இன்றைய அவசர வாழ்க்கை வேகத்தை எதிர்த்துச் சமாளித்தல்
வேலை செய்யும் ஒரு மனிதன் வார இறுதி நாட்களில் தொலைக்காட்சியில் கால்பந்தாட்டத்தைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவழிக்கிறான், பின்பு தன்னுடைய பிள்ளைகளை விலங்குக் காட்சி சாலைக்குக் கூட்டிச்செல்ல நேரம் இல்லை என்று முறையிடுகிறான். வீட்டிலிருக்கும் மனைவி மதப்பற்றுள்ளவளாய் தொலைக்காட்சியில் வரும் ஒரு தொடர் காட்சியை வாரந்தோறும் தவறாமல் பார்க்கிறாள், பின்பு வீட்டுக் காரியங்களைக் கவனிக்க நேரமில்லை என்று வருத்தந்தெரிவிக்கிறாள். பிரச்னை, நேரம் இல்லை என்பதா அல்லது அதைச் சரியாகப் பயன்படுத்தாததா?
நேரத்தை சரியாகக் கையாளுவது, பிலிப்பியர் 1:10-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நியமத்தைப் பின்பற்றுவதை உட்படுத்துகிறது: “அதிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.”—NW.
ஆம், முதலாவதாக உங்களுடைய முதன்மையான காரியங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள், அப்பொழுதுதான், ஏதாவது ஒரு காரியத்தை விட்டுவிட வேண்டுமானால், அது அவ்வளவு முக்கியமில்லாத காரியமாக இருக்கும். செய்யவேண்டிய வேலைகளையெல்லாம், உதாரணமாக, ஒரு வாரத்திற்குரிய வேலைகளையெல்லாம் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். பின்பு அதை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ளுங்கள். (1) நான் என்ன செய்ய வேண்டும் மற்றும் (2) நான் என்ன செய்ய விரும்புகிறேன்.
வேலைக்குச் செல்லுதல், கடைக்குச் சென்று வருதல், வீட்டில் பழுதுபார்க்கும் வேலைகள், மற்றும் குடும்பத்தோடு நேரம் செலவழித்தல் ஆகிய காரியங்கள் முதல் பிரிவில் இடம்பெறும். உண்மை கிறிஸ்தவர்களைப் பொறுத்ததில், சபை கூட்டங்களுக்குச் செல்லுதல், தங்களுடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பைபிள் படிப்பு ஆகியவையும் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்.—மத்தேயு 6:33.
பட்டியல் ஒருவேளை பெரியதாக இருந்தால், செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் செயல்கள் உண்மையிலேயே அவ்வளவு அவசியமானவையாக இல்லாமலிருக்கக்கூடும். அல்லது சில செயல்களை சேர்த்துசெய்யலாம். உதாரணமாக, உங்களுக்கு வீட்டு வேலை இருக்குமானால், அவற்றில் சிலவற்றை உங்கள் பிள்ளைகள் செய்வதற்கு அவர்களுக்கு ஏன் சொல்லிக் கொடுக்கக்கூடாது? காரியங்களைச் செய்ய வைக்கும் உங்களுடைய திறமையை நீங்கள் விருத்தி செய்துகொள்வதோடு, உங்களுடைய பிள்ளைகளுடன் பொன்னான நேரத்தைச் செலவழிப்பதற்கும் உங்களுக்கு நேரத்தை அளிக்கும்.
ஆனால் நீங்கள் “செய்ய விரும்பும்” காரியங்களைப் பற்றியதென்ன? அந்தக் காரியங்கள் அதிகமாக இருக்கும். என்றபோதிலும் நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியாது. எனவே அந்தக் காரியங்கள் ‘உட்படுத்தும் செலவைக் கணக்கிடுங்கள். (லூக்கா 14:28) அவை உங்கள் வாழ்க்கை அழுத்தத்தைக் குறைக்குமா—அல்லது கூட்டுமா? வீட்டுச் செலவைக் கூட்டி அது ஒரு பாரமாகிவிடுமா? செய்ய வேண்டிய காரியங்களில் அவை தலையிடுமா?
