக்குப் பயன்படுத்திய அதே தூக்குநூலை எருசலேமுக்கும் பயன்படுத்துவேன்” என்று யெகோவா சொல்லியிருந்தார். அவர் ஏற்கெனவே சமாரியாவை அளந்து பார்த்து, ஆகாப் ராஜாவின் வம்சத்தார் மோசமாக வாழ்ந்துவந்ததாக முடிவு செய்திருந்தார். அதனால், அவர்களை அழித்தார். அதேபோல், அவர் எருசலேமையும் அதன் ராஜாக்களையும் நியாயந்தீர்த்து, அவர்களுடைய அக்கிரமத்தை அம்பலமாக்கப்போவதாகவும், அந்த நகரத்தை அழிக்கப்போவதாகவும் சொன்னார். இது கி.மு. 607-ல் நடந்தது. (2ரா 21:10-13; 10:11) எருசலேமை ஆட்சி செய்தவர்களுக்கும் அங்கிருந்த மோசமான ஆட்களுக்கும் வரப்போகும் அழிவைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா இப்படிச் சொன்னார்: “நான் நியாயத்தை அளவுநூலாக ஆக்குவேன். நீதியை மட்டப்பலகையாக ஆக்குவேன்.” யாரெல்லாம் உண்மையிலேயே யெகோவாவின் ஊழியர்கள், யாரெல்லாம் அவருடைய ஊழியர்கள் இல்லை என்பதை அவருடைய நீதியான தராதரங்கள் காட்டிக்கொடுத்துவிடும். அதைப் பொறுத்து, அவர்கள் ஒன்று பாதுகாக்கப்படுவார்கள் (காப்பாற்றப்படுவார்கள்) அல்லது அழிக்கப்படுவார்கள்.—ஏசா 28:14-19.
‘யெகோவாவின் தயவைத் தேடினார்’
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
“என்னை நினைத்து எனக்கே வெறுப்பாக இருந்தது” என்று ஒருவர் சொன்னார். அவர் சிறுவயது முதல் கடவுளுடைய நீதிநெறிகளை அறிந்திருந்தார்; என்றாலும், அதன்படி வாழாமல் விட்டுவிட்டார். பிறகு, தவறை உணர்ந்து தன் பாதையை மாற்றிக்கொள்ள அவர் முயற்சி செய்தபோது, கடவுள் தன்னை மன்னிக்கவே மாட்டார் என்று நினைத்தார். ஆனால், பைபிளிலிருந்து மனாசேயின் பதிவை வாசித்தபோது அவருடைய மனதில் நம்பிக்கை துளிர்த்தது; இந்தப் பதிவு 2 நாளாகமம் 33:1-17-ல் உள்ளது. கடந்த கால பாவங்களை நினைத்து நீங்களும் இவரைப் போலவே உணர்ந்தீர்கள் என்றால், மனாசேயின் வாழ்க்கைச் சரிதையைப் படிப்பது உங்களுக்கு ஆறுதலைத் தரும்.
மனாசே கடவுள் பயமுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டார். அவருடைய அப்பா எசேக்கியா, யூதாவின் தலைசிறந்த ராஜாக்களில் ஒருவராக இருந்தார். எசேக்கியாவின் ஆயுளைக் கடவுள் அற்புதமாகக் கூட்டியதற்குப் பிற்பாடு, கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து மனாசே பிறந்தார். (2 இராஜாக்கள் 20:1-11) அதனால், கடவுள் தன்மீது இரக்கப்பட்டு தனக்கு இந்த மகனைப் பரிசாகத் தந்திருப்பதாக எசேக்கியா கருதினார்; தன் மகனுக்கு உண்மை வழிபாட்டின்மீது அன்பை ஊட்டி வளர்க்க முயன்றார். ஆனால், பெற்றோருக்குக் கடவுள் பயம் இருந்தால் பிள்ளைகளுக்கும் கடவுள் பயம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. மனாசேயின் விஷயத்திலும் இதுவே உண்மை.
மனாசேவுக்குக் கிட்டத்தட்ட 12 வயதாக இருந்தபோது அவருடைய அப்பா இறந்துவிட்டார். வருத்தகரமாக, ‘அவர் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்.’ (வசனங்கள் 1, 2) உண்மை வழிபாட்டைத் துளியும் மதிக்காத ஆலோசகர்களின் செல்வாக்கால் இந்த இளம் ராஜா இப்படிச் செய்தாரா? அதைக் குறித்து பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், மனாசே சிலை வழிபாட்டிலும் கொடூரச் செயல்களிலும் மிதமிஞ்சி ஈடுபட்டார் என்பதை பைபிள் ஒத்துக்கொள்கிறது. அவர் பொய்க் கடவுட்களுக்குப் பலிபீடங்களைக் கட்டினார், சொந்த மகன்களையே பலியிட்டார், ஆவியுலகத் தொடர்பிலும் ஈடுபட்டார், எருசலேமில் இருந்த யெகோவாவின் ஆலயத்திலேயே அருவருப்பான உருவச் சிலையை நிறுவினார். யெகோவா அவருக்குக் கொடுத்த எச்சரிப்புகளுக்கெல்லாம் தன் காதுகளை அடைத்துக்கொண்டார். இத்தனைக்கும் அவருடைய அப்பாவின் ஆயுளை யெகோவா அற்புதமாகக் கூட்டியதால்தான் அவரே இந்தப் பூமியில் பிறந்தார்; அப்படியிருந்தும் யெகோவாவின் எச்சரிப்புகளை உதறித்தள்ளினார்.—வசனங்கள் 3-10.
அதனால், பாபிலோனியர் அவரைச் சங்கிலியால் கட்டி நாடுகடத்த யெகோவா விட்டுவிட்டார். அங்கே சிறையிலிருந்த மனாசேவுக்குத் தன் வாழ்க்கையைப் பின்நோக்கிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. உயிரோ சக்தியோ இல்லாத அந்த சிலைகளால் தன்னைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டாரா? கடவுள் பயமுள்ள தன் அப்பா சிறுவயது முதல் தனக்குக் கற்பித்த விஷயங்களை அசைபோட்டு பார்த்தாரா? இப்படியெல்லாம் செய்தாரா இல்லையா என்று நமக்குத் தெரியாது; ஆனால், அவருடைய மனம் மாறியது என்பது மட்டும் நமக்கு நன்றாகத் தெரியும். பைபிள் பதிவு இவ்வாறு சொல்கிறது: “அவர் தன் கடவுளாகிய யெகோவாவின் தயவைத் தேடி தன்னை மிகவும் தாழ்த்தினார். . . . அவர் தொடர்ந்து ஜெபம் செய்தார்.” (வசனங்கள் 12, 13, NW) என்றாலும், இப்படிப்பட்ட படுமோசமான பாவங்களைச் செய்த ஒருவரைக் கடவுள் மன்னிப்பாரா?
மனாசே காட்டிய உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலைப் பார்த்து யெகோவா மனமுருகிப்போனார். இரக்கம் காட்டும்படி அவர் கெஞ்சியதை யெகோவா கேட்டு, ‘அவரை எருசலேமுக்குத் திரும்ப வரப்பண்ணி அரசதிகாரத்தைத் தந்தார்.’ (வசனம் 13) மனாசே தான் மனந்திரும்பியதை எப்படிக் காட்டினார்? தான் செய்திருந்த தவறுகளைச் சரிசெய்ய எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார்; தன்னுடைய தேசத்திலிருந்து சிலை வழிபாட்டை அகற்றி, ‘யெகோவாவைச் சேவிக்கும்படி’ மக்களுக்குக் கட்டளையிட்டார்.—வசனங்கள் 15-17.
கடந்த கால தவறுகள் காரணமாக ‘கடவுளுடைய மன்னிப்பைப் பெற எனக்கு அருகதையில்லை’ என நீங்கள் நினைத்தால், மனாசேயின் உதாரணம் உங்கள் மனதுக்குத் தெம்பூட்டும். இவரைப் பற்றிய பதிவு கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளில் உள்ளது. (ரோமர் 15:4) ஆம், யெகோவா “மன்னிக்கத் தயாராய் இருக்கிறார்” என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார். (சங்கீதம் 86:5, NW) ஒருவர் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறார் என்பதை அல்ல, அவர் எந்தளவு மனந்திரும்பியிருக்கிறார் என்பதையே யெகோவா பார்க்கிறார். எனவே, தன்னுடைய பாவங்களை நினைத்து மனம் வருந்தி ஜெபம் செய்கிற ஒருவர், தவறான வழிகளை மாற்றிக்கொண்டு, சரியானதைச் செய்வதற்கு பெருமுயற்சி செய்தால் மனாசேயைப் போல, ‘யெகோவாவின் தயவை’ பெறலாம்.—ஏசாயா 1:18; 55:6, 7.
அதிகாரம் 36
யெகோவாவிடம் திரும்பிவர மக்களுக்கு உதவினார்
சாப்பானும் அவருடைய குடும்பத்தாரும் உங்களுக்கு பரிச்சயமானவர்களா?
சுமார் பொ.ச.மு. 642-ல் யோசியா உண்மை வணக்கத்தை திரும்ப நிலைநாட்டியதைப் பற்றி பைபிள் கூறும்போது ‘மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பானை’ நமக்கு அறிமுகப்படுத்துகிறது. (2 இராஜாக்கள் 22:3) அதைத் தொடர்ந்து வந்த 36 ஆண்டுகளில், பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படும் வரையான காலத்தில் நாம் அவருடைய நான்கு மகன்கள் அகீக்காம், எலாசா, கெமரியா, யசனியா பற்றியும் அவருடைய இரண்டு பேரன்கள் மிகாயா, கெதலியா ஆகியோரைப் பற்றியும் தெரிந்துகொள்கிறோம். (அட்டவணையைப் பார்க்கவும்.) “சாப்பானின் குடும்பமே [யூதா ராஜ்யத்தில்] அதிகார வர்க்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி யோசியாவின் காலம் முதல் நாடு கடத்தப்படும் வரையில் ராஜாவின் சம்பிரதியாக பதவி வகித்துவந்தனர்” என என்ஸைக்ளோப்பீடியா ஜுடேயிக்கா விளக்குகிறது. சாப்பானையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி பைபிள் கூறுவதை மறுபார்வை செய்வது, அவர்கள் எரேமியா தீர்க்கதரிசியையும் யெகோவாவின் உண்மை வணக்கத்தையும் எவ்வாறு ஆதரித்தார்கள் என்பதை புரிந்துகொள்ள உதவிசெய்யும்.
சாப்பான் உண்மை வணக்கத்தை ஆதரித்தார்
பொ.ச.மு. 642-ல் யோசியா அரசன் 25 வயதுள்ளவராய் இருந்தபோது, சாப்பானே அவரது செயலராகவும் நகல் எடுப்பவராகவும் சேவித்துக் கொண்டிருப்பதை நாம் அறிகிறோம். (எரேமியா 36:10) அந்த வேலையில் என்ன உட்பட்டிருந்தது? அரண்மனை சம்பிரதியும் செயலருமாக இருந்தவர் ராஜாவின் அந்தரங்க ஆலோசகராக இருந்தார். பண விஷயங்களில் பொறுப்புள்ளவராக இருந்தார். அவர் ராஜ தந்திரியாக, அயல்நாட்டு விவகாரங்கள், சர்வதேச சட்டம், வியாபார ஒப்பந்தம் ஆகியவை பற்றி விஷயமறிந்தவராக இருந்தார் என்று மேலே குறிப்பிடப்பட்ட நோக்கீட்டுப் புத்தகம் கூறுகிறது. இதன் காரணமாக, அரண்மனை செயலராக இருந்த சாப்பான் ராஜ்யத்தில் அதிக செல்வாக்குள்ள மனிதராக இருந்தார்.
பத்து வருடங்களுக்கு முன்பு, இளம் யோசியா “தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட” ஆரம்பித்திருந்தார். சாப்பான் யோசியாவைவிட வயதில் அதிகம் மூத்தவராக இருந்தபடியால் ஆன்மீக விஷயங்களில் அவருக்கு நல்ல ஆலோசனையைக் கொடுக்க தகுதியுள்ளவராக இருந்தார். உண்மை வணக்கத்தை திரும்ப நிலைநாட்ட யோசியா எடுத்த முதல் நடவடிக்கைகளை இவர் தீவிரமாக ஆதரித்தார்.—2 நாளாகமம் 34:1-8.
ஆலயத்தைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது, ‘நியாயப்பிரமாண புஸ்தகம்’ கண்டெடுக்கப்பட்டது. சாப்பான் “அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான்.” அதில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளைக் கேட்டபோது யோசியா அதிர்ச்சியடைந்தார், அந்தப் புத்தகத்தைக் குறித்து யெகோவாவிடம் விசாரிக்கும்படி தீர்க்கதரிசினியாகிய உல்தாளிடம் சில நம்பகமான ஆட்களின் ஒரு குழுவை அனுப்பி வைத்தார். அந்தக் குழுவில் சாப்பானையும் அவருடைய மகன் அகீக்காமையும் அனுப்பியதிலிருந்து, ராஜா அவர்கள்மீது நம்பிக்கை வைத்திருந்தது தெரிகிறது.—2 இராஜாக்கள் 22:8-14; 2 நாளாகமம் 34:14-22.
சாப்பான் என்ன செய்தார் என்பதை இந்த வசனம் மாத்திரமே குறிப்பிடுகிறது. மற்ற பைபிள் வசனங்களில், அவர் தகப்பன் என்றும் தாத்தா என்றுமே குறிப்பிடப்படுகிறார். சாப்பானின் பிள்ளைகள் எரேமியா தீர்க்கதரிசியோடு நெருங்கிப் பழகியவர்களாய் இருந்தனர்.
உங்களுக்குத் தெரியுமா?
பண்டைய காலங்களில், ஒருவர் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டது எதை வெளிக்காட்டியது?
