வியாழன், ஜூன் 5
குருவாகிய யோய்தா யோவாசுக்கு அறிவுரை கொடுத்துவந்த காலமெல்லாம், அவர் யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொண்டார்.—2 ரா. 12:2.
யோவாஸ் ராஜாவுக்கு யோய்தா ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தார். அதனால், யோவாஸ் ராஜா இளவயதில் யெகோவாவுக்குப் பிரியமாக நடக்க ஆசைப்பட்டார். ஆனால் யோய்தா இறந்த பிறகு, விசுவாசதுரோகிகளாக இருந்த பிரபுக்களின் பேச்சைக் கேட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார். (2 நா. 24:4, 17, 18) அதைப் பார்த்து யெகோவா ரொம்ப வேதனைப்பட்டார். “அவர்கள் தன்னிடம் திரும்பிவருவதற்காக யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகளை மீண்டும் மீண்டும் அனுப்பினார். . . . ஆனால், மக்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.” சொல்லப்போனால், யோய்தாவின் மகன் சகரியாவின் பேச்சைக்கூட அவர்கள் கேட்கவில்லை. சகரியா யெகோவாவின் தீர்க்கதரிசியாகவும் ஆலய குருவாகவும் மட்டுமல்ல, யோவாசின் அத்தை பையனாகவும் இருந்தார். ஆனாலும், யோவாஸ் சகரியாவைக் கொலை செய்துவிட்டார். (2 நா. 22:11; 24:19-22) யோவாஸ் யெகோவாவுக்குப் பயந்து நடக்கவில்லை. “என்னை அவமதிக்கிறவர்கள் அவமதிக்கப்படுவார்கள்” என்று யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தார். (1 சா. 2:30) யோவாசின் விஷயத்தில் அது அப்படியே நடந்தது. சீரியர்கள் கொஞ்சம் வீரர்களோடு படையெடுத்து வந்து, யோவாசின் “மிகப் பெரிய படையை” தோற்கடித்தார்கள். யோவாஸ் ‘பயங்கரமாகக் காயமடைந்தார்.’ (2 நா. 24:24, 25) சகரியாவைக் கொலை செய்ததற்காக யோவாசை அவருடைய ஊழியர்களே படுகொலை செய்துவிட்டார்கள். w23.06 18-19 ¶16-17
வெள்ளி, ஜூன் 6
‘ஒருகாலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள். இப்போதோ ஒளியாக இருக்கிறீர்கள்.’—எபே. 5:8.
எபேசுவில் அப்போஸ்தலன் பவுல் கொஞ்சக் காலம் ஊழியம் செய்தார். (அப். 19:1, 8-10; 20:20, 21) அங்கிருந்த சகோதரர்கள்மேல் அவருக்கு ரொம்ப அன்பு இருந்தது. யெகோவாவுக்கு உண்மையாக இருக்க அவர்களுக்கு உதவ ஆசைப்பட்டார். எபேசுவில் இருந்தவர்கள் ஒருகாலத்தில் பொய் மத பழக்கவழக்கங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் ஊறிப்போயிருந்தார்கள். எபேசு, ஒழுக்கக்கேட்டுக்குப் பேர்போன இடமாக இருந்தது. அங்கிருந்த அரங்குகளிலும் மத பண்டிகைகளிலும் ஆபாசமாக பேசுவது சர்வ சாதாரணமாக இருந்தது. (எபே. 5:3) அங்கிருந்த பெரும்பாலானவர்கள் “ஒழுக்க உணர்வு துளிகூட இல்லாமல்” இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இந்த வார்த்தைகளுக்கான நேரடி அர்த்தம், “மரத்துப்போயிருப்பதை” குறிக்கிறது. (எபே. 4:17-19) எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கும் ஒருசமயம் அப்படித்தான் இருந்தது. சரி எது தவறு எது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு அவர்களுடைய மனசாட்சி மரத்துப்போயிருந்தது. அதனால்தான் பவுல் அவர்களைப் பற்றி சொல்லும்போது, ‘அவர்களுடைய மனம் இருண்டு போயிருந்ததாகவும்’, ‘கடவுள் தருகிற வாழ்வு கிடைக்காதபடி அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும்’ சொன்னார். ஆனால், அந்தக் கிறிஸ்தவர்கள் இருளிலேயே இருந்துவிடவில்லை. w24.03 20 ¶2, 4; 21 ¶5-6
சனி, ஜூன் 7
‘யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள். அவர்கள் சோர்ந்துபோக மாட்டார்கள்.’—ஏசா. 40:31.
ஒரு நியாயாதிபதியாக கிதியோன் கடினமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. ராத்திரியில் மீதியானியர்களை கிதியோன் தாக்கியபோது மீதியானியர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலிருந்து யோர்தான் ஆறுவரை கிதியோன் அவர்களைத் துரத்திக்கொண்டு போனார். (நியா. 7:22) களைப்பாக இருந்தபோதும், கிதியோனும் அவரோடு இருந்த 300 பேரும் யோர்தான் ஆற்றைக் கடந்து, மீதியானியர்களைத் துரத்திக்கொண்டு போய்ப் பிடித்தார்கள். கடைசியில், அவர்களைத் தோற்கடித்தார்கள். (நியா. 8:4-12) யெகோவா தனக்கு பலம் கொடுப்பார் என்ற நம்பிக்கை கிதியோனுக்கும் இருந்தது. அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. (நியா. 6:14, 34) ஒருசமயம், கிதியோனும் அவருடைய ஆட்களும் இரண்டு மீதியானிய ராஜாக்களைத் துரத்திக்கொண்டே ஓடினார்கள். அந்த ராஜாக்கள் ஒருவேளை ஒட்டகங்களில் வேகமாகப் போய்க்கொண்டு இருந்திருக்கலாம். (நியா. 8:12, 21) ஆனாலும், யெகோவாவின் உதவி இருந்ததால் கிதியோனும் அவருடைய ஆட்களும் அந்த இரண்டு ராஜாக்களையும் பிடித்தார்கள், போரில் ஜெயித்தார்கள். அதேபோல், இன்று மூப்பர்களும் யெகோவாமேல் நம்பிக்கை வைக்கலாம். ஏனென்றால், யெகோவா “சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை.” அவர்களுக்குப் பலம் தேவைப்படும்போது அவர் நிச்சயம் அதைக் கொடுப்பார்.—ஏசா. 40:28, 29. w23.06 6 ¶14, 16