உங்கள் அட்டவணையை அளவுக்கு மிஞ்சி நிரப்பும் கண்ணியைத் தவிருங்கள்—நீங்கள் அலைமோதுமளவுக்கு அத்தனை காரியங்களைக் கொண்டிருப்பதைத் தவிருங்கள். உங்களுடைய காரியங்களைச் செய்து முடிப்பதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்குங்கள். ஓய்வுபெற்ற ஒரு கட்டட கான்ட்ராக்டர் தன் வீட்டிற்கு தேனீர் பருக ஓர் இளம் மனிதனை அழைத்தார். அப்போது அவனுக்கு ஒரு நல்ல ஆலோசனை கொடுத்தார். அந்த இளம் மனிதன் அவருடைய அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பவனாய்: “நான் பட்டணத்தில் மாலை 4:50-க்கு இருக்க வேண்டும்,” என்றான்.
“அது எப்படிப்பட்ட வேலை” என்று கேட்டார் அந்த கான்ட்ராக்டர். “உன்னுடைய வேலைகளுக்கான அல்லது சந்திப்புகளுக்கான நேரம் முழுமையாக இருக்கட்டும், ?என்று ஆலோசனை கொடுத்தார், “இல்லாவிட்டால் நீ சாவை சந்திக்க ஓட வேண்டியதாயிருக்கும்.”
சமாளிப்பது ஏன் கடினம்
இந்த ஆலோசனைகள் உதவியாக இருக்கக்கூடும். ஆனால் அழுத்தமும் அவசரமும் “கையாளுவதற்குக் கடினமான” காலங்களின் பாகமாக இருக்கின்றன என்பதை மனதிற்கொள்ளுங்கள். (2 தீமோத்தேயு 3:1-5, NW) இன்றைய உலகம் உண்மையிலேயே ஓர் அவசர உலகமாக இருக்கிறது. ஆனால் மானிட உறவுகள் பலவீனமடைந்துகொண்டிருக்கின்றன. உலகப் பிரச்னைகள் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன என்ற உண்மை, இந்த அவசரமெல்லாம் மக்களை எந்த இடத்தையும் அடைய உதவியாக இல்லை என்பதைக் காட்டுகிறது.
உண்மை என்னவெனில், உலகம் தவனையின் காலத்தில் இருக்கிறது. “இனிவரும் காலம் குறுகினது,” என்று பைபிள் எச்சரிக்கிறது. (1 கொரிந்தியர் 7:29) இயேசு கிறிஸ்து நாம் வாழ்ந்து வரும் இந்தக் காலத்தைச் சுட்டிக் காண்பிப்பவராய், “இன்றைய உலகத்தின் துன்பம் மிகுந்த நிலை தம்முடைய ராஜ்யம் சமீபமாயிருப்பதற்கு அத்தாட்சி என்று குறிப்பிட்டார். (லூக்கா 21:10, 11, 28-31) எனவே பிசாசாகிய சாத்தான் “தனக்குக் கொஞ்சகால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டி”ருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12) அவனுடைய உலக ஒழுங்குமுறை முழுவதும் அழிவை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறது. இதைத் தடை செய்வதற்கான சகல முயற்சிகளும் ஒன்றுமில்லாமலாகிவிடும்!
இந்த உலகம் சென்றுகொண்டிருக்கும் திசையிலிருந்து அதை உங்களால் மாற்ற முடியாது என்பது உண்மைதான். ஆனால் உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அமைதி காண நீங்கள் அதிகம் செய்யலாம். இல்லை, போத மருந்துகள் விடை அல்ல, அல்லது நேரத்தைக் கையாளும் செயல்முறைகள் எல்லோருடைய காரியத்திலும் செயல்படுவதாயில்லை. இவற்றைவிட அதிக உதவியாக இருப்பது, பைபிளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதலும் அறிந்துகொள்ளுதலுமாகும். பைபிளையா?
ஆம், கிறிஸ்தவர்கள் “எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணு”வது விரும்பத்தகுந்தது என்று பைபிள் குறிப்பிடுகிறது. (1 தீமோத்தேயு 2:2) அது கூடிய காரியமா? அது கூடிய காரியம். கையாளுவதற்குக் கடினமான இந்தக் கடைசி நாட்களில் அழுத்தங்களுக்குட்பட்டவர்களாயிருந்தாலும் நீங்கள் வாழ்க்கையைப் புதியதோர் கோணத்தில் பார்ப்பதை விருத்திசெய்ய பைபிள் உங்களுக்கு உதவி செய்யும்.