மக்கள் பல்வேறு சூழ்நிலைகளில் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டதாக பைபிள் சொல்கிறது. இன்று பைபிளை வாசிப்போருக்கு இது ஒரு விநோத செயலாகத் தெரியலாம். ஆனால், யூதர்களுக்கு இது தங்களுடைய உணர்ச்சிகளை, அதாவது மனக்கசப்பை, துக்கத்தை, அவமானத்தை, கோபத்தை அல்லது துயரத்தை வெளிக்காட்டும் செயலாக இருந்தது.
உதாரணத்திற்கு, ரூபன் தன்னுடைய தம்பி யோசேப்பைக் காப்பாற்ற முயன்றும், அவன் அடிமையாக விற்கப்பட்டதைக் கேள்விப்பட்டபோது தன் ‘வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார்.’ யோசேப்பு ஒரு காட்டு மிருகத்தின் வாயில் சிக்கி இறந்திருக்கலாம் என நினைத்து அவருடைய அப்பா யாக்கோபும் ‘தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார்.’ (ஆதி. 37:18-35) தன்னுடைய பிள்ளைகள் எல்லோரும் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டபோது யோபு ‘தன் சால்வையைக் கிழித்துக்கொண்டார்.’ (யோபு 1:18-20) இஸ்ரவேலரில் ஒருவர் ‘தன் வஸ்திரங்களைக் கிழித்தவாறு’ தலைமைக் குருவான ஏலியிடம் வந்து இஸ்ரவேலர்கள் போரில் தோற்கடிக்கப்பட்டதாகவும், ஏலியின் இரண்டு மகன்கள் கொல்லப்பட்டதாகவும், உடன்படிக்கைப் பெட்டியை பெலிஸ்தர் கைப்பற்றியதாகவும் சொன்னார். (1 சா. 4:12-17) யோசியாவுக்குத் திருச்சட்டம் வாசித்துக்காட்டப்பட்ட சமயத்தில் மக்கள் செய்த தவறுகள் அவருக்குத் தெரியவந்ததும் அவர் ‘தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார்.’—2 இரா. 22:8-13.
விசாரணையின்போது இயேசு சொன்னதை தெய்வநிந்தனை என தவறாக எடுத்துக்கொண்ட தலைமைக் குரு காய்பா ‘தன் மேலங்கியைக் கிழித்துக்கொண்டார்.’ (மத். 26:59-66) கடவுளுடைய பெயர் பழித்துப் பேசப்படுவதை யாராவது கேட்டால், அவர்கள் தங்களுடைய உடையைக் கிழிக்க வேண்டுமென ரபீக்களின் பாரம்பரியம் குறிப்பிட்டது. ஆனால், எருசலேம் ஆலயத்தின் அழிவுக்குப் பிறகு, ரபீக்களின் மத்தியில் நிலவிய கருத்து இதுதான்: “கடவுளுடைய பெயர் பழித்துப் பேசப்படுவதைக் கேட்பவர் இனி தன் உடையைக் கிழித்துக்கொள்ள வேண்டியதில்லை; அப்படிக் கிழித்தால் உடை ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் கந்தலாகிவிடும்.”
ஒருவர் தன்னுடைய ஆடையைக் கிழிக்கும்போது அவருடைய துக்கம் உள்ளப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தச் செயல் கடவுளுக்கு முன் மதிப்புள்ளதாக இருக்கும். அதனால்தான், ‘நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து என்னிடத்தில் திரும்புங்கள்’ என்று யெகோவா தம் மக்களிடம் சொன்னார்.—யோவே. 2:13.
it “நேகோ” பாரா 2
நேகோ
யூதாவின் ராஜாவான யோசியா வாழ்ந்த சமயத்தில் நேகோ எகிப்தின் பார்வோனாக இருந்தான். கிரேக்க சரித்திர நிபுணரான ஹிராடட்டஸ் (II, 158, 159; IV, 42) சொல்கிறபடி, சமெட்டிக்கஸ் (சமெட்டிக்கோஸ், முதலாம் சாம்டிக்) என்பவரின் மகன்தான் நேகோஸ் (நேகோ). நேகோ தன் அப்பாவுக்குப் பிறகு எகிப்தை ஆட்சி செய்தான். நைல் நதியையும் செங்கடலையும் இணைக்கும் ஒரு கால்வாயை அவன் கட்ட ஆரம்பித்தான், ஆனால் முடிக்கவில்லை. அதேசமயத்தில், ஆப்பிரிக்காவைச் சுற்றி பயணம் செய்வதற்காக பெனிக்கேய கப்பல்களை அவன் அனுப்பி வைத்தான். அந்தப் பயணம் மூன்று வருஷங்களுக்குப் பிறகு நல்லபடியாக முடிந்தது.
யெகோவாவின் தயவை பெற்ற பணிவான யோசியா
இப்போது கடவுளுடைய வார்த்தையை விசாரிப்பதற்காக யோசியாவின் தூதுவர்கள் எருசலேமிலிருக்கும் உல்தாள் எனும் தீர்க்கதரிசினியை சந்திக்கச் செல்கின்றனர். உல்தாள் யெகோவாவின் வார்த்தையிலிருந்து வெளிப்படுத்திய செய்தியுடன் அவர்கள் திரும்புகின்றனர். கண்டெடுக்கப்பட்ட புதிய புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த உபத்திரவங்கள் எல்லாம், பொய் மதத்தில் மூழ்கியிருந்த அந்தத் தேசத்திற்கு நிச்சயம் வரும் என்பதுதான் அந்த செய்தி. ஆனாலும், யோசியா தன்னை யெகோவாவிற்கு முன் தாழ்மை படுத்தியதால், அந்த உபத்திரவங்கள் அவருடைய வாழ்நாட் காலத்தில் வராது. உபத்திரவங்கள் வருமுன்னே அவர் சமாதானத்துடனே பிதாக்களண்டையில் சேர்க்கப்படுவார்.—2 இராஜாக்கள் 22:14-20; 2 நாளாகமம் 34:22-28.
ஆனால் யோசியா போரில் இறந்ததால், ‘சமாதானத்தோடே கல்லறையில் சேர்க்கப்படுவார்’ என்ற உல்தாளின் தீர்க்கதரிசனம் உண்மையானதா? (2 இராஜாக்கள் 23:28-30) யூதாவின் மேல் வரவிருந்த ‘பொல்லாப்போடு’ ஒப்பிடுகையில் அவருக்கு ஏற்பட்ட மரணம் ‘சமாதானமான’ ஒன்றுதான். (2 இராஜாக்கள் 22:20; 2 நாளாகமம் 34:28) உல்தாள் சொன்ன விதமாகவே, பொ.ச.மு. 609-607-ல் பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுகையிட்டு, அழித்தபோது ஏற்பட்ட அந்த பொல்லாப்பிற்கு முன்பே யோசியா மரித்துவிட்டார். ‘ஒருவர் தன் பிதாக்களுடன் சேர்க்கப்படுவது,’ அந்த நபர் போரில் அல்லது சண்டைபோடும்போது இறந்துவிடுவதையும் உட்படுத்தலாம். இதே வார்த்தைகள் மற்ற சந்தர்ப்பங்களிலும் காணப்படுகின்றன. அவற்றில் சில சண்டைபோடும்போது ஏற்பட்ட இறப்பையும், மற்றவை சண்டை போடாதபோது ஏற்பட்ட இறப்பையும் குறிக்கின்றன.—உபாகமம் 31:16; 1 இராஜாக்கள் 2:10; 22:34, 40.
படிப்புக் கட்டுரை 38
இளம் பிள்ளைகளே—உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?
“பகுத்தறிவு உன்னைப் பாதுகாக்கும்.” —நீதி. 2:11.
இந்த கட்டுரையில்...
இளம் பிள்ளைகளே, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற நட்பை கெடுக்கிற மாதிரி சில பிரச்சினைகள் உங்களுக்கு வரும் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய அப்பாவை சந்தோஷப்படுத்துகிற மாதிரி நீங்கள் எப்படி நல்ல தீர்மானங்களை எடுக்கலாம்? யூதாவுடைய ராஜாக்களாக ஆன மூன்று சிறுவர்களின் உதாரணத்தை கவனிக்கலாம். அவர்கள் எடுத்த தீர்மானங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்க்கலாம்.
நீங்கள் சின்ன வயதிலேயே அல்லது டீனேஜ் வயதிலேயே கடவுளுடைய மக்களுக்கு ராஜாவானால் எப்படி இருக்கும்! நீங்கள் அப்படி ராஜாவானால் என்ன செய்வீர்கள்? உங்களுடைய அதிகாரத்தைப் எப்படி பயன்படுத்துவீர்கள்? யூதாவுடைய ராஜாக்களாக ஆன நிறைய சிறுவர்களை பற்றி பைபிள் சொல்கிறது. யோவாஸ் வெறுமனே 7 வயது இருக்கும்போது ராஜாவானார்; உசியாவுக்கு 16 வயது இருக்கும்போது ராஜாவானார்; யோசியாவுக்கு 8 வயது இருக்கும்போது ராஜாவானார். அந்த பொறுப்பு அவர்களுக்கு மலை மாதிரி தெரிந்திருக்கும் இல்லையா? அவர்களுக்கு இது ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் பிரச்சினைகளை சமாளித்து யெகோவாவுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு யெகோவா அவர்களுக்கு உதவி செய்தார், மற்றவர்களும் உதவி செய்தார்கள்.
2 நாம் யாருமே ராஜாவாகவோ ராணியாகவோ இல்லை. ஆனால் இந்த மூன்று பேரிடமிருந்து நாம் நிறைய முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எடுத்தார்கள். அதே சமயத்தில், சில கெட்ட முடிவுகளையும் எடுத்தார்கள். அவர்களுடைய உதாரணங்களிலிருந்து நாம் ஏன் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், ஏன் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும், ஏன் தொடர்ந்து யெகோவாவை தேட வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக்கொள்ளலாம்.
நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்
3 யோவாசை மாதிரியே நல்ல முடிவுகளை எடுங்கள். யோவாஸ் சின்ன வயதாக இருந்தபோதே அவருடைய அப்பா இறந்துபோய்விட்டார். அதனால் தலைமைக் குரு யோய்தாதான் அவரை வளர்த்தார். யெகோவாவைப் பற்றி அவருக்கு சொல்லிக்கொடுத்தார். யோய்தா பேச்சைக் கேட்டு நடந்ததால், யோவாஸ் நல்ல முடிவுகளை எடுத்தார். யெகோவாவுக்குத்தான் சேவை செய்ய வேண்டும் என்றும், மக்கள் யெகோவாவுக்கு சேவை செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் யோவாஸ் முடிவெடுத்தார். யெகோவாவுடைய ஆலயத்தை புதுப்பிக்கிற வேலை செய்வதற்குக்கூட ஏற்பாடு செய்தார்.—2 நா. 24:1, 2, 4, 13, 14.
4 யெகோவாவை நேசிப்பதற்கும் அவர் சொல்லி தருகிற மாதிரி வாழ்வதற்கும் உங்கள் அப்பா அம்மாவோ, வேறு யாரோ உங்களுக்கு சொல்லி தருகிறார்கள் என்றால் உங்களுக்கு ஒரு பெரிய பரிசு கிடைத்திருக்கிறது என்று அர்த்தம். (நீதிமொழிகள் 2:1, 10-12-ஐ வாசியுங்கள்.) உங்களுடைய அப்பா அம்மா நிறைய விதத்தில் உங்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள். கேத்யா என்ற சகோதரி நல்ல முடிவுகளை எடுப்பதற்கு அவருடைய அப்பா எப்படி உதவி செய்தார் என்று பாருங்கள். தினமும் ஸ்கூலுக்கு கூட்டிக்கொண்டு போகும்போதும் அவருடைய அப்பா அவரிடம் தினவசனத்தை பற்றி பேசுவார். அதை பற்றி கேத்யா இப்படி சொல்கிறார்: “இந்த மாதிரி நாங்கள் இரண்டு பேரும் பேசிக் கொண்டதால், அந்த நாளில் வருகிற கஷ்டமான சூழ்நிலைகளை என்னால் ஈசியாக சமாளிக்க முடிந்தது.” ஆனால் உங்கள் அப்பா அம்மா உங்களுக்கு பைபிளிலிருந்து சொல்லித்தருவது எல்லாம் உங்களை கட்டுப்படுத்துவது மாதிரி இருந்தால் என்ன செய்வீர்கள்? அவர்கள் கொடுக்கிற ஆலோசனையை ஏற்றுக்கொள்வதற்கு எது உங்களுக்கு உதவி செய்யும்? அனஸ்டாசியா என்ற ஒரு சகோதரியுடைய அப்பா அம்மா சில சட்டங்களை போடுவதற்கு முன்பு ஏன் அந்த சட்டங்களை போடுகிறார்கள் என்று அவருக்கு பொறுமையாக புரிய வைப்பார்கள். அவர் இப்படி சொல்கிறார், “அப்பா அம்மா அப்படி செய்ததால் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. செய்ய கூடாது என்று அவர்கள் சொன்ன சில விஷயங்கள் என்னைக் கட்டிப் போடவில்லை. அன்பாக பாதுகாக்கிறது.”
