புதன், மே 6
பாவிகளில் ஒருவன் மனம் திருந்தும்போது கடவுளுடைய தூதர்கள் எல்லாரும் சந்தோஷப்படுவார்கள்.—லூக். 15:10.
பாவம் செய்தவர் மனம் திருந்தும்போது நமக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது. (லூக். 15:7) அதற்கான புகழ் யாருக்குப் போய்ச் சேர வேண்டும்? மூப்பர்களுக்கா? பாவம் செய்தவர்களைப் பற்றிப் அப்போஸ்தலன் பவுல் என்ன எழுதினார் என்று பாருங்கள்: ‘மனம் திருந்த . . . கடவுள் ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்.’ (2 தீ. 2:25) அப்படியென்றால், ஒருவருடைய யோசனையும் மனப்பான்மையும் மாறுவதற்கு யெகோவாதான் உதவுகிறார், எந்த மனிதனும் அல்ல! ஒருவர் மனம் திருந்திய பிறகு, அவருக்கு நல்ல விஷயங்கள் நடக்கிறது என்று பவுல் விளக்குகிறார். அதாவது, சத்தியத்தைப் பற்றி அவரால் இன்னும் திருத்தமாகத் தெரிந்துகொள்ள முடியும், அவருடைய புத்தி தெளியும், சாத்தானுடைய கண்ணியில் இருந்தும் அவர் விடுபடலாம். (2 தீ. 2:26) பாவம் செய்த ஒருவர் மனம் திருந்தும்போது, அந்தக் குழு அவருக்கு மேய்ப்புச் சந்திப்புகளைச் செய்ய ஏற்பாடு செய்வார்கள். இப்படி, சாத்தானுடைய கண்ணிகளை எதிர்த்துப் போராடுவதற்கும், தன்னுடைய பாதையை நேராக்குவதற்கும் அவருக்கு உதவி கிடைத்துக்கொண்டே இருக்கும்.—எபி. 12:12, 13. w24.08 23 ¶14-15
வியாழன், மே 7
அற்புதங்களைப் பார்த்ததால் அல்ல, ரொட்டிகளைச் சாப்பிட்டுத் திருப்தியானதால்தான் நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்.—யோவா. 6:26.
இயேசு எந்த இடத்தில் சாப்பாடு கொடுத்தாரோ அதே இடத்துக்கு அவரைத் தேடி மக்கள் அடுத்த நாளும் வந்தார்கள். ஆனால் இயேசுவும் அப்போஸ்தலர்களும் அங்கே இல்லை. அதனால், திபேரியாவிலிருந்து வந்த படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்கு இயேசுவைத் தேடி வந்தார்கள். (யோவா. 6:22-24) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தார்களா? இல்லை. தங்கள் வயிற்றை நிரப்புவதற்காகத்தான் வந்தார்கள். அவர்கள் சாப்பாட்டைத் தேடித்தான் அவரிடம் வந்திருக்கிறார்கள் என்பதை இயேசு வெளிப்படையாகச் சொன்னார். அதாவது, முந்தின நாள் அவர்கள் “ரொட்டிகளைச் சாப்பிட்டுத் திருப்தியானதால்தான்” தன்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று சொன்னார். “அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத் தரும் அழியாத உணவுக்காகவே பாடுபடுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார். (யோவா. 6:26, 27) முடிவில்லாத வாழ்வைத் தரும் அந்த உணவை தன் தகப்பன் கொடுப்பார் என்று இயேசு சொன்னார். w24.12 5 ¶8-9
வெள்ளி, மே 8
ஞானமுள்ளவனின் இதயம் அவனை விவேகமாகப் பேச வைக்கிறது. பக்குவமாகப் பேசி மற்றவர்களைச் சம்மதிக்க வைக்கும் திறமையைக் கொடுக்கிறது.—நீதி. 16:23.
சகோதரர்களே, நீங்கள் மேடையிலிருந்து கற்றுக்கொடுத்தாலும் சரி, மற்றவர்களுக்குத் தனிப்பட்ட விதமாக ஆலோசனை கொடுத்தாலும் சரி, எப்போதும் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் சொல்லிக்கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் திறமையாகக் கற்றுக்கொடுக்கிற ஒருவராக ஆக முடியும். பைபிளையும் அமைப்பு வெளியிட்டிருக்கும் பிரசுரங்களையும் நன்றாகப் படியுங்கள். (நீதி. 15:28) ஒரு வசனத்துக்கு நம்முடைய பிரசுரங்களில் என்ன விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்; அப்போதுதான் அதைச் சரியாகப் பொருத்திக் காட்ட முடியும். கற்றுக்கொடுக்கும்போது மற்றவர்களுடைய இதயத்தைத் தொடுவதற்குக் கடினமாக முயற்சி செய்யுங்கள். நீங்கள் எப்படி முன்னேறலாம் என்று அனுபவமுள்ள மூப்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள்; அதன்படி செய்யுங்கள். (1 தீ. 5:17) மூப்பர்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். சிலசமயத்தில், மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்க அல்லது அவர்களை கண்டிக்க வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும், எப்போதுமே அன்பாக நடந்துகொள்ளுங்கள். மென்மையாகவும் அன்பாகவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து சொல்லிக்கொடுத்தால், நீங்கள் சிறந்த விதத்தில் கற்றுக்கொடுக்கிறவராக ஆக முடியும். பெரிய போதகரான இயேசுவைப் பின்பற்ற முடியும்.—மத். 11:28-30; 2 தீ. 2:24. w24.11 24 ¶16