புதன், மே 14
நீங்கள் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றி, அவர் வாக்குறுதி கொடுத்ததைப் பெற வேண்டுமென்றால் சகித்திருப்பது அவசியம்.—எபி. 10:36.
முடிவு வருவதற்கு ரொம்ப தாமதமாவதுபோல் நமக்கு ஒருவேளை தோன்றலாம். யெகோவா அதைப் புரிந்துகொள்கிறார். சொல்லப்போனால், அவர் ஆபகூக் தீர்க்கதரிசியிடம், “நிறைவேற வேண்டிய காலத்தில் தரிசனம் நிறைவேறும். அது வேகமாய் வந்துகொண்டிருக்கிறது; அது வராமல் போகாது. ரொம்ப நாட்கள் ஆவதுபோல் தெரிந்தாலும் அதற்காகக் காத்திரு. தரிசனம் நிச்சயம் நிறைவேறும். அது கொஞ்சம்கூடத் தாமதிக்காது!” என்று சொன்னார். (ஆப. 2:3) ஆபகூக் தீர்க்கதரிசிக்காக மட்டும்தான் யெகோவா இந்த வாக்குறுதியைக் கொடுத்தாரா? அல்லது, நமக்காகவும் சேர்த்துக் கொடுத்திருக்கிறாரா? பவுல் இந்த வார்த்தைகளை, புதிய உலகத்துக்காகக் காத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்குப் பொருத்திக் காட்டினார். (எபி. 10: 37) யெகோவா நம்மை விடுவிக்கப்போகும் நாள் தாமதிப்பதுபோல் தெரிந்தாலும், அது “நிச்சயம் நிறைவேறும். அது கொஞ்சம்கூடத் தாமதிக்காது!” w23.04 30 ¶16
வியாழன், மே 15
அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.—எண். 14:2.
தெளிவான ஆதாரங்கள் இருந்தும் மோசேயைப் பயன்படுத்திதான் யெகோவா தங்களுக்கு வழிகாட்டுகிறார் என்பதை நிறைய இஸ்ரவேலர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (எண். 14:10, 11) இதனால் அந்தத் தலைமுறையை சேர்ந்த யாராலும் வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போக முடியவில்லை. (எண். 14:30) ஆனாலும், சில இஸ்ரவேலர்கள் யெகோவா காட்டிய வழியில் நடந்தார்கள். உதாரணத்துக்கு, “காலேப் . . . முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படிந்துவருகிறான்” என்று யெகோவா சொன்னார். (எண். 14:24) அதனால், கானான் தேசத்தில் அவர் கேட்ட பகுதியை யெகோவா அவருக்குக் கொடுத்தார். (யோசு. 14:12-14) இஸ்ரவேலர்களுடைய அடுத்த தலைமுறையும் யெகோவா காட்டிய வழியில் நடந்தார்கள். மோசேக்கு அடுத்து யோசுவா தலைவராக ஆனபோது அவருக்கு அவர்கள் “வாழ்நாள் காலமெல்லாம் மதிப்பு மரியாதை காட்டினார்கள்.” (யோசு. 4:14) அதனால், யெகோவா அவர்களை கானான் தேசத்தில் குடிவைத்தார்.—யோசு. 21:43, 44. w24.02 21 ¶6-7
வெள்ளி, மே 16
கடவுள்மேல் அன்பு காட்டுகிறவன் தன் சகோதரன்மேலும் அன்பு காட்ட வேண்டும்.—1 யோ. 4:21.
நாடித் துடிப்பை வைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை ஒரு டாக்டர் கண்டுபிடிக்கிற மாதிரி, மற்றவர்கள்மேல் நமக்கு இருக்கிற அன்பை வைத்து கடவுள்மேல் நமக்கு அன்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். சகோதர சகோதரிகள்மேல் நாம் காட்டும் அன்பு குறைவாக இருந்தால், கடவுள்மேல் நமக்கு இருக்கும் அன்பும் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். சகோதர சகோதரிகள்மேல் நாம் காட்டும் அன்பு குறைந்திருந்தால், அதை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தம் பலவீனமாக இருக்கிறது என்பதற்கு அது ஒரு அறிகுறி. இதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “தான் பார்க்கிற சகோதரன்மேல் அன்பு காட்டாதவன், தான் பார்க்காத கடவுள்மேல் அன்பு காட்ட முடியாது.” (1 யோ. 4:20) ‘ஒருவருக்கொருவர் அன்பு காட்டினால்தான்’ யெகோவாவுக்கு நம்மைப் பிடிக்கும்.—1 யோ. 4:7-9, 11. w23.11 8 ¶3; 9 ¶5-6