5 பைபிளில் இருந்து உங்கள் அப்பா அம்மா சொல்லி தருவதை நீங்கள் கேட்டு, அதேமாதிரி செய்யும்போது உங்கள் அப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதைவிட முக்கியமாக கடவுளுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அவரோடு உங்களுக்கு இருக்கும் நட்பு இன்னும் பலமாகும். (நீதிமொழிகள் 22:6-ஐயும் 23:15, 24, 25-ஐயும் வாசியுங்கள்.) சின்ன வயதில் யோவாஸ் நடந்துகொண்ட மாதிரியே நீங்களும் நடந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
6 யோவாஸ் எடுத்த தப்பான முடிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். யோய்தா இறந்த பிறகு யோவாஸ் கெட்ட நண்பர்களை தேர்ந்தெடுத்தார். (2 நாளாகமம் 24:17, 18-ஐ வாசியுங்கள்.) யூதாவிலிருந்த யெகோவாவை நேசிக்காத அதிகாரிகளுடைய பேச்சை யோவாஸ் கேட்க ஆரம்பித்துவிட்டார். அவர் அவர்களோடு சேராமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! (நீதி. 1:10) அதற்கு பதிலாக, இந்த கெட்ட நண்பர்களின் பேச்சைத்தான் அவர் கேட்டார். சொல்லப்போனால், யோவாசை திருத்த வேண்டும் என்று நினைத்த அவருடைய அத்தை மகன் சகரியாவை கொன்றே விட்டார். (2 நா. 24:20, 21; மத். 23:35) எவ்வளவு கொடூரமாக, முட்டாள்தனமாக நடந்துக்கொண்டார்! யோவாஸ் ஆரம்பத்தில் நல்லவராகதான் இருந்தார். ஆனால் போகப்போக அவர் ஒரு விசுவாசதுரோகியாக, ஒரு கொலைகாரனாக மாறிவிட்டார். கடைசியில் அவருடைய சொந்த ஊழியர்களே அவரை கொன்றுவிட்டார்கள். (2 நா. 24:22-25) யெகோவாவுடைய பேச்சையும் அவரை நேசிக்கிறவர்களுடைய பேச்சையும் தொடர்ந்து கேட்டு நடந்திருந்தால் அவருடைய வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! இவருடைய உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொள்கிறீர்கள்?
7 யோவாஸ் எடுத்த தப்பான முடிவிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற பாடம் என்ன? யெகோவாமேல் பாசம் வைத்திருக்கிறவர்களை, அவருக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களை நம்முடைய நண்பர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். சரியானதை செய்வதற்கு அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள். நம் வயதில் இருப்பவர்களோடு மட்டும்தான் பழக வேண்டும் என்று அவசியம் கிடையாது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! யோவாஸ், தன்னைவிட வயதில் பெரியவராக இருந்த யோய்தாவோடும் நண்பராக இருந்தார். நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாமேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்களா? யெகோவா எதிர்பார்ப்பது போல் வாழ்வதற்கு அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்களா? யெகோவாவைப் பற்றியும் அவர் சொல்லி தந்திருக்கிற அருமையான உண்மைகளை பற்றியும் அவர்கள் என்னிடம் பேசுகிறார்களா? கடவுள் கொடுத்திருக்கிற நெறிமுறைகளை மதிக்கிறார்களா? நான் ஏதாவது தப்பு செய்தால் அதை மூடிமறைக்காமல் என்னிடம் நேராக சொல்கிறார்களா? இல்லையென்றால் எனக்கு பிடித்ததை மட்டும்தான் சொல்கிறார்களா?’ (நீதி. 27:5, 6, 17) நேரடியாக சொன்னால், உங்களுடைய நண்பர்களுக்கு யெகோவாமேல் பாசம் இல்லையென்றால் அவர்கள் உங்களுக்கு தேவையே இல்லை. அதேசமயத்தில், யெகோவாவை நேசிக்கிற நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்களை விட்டுவிடாதீர்கள்; அவர்கள்தான் உங்களுக்கு நல்ல நண்பராக இருப்பார்கள்!—நீதி. 13:20.
8 சோஷியல் மீடியா இருப்பதால் நம்முடைய குடும்பத்தோடும் நண்பர்களோடும் அடிக்கடி பேச முடிகிறது. ஆனால் நிறைய பேர் மற்றவர்கள் அவர்களை திரும்பி பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வாங்கிய பொருளையோ, அவர்கள் செய்த விஷயங்களையோ ஃபோட்டோ அல்லது வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்கிறார்கள். இப்படி மற்றவர்கள் முன்பு தங்களை பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்காக அதை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எல்லாரும் என்னை திரும்பி பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேனா? நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமா அல்லது என்னை பெரிய ஆளாக காண்பிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமா? நான் யோசிக்கும் விதம், பேசும் விதம், நடந்துகொள்ளும் விதம் எல்லாம் சோஷியல் மீடியாவில் நான் பார்க்கிற ஆட்களை மாதிரியே மாறிவிட்டதா?’ ஆளும் குழுவில் சேவை செய்த சகோதரர் நேதன் நார் ஒரு ஆலோசனையை சொன்னார்: “மனிதர்களுக்கு பிடித்த மாதிரி இருக்க முயற்சி செய்யாதீர்கள். கடைசியில் யாரையுமே உங்களால் சந்தோஷப்படுத்த முடியாது. யெகோவாவுக்கு பிடித்த மாதிரி இருங்கள். அப்போது யெகோவாவை பிடித்த எல்லாரையும் நீங்கள் சந்தோஷப்படுத்துவீர்கள்.”
எப்போதும் மனத்தாழ்மையாக இருங்கள்
9 உசியா மாதிரியே நல்ல முடிவுகளை எடுங்கள். உசியா ராஜா இளம் வயதில் மனத்தாழ்மையாக இருந்தார். உண்மை கடவுளுக்கு பயந்து நடக்க கற்றுக்கொண்டார். அவர் 68 வயது வரைக்கும் வாழ்ந்தார். ரொம்ப வருஷங்களுக்கு யெகோவா அவரை ஆசீர்வதித்தார். (2 நாளாகமம் 26:1-5-ஐ வாசியுங்கள்.) நாட்டின் எதிரிகள் நிறைய பேரை அவர் தோற்கடித்தார். நகரத்தை இன்னும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு நிறைய முயற்சிகள் எடுத்தார். (2 நா. 26:6-15) அவர் செய்த எல்லாவற்றிலும் யெகோவா உதவி செய்ததை நினைத்து அவர் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்.—பிர. 3:12, 13.
10 உசியா எடுத்த தப்பான முடிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். உசியா ராஜா சொல்வதைத்தான் மற்றவர்கள் செய்வார்கள். இதுதான் அவருக்கு பழக்கம். அதனால் அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாரோ? ஒரு நாள் உசியா யெகோவாவுடைய ஆலயத்துக்குள் நுழைந்து ரொம்ப திமிராக தூபபீடத்தில் தூபம் காட்டப் போனார். அதை செய்வதற்கு ராஜாக்களுக்கு அனுமதி கிடையாது. (2 நா. 26:16-18) அப்போது அவரை தடுப்பதற்கு தலைமைக் குரு அசரியா ரொம்ப முயற்சி செய்தார். ஆனால் உசியாவுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்துவிட்டது. அத்தனை நாளாக யெகோவாவுக்கு உண்மையாக இருந்த உசியா யெகோவாவிடம் இருந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டார். பிறகு, யெகோவா அவரை தொழுநோயால் தண்டித்தார். (2 நா. 26:19-21) உசியா கடைசி வரைக்கும் மனத்தாழ்மையாக இருந்திருந்தால் அவருடைய வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!
11 உசியாவுக்கு பேர் புகழ் எல்லாம் கிடைத்த பிறகு அவருக்கு நடந்த எல்லா நல்ல விஷயங்களுக்கும் பின்னால் இருந்தது யெகோவாதான் என்பதை அவர் மறந்துவிட்டார். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நமக்கு கிடைக்கிற ஆசீர்வாதங்களும் பொறுப்புகளும் யெகோவாவிடமிருந்துதான் வருகின்றன என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் ஏதோ சாதித்துவிட்டோம் என்று பெருமை அடிக்காமல் நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றுக்குமே யெகோவாதான் காரணம் என்று அவருக்கு புகழ் சேர்க்க வேண்டும். (1 கொ. 4:7) நாம் தப்பு செய்கிறவர்கள், நமக்குக் கண்டிப்பு தேவை என்பதை மனத்தாழ்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 60 வயதான ஒரு சகோதரர் இப்படி எழுதினார்: “என்னை பற்றியே நான் ரொம்ப பெரிதாக நினைக்க கூடாது என்று நான் கற்றுக்கொண்டேன். சின்னப் பிள்ளைத்தனமாக நான் செய்கிற தவறுகளுக்கு கண்டிப்பு கிடைக்கும்போது சோர்ந்துபோய்விடாமல், மறுபடியும் எழுந்து, என்னை மாற்றிக்கொண்டு யெகோவாவுக்கு தொடர்ந்து சேவை செய்ய முயற்சி செய்கிறேன்.” உண்மை என்னவென்றால், நாம் யெகோவாவுக்கு பயந்து மனத்தாழ்மையாக நடந்துக்கொள்ளும்போது நம்முடைய வாழ்க்கை ரொம்ப அழகாக இருக்கும்.—நீதி. 22:4.
யெகோவாவை தேடிக்கொண்டே இருங்கள்
12 யோசியா மாதிரியே நல்ல முடிவுகளை எடுங்கள். டீனேஜ் வயதில் இருந்தபோது யோசியா யெகோவாவை தேட ஆரம்பித்தார். யெகோவாவையும் அவருடைய விருப்பத்தை பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். ஆனால் சின்ன வயதிலேயே ராஜாவான யோசியாவுக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியாக இல்லை. ஏனென்றால் அந்த சமயத்தில் பொய் வணக்கம்தான் கொடிகட்டி பறந்துகொண்டிருந்தது. அதனால் உண்மை வணக்கத்தின் பக்கம் யோசியா உறுதியாக நிற்க வேண்டியிருந்தது. அதைத்தான் அவர் தைரியமாக செய்தார். 20 வயது ஆவதற்கு முன்பே தேசத்திலிருந்து பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்ட ஆரம்பித்தார்.—2 நாளாகமம் 34:1-3-ஐ வாசியுங்கள்.
13 சின்ன பிள்ளைகளே, யோசியா மாதிரியே யெகோவாவை தேடுவதற்கும் அவருடைய குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் நீங்கள் முடிவு செய்யலாம். அப்படி நீங்கள் செய்தால் யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள். அர்ப்பணித்த பிறகு, தினமும் உங்களுடைய வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தருவீர்கள்? 14 வயதில் ஞானஸ்நானம் எடுத்த லூக், “இனி என் வாழ்க்கையில் யெகோவாவுடைய சேவைக்குத்தான் முதலிடம்! அவர் மனதை சந்தோஷப்படுத்துவதுதான் எனக்கு முக்கியம். மற்றவை எல்லாமே அப்புறம்தான்” என்று சொல்கிறார். (மாற். 12:30) நீங்களும் அப்படி செய்தால் உங்கள் வாழ்க்கையும் அழகாக இருக்கும்!
14 யெகோவாவை வணங்கும் இளம் பிள்ளைகளே, உங்களுக்கு என்ன மாதிரி பிரச்சினைகள் வரலாம்? 12 வயதில் ஞானஸ்நானம் எடுத்த ஜோஹனை, கூட படிக்கும் பிள்ளைகள் ஈ-சிகரெட் பிடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். ஈ-சிகரெட் பிடிப்பது உடல்நலத்தையும் யெகோவாவோடு அவருக்கு இருக்கிற நட்பையும் கெடுத்துவிடும் என்று யோசித்து பார்த்தது, அதை சமாளிக்க ஜோஹனுக்கு உதவி செய்தது. 14 வயதில் ஞானஸ்நானம் எடுத்த ரேச்சல், ஸ்கூலில் வருகிற பிரச்சினைகளை சமாளிக்க எது உதவி செய்தது என்று சொல்கிறார்: “எந்த ஒரு விஷயத்தையுமே பைபிளோடு அல்லது யெகோவாவோடு சம்பந்தப்படுத்தி பார்க்க நான் முயற்சி செய்கிறேன். உதாரணத்துக்கு, வரலாற்று பாடத்தில் நான் படிக்கும் விஷயம், பைபிளில் நான் படித்த பதிவை அல்லது தீர்க்கதரிசனத்தை எனக்கு ஞாபகப்படுத்தும். இல்லையென்றால் யாரிடமாவது பேசம்போது அவருக்கு எந்த பைபிள் வசனத்தை காட்டினால் நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்ப்பேன்” என்று சொல்கிறார். யோசியா ராஜாவுக்கு வந்த அதே பிரச்சினை உங்களுக்கு வராமல் இருக்கலாம். ஆனால் அவரை மாதிரியே உங்களால் ஞானமாகவும் உண்மையாகவும் நடந்துகொள்ள முடியும். இளம் வயதிலேயே இந்த மாதிரி பிரச்சினைகளை சமாளிக்க நீங்கள் கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் வரப்போகிற பிரச்சினைகளை உங்களால் சமாளிக்க முடியும்.
15 26 வயதில், யோசியா ராஜா யெகோவாவுடைய ஆலயத்தை புதுப்பிக்கும் வேலையை ஆரம்பித்தார். அந்த சமயத்தில், ‘மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் திருச்சட்ட புத்தகம்’ கிடைத்தது. அது வாசிக்கப்பட்டதைக் கேட்டபோது, அதில் சொல்லியிருப்பதை தீவிரமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். (2 நாளாகமம் 34:14, 18-21-ஐ வாசியுங்கள்.) நீங்களும் பைபிளை தினமும் வாசிக்க ஆசைப்படுகிறீர்களா? ஏற்கெனவே வாசிக்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு பிடித்திருக்கிறதா? பிரயோஜனமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் வசனங்களை தனியாக குறித்து வைக்கிறீர்களா? முன்பு நாம் பார்த்த லூக், அவருக்கு பிடித்த குறிப்புகளை எல்லாம் ஒரு நோட்டில் எழுதிவைக்கிறார். நீங்களும் அப்படி செய்தால் உங்களுக்கு பிடித்த வசனங்களையும் குறிப்புகளையும் ஞாபகம் வைத்துக்கொள்வது ஈசியாக இருக்கும். நீங்கள் பைபிளை எவ்வளவு அதிகமாக தெரிந்துகொண்டு அதை நேசிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். அதோடு சரியானதை செய்ய கடவுளுடைய வார்த்தை, யோசியாவை தூண்டியதுபோல் உங்களையும் தூண்டும்.
