இயற்கை பேரழிவைச் சமாளிக்க நீங்கள் தயாரா?
1 உலகெங்கிலும் உள்ள நம்முடைய சகோதர சகோதரிகள் பலர் உட்பட லட்சக்கணக்கானோர் நிலநடுக்கங்கள், சுனாமிகள், பருவமழைகள், புயல்காற்றுகள், இடியுடன் கூடிய சூறாவளிகள், வெள்ளப் பெருக்குகள் ஆகியவற்றால் ஒவ்வொரு வருடமும் அவதியுறுகிறார்கள். இயற்கை பேரழிவுகள் திடீர் திடீரென்று நிகழுவதாலும், நம்மில் எவரானாலும் பாதிக்கப்படலாம் என்பதாலும் முன்கூட்டியே தயாராக இருப்பதே ஞானமானது.—நீதி. 21:5.
2 முன்னேற்பாடு: சில சமயங்களில், வரவிருக்கும் பேரழிவைக் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். இத்தகைய எச்சரிப்புகளுக்கு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். (நீதி. 22:3) இத்தகைய சூழ்நிலைகளில், மூப்பர்கள் சபையிலுள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு, அவசியமான முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு உதவுவார்கள். பேரழிவுக்குப் பிறகு, சபையுடன் கூட்டுறவு கொள்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்து கொள்ளவும், எப்படிப்பட்ட உதவி தேவைப்படலாம் என்பதை அறிந்துகொள்ளவும் மூப்பர்கள் அவர்களைத் தொடர்புகொள்ள முயலுவார்கள். அச்சமயத்தில் தொடர்பு கொள்வதற்கு தேவையான தகவல்கள் மூப்பர்களின் கைவசம் இல்லாதிருந்தால், பொன்னான நேரம் வீணாகும். எனவே, பிரஸ்தாபிகள் தங்களுடைய தற்போதைய விலாசத்தையும், தொலைபேசி எண்களையும் செயலருக்கும் புத்தகப் படிப்பு கண்காணிக்கும் தெரிவிப்பது நல்லது.
3 அடிக்கடி பேரழிவு நிகழ்கிற பகுதியில் உங்கள் சபை இருந்தால், அவசர நேரத்தில் தொடர்பு கொள்வதற்கு வசதியாக, ஆபத்தான பகுதியிலிருந்து தள்ளி குடியிருக்கிற உறவினருடைய அல்லது நண்பருடைய பெயரையும் தொலைபேசி எண்ணையும் தரும்படி மூப்பர்கள் பிரஸ்தாபிகளிடம் கேட்கலாம். அப்பகுதியிலிருந்து வெளியேறியவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இது மூப்பர்களுக்கு உதவும். சபையிலுள்ளவர்களின் நன்மைக்காக ஒரு அவசரகால திட்டத்தை வகுக்க மூப்பர்கள் விரும்பலாம்; நெருக்கடி நேரத்தில் என்னென்ன பொருட்கள் கைவசம் இருக்க வேண்டும் என்பதற்கான பட்டியல், வெளியேறுவதற்கான ஏற்பாடுகள், விசேஷ தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கான வழிமுறைகள் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். இத்தகைய அன்பான ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பது மிகவும் முக்கியம்—எபி. 13:17.
4 பேரழிவுக்குப் பிறகு: உங்கள் பகுதியில் பேரழிவு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் குடும்பத்தாரின் அப்போதைய சரீர தேவைகளை பூர்த்தி செய்ய கவனமாயிருங்கள். பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் உங்களால் முடிந்தளவு உதவி செய்யுங்கள். உங்களுடைய புத்தகப் படிப்பு கண்காணியையோ மற்றொரு மூப்பரையோ முடிந்தளவு விரைவாக தொடர்புகொள்ள முயலுங்கள். உங்களுக்கு எந்த ஆபத்தும் நேராதபோதிலும், உதவி தேவைப்படாதபோதிலும்கூட, இதைச் செய்யுங்கள். உதவி தேவைப்பட்டால், அதற்காக உங்களுடைய சகோதரர்கள் எல்லா விதமான முயற்சியையும் செய்கிறார்கள் என்பதில் நிச்சயமாயிருங்கள். (1 கொ. 13:4, 7) உங்களுடைய சூழ்நிலை யெகோவாவுக்குத் தெரியும் என்பதை நினைவில் வையுங்கள்; பலத்திற்காகவும் உதவிக்காகவும் அவர் மேல் சார்ந்திருங்கள். (சங். 37:39; 62:8) மற்றவர்களுக்கு ஆன்மீக ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும் உதவி செய்வதற்கு இருக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள். (2 கொ. 1:3, 4) உங்களுடைய வழக்கமான தேவராஜ்ய நடவடிக்கைகளை முடிந்தளவு விரைவாகத் தொடங்குங்கள்.—மத். 6.33.
5 பேரழிவைப் பற்றிய பயத்தின் காரணமாக உலக மக்கள் கவலையில் மூழ்கியிருக்கும் இந்த வேளையில் நாம் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கலாம். விரைவில் எல்லா பேரழிவுகளும் சுவடு தெரியாமல் மறைந்து போகும். (வெளி. 21:4) இடைப்பட்ட காலத்தில், மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் பக்திவைராக்கியமாக இருப்பதோடு, கஷ்டங்களும் தொல்லைகளும் நிறைந்த காலத்தை சமாளிப்பதற்கு முடிந்தளவு தயாராகவும் நாம் இருக்க வேண்டும்.
[கேள்விகள்]
1. பேரழிவுகளைச் சமாளிக்க முன்கூட்டியே தயாராக இருப்பது ஏன் ஞானமானது?
2. நம்முடைய தற்போதைய விலாசத்தையும் தொலைபேசி எண்களையும் மூப்பர்களுக்கு ஏன் தெரிவிக்க வேண்டும்?
3. பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கிற பகுதிகளில் வாழ்ந்தால், நாம் எவ்வாறு மூப்பர்களுக்கு ஒத்துழைக்கலாம்?
4. நம் பகுதியில் பேரழிவு நிகழ்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
5. பேரழிவைப் பற்றிய பயம் கிறிஸ்தவர்களாகிய நம்மை எப்படிப் பாதிக்கிறது?