-
கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராக இருக்கிற எல்லா தவறான யோசனைகளையும் தகர்த்தெறியுங்கள்!காவற்கோபுரம் (படிப்பு)-2019 | ஜூன்
-
-
“மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை புதுப்பித்துக்கொண்டே இருங்கள்”
7. நம்முடைய இதயத்தையும் மனதையும் எப்படி மாற்றிக்கொள்ளலாம்?
7 மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை நம்மால் மாற்றிக்கொள்ள முடியுமா? இந்தக் கேள்விக்கு பைபிள் தரும் பதில் இதுதான்: “உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை புதுப்பித்துக்கொண்டே இருங்கள். கடவுளுடைய விருப்பத்தின்படி, உண்மையான நீதிக்கும் உண்மைத்தன்மைக்கும் ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.” (எபே. 4:23, 24) இதிலிருந்து என்ன தெரிகிறது? நம்முடைய இதயத்தையும் மனதையும் நம்மால் மாற்றிக்கொள்ள முடியும்! ஆனால், அது அவ்வளவு சுலபம் கிடையாது. ஏனென்றால், தவறான ஆசைகளையும் செயல்களையும் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்ல, நம்முடைய ‘மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையையும்’ நாம் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்முடைய ஆசைகளையும், நாம் நடந்துகொள்ளும் விதத்தையும், நம் உள்நோக்கங்களையும் மாற்றிக்கொள்வதை இது குறிக்கிறது. இப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்ய நாம் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும்.
8-9. மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை மாற்றிக்கொள்வது முக்கியம் என்பதை ஒரு சகோதரரின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது?
8 முன்பு முரடனாக இருந்த ஒரு சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். குடிப்பதையும் சண்டைபோடுவதையும் நிறுத்திய பிறகு அவர் ஞானஸ்நானம் எடுத்தார். அவர் செய்த மாற்றங்களைப் பார்த்த அந்த ஊர் மக்களுக்கு அது ஓர் அருமையான சாட்சியாக இருந்தது. ஆனால், ஞானஸ்நானம் எடுத்த கொஞ்ச நாளிலேயே அவருக்கு ஒரு சோதனை வந்தது. ஒருநாள் சாயங்காலம், குடிபோதையில் இருந்த ஒருவன் அவருடைய வீட்டுக்கு வந்து அவரை சண்டைக்கு இழுத்தான். அவனோடு சண்டை போட வேண்டும் என்ற தூண்டுதலை நம் சகோதரர் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தினார். ஆனால், அந்தக் குடிகாரன் யெகோவாவைப் பற்றித் தவறாகப் பேசியபோது, அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வீட்டுக்கு வெளியே போய் அவனை அடித்து உதைத்தார்! அவருடைய பிரச்சினை என்னவென்று புரிகிறதா? அவர் பைபிளைப் படித்தது, சண்டை போடுவதற்கான தூண்டுதலை கட்டுப்படுத்த அவருக்கு உதவியது. ஆனால், மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை அவரால் இன்னமும் மாற்றிக்கொள்ள முடியவில்லை! அதாவது, அவர் உள்ளுக்குள் எப்படிப்பட்ட நபராக இருக்கிறார் என்பதை அவரால் மாற்றிக்கொள்ள முடியவில்லை!
9 இருந்தாலும், தன்னை மாற்றிக்கொள்ள அவர் தொடந்து முயற்சி செய்தார். (நீதி. 24:16) மூப்பர்களின் உதவியோடு அவர் முன்னேற்றம் செய்துகொண்டே வந்தார். பிறகு, அவர் ஒரு மூப்பராக ஆனார். இப்போது, பல வருஷங்களுக்குமுன் வந்த அதே சோதனை மறுபடியும் வந்தது. ஒருநாள் சாயங்காலம், குடிபோதையில் இருந்த ஒருவன் ஒரு மூப்பரை அடிப்பதற்காக ராஜ்ய மன்றத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தான். அப்போது நம் சகோதரர் என்ன செய்தார்? அந்தக் குடிகாரனிடம் சாந்தமாகவும் அன்பாகவும் பேசினார், அவனுக்குப் புரியவைத்தார், அவனுடைய கோபத்தைத் தணித்தார். தள்ளாடிக்கொண்டிருந்த அவன், தன்னுடைய வீட்டுக்குப் போய்ச் சேர உதவினார். இப்படி நடந்துகொள்ள நம்முடைய சகோதரரால் எப்படி முடிந்தது? மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை அவர் மாற்றியிருந்தார்! அவர் உண்மையிலேயே சமாதானமான, மனத்தாழ்மையான ஒரு நபராக மாறியிருந்தார். இது யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தது!