16 யோசியா எடுத்த தப்பான முடிவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். யோசியாவுக்கு கிட்டத்தட்ட 39 வயது இருக்கும்போது, அவர் ஒரு பெரிய தப்பை செய்தார். அதனால் அவருடைய உயிரே போய்விட்டது. யெகோவாவை நம்பி அவருடைய வழிநடத்துதலை கேட்பதற்கு பதிலாக சொந்த புத்தியை நம்பி அவராகவே ஒரு முடிவை எடுத்துவிட்டார். (2 நா. 35:20-25) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நமக்கு எவ்வளவு வயதானாலும் சரி, எவ்வளவு வருஷமாக பைபிளை படித்துக்கொண்டு இருந்தாலும் சரி நாம் தொடர்ந்து யெகோவாவை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்வது, அவருடைய வார்த்தையை படிப்பது, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது என எல்லாவற்றையும் தவறாமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வாழ்க்கையில் பெரிய பெரிய தவறுகளை செய்யாமல் இருப்போம், சந்தோஷமாக இருப்போம்.—யாக். 1:25.
இளம் பிள்ளைகளே—உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்
17 இளம் வயதில்தான் உங்களால் நிறைய விஷயங்களை செய்ய முடியும், வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும். யோவாஸ், உசியா, யோசியாவின் பதிவுகளிலிருந்து இளம் பிள்ளைகளால் நல்ல முடிவுகளை எடுக்க முடியும், யெகோவாவுக்கு பிடித்த மாதிரி வாழ முடியும் என்பதை தெரிந்துகொள்கிறோம். உண்மைதான் இவர்களும் சில தவறுகளை செய்தார்கள், பின்விளைவுகளையும் அனுபவித்தார்கள். ஆனால் நாம், அவர்கள் செய்த தவறுகளை செய்யாமல் நல்லதை மட்டும் செய்தால் நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
18 யெகோவாவிடம் நெருங்கி போய் அவருடைய மனதில் இடம் பிடித்து சந்தோஷமாக வாழ்ந்த இன்னும் சில இளைஞர்களை பற்றியும் பைபிள் சொல்கிறது. அவர்களில் ஒருவர்தான் தாவீது. சின்ன வயதிலேயே அவர் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி நடந்துகொண்டார். பிறகு ஒரு ராஜாவாக ஆனார், யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்தார். உண்மைதான் அவரும் தவறுகள் செய்தார். ஆனால் கடவுள் அவரை உண்மையுள்ள ஊழியராகத் தான் பார்த்தார். (1 ரா. 3:6; 9:4, 5; 14:8) தாவீதைப் பற்றி படிக்கும்போது அவரை மாதிரியே யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும். மாற்கு அல்லது தீமோத்தேயுவை பற்றியும் நீங்கள் ஆராய்ச்சி செய்து படிக்கலாம். அவர்கள் சின்ன வயதிலேயே யெகோவாவுக்கு சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்; கடைசி வரைக்கும் உண்மையாக சேவை செய்தார்கள். யெகோவாவுக்கு சேவை செய்ய முடிவெடுத்ததால் அவர்களை பார்த்து யெகோவா சந்தோஷப்பட்டார். அவர்களும் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
19 இப்போது உங்கள் வாழ்க்கையை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை வைத்துதான் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியும். உங்கள் சொந்த புத்தியை நம்பாமல் யெகோவாவை நம்பினால், நல்ல முடிவுகளை எடுப்பதற்கு அவர் உங்களுக்கு உதவி செய்வார். (நீதி. 20:24) உங்களுக்கு சந்தோஷமான, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். யெகோவாவுக்காக நீங்கள் செய்கிற எல்லாவற்றையுமே அவர் ரொம்ப உயர்வாக பார்க்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். இவ்வளவு பாசமான அப்பாவுக்கு சேவை செய்வதைவிட ஒரு நல்ல விஷயம் உங்கள் வாழ்க்கையில் வேறு ஏதாவது இருக்க முடியுமா?
அதிகாரம் 37
உத்தமத்தை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருந்தார்
தானியேல் புத்தகம்—விசாரணைக் கூண்டில்
14 தானியேல் 1:1 சொல்கிறது: ‘யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றுகை போட்டான்.’ விமர்சகர்கள் இந்த வசனத்தில் குறை கண்டுபிடித்திருக்கின்றனர். ஏனென்றால் இது எரேமியா சொன்னதோடு ஒத்துப்போவதாய் தெரியவில்லையாம். எரேமியாவின்படி யோயாக்கீம் அரசாண்ட நான்காவது வருடமே நேபுகாத்நேச்சாரின் முதல் வருடம். (எரேமியா 25:1; 46:2) அப்படியென்றால், தானியேல் எரேமியாவோடு முரண்பட்டாரா? அதிகத் தகவலைத் திரட்டுகையில், குழப்பம் உடனடியாக தெளிந்துவிடுகிறது. பார்வோன் நேகோ பொ.ச.மு. 628-ல் யோயாக்கீமை முதன்முதலாக ராஜாவாக்கியபோது அவர் அந்த எகிப்திய அரசரின் கைப்பாவை ஆனார். சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, அதாவது பொ.ச.மு. 624-ல் நேபுகாத்நேச்சார் தன் தகப்பனுக்கு அடுத்ததாக பாபிலோனிய அரியணையில் ஏறினார். அதன்பின் விரைவில் (பொ.ச.மு. 620-ல்) நேபுகாத்நேச்சார் யூதாவின்மீது படையெடுத்து, யோயாக்கீமை பாபிலோனின்கீழ் சிற்றரசராக்கினார். (2 இராஜாக்கள் 23:34; 24:1) பாபிலோனில் வாழ்ந்த ஒரு யூதருக்கு, யோயாக்கீமின் “மூன்றாம் வருஷம்” என்பது, பாபிலோனின்கீழ் சிற்றரசராய் அவர் சேவித்த மூன்றாம் வருடத்தை அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும். தானியேல் இந்தக் கோணத்தில்தான் எழுதினார். ஆனால் எரேமியாவோ எருசலேமில் வசித்துவந்த யூதர்களின் கோணத்தில் எழுதினார். ஆகவே பார்வோன் நேகோ யோயாக்கீமை ராஜாவாக்கிய அந்த வருடத்தையே அவரது அரசாட்சியின் ஆரம்ப வருடமாக குறிப்பிட்டார்.
15 அப்படியென்றால், முரண்பாடு என சொல்லப்படும் இது உண்மையில் கூடுதல் அத்தாட்சியையே அளிக்கிறது; அதாவது நாடுகடத்தப்பட்ட யூதர்களோடு பாபிலோனில் வசிக்கையிலேயே தானியேல் இதை எழுதினார் என்பதற்கான அத்தாட்சியை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, தானியேல் புத்தகத்திற்கு எதிரான இந்த வாக்குவாதத்தில் இன்னொரு பெரிய ஓட்டையும் இருக்கிறது. தானியேல் புத்தகத்தின் எழுத்தாளரிடம் எரேமியா புத்தகம் இருந்தது, அவர் அதைக் குறிப்பிட்டும் காட்டினார் என்பதை நினைவில் வையுங்கள். (தானியேல் 9:2) விமர்சகர்கள் சொல்கிறபடி தானியேல் புத்தகத்தை எழுதியவர் தந்திரமான சதிகாரர் என்பது உண்மையானால், அவ்வளவு உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு புத்தகமான எரேமியாவிற்கு முரணாக, அதுவும் எடுத்த எடுப்பிலேயே, முதல் வசனத்திலேயே எழுதத் துணிவாரா? நிச்சயமாக மாட்டார்!
சோதனையிலும் யெகோவாவிற்கு உண்மையாயிருத்தல்
நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்த பரிசுத்த பாத்திரங்களை கொள்ளைப் பொருட்களாக எடுத்துச் சென்றார். ‘அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய [மார்டுக், அல்லது எபிரெயுவில் மெரொதாக் என்ற தேவனுடைய] பண்டசாலைக்குள் [“பொக்கிஷசாலைக்குள்,” NW] வைத்தார்.’ (தானியேல் 1:2; எரேமியா 50:2) நேபுகாத்நேச்சார் மார்டுக் ஆலயத்தைப் பற்றி இவ்வாறு சொன்னதாய் ஒரு பாபிலோனிய கல்வெட்டும் குறிப்பிடுகிறது: “வெள்ளியையும் பொன்னையும் விலையுயர்ந்த ரத்தினங்களையும் அங்கே வைத்தேன் . . . என் ராஜ்யத்தின் பொக்கிஷசாலையை அங்கே ஏற்படுத்தினேன்.” பெல்ஷாத்சார் ராஜாவின் காலத்தைச் சிந்திக்கையில் மறுபடியும் இந்தப் பரிசுத்த பாத்திரங்களைப் பற்றி வாசிப்போம்.—தானியேல் 5:1-4.
it “மந்திரம் மற்றும் பில்லிசூனியம்” பாரா. 2-6
மந்திரம் மற்றும் பில்லிசூனியம்
யுலகத் தொடர்பு பழக்கவழக்கங்களை அந்தக் காலத்து பாபிலோனியாவில் இருந்தவர்கள்தான் ஆரம்பித்து வைத்தார்கள். கி.மு. 8-ம் நூற்றாண்டில் பாபிலோனில் எல்லா விதமான பில்லிசூனியமும் ரொம்ப சர்வசாதாரணமாக இருந்ததாக ஏசாயா சொன்னார். (ஏசா 47:12-15) கிட்டத்தட்ட 100 வருஷங்களுக்குப் பிறகுகூட, அதாவது தானியேலின் காலத்தில்கூட, பாபிலோனியாவின் அரண்மனையில் மந்திரவாதிகள் இருந்தார்கள்.—தானி 1:20; 2:2, 10, 27; 4:7; 5:11.
னியக்காரர்களும் சூனியக்காரிகளும் செய்வினை செய்வதாக பாபிலோனியர்கள் நம்பினார்கள். அதனால், பாபிலோனியர்கள் அவர்களை நினைத்து ரொம்ப பயந்தார்கள். ஆனால், மந்திரவாதிகள் செய்வினைகளை முறியடிப்பதில் திறமைசாலிகள் என்று அவர்கள் நம்பினார்கள். ஒரு மந்திரவாதி சொல்லும் மந்திரத்தால் ஒரு நோயாளியைக் குணப்படுத்த முடியும் என்றும்... அதே மந்திரத்தை ஒரு சூனியக்காரனோ சூனியக்காரியோ சொன்னால் அது அவனைக் கொன்றுவிடும் என்றும்... அவர்கள் நம்பினார்கள்.
சோதனையிலும் யெகோவாவிற்கு உண்மையாயிருத்தல்
25 பத்து நாட்கள் ‘மரக்கறியும் தண்ணீருமே’ கதியென்று இருந்தால், மற்ற வாலிபர்களது முகங்களைப் பார்க்கிலும் இவர்களது முகங்கள் ‘வாடிப்போய்’ காணப்படுமோ? “மரக்கறி” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “விதைகள்” என்பதாகும். சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இதை “பயறு” என குறிப்பிடுகின்றன. பயறு என்பது, “(பட்டானி, பீன்ஸ், துவரை போன்ற) பல்வேறு முழுப் பருப்புகள்” என பொதுவாய் விளக்கப்படுகிறது. அந்த வசனத்தின் சூழமைவைப் பார்த்தால் வெறுமனே முழுப் பருப்புகள் மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதாய் தெரியவில்லை என சில வல்லுநர்கள் சொல்கின்றனர். இது சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் சொல்கிறது: “கொழுப்புமிகுந்த பதார்த்தங்களும் இறைச்சிகளும் நிறைந்த அரண்மனை சாப்பாட்டிற்குப் பதிலாக எளியோரின் சாதாரண காய்கறி உணவையே தானியேலும் அவரது நண்பர்களும் கேட்டனர்.” ஆகவே மரக்கறிகள் என சொல்கையில் பீன்ஸ், வெள்ளறிக்காய், வெள்ளைப்பூண்டு, லீக் (leek) என்ற ஒருவகை வெங்காயம், துவரை, பூசணி, வெங்காயம், வெவ்வேறு தானியங்களிலிருந்து செய்யப்பட்ட ரொட்டி ஆகிய சத்துள்ள உணவுகளாய் இருந்திருக்கலாம். இதைப்போய் எவராவது சத்து இல்லாத சாப்பாடு என சொல்வார்களா? விசாரணைக்காரனுக்கு விவரம் புரிந்திருக்கவேண்டும். ஆகவே இறுதியில் “அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.” (தானியேல் 1:14) அதன் விளைவென்ன?
படிப்புக் கட்டுரை 33
தானியேலிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
“கடவுளுக்கு நீ மிகவும் பிரியமானவன்.” —தானி. 9:23.
இந்தக் கட்டுரையில்...
யெகோவாவை வணங்கும் இளம் பிள்ளைகளுக்கு நிறைய சவால்கள் வருகின்றன. அந்தச் சமயங்களில் அவர்கள் தைரியமாக இருக்க வேண்டியிருக்கிறது, யெகோவாவுக்கு உண்மையாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று அவர்கள் நம்புவதால் அவர்களோடு படிப்பவர்கள் அவர்களைக் கிண்டல் செய்யலாம். கடவுளை வணங்குவதாலும் அவர் சொல்வதுபோல் வாழ்வதாலும்கூட மற்ற பிள்ளைகள் அவர்களைக் கேலி செய்யலாம். ஆனால், தானியேல் தீர்க்கதரிசியைப் போல் தைரியமாகவும் உண்மையாகவும் யெகோவாவுக்குச் சேவை செய்கிறவர்கள்தான் நிஜமாகவே புத்திசாலிகள். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வீர்கள்.
