இடது: சிலியில் காட்டுத் தீக்கிரையான ஒரு தம்பதியின் வீட்டை நிவாரண வேலையில் ஈடுபடுகிறவர்கள் திரும்ப கட்டிக்கொடுத்தார்கள். வலது: நைஜீரியாவில் தங்கள் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இரண்டு சகோதரிகளுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன
உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
2023-ல் பேரழிவு நிவாரணம்—“யெகோவாவுடைய அன்பை ரொம்பவே ருசித்தோம்!”
ஜனவரி 26, 2024
‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தில் . . . நாட்டுக்கு எதிராக நாடு சண்டை போடும்,’ என்றும் பேரழிவுகள் உண்டாகும் என்றும் பைபிள் முன்கூட்டியே சொன்னது. (மத்தேயு 24:3, 7) இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் 2023 ஊழிய ஆண்டில் நிறைவேறியதை நாம் பார்த்தோம்.a கிட்டத்தட்ட 100 நாடுகளில் போர்களும் இயற்கைப் பேரழிவுகளும் தொடர்கதையாகிக்கொண்டே போனாலும் யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவின் அன்பை அப்படியே காட்டியிருக்கிறார்கள். எப்படி?
2023 ஊழிய ஆண்டில், 200-க்கும் மேற்பட்ட இயற்கைப் பேரழிவுகளாலும் மனிதர்களால் ஏற்பட்ட நாச வேலைகளாலும் நம்முடைய சகோதர சகோதரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகளாவிய வேலைக்காக கிடைத்த நன்கொடைகளிலிருந்து பேரழிவு நிவாரணத்துக்காக மட்டுமே யெகோவாவின் சாட்சிகளுடைய சட்ட நிறுவனங்கள் மொத்தமாக 10 மில்லியன் டாலருக்கும்b அதிகமான பணத்தை செலவு செய்திருக்கின்றன. அதுபோக, தங்களுடைய பகுதியில் நடந்த பேரழிவு நிவாரண வேலைகளுக்காக சில சகோதர சகோதரிகளும் தங்களுடைய பணத்தை செலவு செய்திருக்கிறார்கள். நிறைய பேரழிவுகள் ஏற்பட்டிருந்தாலும், இரண்டு பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நன்கொடைகள் எப்படி உதவியிருக்கின்றன என்று பார்க்கலாம்.
“உண்மையான அன்பு உண்மையாகவே இருக்கிறது!”
நைஜீரியாவின் சில பகுதிகளில் பொதுவாக பருவ காலத்தில் வெள்ளங்கள் ஏற்படும். ஆனால், அக்டோபர் 2022-ல் வந்த வெள்ளம்தான் கிட்டத்தட்ட பத்து வருடங்களில் வந்ததை விட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 16,70,432 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் நாசமானது. 20 லட்சத்துக்கும் அதிகமான ஆட்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. நிவாரண வேலைகளை ஒருங்கிணைப்பதற்காகவும் சகோதர சகோதரிகளுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காகவும் நைஜீரியா கிளை அலுவலகம் உடனடியாகவே பேரழிவு நிவாரண குழுக்களை ஏற்பாடு செய்தன.
நைஜீரியாவை சேர்ந்த சகோதரர்கள் நிவாரண பொருள்களை கொண்டுசேர்க்க வெள்ளம் சூழ்ந்த சாலைகள், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆறுகள் என பல தடைகளை கடந்தார்கள்
சகோதர சகோதரிகள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
7,505 பிரஸ்தாபிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டார்கள்
860 வீடுகள் சேதமடைந்தது அல்லது தரைமட்டமானது
90 ராஜ்ய மன்றங்களிலும் ஒரு மாநாட்டு மன்றத்திலும் வெள்ளம் சூழ்ந்தது
நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன
2,50,000-க்கும் மேற்பட்ட டாலர்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன, அதில் பின்வருபவை உட்படும்:
உணவுப் பொருள்களான அரிசி, தானியங்கள் மற்றும் நூடுல்ஸ்
மெத்தைகள், கொசுவலைகள் போன்ற வீட்டு உபயோக பொருள்கள்
சேதமடைந்த வீடுகளை பழுதுபார்ப்பது அல்லது திரும்ப கட்டிக் கொடுப்பது
நன்கொடைகளை சரியாக பயன்படுத்துவதற்கு சகோதரர்கள் என்ன செய்தார்கள்? முதலில், ஒவ்வொரு கட்டிடத்தையும் ரிப்பேர் செய்ய முடியுமா முடியாதா என்று கவனமாக பரிசோதித்துப் பார்த்தார்கள். ரிப்பேர் செய்ய முடியாத பட்சத்தில், அந்தப் பகுதியில் இருப்பது போன்ற எளிமையான வீட்டு அமைப்பில் அதைத் திரும்ப கட்டிக்கொடுத்தார்கள்.