உதாரணமாக, உங்களுடைய வேலையை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை பொருள் சம்பந்தமான காரியங்களைச் சுற்றி இயங்குவதற்கு மாறாக “பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும்” இயங்குவதாயிருந்தால், உங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்ட அல்லது முடியாத பொருட்களைச் சேர்ப்பதற்கு நீங்கள் அவசரப்பட மாட்டீர்கள். “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேறாயிருக்கிறது,” என்பதை அறிந்தவர்களாய் “உண்ணவும் உடுக்கவும்” இருப்பவற்றில் நீங்கள் திருப்தியாக இருக்கக்கூடும். (1 தீமோத்தேயு 6:8, 10) உங்களுடைய வாழ்க்கையில் உங்கள் வேலை இரண்டாவது இடத்தைப் பெறுவதனால், உங்களுக்குத் தேவையான ஓய்வுக்கு வேண்டிய நேரத்தையும் பெற்றுக்கொள்ளக்கூடும். “வருத்தத்தோடும் மனசஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.”—பிரசங்கி 4:6.
சிலர் தங்களுடைய வேலை நேரத்தைக் குறைத்துக்கொள்ள முடிகிறது. ஒரு பெரிய நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் நினைவுபடுத்துகிறதாவது: “23 ஆண்டுகளாகக் கடினமான உழைப்புக்குப் பின்பு எனக்கு நல்ல ஊதியம், இலவச மருத்துவ கவனிப்பு, நல்ல ஓய்வு ஊதியம் போன்றவை இருந்தது. ஆனால் இவற்றைப் பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய வேலையில் அதிகமதிகமான நேரத்தையும் சக்தியையும் செலவழிக்க வேண்டியதாயிருக்கிறது. கடைசியில் உங்களுக்கென்று நேரம் இருப்பதில்லை. எப்பொழுதாவது வேலையைத் தவிர வேறு ஏதாவது காரியம் உங்களுக்கு முன் வைக்கப்பட்டால், ‘என்னை மன்னிக்கவும், நான் அதிக வேலையாக இருக்கிறேன்,’ என்று சொல்கிறவர்களாயிருப்பதைக் காண்பீர்கள்.” எனவே இவர் தன்னுடைய கெளரவமான உத்தியோகத்தை விட்டுவிட்டார். உண்மைதான், இது எளியதோர் வாழ்க்கை முறையை அப்பியாசிப்பதை உட்படுத்தியது. ஆனால் இது தன்னுடைய குடும்பத்துக்கும் கிறிஸ்தவ செயல்களுக்கும் கூடுதலான நேரத்தைக் குறித்தது.
சரியான காரியங்களை முதன்மையாக வைத்தல்
நாம் வாழும் கொடிய காலங்களைப் பார்க்கும்போது ஓர் உண்மை கிறிஸ்தவன் ஆவிக்குரிய காரியங்களின்பேரில் சாதாரண மனநிலையைக் கொண்டவனாக இருக்க முடியாது. ஆயக்காரனும் ஐசுவரியவானுமாயிருந்தவன் என்று பைபிள் குறிப்பிடும் சகேயுவை கவனியுங்கள். இயேசுவைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் அவர் ஒரு முறை பட்டணத்தின் வழியாய்க் கடந்து போகயில் அவரை நன்றாகப் பார்ப்பதற்காக அவன் ஒரு மரத்தில் ஏறினான். பதிவு பின்வருமாறு வாசிக்கிறது: “இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: ‘சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும்,’ என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக் கொண்டுபோனான்.”—லூக்கா 19:2-6.
இயேசுவை வரவழைத்து அவரோடு ஆவிக்குரிய காரியங்களைக் கலந்துபேசியதில் அவன் பெற்ற நன்மைகளை எண்ணிப் பாருங்கள்! அவன் எந்தக் காரியங்களை முதன்மையாக வைக்க வேண்டும் என்பதில் இயேசு சகேயுவுக்கு உதவி செய்தார். இதனால், பொருள் சம்பந்தமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை சகேயு நிறுத்திவிட்டான். “ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்,” என்று இயேசுவிடம் சொன்னான். “நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்.”—லூக்கா 19:8.