தானியேலை ஒரு போர்க் கைதியாக பாபிலோனியர்கள் பிடித்துக்கொண்டு போனபோது அவருக்குச் சின்ன வயதுதான். அவருடைய சொந்த ஊரைவிட்டு ரொம்பத் தூரத்தில் இருந்த பாபிலோனுக்கு அவரை இழுத்துக்கொண்டு போனார்கள். அவர் இளைஞராக இருந்தாலும், பாபிலோன் அதிகாரிகளுக்கு அவரை ரொம்பப் பிடித்துப்போய்விட்டது. ஏன்? அவர்கள் தானியேலின் “வெளித்தோற்றத்தை” பார்த்தார்கள். (1 சா. 16:7) அதாவது, அவர் ‘எந்தக் குறையும் இல்லாமல், அழகாக’ இருப்பதைப் பார்த்தார்கள். அதோடு, அவர் செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்ததையும் பார்த்தார்கள். அதனால்தான், ராஜாவின் அரண்மனையிலேயே சேவை செய்வதற்காக அவருக்குப் பயிற்சி கொடுத்தார்கள்.—தானி. 1:3, 4, 6.
2 யெகோவாவுக்கும் தானியேலைப் பிடித்திருந்தது. ஆனால், அவர் அழகாக இருந்ததாலோ அரண்மனையில் சேவை செய்ததாலோ அல்ல, அவருடைய மனதையும் குணத்தையும் பார்த்துதான் யெகோவாவுக்கு அவரைப் பிடித்திருந்தது. சொல்லப்போனால், நோவாவையும் யோபுவையும் போலவே தானியேல் நீதியாக நடப்பதாக யெகோவா சொன்னபோது தானியேலுக்குக் கிட்டத்தட்ட 20 வயதுதான். ஆனாலும், எத்தனையோ வருஷங்களாகக் கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்த நோவாவுக்கும் யோபுவுக்கும் சமமாக தானியேலைப் பற்றி யெகோவா பேசினார். (ஆதி. 5:32; 6:9, 10; யோபு 42:16, 17; எசேக்கியேல் 14:14-ஐ வாசியுங்கள்.) அந்த வயதில் மட்டுமல்ல, தானியேல் வாழ்ந்த காலமெல்லாம் யெகோவா அவரை உயிருக்கு உயிராக நேசித்தார்.—தானி. 10:11, 19.
3 எந்த இரண்டு குணங்களைக் காட்டியதால் தானியேல் யெகோவாவுக்குப் பிரியமானவராக இருந்தார் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். முதலில், அந்த ஒவ்வொரு குணத்தைப் பற்றியும், எந்தெந்த சூழ்நிலைகளில் அவர் அந்தக் குணங்களைக் காட்டினார் என்பதைப் பற்றியும் பார்ப்போம். அதன் பிறகு, அந்தக் குணங்களை வளர்த்துக்கொள்ள தானியேலுக்கு எது உதவியது என்று பார்ப்போம். கடைசியாக, நாம் எப்படி அவரைப் போலவே நடந்துகொள்ளலாம் என்று பார்ப்போம். இந்தக் கட்டுரை முக்கியமாக இளைஞர்களுக்காகவே தயாரிக்கப்பட்டிருந்தாலும், நாம் எல்லாருமே தானியேலின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
தானியேலைப் போல் தைரியமாக நடந்துகொள்ளுங்கள்
4 தைரியமாக இருப்பவர்களுக்குப் பயமே வராது என்று சொல்ல முடியாது. பயமாக இருந்தாலும், அவர்கள் சரியானதைச் செய்வார்கள். தானியேலுக்கு சின்ன வயதாக இருந்தாலும், அவர் ரொம்பத் தைரியமாக நடந்துகொண்டார். அப்படிப்பட்ட இரண்டு சம்பவங்களைப் பற்றி இப்போது கவனிக்கலாம். முதல் சம்பவம், எருசலேமை பாபிலோனியர்கள் அழித்து கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களுக்குப் பிறகு நடந்திருக்கலாம். பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சாருக்கு, பிரமாண்டமான ஒரு சிலையைப் பற்றிய பயங்கரமான ஒரு கனவு வந்தது. அந்தக் கனவையும் அதன் அர்த்தத்தையும் சொல்லாவிட்டால் எல்லா ஞானிகளையும் கொன்றுவிடுவதாக அவர் மிரட்டினார், தானியேலையும் சேர்த்துதான்! (தானி. 2:3-5) தானியேல் உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால், நிறைய பேருடைய உயிரே போய்விடும் ஆபத்து இருந்தது! “அதனால் தானியேல் ராஜாவிடம் போய், கனவை விளக்குவதற்கு அவகாசம் கேட்டார்.” (தானி. 2:16) அதற்கு நிறைய தைரியமும் விசுவாசமும் அவருக்குத் தேவைப்பட்டது. ஏனென்றால், அதற்கு முன்பு தானியேல் கனவுகளுக்கு அர்த்தம் சொன்னதாக பைபிளில் எந்தவொரு பதிவும் இல்லை. அதனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய நண்பர்களிடம் போய், “பரலோகத்தின் கடவுள் நம்மேல் இரக்கம் காட்டி அந்தக் கனவின் ரகசியத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று ஜெபம் செய்யுங்கள்” என்று சொன்னார். (தானி. 2:18) யெகோவா அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார். யெகோவாவின் உதவியோடு நேபுகாத்நேச்சாரின் கனவுக்கு தானியேல் அர்த்தம் சொன்னார். அதனால், தானியேலும் அவருடைய நண்பர்களும் உயிர்தப்பினார்கள்.
5 பிரமாண்டமான சிலை பற்றிய கனவுக்கு தானியேல் அர்த்தம் சொல்லி கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, அவருடைய தைரியத்துக்கு மறுபடியும் சோதனை வந்தது. நேபுகாத்நேச்சாருக்கு இன்னொரு பயங்கரமான கனவு வந்தது. அந்தக் கனவில் ரொம்பப் பெரிய ஒரு மரத்தை அவர் பார்த்தார். அந்தக் கனவின் அர்த்தத்தை தானியேல் ரொம்பத் தைரியமாக ராஜாவிடம் சொன்னார். அதுவும், கொஞ்ச நாளுக்கு ராஜா பைத்தியமாக இருப்பார்... அவருடைய ஆட்சி பறிபோகும்... என்றெல்லாம்கூடச் சொன்னார். (தானி. 4:25) தானியேல் சதி செய்கிறார் என்று நினைத்து ராஜா அவரைக் கொன்றுபோடுவதற்கு ரொம்ப நேரம் ஆகியிருக்காது. ஆனால், தானியேல் அதற்கெல்லாம் பயப்படாமல் கனவின் அர்த்தத்தைத் தைரியமாகச் சொன்னார்.
6 தைரியமாக இருக்க தானியேலுக்கு எதுவெல்லாம் உதவி செய்திருக்கலாம்? சின்ன வயதில், அவருடைய அப்பாவும் அம்மாவும் வைத்த முன்மாதிரி அவருக்குக் கண்டிப்பாக உதவி செய்திருக்கும். இஸ்ரவேலில் இருந்த பெற்றோருக்கு யெகோவா கொடுத்த கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்து, அவருடைய சட்டங்களைத் தங்கள் பிள்ளைக்குச் சொல்லித்தந்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. (உபா. 6:6-9) தானியேல், பத்துக் கட்டளைகள் போன்ற முக்கியமான சில கட்டளைகளை மட்டுமல்ல, மற்ற எல்லா கட்டளைகளையுமே நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருந்தார். உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் எதையெல்லாம் சாப்பிடலாம், எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று தெரிந்து வைத்திருந்தார். (லேவி. 11:4-8; தானி. 1:8, 11-13) கடவுளுடைய மக்களின் வரலாறும் தானியேலுக்கு அத்துப்படியாக இருந்தது. அதனால், யெகோவாவின் சட்டங்களுக்கு அவர்கள் கீழ்ப்படியாமல் போனபோது என்ன நடந்தது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. (தானி. 9:10, 11) அதுமட்டுமல்ல, யெகோவாவும் அவருடைய பலம்படைத்த தூதர்களும் எப்போதுமே தனக்கு உதவி செய்வார்கள் என்பதை தானியேல் தன் வாழ்க்கையில் நிறைய தடவை கண்கூடாகப் பார்த்திருந்தார்.—தானி. 2:19-24; 10:12, 18, 19.
7 கடவுளுடைய தீர்க்கதரிசிகள் எழுதிய விஷயங்களை தானியேல் ஆழமாகப் படித்தார், எரேமியா எழுதிய தீர்க்கதரிசனங்களைக்கூடப் படித்தார். அதனால்தான், பல வருஷங்களாக பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களுக்குச் சீக்கிரத்தில் விடுதலை கிடைக்கப்போகிறது என்ற விஷயத்தை அவர் பிற்பாடு புரிந்துகொண்டார். (தானி. 9:2) பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறியதைப் பார்த்தது, யெகோவாமேல் அவர் வைத்திருந்த நம்பிக்கையைப் பலப்படுத்தியது என்பதில் சந்தேகமே இல்லை! கடவுள்மேல் பலமான நம்பிக்கை வைப்பவர்களால் அசாதாரணமான தைரியத்தைக் காட்ட முடியும்! (ரோமர் 8:31, 32, 37-39-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) எல்லாவற்றையும்விட முக்கியமாக, தானியேல் அடிக்கடி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். (தானி. 6:10) தன்னுடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டார், தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி யெகோவாவிடம் உதவி கேட்டார். (தானி. 9:4, 5, 19) தானியேலும் நம்மைப் போலவே ஒரு சாதாரண மனுஷராகத்தான் இருந்தார். அதனால், பிறக்கும்போதே அவர் தைரியத்தோடு பிறக்கவில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும்... அவரிடம் ஜெபம் செய்வதன் மூலமும்... அவர்மேல் நம்பிக்கை வைப்பதன் மூலமும்... அந்தக் குணத்தை அவர் வளர்த்துக்கொண்டார்.
8 தைரியத்தை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? தைரியமாக இருக்கச் சொல்லி நம் அப்பா அம்மா நமக்குச் சொல்லலாம். ஆனால், ஏதோவொரு பரம்பரை சொத்துபோல் அந்தக் குணத்தை அவர்களால் நமக்குக் கொடுக்க முடியாது. தைரியத்தை வளர்த்துக்கொள்வது ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்வதைப் போன்றது. சொல்லித்தருபவர் ஒரு விஷயத்தை எப்படிச் செய்கிறார் என்பதை நன்றாகப் பார்த்து அவரைப் போலவே செய்வதன் மூலம் நாம் ஒரு திறமையைக் கற்றுக்கொள்ளலாம். அதேபோல், மற்றவர்கள் எப்படித் தைரியத்தை காட்டுகிறார்கள் என்பதை நன்றாகக் கவனித்து அவர்களைப் போலவே நடந்துகொள்வதன் மூலம் நாமும் தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம். அப்படியென்றால், தானியேலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? அவரைப் போலவே நாமும் கடவுளுடைய வார்த்தையை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். யெகோவாவிடம் அடிக்கடி மனம்விட்டுப் பேசுவதன் மூலம் அவரோடு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர் நமக்கு உதவி செய்வாரா என்று சந்தேகப்படாமல் எப்போதும் அவர்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான், நம் விசுவாசம் சோதிக்கப்படும்போது நம்மால் தைரியத்தைக் காட்ட முடியும்.
9 தைரியமாக நடந்துகொள்வதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. பென் (Ben) என்ற இளைஞருடைய அனுபவத்தைப் பார்க்கலாம். ஜெர்மனியில் அவர் படித்த ஸ்கூலில் இருந்த எல்லாருமே பரிணாமத்தை நம்பினார்கள். கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று பைபிள் சொல்வது வெறும் கட்டுக்கதை என்று அவர்கள் நினைத்தார்கள். ஒருநாள், கடவுள்தான் உயிரைப் படைத்தார் என்று பென் ஏன் நம்புகிறார் என்பதை க்ளாஸுக்கு முன்னால் நின்று விளக்கும்படி அவருடைய டீச்சர் சொன்னார். பென் தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி எல்லாருக்கும் முன்னால் தைரியமாகப் பேசினார். அதனால் என்ன நடந்தது? “நான் சொன்னதையெல்லாம் என் டீச்சர் நன்றாகக் கவனித்துக் கேட்டார். அதன் பிறகு, நான் வைத்திருந்த குறிப்புகளை வாங்கி, அதை ஜெராக்ஸ் எடுத்து, க்ளாஸில் இருந்த ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்” என்று பென் சொல்கிறார். அந்த மாணவர்கள் என்ன செய்தார்கள்? “நிறைய பேர் நான் சொன்னதை நியாயமாக யோசித்துப் பார்த்தார்கள், சொல்லப்போனால் என்னைப் பாராட்டினார்கள்” என்று பென் சொல்கிறார். பென்னின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? தைரியமாக நடந்துகொள்கிறவர்கள் மற்றவர்களுடைய மதிப்பு மரியாதையைச் சம்பாதிப்பார்கள். அதுமட்டுமல்ல, யெகோவாவிடம் நெருங்கிவர நல்மனம் உள்ளவர்களுக்கு அவர்களால் உதவி செய்யவும் முடியும். தைரியத்தை வளர்த்துக்கொள்வதால் எவ்வளவு நன்மைகள், பார்த்தீர்களா?
தானியேலைப் போல் உண்மையாக இருங்கள்
10 பைபிளில், “உண்மைத்தன்மை” அல்லது “மாறாத அன்பு” என்பதற்கான எபிரெய வார்த்தை அன்பான, பாசமான ஒரு பிணைப்பைக் குறிக்கிறது. தன்னை வணங்குபவர்கள்மேல் கடவுள் வைத்திருக்கும் அன்பைப் பற்றிச் சொல்வதற்காக இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கடவுளை வணங்குபவர்கள் ஒருவர்மேல் ஒருவர் காட்டும் அன்பைப் பற்றிச் சொல்வதற்காகவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (2 சா. 9:6, 7) காலம் போகப்போக நம் உண்மைத்தன்மை அதிகமாகலாம். தானியேலின் விஷயத்தில் இது எப்படி நடந்தது என்று பார்க்கலாம்.
