கேள்விப் பெட்டி
◼நம்முடைய சகோதரர்களை நேரடியாக பாதிக்கிற ஒரு பேரழிவு தாக்குகையில் என்ன செய்யப்பட வேண்டும்?
உங்கள் பகுதியை பேரழிவு தாக்கினால்: பீதியடையாதீர்கள். அமைதியாக இருங்கள்; உண்மையில் மதிப்புள்ளது எதுவோ—உயிரே, உடைமைகள் அல்ல—அதற்கு கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்திற்கு உடனடியாக தேவைப்படும் சரீரப்பிரகாரமான தேவைகளுக்கு கவனம் செலுத்துங்கள். பிறகு, உங்களுடைய சூழ்நிலைமைகளையும், தற்போது நீங்கள் இருக்குமிடத்தையும் மூப்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
நிவாரண உதவி அளிப்பதில் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். சில கடுமையான சூறாவளிகள் ஏற்படுகையில் செய்யப்படுவதைப் போன்று, பேரழிவைக் குறித்து முன்கூட்டியே எச்சரிப்பு கொடுக்கப்பட்டால், அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருப்பதை இந்தச் சகோதரர்கள் நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும்; மேலும் நேரம் அனுமதித்தால், ஒருவேளை தேவைப்படுகிற பொருட்களை வரவழைத்து விநியோகிக்கவேண்டும்.
பிற்பாடு, புத்தகப் படிப்பு நடத்துபவர்கள் ஒவ்வொரு குடும்பத்தின் இருப்பிடத்தையும் கண்டுபிடித்து அவர்களுடைய சுகநலத்தை விசாரிக்கவேண்டும். நடத்தும் கண்காணியிடமோ அல்லது மற்றொரு மூப்பரிடமோ ஒவ்வொரு குடும்பத்தினரின் சூழ்நிலைமையைப் பற்றி, அவர்கள் பாதுகாப்பாக இருந்தாலும்கூட, தெரியப்படுத்த வேண்டும். எவரேனும் காயமடைந்திருந்தால், மருத்துவ சிகிச்சைக்காக மூப்பர்கள் ஏற்பாடு செய்ய முயலுவர். உணவு, உடை, இருப்பிடம் அல்லது தேவைப்படுகிற வீட்டு சாமான்கள் ஆகிய எந்தப் பொருளாதார உதவிகளையும்கூட அளிப்பார்கள். (யோவா. 13:35; கலா. 6:10) சபையின் மூப்பர்கள் சபைக்கு வேண்டிய ஆவிக்குரியபிரகாரமான, உணர்ச்சிப்பூர்வமான ஆதரவைக் கொடுப்பார்கள்; மேலும் சபை கூட்டங்களை திரும்பவும் ஆரம்பிப்பதற்கு முடிந்தளவு விரைவாக ஏற்பாடு செய்வார்கள். முழுமையான மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, மூப்பர் குழுவின் சார்பில், மூப்பர் ஒருவர் வட்டாரக் கண்காணியை சந்தித்து, யாருக்கேனும் காயம் ஏற்பட்டிருந்தால் அதையும் ராஜ்ய மன்றத்திற்கோ, சகோதரர்களின் வீடுகளுக்கோ ஏற்பட்ட சேதத்தைப் பற்றியும் அதோடு ஏதாவது விசேஷ தேவையிருப்பினும் அதையும் தெரியப்படுத்த வேண்டும். வட்டாரக் கண்காணி பிறகு சூழ்நிலையின் ஒரு அறிக்கையோடு கிளை அலுவலகத்துக்கு போன் செய்வார். தேவைப்படுகிற ஏதேனும் பெரிய அளவிலான நிவாரண பணிகளை கிளை அலுவலகம் ஏற்பாடு செய்யும்.
பேரழிவு வேறெங்காவது தாக்கினால்: அங்குள்ள சகோதர சகோதரிகளை உங்களுடைய ஜெபங்களில் நினைத்துக் கொள்ளுங்கள். (2 கொ. 1:8-11) பணசம்பந்தமான உதவியளிக்க நீங்கள் விரும்பினால், உங்களுடைய நன்கொடைகளை சங்கத்துக்கு அனுப்பலாம். விலாசம்: Watch Tower Society, H-58 Old Khandala Road, Lonavla, MAH 410 401. (அப் 2:44, 45; 1 கொ. 16:1-3; 2 கொ. 9:5-7; காவற்கோபுரம் ஆகஸ்ட் 1, 1986 பக்கங்கள் 27-29-ஐக் காண்க.) பொறுப்பிலுள்ள சகோதரர்கள் குறிப்பிட்டுக் கேட்டுக் கொண்டால்தவிர, பாதிக்கப்பட்ட பகுதிக்கு உணவு பொருட்களையோ, மற்ற பொருட்களையோ அனுப்பாதீர்கள். இவ்வாறு செய்வது நிவாரண பணி ஒழுங்கான முறையில் செய்யப்படுவதையும் பொருட்கள் சரியாக பகிர்ந்தளிக்கப்படுவதையும் நிச்சயப்படுத்தும். (1 கொ. 14:40) அவசியமில்லாமல், சங்கத்துக்கு போன் செய்யாதீர்கள்; இது பாதிக்கப்பட்ட பகுதியிலிருப்பவர்கள் தொலைபேசியின் மூலம் அவசரமாக தொடர்பு கொள்வதை தடை செய்யலாம்.
சரியான பரிசீலனை செய்யப்பட்ட பிறகு, நிவாரணக் குழு அமைக்கப்பட வேண்டுமா என்பதை சங்கம் தீர்மானிக்கும். பொறுப்பில் உள்ள சகோதரர்கள் தெரிவிக்கப்படுவார்கள். எல்லா சகோதரர்களின் முக்கியமான தேவைகளும் போதியளவு பூர்த்தி செய்யப்படுவதற்காக அனைவரும் முன்நின்று நடத்தும் மூப்பர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.—யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர், (ஆங்கிலம்) பக்கங்கள் 310-15-ஐக் காண்க.