சகோதர சகோதரிகள் தங்களுக்கு கிடைத்த உதவிக்காக ரொம்ப நன்றியோடு இருக்கிறார்கள். ஒரு சகோதரி இப்படி சொல்கிறார்: “வெள்ளத்தால் எங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எங்களுடைய எல்லா பண்ணைகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. எங்களுடைய வீடுகளையும் இழந்துவிட்டோம். சகோதர சகோதரிகள் எங்களுக்கு உதவி செய்வதற்காக அன்றைக்கே வந்தார்கள். எங்களை தங்க வைப்பதற்கு ஏற்பாடும் செய்தார்கள். அவர்களை பார்த்த உடனே என் மனசு லேசாகிவிட்டது. அதைவிட கிளை அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு உணவு பொருள்கள் வந்த உடனே மனசுக்கு ரொம்ப நிம்மதியாக இருந்தது. யோவான் 13:34, 35-ல் சொன்ன வார்த்தைகள் எங்கள் வாழ்க்கையில் நிஜமானதை பார்த்தபோது நாங்கள் அப்படியே அசந்து போய்விட்டோம். . . . உண்மையான அன்பு உண்மையாகவே இருக்கிறது! சரியான சமயத்தில் எங்களுக்கு உதவி செய்வதற்காக ஓடோடி வந்த சகோதர சகோதரிகளுக்கு நானும் என்னுடைய முழு குடும்பமும் இதயத்தின் ஆழத்திலிருந்து ரொம்ப நன்றி சொல்கிறோம்.”
நாம் செய்த நிவாரண வேலைகள் அங்கிருந்த மற்றவர்களுடைய கவனத்தையும் ஈர்த்தது. பயேல்சா பகுதி, சபக்ரியாவின் சமுதாயத்தின் தலைவர் இப்படிச் சொன்னார்: “இந்த உலகத்தில் நிறைய அமைப்புகளும் சர்ச்சுகளும் இருக்கின்றன. ஆனால் யெகோவாவின் சாட்சிகளான நீங்கள் மட்டும்தான் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறீர்கள். . . . இந்த உலகத்திலேயே உங்களுடைய அமைப்புதான் பெஸ்ட்!”
“யெகோவாவுடைய அன்பை ரொம்பவே ருசித்தோம்!”
பிப்ரவரி 2023-ல் 400-க்கும் அதிகமான காட்டுத்தீயால் சிலி நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. 10,62,553 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பும் சிலியின் உள்கட்டமைப்பில் மிக முக்கியமான பகுதிகளும் காட்டுத்தீக்கு இரையானது. கிட்டத்தட்ட 8,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். பேரழிவு தாக்கி கொஞ்ச நேரத்திலேயே கிளை அலுவலகம் நிவாரணப் பணிகளுக்காக ஏற்பாடு செய்தது.