11 தானியேல் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பாரா மாட்டாரா என்பதைக் காட்ட வேண்டிய சூழ்நிலைகள் அவருடைய வாழ்க்கையில் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் 90 வயதைத் தாண்டியிருந்த சமயத்தில்தான் எல்லாவற்றையும்விட பெரிய சோதனை ஒன்று வந்தது. அப்போது, மேதியர்களும் பெர்சியர்களும் பாபிலோனைக் கைப்பற்றியிருந்தார்கள். தரியு ராஜாதான் அதை ஆட்சி செய்துகொண்டிருந்தார். ராஜாவின் உயர் அதிகாரிகளுக்கு தானியேலை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர் வணங்கிய கடவுளையும் அவர்கள் மதிக்கவில்லை. அதனால், தானியேலைக் கொலை செய்ய ஒரு சதி செய்தார்கள். ஒரு கட்டளையைப் பிறப்பித்து அதில் கையெழுத்துப் போடச் சொல்லி ராஜாவிடம் சொன்னார்கள். அந்தச் சோதனையில், தானியேல் கடவுளுக்கு உண்மையாக இருப்பாரா அல்லது ராஜாவுக்கு உண்மையாக இருப்பாரா என்பதைக் காட்ட வேண்டியிருந்தது. ராஜாவுக்கு உண்மையாக இருப்பதற்கும் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கும் தானியேல் ஒரேவொரு விஷயத்தைத்தான் செய்ய வேண்டியிருந்தது. 30 நாட்களுக்கு அவர் யெகோவாவிடம் ஜெபம் செய்யாமல் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், தானியேல் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. யெகோவாவுக்குத்தான் அவர் உண்மையாக இருந்தார். அதனால், அவரை சிங்கக் குகையில் போட்டார்கள். ஆனால், சிங்கங்களின் வாயிலிருந்து யெகோவா தானியேலைக் காப்பாற்றினார். இப்படி, தானியேல் தனக்கு உண்மையாக இருந்ததற்குப் பலன் கொடுத்தார். (தானி. 6:12-15, 20-22) தானியேலைப் போலவே நாமும், எல்லா சந்தர்ப்பத்திலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட உண்மைத்தன்மையை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
12 நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், யெகோவாவுக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டுமென்றால் அவரை நாம் உயிருக்கு உயிராக நேசிக்க வேண்டும். தானியேல் அசைக்க முடியாத உண்மைத்தன்மையைக் காட்டியதற்குக் காரணம், அவர் யெகோவாவை உயிருக்கு உயிராக நேசித்தார். தானியேல் எப்படி அந்தளவு அன்பை யெகோவாமேல் வளர்த்துக்கொண்டார்? யெகோவாவின் குணங்களைப் பற்றியும் அந்தக் குணங்களை அவர் எப்படியெல்லாம் காட்டினார் என்பதைப் பற்றியும் தானியேல் யோசித்துப் பார்த்தார் என்பதில் சந்தேகமே இல்லை. (தானி. 9:4) யெகோவா அவருடைய மக்களுக்காகவும் தனக்காகவும் செய்த எல்லா நல்ல விஷயங்களையும் பற்றிக்கூட தானியேல் நன்றியோடு நினைத்துப் பார்த்தார்.—தானி. 2:20-23; 9:15, 16.
13 தானியேல் இருந்த அதே சூழ்நிலையில்தான் இன்று இருக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களைச் சுற்றியிருக்கும் நபர்கள் யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் கொஞ்சம்கூட மதிப்பதில்லை. கடவுள்பக்தி இருக்கும் யாரையுமே அந்த நபர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்களில் சிலர், நம் இளைஞர்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து, யெகோவாவுக்கு உண்மையில்லாமல் நடக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரேயம் என்ற இளைஞரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அவருடைய டீச்சர் க்ளாஸில் இருந்த எல்லாரிடமும் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘ஒரு ஃப்ரெண்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாக உங்களிடம் வந்து சொன்னால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டார். அதன் பிறகு, ‘அந்த ப்ரெண்டுக்கு யாரெல்லாம் சப்போர்ட் பண்ணுவீர்களோ அவர்கள் எல்லாரும் க்ளாஸுக்கு ஒரு பக்கம் நில்லுங்கள். யாரெல்லாம் சப்போர்ட் பண்ண மாட்டீர்களோ அவர்கள் எல்லாரும் இன்னொரு பக்கம் நில்லுங்கள்’ என்று டீச்சர் சொன்னார். கிரேயமும், சாட்சியாக இருந்த இன்னொரு பையனும் தவிர, மற்ற எல்லாருமே அந்த ப்ரெண்டுக்கு சப்போர்ட் செய்யும் பக்கத்தில் போய் நின்றார்கள். அடுத்து நடந்ததுதான் கிரேயமுக்கு ஒரு பெரிய சோதனையாக இருந்தது. அவர் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பாரா மாட்டாரா என்பதைக் காட்ட வேண்டியிருந்தது. அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “அந்த ஒருமணிநேர க்ளாஸ் முடியும்வரை, மற்ற பசங்களும் டீச்சரும் சேர்ந்து எங்கள் இரண்டு பேரையும் கேவலமாகப் பேசி அசிங்கப்படுத்தினார்கள். என்னுடைய நம்பிக்கையைப் பற்றி அமைதியாகவும் நியாயமாகவும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல நான் ரொம்ப முயற்சி செய்தேன். ஆனால் நான் சொன்ன எதையும் அவர்கள் காதில் வாங்கவில்லை” என்று சொல்கிறார். இந்தச் சோதனை வந்தபோது கிரேயமுக்கு எப்படி இருந்தது? “எல்லாரும் சேர்ந்து என்னைக் கண்டபடி பேசியது எனக்குப் பிடிக்கவில்லைதான். ஆனால், நான் யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததையும் என் நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமல் அதைப் பற்றி அவர்களிடம் பேசியதையும் நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்று அவர் சொல்கிறார்.
14 தானியேலைப் போலவே நாமும் யெகோவாவை உயிருக்கு உயிராக நேசித்தால், எல்லா சந்தர்ப்பத்திலும் அவருக்கு உண்மையாக இருப்போம். அப்படிப்பட்ட அன்பையும் பாசத்தையும் வளர்த்துக்கொள்வதற்கு யெகோவாவின் குணங்களைப் பற்றி நாம் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, அவருடைய படைப்புகளைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்து பார்க்கலாம். (ரோ. 1:20) யெகோவாமேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பும் மதிப்பும் அதிகமாக வேண்டுமென்றால், “யாருடைய கைவண்ணம்?” என்ற தலைப்பில் வரும் சின்னச் சின்னக் கட்டுரைகளைப் படிக்கலாம் அல்லது அந்தத் தலைப்பில் வரும் வீடியோக்களைப் பார்க்கலாம். உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிறு புத்தகத்தையும், உயிர் படைக்கப்பட்டதா? என்ற ஆங்கில சிறு புத்தகத்தையும்கூட நீங்கள் பார்க்கலாம். டென்மார்க்கில் இருக்கும் எஸ்தர் என்ற இளம் சகோதரி இந்தப் பிரசுரங்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “அதிலெல்லாம் விஷயங்களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள். அந்தச் சின்ன புத்தகங்களில், இதைத்தான் நம்ப வேண்டும் என்று அவர்கள் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, உண்மைகளை மட்டும் சொல்கிறார்கள், அவற்றை நம்புவதா வேண்டாமா என்று நாமே முடிவு செய்ய விட்டுவிடுகிறார்கள்.” முன்பு நாம் பார்த்த பென் இப்படிச் சொல்கிறார்: “இதெல்லாமே என் விசுவாசத்தை ரொம்பப் பலப்படுத்தியது. கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை ஆதாரத்தோடு எனக்குப் புரிய வைத்தது.” இந்தப் பிரசுரங்களை நீங்களும் ஆராய்ந்து பார்த்தால், பைபிள் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மை என்பதைக் கண்டிப்பாக ஒத்துக்கொள்வீர்கள்: “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்.”—வெளி. 4:11.
15 யெகோவாமேல் அன்பையும் பாசத்தையும் வளர்த்துக்கொள்ள இன்னொரு வழி, அவருடைய மகன் இயேசுவின் வாழ்க்கையை நன்றாக ஆராய்ந்து பார்ப்பதுதான். ஜெர்மனியில் இருக்கும் சமீரா என்ற இளம் சகோதரி இதைத்தான் செய்தார். “இயேசுவைப் பற்றித் தெரிந்துகொள்வதன் மூலமாக நான் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டேன்” என்று அவர் சொல்கிறார். சின்னப் பிள்ளையாக இருந்தபோது, யெகோவாவுக்கு உணர்ச்சிகள் இருக்கின்றன என்பதையும், அவருடைய நண்பராக முடியும் என்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், இயேசுவை ஒரு நிஜமான நபராக அவரால் பார்க்க முடிந்தது. “எனக்கு இயேசுவை ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், அவர் எல்லாரோடும் அன்பாகப் பழகினார், பிள்ளைகள்மேல் பாசத்தைக் கொட்டினார்” என்று அவர் சொல்கிறார். இயேசுவைப் பற்றித் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, யெகோவாவிடம் அவர் நெருங்கிப் போனார். அது எப்படி? சமீரா இப்படிச் சொல்கிறார்: “இயேசு எல்லா விஷயத்திலும் தன் அப்பாவைப் போலவே நடந்துகொள்கிறார் என்பதை நான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டேன். குணத்தில் அவர்கள் இரண்டு பேரும் ஒரே மாதிரி. சொல்லப்போனால், இயேசுவை யெகோவா இந்தப் பூமிக்கு அனுப்பியதற்கு ஒரு காரணமே, இயேசு மூலமாக மனிதர்கள் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்று புரிந்துகொண்டேன்.” (யோவா. 14:9) யெகோவாவோடு இன்னும் நெருக்கமாவதற்கு நீங்கள் ஆசைப்பட்டால், இயேசுவைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஏன் நிறைய நேரம் செலவு செய்யக் கூடாது? அப்படிச் செய்தால், யெகோவாமேல் உங்களுக்கு இருக்கும் அன்பு அதிகமாகும், அவருக்கு எப்போதுமே உண்மையாகவும் இருப்பீர்கள்.
16 ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருப்பவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள், அதுவும் எப்போதுமே அப்படி இருப்பார்கள்! (ரூத் 1:14-17) யெகோவாவுக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு மனநிம்மதியும் மனசமாதானமும் கிடைக்கும். ஏன்? ஏனென்றால், அவருக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு அவரும் உண்மையாக இருப்பார் என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 18:25-ஐயும் மீகா 6:8-ஐயும் வாசியுங்கள்.) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: எல்லாவற்றையும் படைத்த சர்வவல்லமையுள்ள கடவுளே நம்முடைய நெருங்கிய நண்பராக இருக்க ஆசைப்படுகிறார்! அவர் நம் நண்பராக இருக்கும்போது, எந்தப் பிரச்சினையாலும்... எந்த எதிரியாலும்... அந்த நட்பை முறிக்க முடியாது; சாவே வந்தாலும் அந்த நட்பை முறிக்க முடியாது. (தானி. 12:13; லூக். 20:37, 38; ரோ. 8:38, 39) அப்படியென்றால், தானியேலைப் போல நாமும் எப்போதுமே யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது எவ்வளவு முக்கியம்!
தானியேலிடமிருந்து கற்றுக்கொண்டே இருங்கள்
17 இந்தக் கட்டுரையில், தானியேலின் இரண்டு குணங்களைப் பற்றி மட்டும்தான் நாம் பார்த்தோம். ஆனால், அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, தானியேலுக்கு யெகோவா நிறைய தரிசனங்களையும் கனவுகளையும் தந்தார். அதோடு, தீர்க்கதரிசனங்களுக்கு அர்த்தம் சொல்லும் திறமையைக் கொடுத்தார். அதில் நிறைய தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டன. மற்ற தீர்க்கதரிசனங்கள் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி சில விவரங்களைச் சொல்கின்றன. பூமியில் இருக்கும் எல்லா மனிதர்களுமே அந்தச் சம்பவங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
18 அடுத்த கட்டுரையில், தானியேல் எழுதிய இரண்டு தீர்க்கதரிசனங்களைப் பற்றிப் பார்ப்போம். நாம் சிறியவர்களோ பெரியவர்களோ, அந்தத் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொண்டால் இப்போது ஞானமான முடிவுகளை எடுக்க முடியும். அதுமட்டுமல்ல, அந்தத் தீர்க்கதரிசனங்கள் நம் தைரியத்தையும் உண்மைத்தன்மையையும் பலப்படுத்தும். அதனால், சீக்கிரத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைச் சந்திக்க நம்மால் தயாராக இருக்க முடியும்.
அதிகாரம் 38
“கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைத் தாக்குப்பிடித்தார்கள்”
உங்களுக்குத் தெரியுமா?
பழங்கால பாபிலோனின் இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களும் செங்கல் செய்யும் முறைகளும் பைபிளில் சொல்லியிருப்பது உண்மை என்பதை எப்படிக் காட்டுகிறது?
பழங்கால பாபிலோனை கட்ட பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான சுட்ட செங்கல்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த செங்கல்களை தயாரிக்கிற சூளைகள், “ஊருக்கு வெளியே இருந்தது. அங்கே நல்ல களிமண் கிடைத்தது. அந்த சூளைக்குத் தேவையான எரிபொருளும் . . . தாராளமாக கிடைத்தது” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கோல்தவே சொல்கிறார்.
பாபிலோன் அதிகாரிகள் இந்த சூளைகளை ஒரு கொடூரமான விஷயத்துக்காகவும் பயன்படுத்தினார்கள் என்று பழங்கால பதிவுகள் காட்டுகின்றன. “ராஜாவுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாதவர்களையும் புனிதமான விஷயங்களை அவமதித்தவர்களையும் சூளையில் போட்டு எரிக்க வேண்டும் என்று ராஜா உத்தரவு கொடுத்ததாக பாபிலோனின் பதிவுகள் காட்டுகிறது” என்று டோரான்டோ பல்கலைக்கழக பேராசிரியர் பால்-ஆலென் போல்யூ சொல்கிறார். இவர் பழங்கால அசீரியாவின் சரித்திரத்தையும் மொழியையும் ஆராய்ச்சி செய்கிற வல்லுநர். நேபுகாத்நேச்சார் ராஜாவின் காலத்தை சேர்ந்த ஒரு எழுத்துப் பதிவு இப்படிச் சொல்கிறது: “அவர்களை அழித்துப் போடுங்கள், எரித்து போடுங்கள், நெருப்பில் சுடுங்கள் . . . சமையல்காரனின் அடுப்புக்கு கொண்டுப்போங்கள் . . . அவர்களை எரித்து புகை எழும்பச் செய்யுங்கள், கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் அவர்கள் எரிந்து சாம்பலாகட்டும்.”