அதுபோல இன்றைய உண்மை கிறிஸ்தவர்களும் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து பேசுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஆவலாயிருக்கின்றனர். பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களைப் பெறுவது தானே தங்களுக்கு முதல் முக்கியமான காரியமாக இருப்பதில்லை. மாறாக, கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் அறிந்துகொள்வதற்கு உதவிசெய்யும் கிறிஸ்தவ பிரசுரங்களை அவர்கள் பெறும்போது, அவற்றை வாசிப்பதே முதன்மையானதாக இருக்கிறது. உடன் கிறிஸ்தவர்களுடைய கூட்டங்கள் எங்கு நடைபெறுகிறதோ, அவற்றில் கிடைக்கும் போதனையையும் பக்திவிருத்திக்கேதுவான கூட்டுறவையும் அவர்கள் ஒரு நிமிடங்கூட தவறவிடுவதில்லை.
மற்றொரு நல்ல முன்மாதிரி லோத்துவைப் பற்றியது. சோதாம் கொமாரா அழிக்கப்படும் என்று கடவுளுடைய தூதன் அவனை ஏற்கெனவே எச்சரித்தான். மற்றவர்கள் பேரில் அன்பான அக்கறை கொண்டவனாக லோத்து, “தன் குமாரத்திகளை விவாகம் பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: ‘நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தைவிட்டுப் புறப்படுங்கள். யெகோவா இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார்’ என்றான்.” ஆனால் லோத்து தாமே “தாமதித்துக்கொண்டிருந்த”தால், கடவுளுடைய பாதுகாப்பான இடத்திற்குத் தப்பியோட அந்தத் தேவதூதர்கள் அவனைத் துரிதப்படுத்தினார்கள்: “தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது.”—ஆதியாகமம் 19:14, 16, 22.
இன்றைய உலகம் உலகளாவிய சோதாம் கொமாராவாக ஆகியிருப்பதால் அவைபோன்று அழிவையும் எதிர்நோக்கியிருக்கிறது. இந்தக் காரணத்தினிமித்தமே, பைபிளில் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் வரவிருக்கும் இந்த அழிவைக் குறித்து மற்றவர்களை எச்சரிப்பது யெகோவாவின் சாட்சிகளுடைய வாழ்க்கையில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த எச்சரிப்பை ஆராய்ந்து பார்ப்பதை உங்களுடைய வாழ்க்கையில் முதன்மையாகக் கொள்வீர்களா?
வீணான காரியங்களில் அவசரப்பட்டு ஈடுபடுவது உங்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுத்தராது. மாறாக தலைவலியையும் மனவேதனையையுமே கூட்டிடும். வாழ்க்கை இனிமேலும் பித்துபிடித்த அவசர வாழ்க்கையாக இராத ஒரு புதிய ஒழுங்குமுறையைக் குறித்த கடவுளுடைய நோக்கங்களையும் கடவுளையும் பற்றி கற்றுக்கொள்வது எவ்வளவோ மேன்மையானது!—2 பேதுரு 3:13; ஏசாயா 65:17, 21-25; சங்கீதம் 37:10, 11.
அதற்கிடையில், கட்டுக்கடங்காத வகையில் அல்ல, ஆனால் ஆக்கமுள்ள வகையில் சுறுசுறுப்பாயிருங்கள். கடவுளுடைய நோக்கங்களைக் கற்றுக்கொள்ளும் காரியத்தில், தாமதிக்க வேண்டாம்! அது உங்களுக்கு முதன்மையானதாக அமையட்டும். (g87 2/22)
[பக்கம் 8-ன் பெட்டி]
தகாத அவசரத்துக்கு எதிராக ஞானமுள்ள எச்சரிப்புகள்!
“ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.”—நீதிமொழிகள் 28:20.
“ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.”—நீதிமொழிகள் 21:5.
“தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப் பார்க்கிலும் மூடனை நம்பலாம்.”—நீதிமொழிகள் 29:20.
“தேவசமூகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு.—பிரசங்கி 5:2.
[பக்கம் 7-ன் படம்]
நேரத்தைச் சரியாக திட்டமிடாததும் ஒருவரின் அட்டவணையில் செய்வதற்கு அதிகப்படியான காரியங்களை கொண்டிருப்பதும் அவசரத்துக்குக் காரணங்களாக இருக்கின்றன
[பக்கம் 9-ன் படம்]
சரியான காரியங்களை முதன்மையாக வைப்பதற்கு இயேசு சகேயுவுக்கு உதவினார்