10. நம் சுபாவத்தை மாற்றிக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
10 இப்படிப்பட்ட மாற்றங்கள் திடீரென்றும் நடக்காது, தானாகவும் நடக்காது. பல வருஷங்கள் நாம் “ஊக்கமாக முயற்சி” செய்ய வேண்டியிருக்கலாம்! (2 பே. 1:7) நிறைய வருஷங்கள் “சத்தியத்தில்” இருக்கிறோம் என்பதற்காக நாம் இந்த மாற்றங்களைச் செய்துவிடுவோம் என்றும் சொல்லிவிட முடியாது. நம் சுபாவத்தை மாற்றிக்கொள்ள நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்ய சில அடிப்படையான விஷயங்கள் நமக்கு உதவும். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை மாற்றுங்கள்
11. மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை மாற்றிக்கொள்ள ஜெபம் எப்படி உதவும்?
11 ஜெபம் செய்யுங்கள்! நாம் எடுக்க வேண்டிய முதல் படியும் மிக முக்கியமான படியும் இதுதான்! “கடவுளே, சுத்தமான இதயத்தை எனக்குள் உருவாக்குங்கள். உறுதியான புதிய மனதை எனக்குள் வையுங்கள்” என்று ஜெபம் செய்த சங்கீதக்காரரைப் போலவே நாமும் செய்ய வேண்டும். (சங். 51:10, அடிக்குறிப்பு) நம்முடைய மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை மாற்றுவது அவசியம் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அப்படி மாற்றுவதற்கு யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும். யெகோவா நமக்கு உதவுவார் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்? எசேக்கியேல் காலத்தில் வாழ்ந்த கல்நெஞ்சம் கொண்ட இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதி நம்மை உற்சாகப்படுத்துகிறது. “நான் உங்களுக்கு ஒரே இதயத்தையும் புதிய மனதையும் கொடுப்பேன். . . . மென்மையான இதயத்தை [அதாவது, கடவுளுடைய அறிவுரைகளைக் கேட்டு நடக்கிற இதயத்தை] உங்களுக்குக் கொடுப்பேன்” என்று வாக்குறுதி கொடுத்தார். (எசே. 11:19, அடிக்குறிப்பு) இஸ்ரவேலர்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தேவையான உதவியைச் செய்ய யெகோவாவுக்கு மனம் இருந்தது. இன்று நமக்கு உதவவும் அவருக்கு மனம் இருக்கிறது.
12-13. (அ) சங்கீதம் 119:59 சொல்கிறபடி, நாம் எதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும்? (ஆ) நாம் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
12 ஆழமாக யோசித்துப்பாருங்கள்! இது நாம் எடுக்க வேண்டிய முக்கியமான இரண்டாவது படி! கடவுளுடைய வார்த்தையை ஒவ்வொரு நாளும் நாம் கவனமாகப் படிக்க வேண்டும். என்னென்ன யோசனைகளையும் உணர்வுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப்பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும். (சங்கீதம் 119:59-ஐ வாசியுங்கள்; எபி. 4:12; யாக். 1:25) மனித தத்துவங்கள் நம் யோசனைகளை ஆதிக்கம் செலுத்துகின்றனவா என்பதையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். நம்முடைய பலவீனங்களை நாம் நேர்மையாக ஒத்துக்கொள்ள வேண்டும். பிறகு, அவற்றிலிருந்து வெளியேவர கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.
13 உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் இதயத்துல பொறாமை இருக்குறதுக்கான அடையாளம் ஏதாவது தெரியுதா?’ (1 பே. 2:1) ‘என்னோட பின்னணி, கல்வி, சொத்துப்பத்து, இதையெல்லாம் நினைச்சு நான் பெருமைப்படுறேனா?’ (நீதி. 16:5) ‘என் அளவுக்கு வசதியா இல்லாதவங்களையும் வேற இனத்த சேர்ந்தவங்களையும் தாழ்வா பார்க்குறேனா?’ (யாக். 2:2-4) ‘சாத்தானோட உலகத்துல இருக்கிற விஷயங்கள் என்னை கவர்ந்து இழுக்குதா?’ (1 யோ. 2:15-17) ‘ஒழுக்கக்கேடான, வன்முறையான பொழுதுபோக்குகள நான் விரும்புறேனா?’ (சங். 97:10; 101:3; ஆமோ. 5:15) இந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லும்போது, எந்த விஷயத்தில் நீங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். இதயத்தில் “ஆழமாக வேரூன்றிய” யோசனைகளைத் தகர்த்தெறியும்போது, நம் பரலோகத் தந்தையைப் பிரியப்படுத்துவோம்.—சங். 19:14.
14. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்?
14 நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்! இது நாம் எடுக்க வேண்டிய மூன்றாவது படி! நாம் யாரோடு பழகுகிறோமோ அவர்களுடைய தாக்கம் நம்மீது அதிகமாக இருக்கும். இதை நாம் உணருகிறோமோ இல்லையோ, இதுதான் உண்மை! (நீதி. 13:20) வேலை செய்யும் இடத்தில் அல்லது பள்ளியில், கடவுள் யோசிப்பதுபோல் யோசிப்பதற்கு உதவுகிற ஆட்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. சபைக் கூட்டங்களிலோ, நமக்கு மிகச் சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கள். “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும்” நமக்குத் தேவையான உற்சாகம் அங்குதான் கிடைக்கும்.—எபி. 10:24, 25.
-