இது உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? பைபிளைப் படிக்கும் ஒருவருக்கு, தானியேல் 3-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற சம்பவங்களை இது ஞாபகப்படுத்தும். அந்த பதிவின்படி, பாபிலோன் நகரத்துக்கு வெளியில் இருக்கிற தூரா சமவெளியில் நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு பெரிய தங்கச் சிலையை நிறுத்தினார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று இளம் எபிரெய ஆண்கள் அந்தச் சிலையை வணங்க மறுத்தார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த நேபுகாத்நேச்சார் ராஜா, “வழக்கத்தைவிட ஏழு மடங்கு அதிகமாகச் சூளையைச் சூடாக்கும்படி” சொன்னார். பின்பு ராஜாவுடைய கட்டளைப்படி, அந்த மூன்று பேரும் “எரிகிற நெருப்புச் சூளையில் வீசப்பட்டார்கள்.” ஒரு சக்தி வாய்ந்த தேவதூதர் அவர்களை சாவில் இருந்து காப்பாற்றினார்.—தானி. 3:1-6, 19-28.
பைபிளில் சொல்லப்பட்ட இந்த சம்பவம் உண்மை என்பதை பாபிலோனில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களும் காட்டுகின்றன. இதில் நிறைய செங்கல்களில், ராஜாவை புகழும் வார்த்தைகள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் ஒன்றில் இப்படி இருக்கிறது: “நேபுகாத்நேச்சார், பாபிலோனின் ராஜா . . . இந்த அரண்மனை, மகா ராஜாவான நான் கட்டியது . . . என் வம்சத்தில் வருகிறவர்கள் என்றென்றும் இதில் ஆட்சி செய்யட்டும்.” இந்த வார்த்தைகளும் தானியேல் 4:30-ல் இருக்கிற வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறது. அதில் நேபுகாத்நேச்சார் இப்படி பெருமையாக சொல்கிறார்: “என்னுடைய ராஜ மாளிகைக்காகவும் என்னுடைய பேர்புகழுக்காகவும் என் சொந்த சக்தியினாலும் பலத்தினாலும் நானே கட்டியது அல்லவா இந்த மகா பாபிலோன்!”
சோதனையிலும் யெகோவாவிற்கு உண்மையாயிருத்தல்!
14 தானியேலின் பெயர் பெல்தெஷாத்சார் என மாற்றப்பட்டது, அதற்கு “ராஜாவின் உயிரைக் காத்திடு” என அர்த்தம். அத்தாட்சியின்படி இது, பாபிலோனின் முக்கிய தெய்வமாகிய பெல் அல்லது மார்டுக்கிற்காக ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தின் சுருக்கம். தானியேலுக்கு இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்ததில் நேபுகாத்நேச்சாருக்கு பங்கு இருந்ததோ இல்லையோ, அது ‘[தன்] தேவனுடைய நாமத்தின்படி’ இருந்ததைக் குறித்து பெருமைப்பட்டுக்கொண்டார். (தானியேல் 4:8) அனனியாவிற்கு சாத்ராக் என்ற பெயர் தரப்பட்டது; சில நிபுணர்களின்படி இது “ஆக்கூவின் கட்டளை” என அர்த்தப்படுத்தும் கூட்டுப் பெயர். ஆக்கூ என்பது சுமேரியக் கடவுளின் பெயர் என்பது சுவாரஸ்யமளிக்கும் விஷயம். மீஷாவேலுக்கு மேஷாக் (ஒருவேளை, மிஷாஆக்கூ) என பெயரிடப்பட்டது. “கடவுளுக்கு நிகர் யார்?” என்பது, “ஆக்கூவுக்கு நிகர் யார்?” என இவ்வாறு தந்திரமாய் திரிக்கப்பட்டது. அசரியாவின் பாபிலோனிய பெயர் ஆபேத்நேகோ; அதன் அர்த்தம் “நேகோவின் ஊழியன்.” “நேகோ” என்பது “நேபோ” என்பதன் திரிபு. நேபோ என்பது ஒரு கடவுளின் பெயர். இப்பெயரின் அடிப்படையிலேயே அநேக பாபிலோனிய ஆட்சியாளர்களுக்கு பெயரிருந்தன.
கடுஞ்சோதனைக்கு மசியாத விசுவாசம்
3 நேபுகாத்நேச்சார் ராஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவரது பெயரின் அர்த்தம், “நேபோவே, வாரிசை பாதுகாத்திடு!” என்பதாகும். நேபோ என்பது அறிவுக்கும் வேளாண்மைக்குமான பாபிலோனிய தெய்வம். நேபுகாத்நேச்சார் தெய்வபக்தி மிக்கவர். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, அவர் அநேக பாபிலோனிய தெய்வங்களுக்கு ஆலயங்களைக் கட்டி, அவற்றை அழகுபடுத்தினார். அவரது இஷ்ட தெய்வம் மார்டுக். போரில் தான் பெற்ற எல்லா வெற்றிகளுக்கும் புகழ்மாலையை மார்டுக்கிற்கே சூட்டினார். நேபுகாத்நேச்சார் குறிகேட்காமல் எந்தப் போர் நடவடிக்கைகளையும் திட்டமிட்டதாக தெரியவில்லை.—எசேக்கியேல் 21:18-23.
கடுஞ்சோதனைக்கு மசியாத விசுவாசம்
10 நேபுகாத்நேச்சாரின் சிலைக்கு முன்பாக கூடிவந்தவர்களில் பெரும்பாலானோர் தங்கள் தங்கள் குல தெய்வங்களை வழிபட்டபோதிலும், இச்சிலையை வணங்குவதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. “அவர்கள் எல்லாருமே விக்கிரகங்களை வணங்கிவந்தவர்கள்தான், ஒரு தெய்வத்தை வழிபடுவதால் இன்னொரு தெய்வத்தை வழிபடக்கூடாது என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை” என ஒரு பைபிள் அறிஞர் விளக்கினார். “விக்கிரக வணக்கத்தாரின் கருத்துக்கு, அதாவது அநேக கடவுட்கள் இருக்கிறார்கள், மேலும் . . . வேறெவரின் அல்லது வேறெந்த நாட்டின் கடவுளையும் வணங்குவதில் தப்பில்லை என்ற கருத்துக்கு அது ஒத்திருந்தது” என்றும் அவர் சொன்னார்.
“பைபிளைப் படியுங்கள் யோசித்துப் பாருங்கள்” என்ற ஆன்லைன் தொடர்
எரிகிற நெருப்புச் சூளையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்!
இளைஞர்களுக்கு
செய்ய வேண்டியது: இந்தப் பயிற்சியை அமைதியான இடத்தில் செய்யுங்கள். வசனங்களை வாசிக்கும்போது, சம்பவம் நடக்கும் இடத்தில் நீங்களே இருப்பதுபோல் கற்பனை செய்துபாருங்கள். ஆட்களுடைய குரல்களைக் கேளுங்கள். அவர்கள் உணருவதைப் போலவே உணருங்கள். அந்தப் பதிவுக்கு உயிர் கொடுங்கள்.
முக்கியக் கதாபாத்திரங்கள்: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, மற்றும் நேபுகாத்நேச்சார்
சுருக்கம்: மூன்று இளம் எபிரெயர்களின் விசுவாசத்துக்கு வந்த சோதனை.
1 கற்பனை செய்யுங்கள். —தானியேல் 3:1-30-ஐ வாசியுங்கள்.
வசனங்கள் 3-7-ஐப் படிக்கும்போது நீங்கள் என்னென்ன சத்தங்களைக் “கேட்டீர்கள்” என்று விளக்குங்கள்.
.....
உங்களுடைய கற்பனையில் அந்த எரிகிற நெருப்புச் சூளை எப்படி இருந்தது என்று விளக்குங்கள்.
.....
வழக்கத்தைவிட சூளையை ஏழு மடங்கு சூடாக்கும்படி நேபுகாத்நேச்சார் சொன்னபோது அவருடைய குரலில் என்னென்ன உணர்ச்சிகளை நீங்கள் கவனித்தீர்கள்? (வசனங்கள் 19 மற்றும் 20-ஐ மறுபடியும் வாசியுங்கள்.)
.....
நெருப்புச் சூளையில் இருந்த நான்காவது நபர் உங்களுடைய கற்பனையில் எப்படி இருந்தார் என்று விளக்குங்கள். (வசனங்கள் 24 மற்றும் 25-ஐ மறுபடியும் வாசியுங்கள்.)
.....
வசனங்கள் 16-18-ல் இருக்கும் வார்த்தைகளை நேபுகாத்நேச்சாரிடம் சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்நேகோ சொன்னபோது அவர்களிடம் என்னென்ன குணங்களை நீங்கள் கவனித்தீர்கள்?
.....
2 ஆழமாக யோசியுங்கள்.
உங்களிடம் இருக்கும் ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்தி, ஒரு முழத்தின் அளவைக் கண்டுபிடியுங்கள். பிறகு, நேபுகாத்நேச்சார் செய்த சிலையின் உயரத்தையும் அகலத்தையும் கணக்கிடுங்கள். (வசனம் 1-ஐ மறுபடியும் வாசியுங்கள்.)
.....
19 மற்றும் 20-வசனங்களை, 28 மற்றும் 29-வசனங்களோடு ஒப்பிடும்போது, நேபுகாத்நேச்சார் எப்படிப்பட்ட நபராக தெரிகிறார்?
.....
3 கற்றதைக் கடைப்பிடியுங்கள். என்ன கற்றுக்கொண்டீர்கள் . . .
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை காட்டுவதைப் பற்றி.
.....
உங்களுடைய நம்பிக்கையில் உறுதியாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி.
.....
கஷ்டமான சமயங்களில் யெகோவா செய்யும் உதவியைப் பற்றி.
.....
கூடுதலான பாடங்கள்.
எந்த மாதிரி சூழ்நிலைகளில் உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்படலாம்?
.....
சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்நேகோவைப் பற்றிய பதிவிலிருந்து எப்போதும் உண்மையாக இருப்பது சம்பந்தமாக நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
.....
4 இந்தப் பதிவிலிருந்து கற்றுக்கொண்ட எந்தப் பாடம் உங்களுக்கு ரொம்ப பொருந்துவதாக நினைக்கிறீர்கள், ஏன்?
.....
அதிகாரம் 39
“என் உயிர் போனால் போகட்டும்”
ia பக். 138, பெட்டி
ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்
எஸ்தர் புத்தகத்திலுள்ள தகவல்கள் சரித்திரப்பூர்வமற்றவையா?
விமர்சகர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனாலும், பெர்சியர்களின் அரச குடும்பத்தையும், கட்டடக் கலையையும், பழக்கவழக்கங்களையும் பற்றி எழுத்தாளர் விலாவாரியாகக் கூறியிருக்கிறார் என அறிஞர்கள் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள பொது ஆவணங்களில் எஸ்தர் ராணியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பது உண்மைதான்; ஆனால், அரச குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் எத்தனையோ பேரைப் பற்றி சரித்திரப் பதிவுகள் சொல்வதில்லையே. அதுமட்டுமல்ல, மார்டுக்கா என்பவர் சூசான் அரண்மனையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்... அதுவும் எஸ்தர் புத்தகம் குறிப்பிடுகிற அதே காலப்பகுதியில் பணியாற்றி வந்தார்... எனச் சரித்திரப் பதிவுகள் காட்டுகின்றன. மொர்தெகாய் என்பதன் பெர்சிய பெயர்தான் மார்டுக்கா.
கடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள்
18 ஆமான் என்பவனுக்கு அகாஸ்வேருவின் அரசவையில் உயர் பதவி அளிக்கப்பட்டது. அரசர் அவனுக்கு அந்தச் சாம்ராஜ்யத்தில் தனக்கடுத்த அந்தஸ்தைக் கொடுத்தார்; அவனைப் பிரதம மந்திரியாக நியமித்து, தனது முக்கிய ஆலோசகராக வைத்துக்கொண்டார். இந்த அதிகாரியின் முன்னால் அனைவரும் தலைவணங்க வேண்டும் என்று ஆணையும் பிறப்பித்தார். (எஸ்தர் 3:1-4) அந்த அரசாணை மொர்தெகாய்க்கு ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது. அரசருடைய ஆணைக்குக் கீழ்ப்படிய விரும்பினார், ஆனால் அது கடவுளுடைய ஆணையை மீறாத பட்சத்தில் மட்டுமே! பைபிள் சொல்கிறபடி, ஆமான் ஒரு ஆகாகியன். அப்படியென்றால் அவன் அமலேக்கிய அரசனாகிய ஆகாகின் வம்சத்தில் வந்தவன். இந்த ஆகாகைத்தான் சாமுவேல் தீர்க்கதரிசி வெட்டிப்போட்டிருந்தார். (1 சா. 15:33) அமலேக்கியர் மிகவும் பொல்லாதவர்கள், அதனால் யெகோவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் எதிரிகள்; அடியோடு அழிக்கப்பட வேண்டுமெனக் கடவுளால் கண்டனம் செய்யப்பட்டவர்கள். (உபா. 25:19) அப்படியிருக்கும்போது உண்மையுள்ள யூதன் இந்த அமலேக்கியனுக்கு முன்னால் எப்படித் தலைவணங்க முடியும்? இந்த விஷயத்தில் மொர்தெகாய் உறுதியாய் இருந்தார். இந்நாள்வரை விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் இதேபோன்ற உறுதியுடன் இருக்கிறார்கள்; ஆம், உயிரையே பணயம் வைக்க வேண்டியிருந்தாலும், ‘மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டும்’ என்ற நியமத்தைப் பின்பற்றுகிறார்கள்.—அப். 5:29.
g02 10/8 பக். 7 பாரா 3–பக். 8 பாரா 2
எண்களை வழிகாட்டியாக ஏற்க வேண்டுமா?