சிலியில் நிவாரண வேலையில் ஈடுபட்டவர்கள் ரிப்பேர் செய்யமுடியாத வீட்டை திரும்ப கட்டிக்கொடுத்தார்கள்
சகோதர சகோதரிகள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
222 பிரஸ்தாபிகள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது
20 வீடுகள் தரைமட்டமானது
நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன
பேரழிவு நிவாரணத்துக்காக 2,00,000-க்கும் மேற்பட்ட டாலர்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன, அதில் பின்வருபவை உட்படும்:
உணவு மற்றும் தண்ணீர்
எரிபொருள், சுத்தம் செய்வதற்குத் தேவையான பொருள்கள் மற்றும் மருந்துகள்
சேதமடைந்த வீடுகளை திரும்ப கட்டிக்கொடுப்பது
வீடு வியாபாரம் என தங்களுக்கு இருந்த எல்லாவற்றையுமே இந்த பேரழிவில் பறிகொடுத்ததால் ஒரு குடும்பம் பேரதிர்ச்சிக்குள்ளானார்கள். வாழ்க்கையை ஓட்டுவதற்கு வழி தெரியாத நிலைமைக்கு வந்துவிட்டார்கள். அவர்களுடைய வீடு இருந்த இடம் வெற்றிடமாக இருந்தது, அதைப் பார்க்கப் பார்க்க அவர்களுடைய மனசுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. ஆனால், திரும்பவும் அந்த வீடு கட்டப்படுவதை பார்க்கும்போது மெதுமெதுவாக அதிலிருந்து மீண்டு வந்தார்கள். அதுமட்டுமல்ல, வாலண்டியர்கள் அவர்கள்மேல் கொட்டிய அன்பையும் பாசத்தையும் பார்த்தது கூட அந்த சோக சம்பவத்திலிருந்து மீண்டு வர அவர்களுக்கு உதவி செய்தது. இவை எல்லாமே அவர்களுடைய மனசை அந்தளவுக்கு தொட்டதால் வாலண்டியர்களோடு சேர்ந்து இன்னொரு சகோதரருடைய வீட்டை கட்டுவதற்கு உதவி செய்தார்கள்.
நம்முடைய நிவாரண வேலைகள் நிறைய சகோதர சகோதரிகளின் மனதை கவர்ந்திருக்கிறது. ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “பேரழிவு நிவாரண குழுக்கள் என்ற யெகோவாவின் இந்த ஏற்பாடு ரொம்பவே அற்புதமானது. பேரழிவு நடந்த அடுத்த நாளே சகோதரர்கள் அடிப்படை பொருள்களோடு களத்தில் நின்றார்கள். உலகத்தின் மற்ற பாகங்களில் நடக்கிற பேரழிவு நிவாரண வேலைகளை பற்றி வாசிக்கும்போதே ரொம்ப உற்சாகமாக இருக்கும். ஆனால் அது உங்களுக்கே நடக்கும்போது, அதை விவரிக்க வார்த்தைகளே இருக்காது. யெகோவாவின் அமைப்புக்கு அவ்வளவு நன்றி சொல்லத் தோன்றும். சகோதரர்கள் யெகோவாவுடைய குணத்தை அப்படியே காட்டுவதை பார்க்கும்போது அவர்கள்மேல் இருக்கும் பாசம் அதிகமாகும். அதுமட்டுமல்ல, நம்முடைய பொருள் தேவைகள், ஆன்மீக தேவைகள், உணர்ச்சி ரீதியான தேவைகள் இதையெல்லாம் அவர்கள் பார்த்துப் பார்த்து செய்தார்கள். யெகோவாவுடைய அன்பை ரொம்பவே ருசித்தோம்!”
இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க பேரழிவுகள் அதிகமாகிக்கொண்டே வருவதை நாம் பார்க்கிறோம். (லூக்கா 21:10, 11) ஆனால், நம்முடைய அன்பான ராஜா இயேசு கிறிஸ்து, கிறிஸ்தவ சபை மூலமாக ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நம் கூடவே’ இருப்பதையும் நாம் பார்க்கிறோம். (மத்தேயு 28:20) donate.jw.org மூலமாகவும் மற்ற வழிகளிலும் இந்த உலகளாவிய வேலைக்காக நீங்கள் தாராளமாக நன்கொடை கொடுக்கிறீர்கள். உங்களுடைய நேரம், சக்தி என எல்லாவற்றையும் செலவு செய்கிறீர்கள். இப்படியெல்லாம் செய்வதன் மூலமாக நம்முடைய அன்பான ராஜாவுக்கும் கடவுளுடைய அரசாங்கத்துக்கும் முழுமையாக ஆதரவு கொடுக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!
a 2023-க்கான ஊழிய ஆண்டு, செப்டம்பர் 1, 2022-ல் ஆரம்பித்து, ஆகஸ்ட் 31, 2023-ல் முடிவடைந்தது.
b இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் டாலர்கள் அனைத்துமே அமெரிக்க டாலர்கள்.