எண்சோதிடத்தை பைபிள் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பெர்சியாவில் வாழ்ந்த யூதர்களை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டிய ஆமான் என்பவரைப் பற்றி அது இவ்வாறு சொல்கிறது: ‘யூதரைக் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் “பூர்” என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டு விழுந்தது.’—எஸ்தர் 3:7, பொ.மொ.
பூர்வ காலங்களில் ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதில் சீட்டுப் போட்டுப் பார்க்கும் பழக்கம் பின்பற்றப்பட்டது. (நீதிமொழிகள் 18:18) ஆனால் குறிகேட்பதற்காக ஆமான் சீட்டுப் போட்டான்; குறிகேட்பதை பைபிள் கண்டனம் செய்கிறது. “குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும் . . . இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்” என உபாகமம் 18:10-12 சொல்கிறது.
குறிசொல்லுதலையும் மாய சக்தியையும் பைபிள் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்படுத்துகிறது. பொல்லாத ஆவிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் பொறுத்தவரை இது உண்மையோ இல்லையோ, ஒன்று மட்டும் நிச்சயம்: ஆவியுலகத் தொடர்பை கடவுள் கண்டனம் செய்கிறார், அது பொல்லாத ஆவிகள் நம்மை கட்டுப்படுத்தும்படி செய்யும்.—1 சாமுவேல் 15:23; எபேசியர் 6:12.
ia பக். 142, பெட்டி
ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்
தீர்க்கதரிசனம் நிறைவேறியது
எஸ்தரும் மொர்தெகாயும் கடவுளுடைய மக்களுக்காகப் போராடியபோது பைபிள் தீர்க்கதரிசனம் ஒன்று நிறைவேறியது. 1,200-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் மூதாதை யாக்கோபு தன் மகன்களில் ஒருவரைப் பற்றி இவ்வாறு முன்னுரைத்தார்: “பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்.” (ஆதி. 49:27) “காலையில்,” அதாவது இஸ்ரவேலுடைய அரச வரலாறு உதயமான சமயத்தில், சவுல் ராஜா உட்பட பென்யமீன் வம்சத்தைச் சேர்ந்த மற்ற வீரர்கள் யெகோவாவின் மக்களுக்காகப் போராடினார்கள். “மாலையில்,” அதாவது இஸ்ரவேலின் அரச பரம்பரை அஸ்தமித்த பின்பு, பென்யமீன் வம்சத்தைச் சேர்ந்த எஸ்தரும் மொர்தெகாயும் யெகோவாவின் எதிரிகளோடு போராடி ஜெயித்தார்கள். ஒரு கருத்தில் பார்த்தால், தாங்கள் கொள்ளையிட்டதைப் பங்கிட்டார்கள்; ஏனென்றால், ஆமானுக்கு இருந்த ஏகபோக சொத்து முழுவதும் இவர்கள் கைக்கு வந்தது.
அதிகாரம் 40
மதில்களைத் திரும்பக் கட்டினார்
உங்களுக்குத் தெரியுமா?
ராஜாவுக்குப் பானம் பரிமாறுகிறவராக இருக்கும் பொறுப்பு எந்தளவுக்கு முக்கியமானதாக இருந்தது?
நெகேமியா பெர்சிய ராஜாவான அர்தசஷ்டாவுக்குப் பானம் பரிமாறுகிறவராக இருந்தார். (நெகேமியா 1:11) அந்தக் காலத்து மத்தியக் கிழக்குப் பகுதியில் இருந்த அரண்மனைகளில், ராஜாவுக்குப் பானம் பரிமாறுகிறவர் சாதாரண வேலைக்காரராகக் கருதப்படவில்லை. அதற்குப் பதிலாக, பெரிய பதவியில் இருந்த ஒரு அதிகாரியாகக் கருதப்பட்டார். அந்தக் காலத்தைச் சேர்ந்த நிறைய இலக்கியங்களிலும் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் பானம் பரிமாறுகிறவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பெர்சிய அரண்மனையில் நெகேமியா எப்படிப்பட்ட வேலையைச் செய்தார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
ராஜாவுக்கு விஷம் கலந்த திராட்சமதுவைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக பானம் பரிமாறுகிறவர் முதலில் அந்தத் திராட்சமதுவைக் குடித்துப் பார்ப்பார். அதனால், ராஜாவின் முழு நம்பிக்கையும் பெற்றவர்தான் பானம் பரிமாறுகிறவராக இருப்பார். “அந்தக் காலத்தில், பெர்சிய ராஜாக்கள் எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் கொலை செய்யப்படும் ஆபத்தான நிலையில் இருந்தார்கள். அதனால், நம்பிக்கையான ஊழியர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப முக்கியமாக இருந்தது” என்று எட்வின் யாமுயாட்சி என்ற சரித்திர நிபுணர் சொல்கிறார். பானம் பரிமாறுகிறவர் பெரும்பாலும் ராஜாவுக்கு ரொம்ப பிடித்தவராக இருப்பார், அவர் சொல்வதை ராஜா கேட்பார். பானம் பரிமாறுபவர் தினமும் ராஜாவோடு இருந்ததால், யாரெல்லாம் ராஜாவிடம் வந்து பேசலாம் என்பதைக்கூட அவர் முடிவு செய்திருக்கலாம்.
நெகேமியாவை ராஜா ரொம்பவே நம்பியிருப்பார், மதித்திருப்பார். எருசலேமுக்குப் போய் அதன் மதில்களைத் திரும்பக் கட்ட நெகேமியாவுக்கு ராஜா உடனே அனுமதி கொடுத்ததற்கு அது காரணமாக இருந்திருக்கலாம். “‘நீ எவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவாய்?’ என்று மட்டும்தான் ராஜா கேட்டார்” என்று தி ஆன்க்கர் பைபிள் டிக்ஷ்னரி சொல்கிறது.—நெகேமியா 2:1-6.
யெகோவா உங்களை என்னவாக ஆக்குவார்?
11 இப்போது, சல்லூமின் மகள்களைப் பற்றிப் பார்க்கலாம். அபிகாயிலுக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்தவர்கள்தான் இவர்கள்! எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவதற்கு இவர்களையும் யெகோவா பயன்படுத்தினார். (நெ. 2:20; 3:12) இவர்களுடைய அப்பா ஒரு மாகாணத் தலைவராக இருந்தபோதும், மதில்களைக் கட்டுகிற அந்தக் கஷ்டமான, ஆபத்தான வேலையைச் செய்ய இவர்களுக்கு மனம் இருந்தது. (நெ. 4:15-18) ‘வேலை செய்ய மறுத்த’ தெக்கோவா ஊரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! (நெ. 3:5) எருசலேமின் மதில் வெறும் 52 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டபோது, சல்லூமின் மகள்கள் எப்படிப் பூரித்துப்போயிருப்பார்கள்! (நெ. 6:15) அவர்களைப் போலவே இன்றும் நிறைய சகோதரிகள் கடவுளுக்கு விசேஷ சேவை செய்கிறார்கள். யெகோவாவின் சேவையில் பயன்படுத்தப்படுகிற கட்டிடங்களைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் ஆசையோடு முன்வருகிறார்கள். அவர்களுடைய திறமைகளும் உற்சாகமும் உண்மைத்தன்மையும் இந்த வேலையின் வெற்றிக்கு கைகொடுக்கிறது.
நெகேமியா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
4:17, 18— ஒரேவொரு கையை மட்டும் பயன்படுத்தி கட்டுமான வேலையை எப்படிச் செய்ய முடியும்? சுமை சுமப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே இருந்திருக்காது. தங்கள் தலையிலோ தோளிலோ சுமை வைக்கப்பட்ட பிறகு, தாராளமாக ஒரே கையினால் அவர்கள் சமாளித்தார்கள், “மறு கையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.” இரு கைகளையும் பயன்படுத்தி கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தவர்களோ, “அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலை செய்தார்கள்.” விரோதிகள் ஒருவேளை தாக்கினால் எதிர்ப்பதற்கு அவர்கள் தயாராய் இருந்தார்கள்.
வேறு மொழி சபையில் சேவை செய்பவர்களே, யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
4 வேறொரு மொழியில் சொல்லப்படும் பைபிள் போதனைகள் நமக்குப் புரியவில்லை என்றால், யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தம் பாதிக்கப்படலாம். நெகேமியாவின் காலத்தில் நடந்ததைக் கவனியுங்கள். அவர் எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, சில பிள்ளைகளால் எபிரெய மொழியில் பேச முடியாமல் இருந்ததைக் கவனித்தார். (நெகேமியா 13:23, 24-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய வார்த்தையை இந்தப் பிள்ளைகளால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததால், யெகோவாவோடு அந்தப் பிள்ளைகளுக்கு இருந்த பந்தம் பலவீனமானது.—நெ. 8:2, 8.
“பைபிளைப் படியுங்கள் யோசித்துப் பாருங்கள்” என்ற ஆன்லைன் தொடர்
கடவுள் அவருடைய ஜெபத்துக்குப் பதில் தந்தார்
இளைஞர்களுக்கு
செய்ய வேண்டியது: இந்தப் பயிற்சியை அமைதியான இடத்தில் செய்யுங்கள். வசனங்களை வாசிக்கும்போது, சம்பவம் நடக்கும் இடத்தில் நீங்களே இருப்பதுபோல் கற்பனை செய்துபாருங்கள். ஆட்களுடைய குரல்களைக் கேளுங்கள். அவர்கள் உணருவதைப் போலவே உணருங்கள். அந்தப் பதிவுக்கு உயிர் கொடுங்கள்.
முக்கியக் கதாபாத்திரங்கள்: நெகேமியா, அர்தசஷ்டா ராஜா, சன்பல்லாத், மற்றும் தொபியா
சுருக்கம்: யெகோவாவிடம் நெகேமியா ஜெபம் செய்தார், எருசலேமுக்குப் போவதற்காக ராஜாவிடம் அனுமதி கேட்டார், பல தடைகளைத் தாண்டினார்.
1 கற்பனை செய்யுங்கள். —நெகேமியா 2:1-20-ஐ வாசியுங்கள்.
இந்தப் பதிவில் வரும் கதாபாத்திரங்கள் உங்களுடைய கற்பனையில் எப்படி இருந்தார்கள்?
நெகேமியா: ․․․․․
அர்தசஷ்டா ராஜா: ․․․․․
சன்பல்லாத் மற்றும் தொபியா: ․․․․․
நெகேமியா ஏன் சுருக்கமான ஜெபத்தைச் செய்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
․․․․․
நெகேமியா எருசலேமுக்குப் போனபோது, அந்த இடம் பார்ப்பதற்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து விளக்குங்கள். (வசனங்கள் 13 மற்றும் 14-ஐ மறுபடியும் வாசியுங்கள்.)
․․․․․
வசனம் 17-ல் இருக்கும் வார்த்தைகளை நெகேமியா சொன்னபோது அவருடைய குரல் உங்களுடைய கற்பனையில் எப்படி இருந்தது?
․․․․․
2 ஆழமாக யோசியுங்கள்.
நெகேமியா எதற்காக ஜெபம் செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? (நெகேமியா 1:4-11-ஐ வாசியுங்கள்.)
․․․․․
எருசலேமுக்குப் போக அர்தசஷ்டா ராஜா அனுமதி கொடுப்பார் என்று நெகேமியா ஏன் நினைத்திருக்கலாம்? (எஸ்றா 7:1-6 மற்றும் நீதிமொழிகள் 21:1-ஐ வாசியுங்கள்.)
․․․․․
யூதர்கள் எப்படி ‘நல்ல வேலையைச் செய்ய ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தினார்கள்’? (நெகேமியா 2:18 மற்றும் ஏசாயா 35:3-ஐ வாசியுங்கள்.)
․․․․․
சன்பல்லாத்திடமும் தொபியாவிடமும் நெகேமியா பேசிய வார்த்தைகளில் உங்களுக்கு எது ரொம்ப பிடித்திருந்தது? (நெகேமியா 2:20-ஐ வாசியுங்கள்.)
․․․․․
3 கற்றதைக் கடைப்பிடியுங்கள்.
என்ன கற்றுக்கொண்டீர்கள் . . .
ஜெபத்துக்கு இருக்கும் சக்தியைப் பற்றி.
․․․․․
தன்னுடைய ஊழியர்கள் தைரியமாகப் பேசும்போது யெகோவா அவர்களுக்கு உதவி செய்வதைப் பற்றி.
․․․․․
4 உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:
நான் சோகமாக அல்லது கவலையாக இருக்கும்போது எப்படி நெகேமியாவைப் போலவே நடந்துகொள்ளலாம்?
․․․․․
என்னுடைய நம்பிக்கையைப் பற்றி யாராவது கேள்வி கேட்கும்போது, யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருப்பதை நான் எப்படி காட்டலாம்?
․․․․․
இந்தப் பதிவிலிருந்து கற்றுக்கொண்ட எந்தப் பாடம் எனக்கு ரொம்ப முக்கியம், ஏன்?
․․․․․
செய்துபாருங்கள்: உங்களிடம் இருக்கும் ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்தி, வரைபடத்தில் பழங்கால சூசான் நகரமும் எருசலேம் நகரமும் எங்கே இருந்தது என்று கண்டுபிடியுங்கள். (நெகேமியா 1:1) இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட எவ்வளவு தூரம் இருந்திருக்கும் என்று கணக்கிடுங்கள். அவ்வளவு தூரம் பயணம் செய்வது நெகேமியாவுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்! அதைப் புரிந்துகொள்ள, எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாமல், உங்கள் வீட்டிலிருந்து அதே அளவு தூரத்துக்கு போவது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.